Sunday, March 22, 2009

நானும் கதைகளும் - நன்றி கனவு

மனதின் அடிப்பரப்பில் பாசி போல் படர்ந்து இன்று இறுகிப் பாறையாகி விட்ட பால்யத்தின் நிழல்களே என் எழுத்து. ஒரு கையளவு இடத்திலிருந்து ஊற்றெடுக்கிற காவிரியைப் போல எனக்கான எழுத்தை அரைக்கால் பருவத்திலிருந்தே நான் அகழ்ந்தெடுக்கிறேன். 6ம் வகுப்பு படிக்கையில் நிழல் என்று கதை எழுதி ஆத்தாவிடம் வாசிக்கத் தந்தது நினைவிலிருக்கிறது. எங்கள் வீட்டுக் கொட்டத்தில் ஒரு பக்கம் இறைச்சி வெந்துகொண்டிருந்த அடுப்பு கொத்து கொத்தாய் புகை கிளப்பிக் கொண்டிருந்தது. அம்மா அகலமானதொரு அம்மியில் கொத்தமல்லி செலவு அரைத்துக் கொண்டிருந்தாள். அரைக்குயர் ரஃப் நோட்டில் இரண்டு காகிதங்களைக் கிழித்து மைப்பேனவில் எழுதிய அந்தக் கதையில் துர்மரணமடைந்த பெண்ணொருத்தியின் நிழல் அவளது பூர்வீக வீட்டின் சுவரில் அழியாது படிந்திருந்ததாய் எழுதியதை இன்று நினைக்கையிலும் மயிர்க்கால் விறைக்கிறது.

அடர்த்தியான வெயில், சிம்னி விளக்கொளி நிலாக் கிரணங்களிலான எந்த வெளிச்சத்திலிருந்தும் கிடைக்கின்ற நிழல்களின் மேல் எனக்கு அளவற்ற ஈர்ப்பு உண்டு. சிம்னி சுடர்விட சுவரில் நீண்டெழும் என் பிம்பங்கள்ளை பலவித பாவனைகள் காட்டி ரசிப்பேன். திண்ணையில் படுத்துறங்குகையில் பௌர்ணமி ஒளியில் நிழலாடும் அந்தி மந்தாரைகளின் பிம்பம் அன்றைய இரவின் சுகானுபவம். அர்த்த ஜாமத்தில் வந்து அகப்படாமல் தப்பிய திருடனின் நிழலை இன்னும் அப்படியே மனச்சிலேட்டில் பதிந்து வைத்திருக்கிறேன். இறந்துவிட்ட என் ஆத்தாவின் நிழல் இன்னும் என்னைத் தொடர்ந்து வந்து துன்புறுத்துவதாகவே உணர்கிறேன். நிழல்களுடனான என் உறவைப் பாட்டி சைத்தான்களின் சகவாசம் என்பாள்.

‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ என்று அழியாச்சுடரில் மௌனி கேட்பார். நம் மூதாதையரின் நிழல் படிந்த பூர்வீக வீடு பல தலைமுறைகளின் தொகுப்பாகி வாழ்வின் பொருளை நமக்கு உணர்த்துகிறது.

பழநியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒரு இடுக்கில் சிக்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம் என் கீரனூர். ஒரு காலத்தில் இது முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்ததாகக் கேள்வி. சண்முகநதி சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்த காலம் என் விடலைப் பருவமாயிருந்தது. ஒரு நீர்வாழ் ஜீவராசியைப்போல ஆறுகளும் குளங்களும் கிணறுகளுமே அப்போதைய என் வாழ்விடங்களாக இருந்தன. அவற்றிலொரு மீனைப்போல நான் நீந்திக்கொண்டிருந்தேன். என் உடன் பயின்ற இருவர் பைத் கானம் இசைக்கும் கோஷ்டியினர். என்னை மூத்த கருத்தமுத்து என்னும் வாட்டசாட்டமான தடியன் எல்லோருடன் நானும் காடு கழனிகளில் சுற்றி இலந்தை, நாவல் பறித்து, கரும்புகளடித்து, ஒடக்கான் அடித்து அலைந்து திரிவேன். மனதில் துக்கத்தின் சாயைகள் துளியும் கவியாத பருவம்.

அச்சம் என்பதற்ற நாட்கள். கால்களில் செருப்புமிருக்காது. நேரத்துக்கு உணவுமெடுத்துக்கொண்டதில்லை. பள்ளிப்பாடங்கள் குறித்த லட்சியமில்லை. இவ்வாறு நான் ஊர் சுற்றியாகிப் போனது எங்கள் குடும்ப கலாச்சாரத்துக்கு ஒவ்வாதது. நுனி நாக்குப் பேச்சும் கலையாத ஆடைகளும் ஐவேளைத் தொழுகையுமாயிருந்த எங்க பசங்களிடம் எனக்கு ஒரு ஒட்டுதல் இருந்ததில்லை. மீன்காரத் தெரு சகவாசம் கூடாதென்னும் கட்டுப்பாடு வீட்டிலிருந்தது. அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் பைத் கானங்கள் என்னை அங்கு கொண்டுபோய் நிறுத்தும். பறத்தெருவுக்குள் நுழையத் தடையிருக்கும். நையாண்டி மேளமும் நாதஸ்வரமும் கரகாட்டமும் எனக்கு அங்கிருந்துதான் கிடைக்கும். விசேஷ இரவுகளில் தீப்பந்தங்களும் கியாஸ் விளக்குகளும் சூழ அந்த கருப்பு ஜனங்கள் சீர் செனத்தி எடுத்துச் செல்லும் அந்தப் பாமர அழகை ரசித்துக் கொண்டே பின்தொடர்வேன். அவ்வாறு விடியாத இரவுகள் பல உண்டு.

எங்கள் தெருவில் நிலவிய அமைதியும் தூய்மையும் ஒழுங்கமைவும் எவ்வித சலனத்தையும் தராதபோது பிற தெருக்களின் வீச்சம் என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அந்தத் தெருக்களில் தான் எனக்கு மாறுபட்ட மனிதர்கள் வாய்த்தனர். அழுத்தமான சம்பவங்கள் கிடைத்தன.

ஏற்றத்தாழ்வுகள் என் சமூகத்தில் இயல்பாகவே நிலவி வந்த விஷயம். பொருளாதாரத்தில் பலமுள்ளவனுக்கு எப்போதும் தனி மரியாதை இருந்தது. சிறு பிராயத்திலிருந்து இதை நான் மிகுந்த துக்கத்தினூடாக மனப்பதிவு செய்து வந்திருக்கிறேன். வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் என்று தனி வம்சமாக அடையாளப்படுத்துகிற அளவு ஒரு சந்ததியினர் ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சிதைந்த குடும்பங்களின் அவலம் பதிந்த களையிழந்த வீடுகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்தப் பிரதேசத்தைக் கடந்து செல்கையில் ஒரு வித சூன்யம் நம்மையுமறியாமல் நம் மேல் கவிந்து துன்புறுத்தும். கொடிய கரங்கள் நீண்டுவந்து நம்மை இருள் குகைக்குள் தள்ளும்.

இதைப் போன்ற பிராயத்துச் சித்திரங்கள் மனப்பரப்பில் தங்கி பிறகு ஒரு கணத்தில் தொடர்ந்த கிளறல்களின் மூலமாக மேலெழும்பி வந்து இனம்புரியாக் கிலேசங்களை மன நெருக்கடிகளை புரியாத ஆனந்தத்தை உருவாக்கியுள்ளன. அத்தாவின் தாயார் குஞ்சம்மாள் என்கிற சஹர்பான் பீவி என் பாட்டி. ஆயம்மா என்றே அழைப்பேன். அம்மாவுடன் அவர் சண்டையிட்ட நேரம்போக மீதி நேரங்களில் எனக்கு அகண்டதொரு இஸ்லாமிய கலாச்சார வாழ்வியல் அடையாளங்களையும் விசித்திரமான குரான் கதைகளையும் சொல்லி பிறிதொரு உலகத்தை அறிமுகப்படுத்தியவர்.

ஆதம்மையும் ஹவ்வாவையும் உலகின் முதல் ஆண் பெண் என்றும், ஆதம்மை இறைவன் மண்ணாலும், ஹவ்வாவை ஆதம்மின் விலா எலும்பாலும் படைத்தான் என்றும் முதல் கதையைச் சொன்னபோதே என்னை கண்கள் விரிய வைத்தவள். எப்படி ஒருவரை மண்ணாலும் விலா எலும்பாலும் படைக்க முடியும் என்கிற என் பிள்ளைப் பருவத்து எதிர்வினைகளையும் சந்தித்து சகிப்புத் தன்மையுடன் தொடர்ந்து என்னிடம் உரையாடியவள். ஆதம்மும் ஹவ்வாவும் இறைவனின் எச்சரிக்கையை மீறி விசித்திரக் கனியைத் தின்றதுதான் இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூல காரணம். இது சைத்தானின் சதி என்றும் கேட்டபோது மெல்ல கதை உலகம் விஸ்தீரமடைந்தது. சைத்தானை மிகப்பெரிய வில்லனாக நான் மனக்கண்ணில் பார்த்து மிரண்டேன். விசித்திரக் கனிகள் கொண்ட அந்த விருட்ச மரம் இந்த பூமித் தாழ்வாரத்தில் எங்கேனும் வேர்பரப்பி நிற்கிறதா என்று நான் அலைந்து தேடிச் சலித்திருக்கிறேன்.

