Monday, January 9, 2012

சித்தி ஜூனைதா பேகம் (1917-1998)

இன்னுமொரு ஐந்தாண்டுகளில் சித்தி ஜுனைதா பேகம் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் நூற்றாண்டு தொடங்குகிறது என்று நான் இப்போது சொல்லுவேனேயானால் நூற்றாண்டு விழாக்களைத் தாராளமாகச் சளைக்காமல் வெகு விமர்சையுடன் கொண்டாடிப் பழக்கப்பட்ட நம் தமிழ்ச்சமூகம் என்மேல் வியப்பானதொரு பார்வையை வீசக்கூடும். அவ்வை, ஆண்டாள் தொடங்கி இன்றைக்குப் பெரும் வீச்சுடன் உடலரசியலை எழுதிச் செல்லும் பெண் படைப்பாளிகள் வரை ஒரு பிரும்மாண்டமான பட்டியலொன்று கண்முன் விரிந்திருப்பினும், பெண் எழுதுவது ஏனோ நம்மவர்க்கு வியப்பளிக்கக் கூடிய சங்கதியாகவே இருக்கிறது.

காலகாலமாகப் பெண்களை அகப்பையும் கையுமாக அடுக்களைக்குள் அடக்கி வைத்த ஆணாதிக்க மனோபாவத்தையுமே கூட நான் மேலே குறிப்பிட்ட வியப்புக்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். என்னதான் கலை இலக்கியமும், பெண் விடுதலையும் பேசிக் களித்தாலும் பெண்ணை நாம் ஒரு எல்லைக்கோடு வரைக்கும்தான் அனுமதிக்கின்ற மன விசாலத்தைப் பெற்றிருக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்களை வேசைத்தனம் செய்பவர்கள் என்று நாக்கூசாமல் சொல்வதற்கு நம்முடைய ஆன்மீகவாதிகளை அனுமதித்திருக்கிறோம். கற்பு உள்ளிட்ட கலாச்சாரப் பண்பாட்டு வெளியில் பெண் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இஸ்லாம் மதம் ஒருபடி மேலேபோய் கோஷா, பர்தா, தலாக் என்று விதம் விதமாய்ப் பெண்களை முடக்கி வைப்பதில் நியாயம் கற்பிக்கிறது. சமுதாயக் காவலர்கள் இல்லையென்று மறுப்பர். இஸ்லாம் சமூகப் பெண்கள் வாழையடி வாழையாய் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாகவே மாறிப்போய் மனம் மெய் மொழியால் தம்மை அடங்கிச் செல்பவர்களாகவும், அடிபணிந் தவர்களாகவுமே உணர்ந்திருக் கின்றனர்.
இந்த வாழ்வு அந்தச் சமூகப் பெண்களுக்கான முழுமையான வாழ்வாகாது என்பதை ஒரு சிலர் உணர்ந்திருக்கக்கூடும், ஆனால் மௌனம் தான் இப்போதைக்கு எதிர்வினை. இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்படுவதிலிருந்து இந்தத் திட்டமிட்ட வன்முறையானது தொடங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு வாழ்க்கையை எதிர்கொள்வதில் எத்தனை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எழுத மனம் கூசுகின்றது.

எல்லோரும் குறிப்பிடுவதுபோல ஒரு மூடுண்ட சமூகமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அம்மக்கள் ஒருவித மறைமுகமான பெருமிதம் கொண்டிருக்கின்றனரோ என்னும் சந்தேகமும் கூடவே எழுகிறது.
அத்தி பூத்தாற்போலவே அங்கிருந்து பெண்கள் எழுத வருகின்றனர். அவர்களும் மதம் வலியுறுத்துகின்ற அறக்கோட்பாடுகளுக்கு உட்பட்ட பேனாக்களோடும், மனநிலையுடனுமே வருகின்றனர். இவை அறிவுத்தளத்தில் என்ன விளைச்சலைத் தந்துவிடப் போகிறது? தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகத் தோப்பில் முஹம்மது மீரான் தொடங்கி குறைந்தது ஐந்தாறு ஆளுமைகளை உடனடியாக நம்மால் அடையாளங் காட்ட முடியும். ஆனால் நானறிந்தவரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன்வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு?

இது குறித்து விவாதிக்காமல் பெண்ணெழுத்தின் அடர்த்தி குறித்து சிலாகிப்பதில் பொருளில்லை என்றே கருதுகிறேன். தலித் சமூகம் சார்ந்து எழுத வல்ல பெண் பிரதிநிதிகள் உள்ளனர். பெண்களுக்கான சகல பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்ப இன்றைக்கு அவரவர் தரப்பில் பிரதிநிதித்துவங்களுக்குக் குறைவில்லாத நிலையில், பெண்கள் அறிவு சார்ந்த தளத்தில் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் விதிக்கின்ற ஓரிடத்திலிருந்து போதுமான அளவு பதிவுகள் இல்லாமல் பெண் எழுத்து எவ்வாறு பூரணத்துவம் பெறும்? இஸ்லாம் சமூகத்துப் பெண்களை எழுதவிடாமல் தடுக்கின்ற கரங்கள் எவை? இதற்கு மாற்றாக நாம் என்ன எதிர்வினை நிகழ்த்தப் போகிறோம் என்கிற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக உங்களிடம் முன்வைக்கிறேன்.

பெண் எழுதுவதா என்று பிற்போக்குத் தனத்துடன் கேள்வி எழும்பத் தோதான இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், ஒரு தமிழ் முஸ்லிம் பெண் துணிச்சலாக எழுத வந்தது ஆச்சரியகரமானது. சித்தி ஜுனைதா பேகம் 1917ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகூரில் பிறந்தவர். தந்தை ஷரீப் பெய்க் ஒரு பன்மொழி அறிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும் அறியப்பட்டவர்.

நாகூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த அறிஞர் சி.என். அண்ணாதுரையின் முன்னிலையில் தைப்பொங் கலைக் குறித்து கவிதை மொழியில் பேசி அவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். மற்றொரு சகோதரரான முஜீன் பெய்க் ஒரு பத்திரிகை ஆசிரியர். காரைக்காலிலிருந்து ‘பால்யன்’ என்றொரு இதழைப் பதிப்பித்து பல்லாண்டுகள் நடத்தியிருக்கிறார். இவ்வாறு ஒரு இலக்கியப் பின்புலத்துடன் சித்தி ஜுனைதா பேகம் இயங்கி வந்ததையும், முனவ்வர் பெய்க் அவர் எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் என்பதையும் கவிஞர் நாகூர் ரூமியின் மூலமாக நாம் அறிகிறோம். ரூமிக்கு ஜுனைதா பேகம் உறவு முறையில் பெரியம்மா. ஆச்சிமா என்று அவரை ரூமி அன்புடன் விளிக்கிறார்.
‘கன்னித் தமிழுக்கு இனிமை சேர்த்த
கவிஞர்களைத் தந்த நாகூராம்....’

என்கிற வரிகளுள்ள காயல்பட்டினம் ஷேக்முகம்மது பாடிய இனிமையான பாடலைக் கேட்டிருக்கிறேன். நாகூருக்கு அப்படிப்பட்ட தனிச் சிறப்பு உண்டு. இஸ்லாம் சமூகத்தின் எண்ணற்ற புலவர்களையும் அறிஞர்களையும் வளர்த்தெடுத்த பூமி அது. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள சாகுல்ஹமீது வலியுல்லா நபிமுகம்மதுவின் வம்சாவழியைச் சேர்ந்தவர், மெய்ஞானச் சிறப்புள்ளவர் என்பது யாவரும் அறிந்த செய்தி. சாகுல்ஹமீது ஆண்டகையின் பிறந்தநாளை முன்னிட்டு நாகூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பிற சமயத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் மற்றொரு எழுத்தாளரான ஆபிதீன் நாகூரைச் சேர்ந்தவர். தமிழில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பூர்வீகமும் நாகூர்தான். இவற்றைச் சித்தி ஜுனைதாவின் பிறப்பிடம் குறித்த கூடுதல் தகவல்களாகக் கொள்ளலாம்.

ஜுனைதா பேகத்தின் கல்வி குறித்து நாம் அவதானிக்கையில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்ள வேண்டியுள்ளது. மற்றெல்லா இஸ்லாமியப் பெண்களையும் போலவே ஜுனைதாவும் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்புவரை ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு கிடைத்தால் போதுமானது என்று சமூகம் தீர்மானித்திருக்கிறது. எட்டு வயதுக்குமேல் ஒரு பெண் கல்விச்சாலைக்குச் செல்வது தடுக்கப்பட்டதற்கான பின்னணியை நாம் உளவியல் ரீதியாக அணுகினால், பெண்ணின் ஒழுக்கம் சார்ந்து பெற்றோர் கொள்ளும் அச்சமும், திருமணம் முடிந்து கணவனைப் பராமரிக்கப் போகின்ற பெண்ணுக்குக் கல்வி அவசியமில்லை என்கிற பிற்போக்கு எண்ணமுமே காரணமாக இருக்கமுடியும். இத்தனைக்கும் ஜுனைதாவின் தகப்பனார் கல்வியின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்தவர்.

மூன்றாம் வகுப்பு என்னும் ஆகக்குறைந்த கல்வித் தகுதியுடன் மட்டுமே 1930களில் ஒரு முஸ்லீம் பெண் புதினங்களும் கட்டுரைகளும் எழுதி, குறிப்பிடத்தக்க ஆளுமையாக உருவெடுத்ததற்குப் ‘பரம்பரை வித்து’ தான் காரணம். காலகாலமாகத் தொடர்ந்து ஊறிக் கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆன்மீக வித்து அது என்கிறார் நாகூர் ரூமி. மேலும் பாவினங்களில் வண்ணம் அதிகமாகப் பாடிக் குவித்த வண்ணக்களஞ்சியப் புலவரின் பரம்பரை என்று தன்னை ஜுனைதா பேகம் கருதியதும் காரணமாக இருக்கலாம்.

வாழ்ந்த காலத்தில் சமூகத்தால் புதுமைப் பெண்ணாகக் கருதப்பட்ட அவருக்குப் பால்ய விவாகம்தான் வாய்த்திருக்கிறது. பன்னிரண்டு வயதில் பகீர்மாலிமார் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் பகீர் அவர் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரியான கணவரல்ல என்று தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியதாகவே அறிகிறோம். பன்னிரண்டு வயதில் திருமணம் நடைபெற்று, நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, பதினாறு வயதில் விதவைப் பட்டம் சுமந்த வாழ்வு சித்தி ஜுனைதா பேகத்தினுடையது.

இன்றைக்குப் பெண்ணின் திருமண வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 வயதை அடையும்போதுதான் ஒரு பெண் மன, உடல்ரீதியான வளர்ச்சியும் கர்ப்பத்தைத் தாங்குகின்ற சக்தியும் பெறுகிறாள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 1930களில் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின்னும் இஸ்லாமியப் பெண்ணின் திருமண வயது 18க்கும் கீழேயே இருக்கிறது. அவள் பூப்பெய்திய நாளிலிருந்தே மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கி, பதினாறே வயதிற்குள் முதல் குழந்தையைப் பெற்று முப்பது வயதுக்குள் பாட்டியாகி முதுமையை இளமையில் வரவேற்கும் அவலம் சபிக்கப்பட்டிருக்கிறது. அவளுடைய அறைக்குள் வெளிக்காற்று நுழைவதற்கான சாத்தியதைகளே இல்லை. உள்ளேறும் பத்திரிகைகள் எல்லாமும் இஸ்லாமிய அறநெறிக் கோட்பாடுகளை வலியுறுத்துவனவே. சிறுபத்திரிகைகள், நவீன இலக்கியம், மாற்றுசினிமா இத்யாதிகளை அவளறியாள்.

முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் சித்தி ஜுனைதா பேகம் தன் பிள்ளைகள் உயர்கல்வி (11ஆவது வகுப்பு வரை) பெறுவதற்காக நாகூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்கிறார். தனக்குக் கிடைக்காத கல்வியை, தன் பெண் பிள்ளைகள் பெற வேண்டுமென அவர் தீர்மானித்ததை முஸ்லீம் சமூகம் பின்பற்றியிருப்பின், மூடுண்ட சமூகம் என்னும் விமர்சனத்தை எளிதாகத் தவிர்த்திருக்க முடியும்.

சித்தி ஜுனைதா பேகம் தனது கணவர் இறந்த பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கியிருக்கிறார். கணவனில்லாத வேதனையையும், தனிமையையும் அவர் தனது எழுத்தால் நிராகரித்தார் அல்லது கடந்து சென்றார் என்றும் கொள்ளலாம். பதினாறு வயதில் ஒருத்தி கைம்பெண்ணானது நினைத்துப் பார்க்கவும் கொடுமையான விஷயம். இதை சித்தி அடைந்திருக்கிறார். ஆனால் விதவையென வீட்டினொரு மூலைக்குள் முடங்காது துணிச்சலாக எழுத்துலகில் பிரவேசித்ததுதான் அவரை அக்காலப் பெண்களில் தனித்து மாறுபடுத்திக் காட்டுகிறது.

ஜுனைதா பேகத்திற்கு அந்தக் காலத்திலேயே டைரி எழுதுகின்ற பழக்கம் இருந்திருக்கிறது. இன்றைக்கு யோசித்தாலும் எத்தனை இஸ்லாமியப் பெண்கள் டைரி எழுதும் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிட முடியும். டைரியில் தனது மனதைத் தினந்தோறும் பதிவு செய்பவர்கள் இந்தச் சமூகத்துடன் ஏதோ ஒரு விதத்தில் மனந்திறந்து உரையாடத் தயாராக இருக்கிறார்கள் என்பது உளவியல் பகுப்பாய்வு. ஜுனைதா, தான் சமூகத்துடன் பேச விரும்பியதை டைரிக் குறிப்புகளாகவும் கட்டுரை, புதினங்களாகவும் எழுதி வைத்தார். அவர் எழுதத் தொடங்கியதும் எடுத்த எடுப்பில் நாவலுக்குத் தாவிவிட்டதும் ஒரு பேராச்சரியந்தான்.

இலக்கிய வடிவங்களில் நாவல் மிக முக்கியமானது. கவிதைகளும், கதைகளும் தராத வாழ்க்கையின் பக்கங்களை நாவல் தந்து நிற்கிறது. மையக் கதையும் அதன் விரிவும், அங்கிருந்து பிரிகின்ற கிளைக் கதைகளும் குவியலான கதாமாந்தர்களும், தத்துவ தரிசனமும் ஒற்றைத் தன்மையற்ற பன்முகத்தின் பிரதிபலிப்பும் நாவலை சாதாரணத் தன்மையிலிருந்து அசாதாரணத்திற்கு நகர்த்துகிறது. பேரனுபவத்தைத் தருகிற பேரிலக்கிய வடிவம் நாவல். ஆனால் ஜுனைதா பேகம் நாவல் வடிவத்தைக் கையாண்டிருக்கிற விதத்தில் நமக்குச் சில மாற்று அபிப்பிராயங்கள் இருக்கிறது. எனினும் விவாதிக்கும் அளவு அதில் பிரச்சனைகள் இல்லை. 1930களில் தமிழில் நாவல் வடிவம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை தான். அதே கால கட்டத்தில் ஆங்கில மொழிப் பரிச்சயமுள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களில் சிலர் ஒன்றுகூடி, ஆங்கில இலக்கியங்களைத் தீவிர வாசிப்பிற்குள்ளாக்கி தமிழ்ச் சிறுகதையில் வடிவப் பரீட்சார்த்தம் செய்து பார்க்கின்றனர். குறிப்பாகப் பி.எஸ்.இராமைய்யா பொறுப்பேற்று நடத்திய மணிக்கொடி இதழில் இது நிகழ்கிறது. மணிக்கொடியின் சிறுகதையாளர்கள் எவரும் நாவல் எழுதுவதில் அப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, வெளியுலகத் தொடர்புகளற்று வீட்டிலிருந்தவாறே ஆர்வ மேலீட்டால் எழுதத் தொடங்கிய ஜுனைதா பேகம் இந்த அளவிற்கு இயங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘‘நான் என் எழுத்துலக நுழைவிற்கு
எனக்கு முன் மாதிரியாக
யாரையும் பின்பற்றவில்லை. எனது
சிறுகதை, நவீனம்
எல்லாம் இயல்பாக எனக்கமைந்த சொந்த
நடை என்றே
நினைக்கிறேன். நான் முதன் முதலில் எழுதிய நெடுங்கதை காதலா? கடமையா?
என்பது. இந்த நவீனத்தை நான்
எழுத எந்தக் காரணமும் எனக்கில்லை. நான் எழுத வேண்டும் என்ற எனது சொந்த அவாதான்’’
என்பதாக 1999இல் வெளிவந்த ‘முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்கு’ அவரளித்த நேர்காணலில் குறிப்பிடுவதிலிருந்து அவர் தன் எழுத்துக்கு எவரையும் ஆதர்சமாகக் கொள்ளவில்லை என்பதும் புலனாகிறது.
சித்தி ஜுனைதா பேகம் தான் எழுதிய நாவலை நெடுங்கதை என்றே குறிப்பிடுகிறார். ஆயினும் தமிழில் நாவல் எழுதிய முதல் முஸ்லீம் பெண் என்னும் சிறப்பு அவரை இயல்பாகவே வந்தடைகிறது. மட்டுமல்ல; நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண்கள் இருவரில் ஒருவராக அவர் இருக்கக்கூடும். மற்றொருவர் ‘தாஸிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவலை எழுதிய மூவலூர் இராமாமிருதம் அம்மாள்.
‘‘பெரியோர் தம் உயர்ந்த நூல்கள்
சிலவற்றை யான் படித்தபொழுது உரைநடையில்
ஒரு சிறு புதுக்கதை எழுத வேண்டும் என்னும்
விருப்பம் என்னை வெகுநாளாகத் தூண்டியது. யான் பத்திரிகைகட்குக் கட்டுரைகள் அடிக்கடி வரைந்து அனுப்பியதைக் கண்ட
என் பெற்றோர், உறவினர், என் சினேகிதிகள் அனைவருமே அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று பெரிதும் விரும்பினர். அன்னார்தம் விருப்பத்தையும் எமது விழைவையும் நிறைவேற்றுவான் வேண்டி இச்சிறு புத்தகத்தை வெளியிடுகிறேன்’’ என்று ஜுனைதா எழுதுவதிலிருந்தும், மேலும் ‘‘நச்சுடை நாகங்கள் சிலவற்றைத் தன் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர்தம் தூற்றுதலுக்கு அஞ்சிப் பத்திரிகைகளுக்குப் பெயர்போடாது கட்டுரைகள் அனுப்புமாறு என்னைத் தூண்டியவரும்...’’ என்று எழுதும் போதும் அவர் எழுத நேர்ந்த பின்னணியும் எழுதியதால் ஊரார் வெளிப்படுத்திய எதிர்ப்பும், அது போன்ற எதிர்ப்புகளைத் தொடர்ந்து பெயர் போடாது எழுதி வந்ததும் தெரியவருகிறது.