அன்பானவர்களே! அகில உலகத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்ற ஒப்பற்ற இறைவனுக்கு உருவமில்லை என்னும் கருத்தே எனக்கு அப்போது வித்தியாசமாகவும் வியப்பாகவும் நம்பமுடியாததாகவும் பட்டது. பிறகு இறைவன் தூணிலிமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என்கிற நம்பிக்கையையும் அவ்வாறே நான் பரிசீலித்துப் பார்க்க வேண்டியிருந்தது. இறைவனால் 1,24,000 தூதர்கள் நபிமார்கள் இந்த பூமிக்கு இறக்கப்பட்டார்கள் - என்றாள் ஆயம்மா வெற்றிலை குதப்பிய வாயுடன். நான் அவர்கள் வானுலகத்திலிருந்து குதித்திருப்பார்களா ஏணிப்படிகளமைத்து இறங்கியிருப்பார்களா என்று கற்பனை செய்தேன். குரானில் 25 நபிமார்களைத் தானே சொன்னாய் என்று குறுக்குக் கேள்வியும் கேட்டு வைத்தேன். ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக 23 வருட காலகட்டத்தில் குரானின் வசனங்கள் வெளிப்பட்டதை அவள் சொல்லி ஓய்ந்தாள். ஜிப்ரீல் ஒளியால் படைக்கப்பட்டவர். மனிதக் கண்களுக்குப் புலப்பட மாட்டார் என்றும் அறிந்து கொண்டேன்.

ஹ¨கபாயில் 36000 இறக்கைகளுடன் 50000 ஆண்டுகள் பறந்த போதும் ஏழுவானங்களுக்கு அப்பால் மரகதத்தினால் உருவாக்கப்பட்டு நீரில் மிதக்கும் உலகத்தில் போடப்பட்டிருக்கும் இறைவனின் சிம்மாசனமாகிய அர்ஷ்ஷின் ஒரு தூணின் நுனியைக்கூட தொட முடிந்ததில்லை; உயிரினங்களின் தோற்றத்தில் நடமாடும் தீப்பிழம்பால் படைக்கப்பட்ட ஜின்களின் கூட்டம் கண்ணுக்குத் தெரியாத வாயுவாகவும் மாறவல்லது; தொட்டிலில் தூங்கும் குழந்தையை தானாக சிரித்து தானாக அழவைக்கும் சொர்க்கத்தின் கண்ணழகிகள் ஹ§ருள்ஈன்கள், கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமாகிய வெண்ணிறத்திலான மின்னல் வேக வாகனம் புராக்கிலமர்ந்து நபிகள் நாயகம் விண்ணுலகப் பயணம் சென்று மிஃராஜ் இரவில் இறைவனுடன் உரையாடியது; மீனின் வயிற்றுக்குள் வாழ்ந்த யூனுஸ் நபி கடலைப் பிளந்து பாதையமைத்து பகைவர்களிடமிருந்து தப்பிய மூஸா நபி - அற்புதங்கள் நிகழ்த்த அவரிடமிருக்கும் அஸா என்னும் கைத்தடி; மரணத்தறுவாயில் உயிரைப் பறிக்க வரும் இஸ்ராயீல்; பறவைகளிடமும் ஏன் எறும்புகளிடமும்கூடப் பேசும் ஆற்றல் பெற்ற சுலைமான் நபி, இறந்தவர்களை உயிர்ப்பிக்க வல்ல சக்தியுடைய ஈஸாநபி, சந்தூக்கு என்னும் மரணப் பல்லக்குகள், இறந்தபிறகு கேள்வி விசாரணை கிளப்ப வரும் முன்கர் - நக்கிர்; உலகம் அழிந்தபிறகு இறந்துபோன எல்லா மனிதர்களுக்கும் உயிரூட்டி எழுப்புகின்ற மஹ்சர் மைதானம் நரகத்தின் மீது வாளைவிட கூர்மையாகவும் ரோமத்தைவிட மெலிதாகவும் போடப்பட்டுள்ள சிராத்துல் முஸ்தகீம் பாலம் இபுராகீம் நபியின் பிறப்பால் தன் ஆட்சிக்கு முடிவு காலமெனக் கருதி அப்போது பிறந்திருந்த 77000 குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்ட பாபல் நகர மன்னன் நம்ரூத், மரணச் செய்தியை அறிவிக்கும் மலக்குல் மௌத் குருவி, உண்மைகளைக் கண்டறிந்து சொல்ல சுலைமான் நபி தூது விட்ட ஹ§த்ஹ§த் பறவை, களிமண் உருண்டைகளை வீசியெறிந்து யானைப்படையை விரட்டிய அபாபீஸ் பறவைக் கூட்டம், கழுதை வாகனத்தில் அமர்ந்து வலதுகண் இல்லாமல் உலக அழிவின் அறிகுறியாய் வர இருக்கும் தஜ்ஜால் - இன்னுமின்னும் ஆயம்மாள் காட்டிய உலகம் மாந்த்ரீக யதார்த்தங்களால் நிரம்பிவழிந்த மகா சமுத்திரம்.

இவற்றையெல்லாம் என் கதைகளில் நாவல்களில் நான் வலிந்து திணித்ததில்லை. இவ்வகை மாந்த்ரீக யதார்த்தங்களை என் படைப்பில் தேவைப்படும் இடத்தில் அத்தியாவசியம் கருதி மட்டுமே பயன்படுத்துகிறேன். என் கதைக் களங்கள் எதுவும் ஏழு வானங்களுக்கு அப்பால் இல்லை. நாற்றமும் கவுச்சியும் புழுவும் பூச்சிகளும் சூழ்ந்த தெருக்களில் இரண்டு கைகளையும் கால்களையும் தவிர எவ்வித பலமுமற்ற - அமானுஷ்ய சக்தியற்ற எளிய மனிதர்கள் என் கதை மாந்தர்கள். இவர்களுக்கு பசியும் காமமும் காழ்ப்பும் வக்கிரமும் பொறாமையும் பொச்சரிப்பும் வன்மமும் உண்டு. பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் தான் ஊரை விட்டுப் பிரிந்தபோது எப்படி ஊர் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் அப்பாவியும், பிரியமாய் வளர்த்த ஆட்டுக்குட்டியை ரம்ஜான் துணி வாங்குவதற்காக விட்டுத்தர மறுக்கும் சிறுமியும் பண்டிகைக்கு விற்றுவிடலாமென்று ஒரு பட்டி செம்மறி ஆடுகளை ஓட்டிவந்து, ஒட்டகத்தை அறுத்து ஓர் விருந்து தரும் முதலாளியிடம் ஏமாந்து விடும் கசாப்பு வியாபாரியும், பிரியாணிக்காக ஏங்கும் கூடலிங்கமும், ஹஜ் பயணத்தின் கிரியைகளில் ஒன்றான சைத்தான் மீது கல்லெறியும் சம்பவத்தில் லட்சோபலட்சமாய் கூடிய கூட்டத்தின் நெருக்கடி தாளாமல் தடுமாறி வீழ்ந்து உதையும் மிதியும் படும் ஹாஜியும், மதமாற்ற வலையில் சிக்கியிருந்து விளிம்பில் தப்பித்துச் செல்லும் சுடலை மாதாரியும், ஜவுளிக்கடையில் கணக்குப் பிள்ளையாய் இருந்து கம்ப்யூட்டரின் வருகையால் வேலை இழக்கும் ஹஸன் முகம்மது மாமுவும், கணவனால் தலாக் என்னும் விவாகரத்து பெற்று கைக்குழந்தையுடன் தத்தளிக்கிற பெண்ணும்,

விசா வாங்கித் தருவதாக ஏஜண்டால் ஏமாற்றப்பட்டு துபாய் சிறையில் காலம் கழிக்கிற இளைஞனும், நோன்புக்கஞ்சி கிடைக்குமென்று கருதி இறுதியில் அது கிடைக்கப்பெறாத மாரியம்மாளும், ஒவ்வொரு பள்ளி வாசலிலும் வெள்ளிக்கிழமையன்று கையேந்தும் பெண்மணியும், வீட்டு வேலைக்கென்று போய் முதலாளி மகனிடம் கற்பைப் பறிதரும் ஆமினாவும், மேட்டுக்குடியினர் வாழும் பங்களாத் தெருமீது தீராத வன்மம் கொண்டலைகிற நைனாவும், பெருமாள் கோயில் பூசாரிக்கு மர்மஸ்தானத்திலுள்ள மயிர் நீக்கும் ஏழை நாவிதன் துருத்தியும், அழகானவரென்றும் அறிவானவரென்றும் வர்ணிக்கப்படும் தங்களின் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் உருவத்தை தரிசித்துவிடத் துடிக்கும் கலைமனம் கொண்ட கருத்தலெப்பையும், புத்திசுவாதீனமுள்ளவனெனத் தெரிந்தும் அவனையே மணாளனாக ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்படும் ருக்கையாவும், ராவுத்தர் - லெப்பை எனப்பிரிந்து உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளும் மனிதர்களும், மனைவியுடன் பிணங்கிப் பிரிந்து ஜவ்வு மிட்டாய் விற்று முக்கு முறுங்கை மரத்தடியில் காலங்கழிக்கும் ஹமீதுவும், அஷ்டாவதனம் புரியத் தகுதியுள்ளவனே ஆயினும் சாம்பான் மடத்தில் கஞ்சா புகைத்தவாறு ஞான லோகத்தில் சஞ்சரிக்கிற பாவாவும், பாலியல் வறட்சியால் ஓரினப் புணர்ச்சிக்குத் தள்ளப்பட்ட மாந்தர்களும் இன்னுமின்னும் இஸ்லாம் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுமே என் கதை மாந்தர்கள். கதைகளையோ, புதினத்தையோ அனுபவத்தின் சாரமின்றி மொழியின் வலிமையாலோ புனைவின் திறத்தாலோ தூக்கி நிறுத்த முடியாது. எப்படைப்பும் அது ரத்தமும் சதையுமான வாழ்வின் பதிவாக மனித அவலத்தை உன்னதத்தை வாசகனுக்குப் பரிமாற வேண்டுமென்பதில் தளராத நம்பிக்கை கொண்டவன்.

(திருப்பூரில் நடைபெற்ற சாகித்ய அகாதமியின் தமிழ் நவீன இலக்கியம் கருத்தரங்கக் கட்டுரை. பிற கட்டுரையாளர்கள்: சிற்பி, புவியரசு, சி.ஆர்.ரவீந்திரன், இந்திரா, தமிழ்நாடன், சுப்ரபாரதிமணியன்)

எல்லோருக்குள்ளும் ஒரு கருத்த லெப்பை - க. சுப்பிரமணியன், நன்றி கனவு

உ ருவ வழிபாடும் அரூப வழிபாடும் இரண்டு வழிமுறைகள் விதவிதமாய் செதுக்கி, வடித்து, வரைந்து உருவங்களே அனைத்துமாய் ஆகி புரதானத்தை இழந்து விடுவது ஒரு எல்லையென்றால், உருவங்களை ரசிக்கின்ற கலைமனம் கூட குற்றமாய் ஆகிவிடுவது மற்றொரு எல்லை.

விதவிதமாய் மிட்டாயில் உருவங்களைப் படைக்கும் அமீதுவிடம், குழந்தையாய் இருக்கும் கருத்தலெப்பை செய்துதரக் கேட்பது சைத்தானை. அதே கருத்த லெப்பையால் அமீதுவுக்குள் வீணாகிக் கொண்டிருக்கும் ஒரு ஓவியனையும் அடையாளம் காண முடிகிறது.

‘உருவம் நமக்கு ஆகுமாடா’ எனக் கேட்கும் அம்மா விடம் ‘நீயும் நானும்கூட உருவம்தானேம்மா’ என்று சொல்லும் அவனது ரூபங்களின் மீதான காதல் ரகசிய மாக அமீது மூலம் அண்ணல் நபியை உருவமாய்ச் செய்து பார்க்கத் துடிக்குமளவுக்கு வளர்ச்சி பெறுகிறது. நாவலின் மற்றொரு முக்கிய இழையாக ஓடுவது ராவுத்தர் - லெப்பை அடையாளம் சார்ந்து ஊருக்குள் இருக்கும் பேதம். பள்ளிவாசல் மகாசபைத் தேர்தலில் நூர்முஹம்மது லெப்பை காரியதரிசி பொறுப்புக்கு போட்டியிடுவதைத் தொடர்ந்து ராவுத்தர்களிடம் கிளம்பும் ஆத்திரமும் அதன் விளைவுகளுமாய்ப் பயணிக்கிறது.

சிலருக்கு சிந்தனையும் இன்னும் சிலருக்கு செயல்களும் வசப்பட்டுவிடும். செயலும் சிந்தனையும் ஒரே லயத்தில் வாய்ப்பவர்கள் அரிது. மாட்டிறைச்சி தின்னும் லெப்பைகளின் நியாயம் எடுபடுவதில்லை என்று வருந்தும் அம்மா இடுப்பொடிய பிழியும் முறுக்குகளை எண்ணிக்கையில்லாமல் அண்டாவின் கொள்ளளவே கணக்காய் வாங்கும் முதலாளிகளின் நியாயத்தை எண்ணிப் பொருமும் ராவுத்தரை எதிர்த்து கொடி பிடிக்காமல் அனுப்பியதும் திரும்பி வந்ததற்கான அம்பாவை ‘அவனையும் சேத்துதான் சொல்றேன்’ என்று சீறும் கருத்தலெப்பையால் யதார்த்தத்தில் எதையுமே மாற்ற முடிவதில்லை. தன் ப்ரியத்துக்குரிய அக்கா ருக்கையாவின் வாழ்க்கையில் கூட எதுவும் செய்ய முடிவதில்லை. அதிகபட்சமாக ராவுத்தர் அண்ட்-கோவுக்கு மாற்றாக ஒரு லெப்பை அண்ட்-கோ குறித்து கனவுதான் காண முடிகிறது.

மேலும் மிட்டாய் அமீதுவிடம் ‘நீ மொதல்ல பித்துலெவக் கொட்டத்த அடக்கி ஒங்க அக்காக்காரிய வாழவெய்யிடா. அப்புறமா ராவுத்தனுங்க கொட்டத்த அடக்கலாம்’ என்று பேச்சுக் கேட்கத்தான் முடிகிறது. ஆழமாய்ப் பார்த்தால் நம்மில் பெரும்பாலோருள்ளும் ஒரு கருத்தலெப்பையை அடையாளம் காணலாம். ஜாகிரின் பேனா தயக்கமின்றியும் எளிதாகவும் அஹமது கனி ராவுத்தருக்கு பன்னிரண்டு வயது விடலைப் பையனிடம் ஏற்படும் ப்ரியத்தையும், மழையிரவில் சுயநினைவின்றி தபாலாபீஸ் திண்ணையில் கிடக்கும் கருத்த லெப்பையைத் தன் தாகம் தீர்க்க குதுபுதீன் பயன்படுத்திக் கொள்வதையும், தன் அம்மாவின் பருத்த பிருஷ்டம் கருத்த லெப்பைக்குள் ஏற்படுத்தும் இனம் புரியாத சங்கடத்தையும் சொல்லிவிடுகிறது.

சாம்பான் மாடத்து பாவா, கொடிக்கால் மாமு, சின்னப் பேச்சி என்று எழுபது பக்க குறுநாவலுக்குள் இன்னும் பேசுவ தற்குத் தோதான கதாபாத்திரங்கள் இருக்கவே செய்கின்றன. இன்னும் விரிவாய் எழுதுவதற்குத் தோதான களமிருந்தும் குறுநாவலாகவே வார்த்திருக்கிறார் ஆசிரியர். ஒரு வேளை இத்தனை நறுக்காகச் சொன்னதனால்தான் இந்தச் சுவையோ!