‘‘நாவல் வெளிவந்த பிறகு கூட்டம் கூட்டமாக வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் தெருப் பள்ளித் தெரு வீட்டுக்கு வந்து ஆச்சிமாவைப் பார்க்க வந்தார்களாம். சும்மா அல்ல; ஒரு கெட்டுப் போன நல்ல குடும்பத்துப் பெண்ணை விசாரிக்க வருவது போல’’

இந்தத் தகவலை என்னிடம் ஆச்சிமாவே நேரடிப் பேச்சில் இதே வார்த்தைகளில் சொன்னது. அம்மாவும் இதை உறுதிப்படுத்தினார்கள். ஒரு முஸ்லிம் பெண்! நாவல் எழுதுவதா? அதுவும் ‘காதல்’ என்ற சொல்லுடன்! எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?’’ என்று நாகூர் ரூமி விவரிப்பதிலிருந்து ஜுனைதா பேகம் தன் எழுத்துக்காக எதிர்கொண்ட இன்னல்களை மேலும் அவதானிக்கலாம்.
‘‘இந்த எனது சிறு நவீனத்திற்கு ‘தாருல் இஸ்லாம்Õ ஆசிரியரும், நபிகள் நாயக மாண்பினை எழுதிய பெரியாருமான பா. தாவுத்ஷா சாகிபு அவர்களிடம் ஒரு மதிப்புரை கேட்டோம். ‘இது ஒரு பெரிய திறமையா? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா?’ என்று ஏளனமாகப் பேசியதாக என் சகோதரர் உசேன் முனவ்வர் பே சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் மகாமகோபாத்யாய தக்ஷிணாய கலாநிதி டாக்டர் உ..வே. சாமிநாதையர் அவர்கள் என்னை ஏத்திப் போற்றி ஒரு மதிப்புரை வழங்கினார்கள்’’.

தனது சமூகத்தைச் சார்ந்த அறிவுலக வாதிகளாலேயே அவர் புறக்கணிப்பிற்கும் ஏளனத்துக்கும் உள்ளானதை மேற்கண்ட நிகழ்விலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எந்த இதழாசிரியரால் மதிப்புரை தராமல் மறுக்கப்பட்டாரோ அதே தாருல் இஸ்லாம் இதழில் 1995இல் ‘முஸ்லிம் பெண்களும் விவாக விலக்கும்‘ என்றொரு கட்டுரையை சித்தி ஜுனைதா பேகம் எழுதியுள்ளார். இதன் மூலமாகக் காலமாறுதலையும் படைப்பாளியின் போராட்டக் குணத்தையும் வெகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

‘‘சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய காதலா? கடமையா? என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது....’’

இது டாக்டர் உ.வே.சா. 1938இல் சித்தி ஜுனைதா பேகத்தின் நாவலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. ஊர் ஊராகச் சுற்றியலைந்து, ஓலைச்சுவடிகளைச் சேகரித்து எண்ணற்ற தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த உ.வே.சா.வின் முன்னுரையைப் பெற்றதும் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டதும் ஜுனைதா பேகத்தின் எழுத்து வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். மட்டுமல்ல; தமிழ்ச்சிறுகதையின் ஒரு குறியீடாக மாறிவிட்ட புதுமைப்பித்தன் ‘‘முஸ்லீம் பெண்டிர் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம்’’ என்று ஜுனைதா பேகத்தின் நாவல் குறித்து அபிப்ராயம் தெரிவித்திருப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

என் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் படிப்பதும்தான் என்று குறிப்பிடும் ஜுனைதா பேகத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் வளமான பயிற்சி இருந்திருக்கிறது. திருக்குறள், நாலடியார் நளவெண்பா, மணிமேகலை, சிலப்பதிகாரம், மாணிக்கவாசகர், திருமூலர், பாரதி பாடல்கள் வரை அவர் ஊன்றிக் கற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் உள்ளன. இதுவரைக்குமான இஸ்லாமியப் பெண்கள் எவருக்கும் இம்மாதிரியான சுதந்திரம் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரைக்கும் இலக்கிய நூல்கள் யாவும் தீண்டத்தகாத பிரதிகளே. “இடமும் இருப்பும் ஒரு மனிதனின் குணாம்சத்தைத் தீர்மானிக்கின்றது’’ என்று முன்பு எங்கோ ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பேன். சித்தி ஜுனைதா பேகத்தின் சூழல் அவருக்குப் பலவிதங்களில் துணை புரிந்திருக்கிறது. பிறந்து வளர்ந்த ஊரும், பெற்றோரும், வாசிப்பிற்கான சுதந்திரமும் ஜுனைதாவைப் படைப்பாளியாக மலர்த்தியிருக்கிறது. இது அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்துவிடாது.

‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா? கடமையா? நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.

‘சித்தி ஜுனைதா பேகம் _ பன்னூலாசிரியை’ என்று தனது வீட்டின் முகப்பில் பெயர்ப்பலகை மாட்டி வைத்துக்கொண்டு இயங்கியிருப்பவரை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியங்கொள்ள முடிகிறது. கருத்துக்களை முன்வைப்பதில் அவருக்கு எவ்வித மனத்தடையும் இருந்ததாகத் தெரியவில்லை. 1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கிவிட்ட காலகட்டத்தில் சித்தி தாம் எழுதிய காதலா? கடமையா? நாவலில், “தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய் நாட்டை மீட்பதற்காக உடல் பொருள் ஆவியைத் தத்தஞ் செய்து பெரியாரைப் பின்பற்றுவேன்’’ என்று எழுதியிருப்பது இவரது தமிழினப் பற்றைக் காட்டுகிறது _ என்று கம்பம் சாகுல் அமீது என்பார் ‘இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்கிற தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு மத அடிப்படைவாதிகளால் புறக்கணிக்கப்படும் தர்கா நேர்ச்சைகளைப் பற்றிச் சித்தி ஜுனைதா பேகம் ‘‘நாகூர் கந்தூரி இதோ கதவைத் தட்டுகிறது பக்தி, நம்பிக்கை, வேடிக்கை இது மாதிரி பல்வேறு காரணங்களுக்காக நாகூரைத் தேடிக் கூட்டங் கூட்டமாக மக்கள் இதோ வரமுயன்று கொண்டிருக்கின்றார்கள். ஊரே கோலாகலமாகத் திருவிழாக் கோலம் பூணுகின்றது.’’ என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். மற்றொரு இடத்தில் ‘‘இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப்பட்டிருப்பினும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக் கடைந்திருக்கவும், மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதிவிடுதலே அறிவையளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ?’’ என்று கேட்கிறார். அவர் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ள புரட்சிகரக் கருத்துகளில் சிலவற்றையேனும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ள கட்டாயம் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.

பெண்கள் தமக்குப் பிடித்தவரையே மணஞ் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது. ஒத்த நலனும், ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடுமாடுகளைப் பிணைப்பதைப் போல் பிணைத்து விடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது.

இஸ்லாமியப் பெண் தன் கணவனின் பெயரோடு தன்னை இணைத்துக் கொள்ளத் தேவையில்லை. ஜபீரா, ஷேக் பரீதை மணந்து கொண்டால் ஜபீராதான். அவள் மிஸஸ். ஷேக் பரீதாக மாறிவிடுவதில்லை. ஒரு முஸ்லிம் பெண் தன்னில் தானே ஒளி வீசுகின்றாள். அவள் பெயருக்கு அவளே உரிமை பெற்றவள்.
- இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிக்கின்றது எனக் கூறி உலகை ஏமாற்றப் புகுவது அறியாமை. ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வதே அறம். பல பெண்களை ஒருவன் மணக்கலாம் என்னும் கட்டுக்கள் நீக்கப்படல் நியாயம்.
- இஸ்லாமியப் பெண்கள் பொம்மைகளல்ல.

- பெண்கள் சினிமா பார்த்தால் ஆகுமா என்றால் ஆகும் என்றுதான் நான் கூறுவேன். ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமன்று. ஆணுக்கு ஆகும் என்றால் பெண்ணுக்கு ஆகும் என்பதுதான் என் கருத்து.
தமிழகத்து முஸ்லீம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியே போல, எழுதியும் பேசியும் வாழ்ந்தும் காட்டிய சித்தி ஜுனைதா பேகம் தனது 82ஆவது வயதில் 19.3.1998 அன்று மரணமடைந்தார். மரிப்பதற்கு முன்பு வரை அவர் எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருந்தார் என்றறிகிறோம். இலக்கியப் பணியில் அவர் ஒருபோதும் சலிப்புற்றதில்லை என்றே
அவரைக் குறித்து எழுதியுள்ள பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

பெண் கல்வி, பெண் விடுதலை என்றெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தில், இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த சித்தி ஜுனைதா பேகம் ஒரு எதிர்க்குரலாக வரலாற்றில் பதிவாகியுள்ளார். ஆனால் அவரைக் குறித்த இலக்கியப் பதிவுகள் சொற்பமே. நாகூர் ரூமியின் முயற்சியில் காதலா? கடமையா? நூல் வெளிவந்தது ஒரு முக்கியப்பணி. எனினும் சித்தி ஜுனைதாவின் பிற எழுத்துக்கள் பதிவாகியதாகத் தெரியவில்லை. அதற்கான அவசியமும் தேவையும் உள்ளது என்றே நம்புகிறோம்.

நானறிந்தவரை அ. வெண்ணிலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆபிதீனின் வலைப்பதிவில் ஜுனைதா இடம் பெற்றிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் இனியேனும் அவரைக் குறித்த உரையாடல்களைத் துவக்கலாம். மேதைமைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றிவிடுவதில்லை. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் தீவிர இலக்கியத்திற்கு வர வேண்டும். இலக்கியத்துள் அவர்கள் பிரவேசிக்கையில் அவர்களைச் சுற்றியுள்ள எல்லாத் தடைகளும் நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை என்னுள் எப்போதும் நீடிக்கிறது. சித்தி ஜுனைதா பேகம் இஸ்லாமியப் பெண்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய ஆளுமை என்று மீண்டுமொருமுறை அழுத்தம் கொடுக்கிறேன்.