கருத்த லெப்பை
குறுநாவல் : கீரனூர் ஜாகிர்ராஜா
மருதா, 6(32) அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை 92. பக்கம் 72, ரூ. 40

வாழ்க்கையைப் பிழிந்து சொட்டும் கதைகள் - நன்றி கவிதாசரண்

(கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்” நூலை முன்வைத்து) ஹரணி

காய்ந்து கிடக்கிற நதியில் எல்லாமும் கிடக்கின்றன. அதுகுறித்து நதியிடம் எந்தவிதமான கருத்தோ கோபமோ ஆனந்தமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீர் நிறைந்து கரைமேவி ஓடுகையில் நதியின் அழகு சொல் லொண்ணா எண்ணக்குவியலை மனத்துள் விதைக்கிறது. சாதாரண மனிதன் குளிக்க இறங்கி ஆனந்தம் கொள் கிறான். நீச்சல் தெரிந்த குழந்தைகள் ஆசையில் அலுப்பு தீருமட்டும் நதியில் விளையாடி களைக்கின்றன களிப்பில். நீச்சல் தெரியாதவன் நதியைப் பார்க்கையில் பயத்துடன் எதிர்கொள்கிறான். கவிஞனுக்கு நதி ஆயிரம் சொல்லித் தருகிறது. பல்லாயிரம் படைப்புகளில் நதி நுரைத்துப் பொங்கி ஓடிக்கொண்டுதானிருக்கிறது. இப்படிப்பட்ட நதி காய்ந்து கிடக்கும் காலங்களில் பார்க்க வலி பொங்குகிறது. எல்லாமும் அதில் கொட்டப்படும் போது ஆத்திரம் வருகிறது. இதற்கும் நதி எதுவும் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கை எல்லோர் வாழ்விலும் நதியைப்போல வறண்டும் நிறைந்தும் கிடக்கிறது. வாழ்கிற நிலைப் பாட்டில்தான் எல்லாமும் சமன்படுகிறது.

அவரவர் தன்மைக்கேற்ப அல்லது அமைந்துவிடுகிற சூழலுக்கு ஏற்ப இந்த நிலைப்பாட்டை சமன் செய்கிற அல்லது சமன் செய்துவிட்டதான திருப்தியில் வாழ்க்கை முடிந்துபோகிறது. இங்கே இந்த நிலைப்பாட்டிற்காக காயங்களும் மகிழ்ச்சியும் உருவாக்கம் கொள்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் மதமும் இனமும் ஜாதியும் பேதங்களும் வேராக நிற்கின்றன. இது சாதாரண மனிதனை அவஸ்தைப்படுத்துகிறது. படைப் பாளனுக்குச் சவாலாக அமைகிறது. தன்னுடைய சமன்பாட் டிற்காகவும் தன்னைப்போன்றோரின் சமன்பாட்டிற்காகவும் இந்தச் சவாலை ஏற்கும் கட்டாயத்தை அவன் பிறந்து வளர்ந்த சமூகமே அவனுக்கு விதிக்கும்போது காயங்களால் தாக்கப்பட்டும் அவமானங்களால் உணர் வூட்டப்பட்டும் வலிகளின் வெப்பத்தில் உருகுகிறான். படைப்பாளனாகக் களத்தில் நிற்பவன் இவ்வெப்பத்தைப் படைப்புக்குள் பரப்பி அதை எல்லோருக்கு மான வலியாக உணர்த்தி நிற்கிறான். ஜாகிர்ராஜாவும் இப்படித்தான்.

எப்போதும் ஏராளமான காயங்களையும் உணர்வுச் சிதைவுகளையும் அவமானங்களையும் சந்தித்த வடு மாறாமல் தொடர்வதை மனம் கசிவோடு ஒவ்வொரு கதையிலும் உணர முடிகிறது. எனவே புனைகதையின் ஒரு முக்கியக் கூறாக இருக்கும் சிறுகதை புனையப்படும் கதை எனும் பொருண்மைக்கு அழுத்தமான பொருளாக வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புனைதல் எனும் நிலையில் "பெருநகரக் குறிப்புகள்” தொகுப்பை வாசித்து முடிக்கையில் மனம் நனைகிறது. ஒரு சமூகம் என்பது அதில் அடங்கியுள்ள மக்கள் கூட்டத்தை வைத்து அடையாளப்படுத்துவது அதன் பொருளாக அறியப்படுவது. எனவே அதன் பொறுப்பு என்பது பொதுமையானது, சமமானது, நலம் பயக்குவது என்பதைத் தாண்டி, காக்க வேண்டிய சமூகமே நசுக்கிச் சிதைப்பதைச் சிறுவயது முதல் கவனித்து அதை மறக்க முடியாமல் மன்னிக்கவும் தயாராக இல்லாமல் கடுமையாக விமர்சித்து ஒவ்வொரு கதையிலும் நெஞ்சு நிமிர்த்தும் ஜாகிர் எனும் படைப்பாளனின் தெளிவு அதிசயமானது, ஆச்சர்யமானது, பாராட்டுக்கு மிக உரியதும்கூட. ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் சொல்லும் விதமும் உணர்த்தும் விதமும் மொழிநடையும் எதார்த்தமும் அழிக்கமுடியாத அழுத்தம் கொண்டு லபக்கென்று விழுங்குவதுபோல வாசிக்கிற மனசுக்குள் போகிறது. இருப்பினும் சில கதைகளில் சிறுவயது நிகழ்வுகளில்கூட இடையிடையே இன்றைய வயது ஜாகிர்ராஜா கருத்துச் சொல்வது யதார்த்தம் மீறியது என்றாலும் அது பட்டுக் காய்த்துப்போன வடுவின் உறுத்தல் எனும் நிலையில் ஏற்றுக்கொள்ளவே தோன்றுகிறது.

இத்தொகுப்பு மட்டுமல்ல ஜாகிர்ராஜாவின் கதைகள் முழுக்கவே ஒரு சிறப்பான அம்சமாகப் பார்ப்பது அவற்றில் எந்தத் திணிப்பும் இல்லை. வலிகளுக்கான அறிவுரை மருந்தும் இல்லை. தனக்குத் தன்னுடைய பிறந்த சமூகம் விதித்ததை, அதனால் பட்ட இன்னல்களை சிறுவயது முதலே மனத்தில் அழிக்கமுடியாத காய பிம்பமாக உள் வாங்கிப் பின்பருவத்தில் படைப்பு மனமாக உருக்கொண்ட நிலையில் படைப்பில் அதனைக் கொட்டுகிறார். படிப்போர்க்கு நீதி சொல்வதல்ல இக்கதைகளின் நோக்கம். ஒரு சமூக வலியை காட்சிப்படுத்துவதில் இவை சிறப்புறுகின்றன. மேலும் சமூகத்தை எதிர்ப்பது அல்லது போர்க்கொடி உயர்த்துவதும் நோக்கமல்ல. ஆனால் தான் பட்ட வலியை தன் சாதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பட்ட அவமானங்களையும் படும் வேதனை களையும் மாற்றி சமூகம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை உறுத்தலோடு உணர்த்துவது தன்னுடைய படைப்பு நோக்கமாக ஜாகிர் கொண்டிருக்கிறார் என்றே உணர முடிகிறது. இஸ்லாமியச் சமூகத்தின் சடங்குகளையும் மரபுகளையும் தேவைப்படும் சூழல்களில் கதைகளில் இயல்பாகச் சொல்லும் போக்கில் அவர் கொண்டிருக்கும் பற்றும் தெளிவுறத் தெரிகிறது. ஒரு தாய் அல்லது தந்தை தவறு செய்யும்போது அதை வயதில் குறைந்த மகன் சுட்டுவிரல் நீட்டிக் குற்றத்தை உணர்த்தும்போது அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனோபாவத்தைத் தவிர்த்து சமூகம் ஜாகிரின் படைப்பு மனத்தைக் கருதவேண்டும் என்றே தோன்றுகிறது. குற்றங்களைக் கண்டிக்கும் உரிமை ஒரு மகனுக்கு உண்டு என்பதைக் கட்டாயம் ஏற்க வேண்டும். இதைத்தான் ஜாகீர் சிறுகதைகள் உணர்த்துகின்றன.

எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்று வெகு காலமாய் சொல்லிக்கொண்டே வருவதை மரபாகக் கொண்டிருந்தாலும் ஒரு எழுத்து என்பது நேர்மையான வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். ஒரு நல்ல மனிதனாக, நேயமுள்ள குடும்பத்திற்குப் பொறுப்பானவனாக இருந்து விட்டால் எழுத்து தேவையில்லை. அப்படி வாழ்ந்தால் போதுமானதே. இந்தப் போதாமையால்தான் அவரவர் சமூகத் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் எழுத்தைக் கைக்கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு படைப் பாளனுக்கும் நேர்கிறது. எனவேதான் எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்பதை சொல்லித்தீர வேண்டிய நிர்ப்பந்தம் நிகழ்கிறது. ஜாகிரைப் பொறுத்தளவில் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு துளியையும் கூர்ந்து கவனித்து அதைப் படைப்புக்குள் பதிவுசெய்து கொண்டே போவதை இத்தொகுப்பின் சிறுகதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் காட்டுகிறது. வாழ்வதையே படைப்பாகக் காட்டி வாழ்கிறார்.

காதலின் நுட்பமும் நேயமும் உணரப்படாமை, மனித மதிப்பீடுகள் அலட்சியப்படுத்தப்படுதல், மனம் சிதைத்தல், பசியின் தாகம், நட்பின் அழுத்தம், உறவின் மேன்மை, வாழ்வதற்காக அலைக்கழிக்கபடும் வாழ்க்கை, சடங்குகளின் பெயரால் சாதிகளின் பேதத்தால் மிருகமெனப் பாயும் மேலாதிக்கங்கள், அதற்கான போராடுதல்கள், அவற்றின் தோல்வியும் அவமானங்களும், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் நிகழும் மன வெடிப்புகள் போன்றவை இவரது கதைகளின் கருக்களங்களாக நுரைத்துக் கிடக்கின்றன. சக்கிலி மத்தை, (மந்தைய எங்களுக்குன்னு ஒதுக்கிக் குடுக்கற வரைக்கும் நாங்க யாரும் எடுப்பு கக்கூஸ் அள்றதுக்கு வர மாட்டோம்), மழை - மகனைப் புரிந்துகொள்ளாத தந்தை (....அங்கேயே சென்ட்ரல் தண்டவாளத்திலேயோ கூவத்திலோ விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளலாம். உன் தீதார்கூட எங்களுக்குத் தேவையில்லை..... நல்லவர்களுக்கொல்லாம் சீக்கிரமாய் மௌத் வந்துவிடுகிறது. வேணும் ஸலாம். நாயன் துணை), மனத்தை உருக்கும் வெம்மை (....மனதுக்குள் சுடர்விட்ட வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை அவன் தன் பிஞ்சு வாயால் ஊதி ஊதி அணைக் கிறான்.

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனுக்கு இந்த சிறைச்சாலையின் நெடிய சுவர்களுக்குள்ளிருந்து நான் கூறும் வாழ்த்துகள் கேட்கவா போகிறது), சுவடுகள் வாழ்வின் அவலத்தை மிக நெருப்போடு உணர்த்தி வலிக்கச் செய்கிறது (....நெடுஞ்சாலைகளும் எல்லாவிதமான சீதோஷ்ணங்களும், யாசகக் குரல்களும், புறக்கணிப்பும் அத்தாவுக்கு ரத்தத்தில் கலந்தவை.) அறைச்சுவர்கள் சிரிக்கின்றன, (....அவர்களுக்கு உடமையான பெட்டிகளிலிருந்து மேலும் பல ஜாதிப் பாம்புகள் எட்டிப் பார்க்கின்றன....சற்றுமுன் நிகழ்ந்த வாதங்கள் மறந்து கண்களுக்கு முன்னால் பானம் நிறைந்த குவளை தோன்றவும் குளிர்ந்துபோனான்), அடையாளம் - பசியின் மகத்துவத்தை, மேன்மையை அடையாளப்படுத்துவது (....பள்ளி வாசல் வீதியில் அவள் கிழக்கும் மேற்குமாய் அலைந்ததைக் கண்டு ராவுத்தப் பசங்கள் சிரியாய்ச் சிரிப்பார்கள்...... நம்மளப் போல ஏழைக்கி பட்டினி கெடக்குற நாளெல்லாம் நோம்புதா) இவையெல்லாம் தொகுப்பின் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய கதைகள். வாழ்வை ஒருமுறைக்கு நூறு முறையாகப் பரிசீலித்து வாழ வேண்டிய தேவையை உணர்த்துபவை.

தேர்ந்த எழுத்தாளுமையை ஒவ்வொரு கதையும் வெளிக்காட்டுகிறது. தடையற்ற பிரவாகம் சொற்களினூடாக பாம்பு செல்வதுபோல அமைந்திருப்பது படிப்பதற்கான ஆர்வத்தை குறைக்காது காக்கிறது. என் வாழ்க்கையும் அதன் மீது கொட்டப்பட்ட சமூகத்தின் ஆதிக்கக் குப்பையும் அதனைப் பற்றவைத்து நெருப்புக் காட்டிய சாதியப் பிரிவும் தவிர வேறு வேண்டியதில்லை என்பதான ஜாகிரின் எழுத்து அதன் மூலம் ஒரு பொதுமையான சமூக அவலத்தை, அசிங்கத்தை உரித்துக் காட்டுவது இக்கதைகளின் சாகா வெற்றியாகக் கருதிக்கொள்ளலாம். கதைகளின் மொழிநடை தேர்ந்த நடையாக உள்ளது. அவற்றிலும் எளிமையும் இயல்பும் அதேசமயம் செழுமையான அழுத்தமும் கொண்டு மைந்துள்ளது. சிலவற்றைச் சான்று காட்டலாம்.

நான் இங்கு கொட்டும் பனியிலும், மழையிலும் வம்பாடு பட்டு தொகை தொகையாக அனுப்பினால் தின்று தெறித்து ஊரைச் சுற்றுவது உன் வழக்கமாகிவிட்டது. மானம், ரோஷம் என்பது மருந்துக்குக்கூட இல்லாத மழுங்கைதான் நீ.

....தணிக்கவியலாத வெம்மை... அதன் இறுக்கமான பிடி மலைப் பாம்பின் நெரிப்பென எலும்புகளை முறிக்கிறது.

யாசகக் குரல். அதுவும் அக்காவின் சோகம் ததும்பிய யாசகக் குரல் எத்தனை துன்பமானது. ஒரு நாளேனும் அத்தா இதை உணர்ந்ததில்லை. புவ்வாவின் ஆல்பம் குட்டை மர பீரோவுக்குள் இருக்கிறது. ஆல்பத்தில் கணக்கற்ற கன்னிகள் நீந்துகிறார்கள். அது பெருமூச்சுகளின் சமுத்திரம் என மாறுகிறது... விதவிதமான பெண்களின் நீண்டகால கனாக்கள் ஆழத்தின் ஆழத்துள் பாறைப் பாசியாய் படர்ந்து கிடக்கிறது. அபிலாஷைகளின் இழைகளால் நெருக்கி நெய்யப்பட்டது அவர்களின் ரூபங்கள்.

வாழ்வின் உண்மைகளுக்குள் நீந்திக்கொண்டிருக்கிற படைப்பாளனின் உணர்வுபூர்வமான இத்தொகுப்பும் படைப்பாளனும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இத்தொகுப்பை வாசித்துவிட்டு எதுவும் பேசலாம். இடமிருக்கிறது. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஏதாவதொரு சிறுகதையில் வாழ்வதற்கான சாத்தியங்களை இத்தொகுப்பு கொண்டிருப்பதை இத்தருணத்தில் சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

“பெருநகரக் குறிப்புகள்”, சிறுகதைத் தொகுப்பு, கீரனூர் ஜாகிர்ராஜா, விலை ரூ.75/-, வெளியீடு: அனன்யா, 8/37, பி.ஏ.ஒய். நகர், குழந்தை இயேசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613 005.

புத்திபேகம் தெரு 2வது சந்து - நன்றி செம்மலர் மார்ச் 2009

கலிஃபுல்லாஹ் சமீபமாகப் பெருங்குழப்பத்திலிருக்கிறான். யோசிப்பின் கணங்கள் அதிகரிக்க தலைவெப்பமாகி எந்தநேரத்திலும் கபாலம் சிதைவுறக் கூடுமென அஞ்சுகிறான். சாலையில் ஜனத்திரள் சூழ்ந்த வேளையிலோ, நீண்ட யாத்திரையின் போதோ, அங்காடியில் பொருட்கள் வாங்கும் பொழுதிலோ, இலக்கியச் சந்திப்பிலோ, மனைவியுடன் சம்போகம் வைத்துக் கொள்ளும் போதோ, குறைந்தபட்சம் அறிந்த யுவதி ஒருத்தியிடம் கதைத்துக் கொண்டிருக்கும் போதோ கூட இது நேர்ந்து விடுமென அஞ்சுகிறான். இதனால் பதற்றமாகி யாவற்றையும் ஒருவித ஈடுபாடின்றிச் செய்து முடிக்க நேர்கிறது கலிஃபுல்லாஹ்வுக்கு.

இந்தப் பிரச்சனை இவனுக்கு இரண்டு மாத காலமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அலுவலகப் பணிகளை எப்போதும் ஆர்வத்துடன் அணுகும் இவனுடைய போக்கில் சில நாட்களாக ஏற்பட்டுள்ள அலட்சியம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பெரிதும் வருத்தமடைந்துள்ளார். பல சமயங்களில் இவன் தனது அலுவலக மேஜையில் தலைகவிழ்த்து உறங்கிவிடுவதும், சக ஊழியர்கள் தட்டி எழுப்பும்போது கடுப்பாகி "புத்தி பேகத்தைப் பற்றி உங்களுக்கென்ன மசுரா தெரியும். வெறுமனே கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருக்கும் கபோதிகள் நீங்கள்" என்று இவன் ஏதேதோ உளறிக் கொட்டுவதும் சகஜமாகிவிட்டது. இவனின் ஏழ்மையும், அப்பா இல்லாத குடும்பத்தில் வயதான தாயையும், முதிர் கன்னியாகிவிட்ட தங்கை ஒருத்தியையும் தன்பொறுப்பில் வைத்துப் பராமரிக்கின்ற கடமை உணர்வையும் வைத்து இயல்பாகவே இவன் மேல் குவிந்துள்ள அனுதாப மோஸ்தர்தான் இவ்வகைக் களேபரங்களிலிருந்தெல்லாம் இவனைக் காப்பாற்றி வைக்கிறது.