சித்தி ஜுனைதா பேகத்தின் பிற படைப்புகள்
1. செண்பகவல்லி தேவி (அ) தென்னாடு போந்த அப்பாஸிய குலத் தோன்றல் _வரலாற்று நாவல்.
2. மகிழம்பூ _ நாவல்
3. இஸ்லாமும் பெண்களும் _ கட்டுரைத் தொகுப்பு
4. மலை நாட்டு மன்னன் __ தொடர்கதை.
5. ஹலிமா (அ) கற்பின் மாண்பு
6. பெண் உள்ளம்
7. திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு
8. காஜா ஹஸன் பசரீ: முஸ்லீம் பெருமக்கள் வரலாறு
துணைநூற்பட்டியல்
காதலா? கடமையா?, ஸ்நேகா, 2003



உதயசங்கர்: ரயில்நிலையக் கலைஞன்



உதயசங்கரின் எழுத்துக்கள் என்னுள் இறங்கிப் பல வருஷங்கள் கழித்துதான் அவரை நேரில் நான் சந்தித்தது. எப்போதும்போல பெரிய கோவில் புல்வெளியில்தான் அவருடைய பெயரை முதலில் கேட்டறிந்ததும். நண்பர்களிடையே சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்த பேச்சு எழும்போது குறிப்பாகக் கரிசல் எழுத்துக்களைப் பற்றிய சம்பாஷனைகளில் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, பா.செயப்பிரகாசம், பூமணி,
ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி ஆகிய பெயர்களுடன் தவறாமல் இடம் பெறும் பெயராக உதயசங்கருமிருந்தது.
கோவில்பட்டி குறிப்பிடத்தக்க இலக்கிய மையமாக விளங்கியது, அப்போது நானறியாத செய்தி. தஞ்சாவூர்தான், தமிழுக்குப் பெரிய இலக்கிய பிதாமகர்களைத் தந்திருப்பதாக ஒரு பிரம்மை இருந்தது. கி.ரா.வையும், தமிழ்ச்செல்வனையும், கோணங்கியின் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்களையும் படித்த பிறகு கரிசல் இலக்கியத்தின் மேல் என் கவனம் திரும்பியது. எப்போதும் வெயில் கொளுத்தியபடி இருக்கும் கந்தக பூமியும், பிழைப்புக்கு தீப்பெட்டி ஆபீஸ்களை நம்பிய பெண்மணிகளும், குழந்தைகளும் வறட்சியும், வறுமையிலும் அன்பை ஒருவருக்கொருவர் நேர்ந்து பரிமாறிக் கொள்ளுகிற அழகும் அடடா... தமிழிலக்கியத்தின் இன்னொரு அசலான பக்கத்தை இதுவரை பார்க்கத் தவறியிருக்கிறோமே என்னும் பதைபதைப்பை என்னுள் ஏற்படுத்திய எழுத்து கரிசல் எழுத்து.
நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி, சுழித்துக் கொண்டோடிய காவிரிக்கரை எழுத்து கூதிர்காலக் காற்றின் சுகானுபவமென்றால், கரிசல் எழுத்துக்கு அதற்கு நேர்மாறான உறைப்பான, சுளீரென்று தவறுக்குத் தண்டனையாய்ப் பெறும் தீச்சூட்டின் தன்மை உண்டு. கரிசல் இலக்கியம் காட்டும் அழகியல் தமிழர்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்தது. அதேபோன்று புதுமைப்பித்தனுக்கு நிகரான ஆளுமையாக
கு.அழகிரிசாமியை என் வாசிப்பனுபவத்தினூடாகக் கண்டதும் சற்றுப் பிறகுதான். வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தரிசனம் தருவதில்லை. தந்தால் மாறுபட்ட ரசனைகளுக்கு வாய்ப்பில்லாமலே போய்விடும். அபூர்வமான அனுபவங்கள் எதுவும் ஆரம்பத்திலேயே நமக்கு வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தால் அபூர்வம் என்று அதற்குப் பெயரில்லை.
உதயசங்கரை ஒரு ரயில் பயணத்தின்போதுதான் முதன் முதலாக சந்தித்தேன். பாரதி புத்தகாலயம் மேலாளர் தோழர் நாகராஜனுடன் நானும் 2010 திருவனந்தபுரம் புத்தகக் காட்சிக்குச் பயணமானபோது வழியில் கோவில்பட்டி சந்திப்பில் ஏறி எங்களுடன் உதயசங்கர் இணைந்து கொண்டார். அன்று முதல் அவர் என் சஹிருதயனாகிவிட்டார் என்றும் கூறலாம். உதயசங்கர் ‘ரயில் மனிதன்’ என்றொரு பிம்பம் என்னுள் இருந்தது. அதற்கான காரணங்களும்தான். ரயில்வேயில் வேலை செய்யும் அவர் தற்போது குமாரபுரம் ஸ்டேஷனில் பணியைத் தொடர்கிறார். மாமேதை கு. அழகிரிசாமியின் கதைக் களம் அது. ‘‘சின்ன ஸ்டேஷன். அங்கே ரயில்கள் நிற்காமல் கடந்து செல்ல, விசேஷமாய் ஏதோ ஒரு ரயில் மட்டும் நிற்கும்’’ குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் குறித்து இப்படி நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உதயசங்கரை நேரில் பார்த்தபிறகு ‘ரயில்வே அதிகாரிகளுக்கான கருப்புக் கோட்டு வெள்ளைச் சீருடையில்’ அவரைக் கற்பனை செய்து பார்த்தாலும் அவ்வளவாகப் பொருந்தவில்லை.