கலிஃபுல்லாஹ் உறங்கும்போது பல நேரங்களில், 'புத்திபேகம் புத்திபேகம்' என்று உளறிக் கொட்டுவது இவனுடைய தாயார் நஸ்ரீன் ஜஹானின் காதில் புத்திபேதம்... புத்திபேதம்... என்று விழுந்து தொலைக்க, மகனுக்கு புத்திபேதலித்து விட்டதாகக் கருதி தொலைவிலுள்ள மனநல மருத்தவமனை சென்று திரும்பிய கதையும் நடந்து முடிந்திருக்கிறது.

புத்தகம் என்கிற பெயரில் கலிஃபுல்லாஹ் கண்ட கண்ட கசுமாலங்களையும் படித்துவிட்டு சதா மண்டையைச் சொறி சொறி என்று சொறிந்து தள்ள உச்சி மண்டையில் வழுக்கையும் விழத் தொடங்கியாயிற்று. இவன் மண்டையைச் சொறியத் தொடங்கினால் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு அவர்களும் தங்களின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றைச் சொறிந்து கொண்டேயிருப்பதும் வாடிக்கையாகிப்போன சமாச்சாரம்.

கலிஃபுல்லாஹ் அடர்த்திமிகு ரோமப் பாரம்பரியமுள்ளவனாதலால் இவனுடைய நீள நீளமான தலைமுடிகள் உதிர்ந்து மின் விசிறிகளின் ஓயாத சுழற்சியில் அங்குமிங்குமாக அலைபாய்ந்து இறுதியில் ஒவ்வொருவரின் மேஜையிலும் ஆடைகளிலும் படிந்து கொள்கிறது. சக ஊழியர் ஹரிகுமாரின் மனைவி, அவருடைய சட்டையை சலவை செய்ய எடுக்கையில் அதில் ஒட்டியிருந்த நீளமான முடியைக் கண்டு ஒரு பெண்ணின் கேசமென சந்தேகித்து ஆய்வுக்கு அனுப்பி உலுக்கி எடுத்துவிட்டாள். பிறகு ஹரி தன்னை குற்றமற்றவன் என நிரூபிக்க அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டியிருந்தது. ஊரில் நடந்த திருவிழாவில் பூக்குழி இறங்கி ஹரி பட்ட பாடு பெரும்பாடு.

பெருநகரம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் கலிஃபுல்லாஹ், வடபழனியிலுள்ள பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்யும் தன் சஹ்ருதயனைக் காண வேண்டிப் புறப்பட்டான். உஷ்ணம் கண்களைப் பீழை தள்ளவைத்தும் வெயிலைப் பொருட்படுத்தாது இவன் ஆயிரம் விளக்கு மசூதிக்கருகில் வந்து வலப்புறம் திரும்பிய போது, புத்திபேகம் தெரு 2வது சந்து என்பதை சுவரெழுத்து வடிவில் கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் பொங்கிப் பிரவஹிக்க அப்படியே நின்று விட்டான். தன்னுள் பிரசன்னமாகிக் கெண்டிருக்கும் புத்திபேகமும் இந்த புத்திபேகமும் ஒன்றுதானா என்கிற குழப்பம் ஒரு கணம் எழுந்தடங்கியது. அடர்த்தியான மஞ்சள் வர்ணம் பூசி, அதன்மேல் கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்ட எழுத்துகளை இவன் அருகில் சென்று தடவிக் கொடுத்த போது எதிரில் ஒரு நாயின் வேகவேகமான நான்கு கால் பாய்ச்சலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நாய் அதன் வாயில் ஒரு பெரிய இறைச்சித் துண்டைக் கல்விக் கொண்டு ஓடியதும், செக்கச் சிவந்த சதைப் பிண்டத்தைக் கண்டு அது மாட்டிறைச்சி என்பதையும் அவனால் யூகிக்க முடிந்தது. நாயைச் சிலர் துரத்திக் கொண்டும் சென்றனர்.

சஹ்ருதயனைப் பார்க்க அடிக்கடி இந்த சந்தைக் கடக்க வேண்டியிருந்ததால் இந்த சந்தின் பெயர் அவனின் நனவிலி மனதில் அழுந்தப் பதிந்திருக்கிறது. அதுதான் புத்திபேகம் என்னும் கேரக்டர் ஆகி தன்னைத் தொடர்கிறது என்றெல்லாம் இவனால் யோசிக்க முடிந்தது. ஆனாலும், புத்திபேகம் இவனுள் பலவிதமான புனைவுகளை விதைத்தபடி இருந்ததுதான் வினோதமாயிருந்தது.

சம்ஷாத் பேகம், ஜரீனாபேகம், கதிஜாபேகம், ரஜியாபேகம், பௌஷியாபேகம், பாத்திமாபேகம், பேகம்-பேகம்-பேகம் என்று இவனறிந்து வைத்திருந்த முப்பத்தேழு பேகங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தான். புத்திபேகம் தனியே துருத்திக் கொண்டுதான் நின்றாள். உன் வரிசைக்குள் என்னை அடக்க முடியாது. நான் வித்தியாசமானவள் என்று புத்திபேகம் கொக்கரித்தாள். இவன் தனது பட்டியலைச் சுக்குநூறாய்க் கிழித்து காற்றில் பறக்கவிட்டான். தலைக்கு மேலே நூற்றி எட்டு பேகங்கள் பறந்து சிதறிக் கீழே விழுந்தனர். அந்தக் காலத்தில் நூற்றி எட்டு பேகங்கள் இருந்தனர் என்று சொல்லிக் கொண்டான்.

திடீரென பெட்டிக்குள் அடைபட்ட சிந்துபாத்தின் லைலாவைப் போல வாமன வடிவமெடுத்து புத்திபேகம் இவனின் உள்ளங்கையில் நின்று கொண்டிருக்கவும், அடையாளமறியும் பொருட்டு உற்றுப் பார்க்கையில் அது ஒரு கட்டெறும்பு என்றும் அவனால் கண்டறிய முடிந்தது. எறும்பாகி விடும் ஆற்றல் பெற்ற புத்திபேகம் நிச்சயமாகக் கூடுவிட்டுக் கூடு பாயும் கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருக்க வேண்டும். அல்லது மைவேலை தெரிந்த சூனியக் காரியாக, நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனத்தைச் சேர்ந்தவளாகவும் இருக்கக் கூடும் என்றெல்லாம் இவன் மனம் விரித்துப் பார்க்கத் தொடங்கிற்று. பிறகு அனிச்சையாக இவன் புத்திபேகம் தெருக்குள் நுழைந்து வெளியேறுதல் ஆகிப் போனது.

ஒருமுறை இரவு வெகுநேரம் கடந்துவிட்டது. வடபழனியில் பஸ் மாறி இவன் மலைச் சாலையில் ஆயுள் காப்பீட்டுக் கழக நிறுத்தத்தில் இறங்கி மண்டையைச் சொறிந்து கொண்டே ராயப்பேட்டை செல்வதற்கு பதிலாக மெனக்கெட்டு நடந்து புத்திபேகம் தெரு சந்துக்கு முன்னால் நின்றான். மணி பனிரெண்டு கடந்திருந்ததால் விளக்குகள் அணைக்கப்பட்டு தெருவில் ஒருவித இருளும் அமைதியும் நிலவ இவன் அருகிலிருந்த புத்திபேகம் என்கிற சுவரெழுத்தைக் கையால் தடவிப் பார்த்தான். சுவருக்குள்ளிருந்து யாரோ அவனுடைய கையை இழுப்பது போலத் தோன்றவும் பதைப்புடன் கையை உறுவிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்துக் கொண்டான். எத்தனையோ முறை பகலில் இந்தத் தெருவில் சுற்றிக்கிறங்கித் தெரிந்து கொள்ள முடியாததையா இந்த அர்த்த ராத்திரியில் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்றும் தோன்றியது. நிலத்தின் சுபாவமறியும் பொருட்டு மண்ணைக் கைகளில் அள்ளி முகர்ந்து பார்த்தான். மூத்திரக் கவுச்சியிருந்தது. அது மனித மூத்திரமாகவோ இறைச்சியைக் கவ்விச் சென்ற நாயினுடையதாகவோ இருக்கலாம் என்று நினைத்து கீழே போட்டு சுவரில் கையைத் துடைத்தான். மீண்டும் சுவருக்குள்ளிருந்து யாரோ கையை இழுக்கிற மாதிரி இருந்தது.

இரண்டல்ல மூன்று கடைகள் தாண்டி இடமும் வலமுமாய்க் கிளைபிரியும் குறுஞ்சந்துக்கள் கடந்து விளக்குக் கம்பம் தாண்டி வேகமாக நடந்தான். தன்னை யாரும் கவனிக்கவோ, பின் தொடரவோ செய்கிறார்களா என்று அடிக்கடி கவனிக்கிற பழக்கமுள்ள கலிஃபுல்லாஹ், இந்த நேரத்தில் அப்படித் திரும்பிப் பார்க்க அச்சப்பட்டான். பெஸ்ட் மாட்டிறைச்சிக் கடை அருகில் வந்து நின்று அந்த பெயர்ப் பலகையை உற்றுப் பார்த்தான். ஸ்லாட்டர் ஹவுஸிலிருந்து அறுபடும் மாடுகளின் மரண சங்கீதம் கேட்டு இவன் மனம் பதைத்தது. இறைச்சியைக் கவ்விச் சென்ற நாய், மாட்டிறைச்சிக் கடை வாசலில் தூங்காமல் விழித்துக் கிடந்தது. இவனைக் கண்டதும் உர்ர்ர் என்று அன்னியப்பட்டது. இவன் மிகுந்த அச்சமுடன் பணிவுடனும் "நான் உன்னுடைய எதிரியல்ல. ஒருமுறை நீ இறைச்சியைக் கவ்விக் கொண்டோடிய வேளை உன்னைச் சிலர் துரத்திக் கொண்டோடியது கண்டு மிக்க மனவேதனையுற்றேன். நீ பாவப்பட்ட ஜீவன். அது உனக்கான இரை. இந்த உலகில் எல்லா மனிதருக்கும் போலவே உனக்கும் ஒரு பங்கு உண்டு. அதை இந்த மானிடம் மறந்து விடுகிறது. நீ நன்றியுள்ள ஜீவன். என்னால் உனக்கு ஒரு தீங்கும் நேரப் போவதில்லை. என்னை நீ தாராளமாக நம்பலாம்" என்றெல்லாம் அந்த நாயுடன் உரையாடிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து மலைச் சாலை முனைக்கு வந்துவிட்டான். பிராய்லர் கோழி இறைச்சிக் கடைகள் நிறைந்திருந்த அம்மண்டலம் தந்த கெட்ட நெடியில் இவன் லயித்தான்.

புத்திபேகம் தெரு 2வது சந்தை மீண்டும் திரும்பிப் பார்க்கையில் மினுக்கும் ரோஸ் நிற பர்தாவுக்குள் பொதிந்திருந்த இளம்யுவதி ஒருத்தி, ஒரு சந்திலிருந்து மற்றொரு சந்தை மின்னலெனக் கடந்து சென்றாள். இவனுக்கு கோழிநெடியை மீறிய சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள, சத்யம் தியேட்டர் வழியே தன் இருப்பிடம் செல்லும் முடிவை துணிச்சலுடன் மாற்றிக் கொண்டான். வேகமாக அந்த யுவதி கடந்து சென்ற இடத்துக்கு வந்து பார்த்தான். அப்படி ஒரு தடயமுமில்லாமல் சந்து வெறிச்சோடியிருந்தது. ஒருவேளை வெறும் பிரம்மையோ அல்லது அவள்தான் புத்திபேகமோ என்றும் நினைத்தான். மின்னலைப் போலவே அவள் கடந்து சென்றாள். கண்டிப்பாக அவள் அசாதாரணமானவளாகவே இருக்கக் கூடும் என்றெண்ணிய வேளை காலம் குறித்து அவனுக்கு சிறு குழப்பம் ஏற்பட்டது. யாருமற்ற சந்தில் இந்த நடுநிசியில் அவள் இத்தனை துரிதமாகச் செல்லவொரு தேவையில்லை என்றும் தோன்றியது. சந்து முனை வரைக்கும் மீண்டும் நடந்து பார்த்தான். திடீரென எல்லா கதவுகளையும் திறந்து கொண்டு எண்ணற்ற ரோஸ்நிற பர்தா யுவதிகள் வெளிக்கிளம்பினர். இவன் திரும்பிப் பார்க்காமல் பீட்டர்ஸ் ரோடில் ஓடத் தொடங்கினான். அது இறைச்சியைக் கவ்விக் கொண்டோடிய நாயின் ஓட்டத்தை விடவும் துரிதமாயிருந்தது.

தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணம் - ச. தமிழ்செல்வன்


துருக்கித் தொப்பி, கீரனூர் ஜாகிர் ராஜா
வெளியீடு : அகல் பதிப்பகம், சென்னை பக். ரூ. 80

மீன்காரத்தெருவையும் கருத்தலெப்பையையும் தமிழுக்குத்தந்த ஜாகீர்ராஜாவின் மூன்றாவது நாவல் இது.எப்போதும் இஸ்லாமிய சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பக்கம் நின்று இதுவரை யாரும் பேசாத சந்தேகத்துக்கிடமற்ற குரலில் கூர்மையான விமர்சனப் பார்வையோடு கதை சொல்பவர் ஜாகீர்ராஜா.மூடுண்ட சமூகம் என்றும் தீவிரவாதிகளின் சமூகம் என்றும் உலகெங்கும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுவரும் இஸ்லாமிய சமூக வாழ்வை தோப்பில் முகம்மது மீரான், மீரான் மைதீன், ஹெச்.ஜி.ரசூல் போன்ற படைப்பாளிகள் ஏற்கனவே நம் சமூகத்துக்குத் திறந்து வைத்தார்கள்.

அவ்வறிமுகத்தின் மீது நின்று நாம் ஜாகீர்ராஜா காட்டும் ஒரு புதிய உலகத்துக்குள் நுழைகிறோம்.இது இஸ்லாமிய சமூகத்தின் உள் முரண்பாடுகளையும் இஸ்லாத்தின் மீதான சில ஆரோக்கியமான விமர்சனங் களையும் உள்ளடக்கிய உயிருள்ள படைப்பாக மலர்கிறது.

எட்டுக்கல் பதிச்ச வீட்டின் தலைவர் கேபிஷெமனைவி பட்டம்மாளின் மகன் அத்தாவுல்லாவின் மனைவியாக நூர்ஜகான் அடியெடுத்து வைப்பதில் நாவல் துவங்குகிறது.பொன்னாலான தேகம்போல மினுங்கும் பேரழகியான அவள் மீது பட்டம்மாளே ஆசை கொள்கிறாள்.அப்பேர்ப்பட்ட நூர்ஜகான் அம்மை விளையாடி தன் அழகையிழந்து குணமே மாறி தான் பெற்ற மகனுக்கே ‘வில்லி’யாகப் பின்னர் மாறுகிறாள்.என்ன அற்புதமான பாத்திரப்படைப்பு நூர்ஜகான்! தமிழுக்கு முற்றிலும் புதிய ஒரு மனுஷியைக் கூட்டிக்கொண்டு வந்து நிறுத்திவிட்டார் ஜாகிர்ராஜா.

கல்யாணமான சில நாட்களில் ஒரு ராத்திரி யில் கணவன் தான் கல்கத்தாவுக்கு வேலைக்குப் போகப்போவதை அவள் எதிர்பாராத அத்தருணத்தில் சொல்ல அப்ப நான் என்று கேட்கையில் “நீ இங்கதே இருக்கணும்.நீயுமா எங்கூட வரமுடியும்” என்று சாதாரணமாகக் கேட்டு அவளைக் கேலி செய்து சிரிக்கிறான். இருட்டில் மௌனத்தில் அதை உள்வாங்கும் நூர்ஜகானின் மனநிலை நம்மை அதிர வைக்கிறது. ஆயிரமாயிரம் இஸ்லாமியச் சகோதரிகளின் இத்தகைய தனிவாழ்வு குறித்தான பெரும் சோகம் அந்த மௌனத் திலிருந்து கிளம்பி நம்மைத்தாக்குகிறது.

சென்னையில் சினிமா எடுக்கும் ஆசையில் சொத்தையெல்லம் தொலைத்துவிட்டு ஒரு துருக்கித் தொப்பியோடு ஊர் வந்து சேரும் மர்லின் மன்றோ அரை நிர்வாணப் படத்தை வைத்து கரசேவை செய்யும் கேபிஷெ. அதே போல திமுக அனுதாபியாக கட்சி வேலையை பெரும் போதையுடன் செய்து இருப்பைக் காலி செய்யும் மகன் அத்தாவுல்லா. அவனுடைய உழைப்பை முன்வைத்து தன் அரசியல் அந்தஸ்தை உயர்த்திகொள்ளும் தென்னாடு ஓட்டல் அதிபர் டி.எஸ்.சங்கரலிங்கம், எபவும் தண்ணி, குறத்தி வீடு என மிதக்கும் குட்டி லெவைஎன ஆண்களின் உலகம் இவ்விதமாக இயங்க பெண்களே குடும்பங்களை நடத்திச் செல்கிறார்கள்.