ஒடிசலான தேகமும், வெள்ளந்தியான சிரிப்புமாய் அவரைப் பார்க்கிற எவரும் ஒரு நெருக்கத்தை உணர்வர். கண்ணாடிக்குள்ளிருந்து தெறிக்காமல் அமுங்கிப் புன்னகைக்கும் சிவந்த வெளிச்சமான கண்கள். அந்தரங்கமாய் அவருடன் உரையாடக் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் (பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நடத்திய வரலாறும் புனைவும் - மூன்று நாள் கருத்தரங்கில் நானும் அண்ணன் ச. தமிழ்ச் செல்வன், தோழர்கள் சு.வெங்கடேசன், பிரளயன், மணிமாறனுடன் உதயசங்கருடன் பேசிக் கழித்த சில இரவுகள்) அவருடைய அங்கதம் ததும்புகிற உரையாடல் கேட்டுக் களித்திருக்கிறேன். உண்மையில் மணிமாறனுடனும் உதயசங்கருடனும் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் பழகிய நெருக்கத்தைக் கொஞ்சம் நாட்களில் உணர்ந்தேன். அது என்ன மாயமோ தெரியவில்லை.
இலக்கியத்தில் நான் அகரம் எழுதிப் பழகத் தொடங்கிய காலத்திலிருந்து உதயசங்கர் கதைகள் எழுதி வருகிறார். இலக்கிய உலகம் ஏன் இப்படி ஒரு நல்ல கலைஞனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறது என்று நான் பல இரவுகள் சிந்தித்திருக்கிறேன். முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகத் தீவிரமாய் இயங்கி வந்திருக்கிற இந்த எழுத்தாளனின் வீட்டுக் கதவுகளை விருதுகள் தேடி வந்து தட்டியிருக்க வேண்டாமா? நாம் வாசித்தவரை ஒவ்வொரு கதையிலும் தேர்ந்த கலைப் படைப்பிற்கேயுரிய வடிவமைதியும், மொழியும் இயைந்திருக்கின்றதே? ஒரு முற்போக்கு அமைப்பிலிருந்து செயல்பட்டவாறு பிரச்சாரமும் பேருணர்ச்சியும் தவிர்த்த கதைகளைத்தானே இவர் முன்வைக்கிறார்? பிறகு ஏன் உதயசங்கரைக் கொண்டாடத் தயக்கம்? இப்படியான கேள்விகள் எனக்கு மட்டுமல்ல அவரை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் வந்துதான் தீர வேண்டும். வராவிடில் அவருடைய இலக்கிய நேர்மை குறித்து நான் சந்தேகிப்பேன்.
உதயசங்கர் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். வரிசையில் நிற்கையில் முண்டியடித்துக் கொண்டு முன் செல்லும் வழக்கமில்லாதவர். எங்கும் எதிலும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பவர். இவை இன்றைய பரபரப்பான இலக்கியச் சூழலுக்குப் பொருந்தி வருமா, தெரியவில்லை. ஒரு முறை நான் நவீனத் தமிழ் எழுத்துக்களில் புதுமைப் பித்தனிலிருந்து இன்றைய தலைமுறை வரைக்குமுள்ளவர்கள் எழுதிய காதல் கதைகளைத் தொகுக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ‘‘நான் எழுதிய கதைகள்கூட இருக்கிறது ஜாகிர்’’ என்று அவர் எனக்குச் சொல்லவேயில்லை. நானாகத் தேடி ‘பால்ய சினேகிதி’ கதையைத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவருடைய கதை ஒன்றை நான் என்னுடைய ‘காஃபிர்களின் கதைகள்’ தொகுப்பிலேயே சேர்த்திருக்க வேண்டும். தவறிப்போனது.
அப்படி ஒரு தொகுப்பைச் செய்கிறேன் என்பதும் அவர் முன்பே அறிந்தது தான். இப்படிப்பட்டவர் ஒரு சந்திப்பில் ‘‘என்னுடைய தேர்ந்தெடுத்த கதைகள் சிலவற்றை பாரதி புத்தகாலயத்திற்காக தொகுத்துக் கொடுங்கள் ஜாகிர்’’ என்று கேட்டபோது, லேசான தயக்கத்துடன் சம்மதித்தேன். அந்தத் தயக்கத்துக்கும் அவர் படைப்பின் மீதான என் அபிப்ராயத்துக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அவருடைய படைப்புலகில் மீண்டும் பிரவேசிக்க இதை ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்திக் கொண்டேன். அவருடைய நாற்பத்தெட்டுக் கதைகளிலிருந்து இருபத்திரண்டு கதைகளை என் ரசனை அடிப்படையில் தேர்வு செய்தேன். ‘‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’’ என்கிற பொருத்தமான தலைப்பைத் தீர்மானம் செய்துகொண்டு முன்னுரையாக என்ன எழுதலாம் என யோசித்தபோது தவறியும் அதில் அவருடைய கதைகளைப் பற்றி அதிகம் சொல்லிவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்படி ஒரு முன்னுரை எழுத வாய்த்தது. கதை வரிசையையும் முன் பின்னாக மாற்றிக் கலைத்துப் போட்டு அடுக்கியிருக்கிறேன்.
இந்த 22 கதைகளில் எது ஒன்றையும் வாசகன் புறக்கணித்து விட முடியாது. ‘நான் தேர்ந்தெடுத்தவையாக்கும்’ என்கிற அழுத்தம் தந்து இதைச் சொல்லவில்லை. உதயசங்கர் கதைகளின் இயல்பும் அதுதான். புறக்கணிக்க முடியாத எழுத்து. கரிசல் இலக்கியத்துக்கேயுரிய சில கதைகளுடன் இன்றைக்கு எழுதிவரும் தீவிரமான படைப்பாளிகளைக் கடந்து செல்லும் நவீன அம்சம் சரிவரப் பொருந்திய கதைகளுமாக இத்தொகுப்பு உருவாகியிருக்கிறது.
உதயசங்கர் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை குணாம்சங்களை எள்ளலுடன் விமர்சிக்கின்றன. கலையின் உன்னதமறிந்த டேனியல் பெரிய நாயகம் கடைசியில் மகனிடம் ‘இதெல்லாம் நமக்கு வேண்டாம்‘ என்று புத்திமதி சொல்கிறார். இப்படித்தான் நிறைய அப்பாமார்கள் இருந்திருக்கிறார்கள். மகன்களும் தலையசைத்துக் கலை மீதான காதலை உதறித் தள்ளியிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் என்கிறது பொதுப்புத்தி. இதை மீறி வந்தவர்கள் கலைஞர்களாகியிருக்கின்றனர். இதுவும்கூட யதார்த்தமில்லையா?
சக மனிதனிடம் கொள்ளும் அவநம்பிக்கையை மட்டுமே வேறொரு கதையில் உள்ளடக்கமாய் வைக்கிறார் உதயசங்கர். குடும்ப அமைப்பின் வன்முறைகளை அங்கதத்துடனும், பொட்டிலறைந்தாற்போன்றும் பல பாணிகளில் எழுதிப் பார்த்திருக்கிறார். இளம் பருவத்தின் ரம்மியங்கள், அபிலாஷைகள் இவரது படைப்புகளில் அதே த்வனியுடன் பதிவாகத் தவறவில்லை.
வெயில், மறதியின் புதைசேறு, சோமையாவின் பாட்டு போன்ற கதைகள் அவருடைய படைப்பெழுச்சியின் உன்னத விளைச்சல் என்றே கூறலாம். உதயசங்கர் கதைகளில் பெயிண்டர் பிள்ளை, ஆவுடையப்ப பிள்ளை என்று நிறையப் பிள்ளைமார்கள் வருகிறார்கள். அவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பும் அபாரமாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் ஜாதி குறித்துப் பேசவரவில்லை. உதயசங்கரும் அப்படிப்பட்டவரில்லை. தான் சார்ந்திருக்கும் அல்லது அவ்வாறு கருதப்படும் சமூகத்தை உள்வாங்கிக் கொண்டு படைப்பில் வெளிப்படுத்துவது பாவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு படைப்பாளியின் கடமை இதுவாகவே இருக்க முடியும். எந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து ஒருவனுக்கு இயங்க வாய்த்திருக்கிறதோ அந்த வாழ்க்கையைப் படைப்புகளில் பிரதிபலிப்பது அவனுடைய சமூகத்தைக் குறித்த விமர்சனங்களை அவன் செய்வதாகவே பொருள் கொள்ள முடியும். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், தோப்பில் முஹம்மது மீரான் இன்னும் பலரும் இதையே செய்தனர்.
குறுநாவல்கள் எழுதியிருக்கின்ற உதயசங்கரை நாவல் எழுதச் சொல்லி அவரை சந்திக்கின்ற நேரங்களிலெல்லாம் வற்புறுத்துகிறேன். அவருடைய உத்தியோகம் சார்ந்த ரயில்வே துறையின் பின்னணியில் ஒரு நாவலை எழுதிவிட வேண்டுமெனும் முனைப்பிலிருப்பதாகவும் விரைவில் அது நிறைவேறும் என்றும் என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். பார்ப்போம். ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’ கதையை அவர் விரித்திருந்தால் முக்கியமான நாவலாக அது மாறியிருக்கும். அதே போன்று, ‘ஒரு விளக்கும் இரண்டு கண்களும்’ கதைக்கும் ஒரு சர்வதேசியத் தன்மை உண்டு. அக்கதையின் ஓரிடத்தில் கீழ்க்கண்ட விவரணையை அவர் எழுதியிருப்பார்.
‘‘1947-ம் ஆண்டில் சர்சிரில் ராட்கிளிஃப் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோடுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத இந்த பருத்த ஆங்கிலேய வழக்கறிஞர், தான் வரையும் கோடு இந்திய நிலப்பரப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர முடியாதவராக இருந்தார். அவரது பென்சில் கூறுபோட்டது நிலப்பரப்பை மட்டுமல்ல என்பதை மிகமிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டார். அப்போது யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை’’
இந்த வரிகளைப் படித்தபோது என்னையுமறியாமல் மனம் கலங்கிப் போனது. சதத்ஹஸன் மன்ட்டோவின் கதைகளில் வெளிப்படும் தேசப் பிரிவினையின் துயரார்ந்த அதே வெளிப்பாடாக இதை நான் உணர்ந்தேன். இப்படியெல்லாம் எழுத உதயசங்கரைவிட்டால் தமிழில் ஆள் கிடையாது. தேசப்பிரிவினை நடந்து முடிந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அது தரும் வலியும் ரணமும் நம்மைப் பற்றித் தொடர்கிறது. மிக எளிதாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளி எறிவதுபோல நடந்தது, இரண்டு தேசிய இனத்தின் பிரதான பிரச்சனையாக உருவெடுத்து இன்றைக்கும் வேதாளம்போல் நின்று நம் மக்களின் நிம்மதியைக் குலைக்கிறது. எல்லோரும் மறந்துவிட்ட விஷயத்தை எழுதிப் பார்க்க இப்படி ஒருவர் இருக்கத்தான் செய்வார்.
உதயசங்கரைக் குறித்துச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் சம்பிரதாயமான முன்னுரையை அந்தச் சம்பிரதாயத்துக்குள்ளிருந்து எவ்வாறு விடுவிப்பது என்பதே எனது நோக்கமாக இருந்து ஓரளவு தப்பித்தும் இருக்கிறேன் என்று மனம் சமாதானம் கொள்கிறது. உதயசங்கர் என்னும் என் முன்னோடிக் கலைஞனை, நண்பனை, காலம் தான் கௌரவிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கிறேன்.
-கீரனூர் ஜாகிர்ராஜா