திமுக திராவிடநாடு கோரிக்கையைக் கை விட்ட சேதி கேட்டுத் துடித்துப்போய் ஓடிவரும் அத்தவுல்லா மற்ற மூத்த திமுக உள்ளூர் பிரமுகர்கள் அதுபற்றிக் கவலைப்படாமல் சீட்டாடிகொண்டிருகிறார்கள். எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்கதையாக இருந்தாலும் கூடவே பின்புலமாக சமூக அரசியல் நிகழ்வுகள் வந்துகொண்டே இருக்கிறது சிறப்பு.மாடியிலிருந்து இறங்கி அத்தாவுல்லா வரும்போது டி.எஸ்.சங்கர லிங்கத்தின் மகள் திராவிடமணி கீழே விழுந்து காயம்படுகிறாள்.

திராவிடமணியின் அழுகைச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது என்று அந்த அத்தியாயம் முடிவது நல்ல குறியீடு. திமுகவின் உட்கூடற்ற அரசியல் சத்தமேயில்லாமல் இந்நாவலில் தோலுறிந்து நிற்பது ரசமான விமர்சனம்.

அம்மை வார்த்த உடம்போடு படுத்துக்கிடக்கும் நூர்ஜகானிடமிருந்து கைக்குழந்தையை வீட்டார் பிரிப்பதும் அவள் எம் புள்ளெ எம்புள்ளெ என்று தேடி ஆடைபற்றிய கவனம்கூட இல்லாமல் தெருவில் ஓடுவதும் நம் மனங்களைப் பதறச்செய்யும் காட்சி யாகும்.தமிழ் இலக்கியத்துக்கு இக்காட்சியின் மூலம் புதிய பரிமாணத்தை ஜாகீர்ராஜா வழங்கியுள்ளார்.

நாகூர் ஆண்டவர் தர்காவில் அப்பாஸின் நினைவுகள் தாக்கி நுர்ஜகான் அழுவதும் குட்டி லெவை அவளைத் தேற்றுவதுமான அகாட்சி காவியம் தான் எனில் அவனுக்காக அவள் அழுத செய்தி கேட்டு அப்பாஸ் கதறுவதும் நூர்ஜகன் உட்கார்ந்து அழுத அந்த ஆட்டங்கல்லைத் தலையில் தூக்கிகொண்டு போக அப்பாஸ் ஆசைபடும் இடம் மகாகாவியமாகும்.

இளையவன் பிறந்தபிறகு பெற்றதாயினால் புறக்கணிக்கப்படும் ரகமத்துல்லா சர்ச்சில் யேசுவைச் சந்தித்து உரையாடுவதாக வரும் காட்சியில் கேட்பான் “நீங்கள் உங்கள் தாய் மீது பெரிய அளவில் மரியாதையுள்ளவரில்லையா? ஏனெனில் உங்களின் மீதொரு சகோதரன் சுமத்தப்படவில்லை” எத்தனை துயர்மிகுந்த பால்யம் அவனுக்கு. எல்லா மனிதர்களுமே அவரவர் அழகுகளோடும் குரூரங்களோடும் நாவலில் வாழ்கிறார்கள். அதுதான் கலையின் வெற்றி. தொப்பியைக் கழற்றி வந்தனம் செய்து இந்நாவலை தமிழ்ச்சமூகம் வரவேற்க வேண்டும்.

Tuesday, March 3, 2009

பிரகாசமான விழா

ஒரு வழியாகப் பிரகாஷ் கருத்தரங்கத்தை நடத்தி முடித்துவிட்டோம். ஒன்றரை மாத உழைப்பு. பிரபஞ்சன், நான், பாக்கியம் சங்கர், சைதை ஜெ கூட்டணியில் தமுஎச பேனரில் நிகழ்த்தி முடிக்கப்பட்ட முதல் கூட்டம். எல்லோருமே வியந்து பாராட்டிவிட்டனர். அழைப்பிதழில் 5 மணி என்றிருந்ததால் அமைச்சர் SNM அண்ணன் முன்னதாகவே வந்து முன் வரிசையில் உட்கார்ந்துவிட்டார். அரங்கில் அப்போது அவ்வளவாகக் கூட்டம் இல்லை. எங்களுக்குப் பதற்றம். ஆனால் அமைச்சரோ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். நான் காத்திருக்கிறேன் என்றார் பெருந்தன்மையாக. ஒரு வழியாக 6.15க்குத் தொடங்கி சைதை ஜெ. வரவேற்புரைத்தார். இலங்கைப் தமிழினப் படுகொலைக்கும் கிருத்திகா, சுகந்தி சுப்பிரமணியம் மறைவுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு நான் இந்தக் கூட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசத் தொடங்கினேன்.

கொத்துக்கொத்தாகக் கூட்டம் சேர ஆரம்பித்தது. அடுத்து எழுத்தாளர் பிரபஞ்சன் 10 நிமிடம் துவக்கவுரை ஆற்றினார். மங்கையர்க்கரசி அம்மாவுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அமைச்சருக்கும் ஆழி பதிப்பக உரிமையாளர் செந்தில்நாதனுக்கும் கௌரவம் செய்யப்பட்டது. பாக்கியம் சங்கர், பிரகாஷின் கதைகளைப் பற்றிப் பேசினார். இயக்குனர் மகேந்திரன் பெற்றுக்கொள்ள, அமைச்சர் SNM நான் தொகுத்து ஆழி வெளியிட்ட 'தஞ்சைப் பிரகாஷ் படைப்புலகம்' நூலை வெளியிட்டார். சுகன், நா. விச்வநாதன், இளம்பிறை, தஞ்சாவூர் கவிராயர், சௌத் விஷன் பாலாஜி, சுந்தர் ஜி, அமைச்சர் SNM, இயக்குனர் மகேந்திரன் எல்லோரும் பேசிவிட்டனர். நட்சத்திரன், புத்தகன், மானா. பாஸ்கரன், ஆரூர் தமிழ்நாடன், கிருஷாங்கினி, மணிச்சுடர் என்று பிரகாஷ் உடன் பந்தப்பட்ட பலரும் அரங்கில் இருந்தனர். ஆனால் இவர்கள் எவரையும் பேச வைக்க முடியவில்லை. காரணம் நேரப் பற்றாக்குரை. 8 மணிக்குமேல் கடந்துவிட்டது.

இனி வர மாட்டார் என்று நம்பிக்கை இழந்த நேரத்தில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தன் வழக்கமானப் புன்னகையுடன் அவைக்குள் நுழைந்தார். நிழ்ச்சியில் சாமிநாதனுடன் உட்கார்ந்து அவ்வபோது விசில்களைக் கிளப்பிக்கொண்டிருந்த வா.மு.கோமு திடீரெனக் காணாமல் போய்விட எஸ்.ராவைப் பேச அழைத்தேன்.தாமதமான வருகைக்கு வருத்தம் தெரிவித்துவிட்டுத் தன் உரையைத் தொடங்கினார். சுமார் 20 நிமிடங்கள் அவரும் கோணங்கியும் தஞ்சைக்குச் சென்று பிரகாஷைச் சந்தித்தது, அவருடைய இயல்பு, அவருடைய எழுத்து, கரமுண்டார் வூடு நாவல் இவைகளைக் குறித்துச் செறிவான உரையை நிகழ்த்தினார். இன்னும் அரை மணி நேரம் எஸ். ரா. பேசியிருக்கலாம் என்று தோன்றியது. பார்வையாளர்களும் ஆர்வமாகவே இருந்தனர். ஆனால் அவருடைய உரை ஒரு முக்கியப் பதிவு. தமிழ்ச் சூழலில் பிரகாஷைப் பெரிதாகப் பொருட்படுத்தாதப் போக்குக்கு எஸ்.ரா.வின் உரை ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவே நான் உணர்ந்தேன். எஸ்.ரா. அமர்ந்த பிறகு கோமுவைக் கூப்பிட்டேன். அவனுடைய மேடைக் கூச்சத்தைப் போக்க என்ன செய்யலாம் என்றுதான் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். பலருக்கும் விழா திருப்தியைத் தந்திருக்கிறது என்று முகம் படித்ததில் தெரிந்தது. அமைச்சர் கடைசிவரை அமர்ந்து நன்றியுரை எல்லாம் கேட்டுவிட்டுத்தான் சென்றார். பிரகாஷ் மீது அவர் வைத்திருக்கும் பற்றைப் பார்த்து நாங்கள் அதிசயித்தோம். இனி இந்தக் கூட்டம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதென்று கூர்ந்து அவதானிக்க வேண்டும்.