
Monday, February 9, 2009
Monday, February 2, 2009
Friday, January 30, 2009
இனிய உதயம் ஜனவரி 2009 நேர்காணல்
பழநி வட்டம், கீரனூரில் பிறந்தவர் ஜாகிர்ராஜா. 1995 முதல் தமிழ் சிறு பத்திரிகைச் சூழலில் தொடர்ந்து சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் என்று பன்முக அடையாளத்துடன் இயங்கி வருகிறார். 'செம்பருத்தி பூத்த வீடு', 'பெருநகர குறிப்புகள்' ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் 'மீன்காரத் தெரு', 'கருத்த லெப்பை' என இரண்டு நாவல்களும் வெளியாகியுள்ளன. 'துருக்கித் தொப்பி' என்னும் அடுத்த நாவல் "அகல்' வெளியீடாக வரவுள்ளது. 'வடக்கே முறி அலிமா' குறுநாவலும் எழுதியுள் ளார். அடுத்து 'பித்னா பஜார்' என்கிற நாவலை எழுதி வருகிறார். சிறந்த நாவலுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில விருதை தொடர்ந்து இரண்டு முறையும், ஏலாதி இலக்கிய விருது, திருப்பூர் நகர கலை இலக்கியப் பரிசும் பெற்றவர்.இஸ்லாமிய கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்தரித்த இவருடைய 'மீன்காரத் தெரு', 'கருத்த லெப்பை' ஆகிய இரண்டு நாவல்களும் வெளிவந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் விமரிசனங்களையும் ஏற்படுத்தியது. குறிப்பாக 'கருத்த லெப்பை' நாவலின் நாயகன்- நபிகளாருக்கு உருவம் தர நினைத்து செயலில் இறங்குவதாகப் புனையப்பட்டிருப்பது இவரின் வெடிப்பைக் காட்டுகிறது.
இவரது சிறுகதைகள் பல மலையாளத்திலும், 'கருத்த லெப்பை' நாவல் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மேலும் இவரின் படைப்புகள் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள தோடு, எம்.பில்., பி.ஹெச்டி., ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள் ளன. சென்னையில் இந்திய வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் இவர், மனைவி ராஜி, குழந்தைகள் ஆயிஷா முத்தமிழ், முகமது பாரதியுடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார்.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தமிழுக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பு அதிகம் உண்டு. ஆனால் நவீன யுகம் என்று வருகிறபோது, தமிழ் இஸ்லாம் வாழ்வை எழுத முன்வரும் படைப்பாளி களின் எண்ணிக்கை குறைவே. இதன் காரணம் என்ன?
"1885-களில் சித்தி லெப்பை மரைக்காயரால் எழுதப்பட்ட 'அசன்பே சரித்திரம்' தமிழின் முதல் ஏழு நாவல்களில் இரண்டாவது இடம் பிடிக்கிறது என்பது பழைய சங்கதி. 1870-களில் வந்த இப்ராகிம் சாகிப்பின் 'விக்கிரமாதித்யன் கதை' முதல் வரலாற்று நாவல் என்பதும் இதனுள் அடங்கும். ஆனால் சரியாக ஒன்றரை நூற்றாண்டுக்குமுன் 1858-ல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் என்பவர் 'தாமிரப் பட்டணம்' என்றொரு நாவலை அரபுத் தமிழில் எழுதி இருக்கிறார். அரபுத் தமிழ் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட- எழுதப் படிக்கத் தெரியாத இஸ்லாமியர் கையாண்ட வடிவம். இது தமிழகத்திலும் நடைமுறையில் இருந்ததை நானறிவேன். இன்று இவ்வடிவம் அழிந்து விட்டது. எனில், "பிரதாப முதலியார் சரித்திரம்' அல்ல; மாப்பிள்ளை லெப்பையின் '"தாமிரப் பட்டணம்'தான் தமிழின் முதல் நாவல் என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்! இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியரின் பங்களிப்பை மறைத்தழித்தது போலத்தான் இதுவும்.
நான் மதிக்கின்ற ஜெயமோகன் போன்றவர்கள் தங்களுடைய வலைப்பூவில் இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சய மில்லை என்று எழுதுவது வேதனை அளிக்கிறது. சிறுபான்மை யரில் கிறிஸ்துவர்களுடன் ஒப்பிடும்போது, இஸ்லாமியரின் இலக்கியப் பங்களிப்பு கணிசமான அளவு இருந்தே வருகிறது. ஆனால் அவர்களுடைய எழுத்துகளில் ஒரு தயக்கம் இருப்பதை நான் தயங் காமல் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு முன்னோடிகளாக இருப்ப வர்கள்கூட சமகால வாழ்க்கையை எழுதத் தயங்குகின்றனர். துணிந்து கருத்துகளை முன்வைப்பதில் அவர்களுக்குப் பெரும் ஒவ்வாமை இருக்கிறது. இதற்கு தீவிர மத அபிமானம் காரணமாயிருக்கிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் தங்களுடைய மனதில் பட்டதை, ஜாதி சமயம் கடந்து எழுதத் துணிவுள்ளவர்களாகவும், அதே நேரத்தில் உலகில் எந்த இனமும் திட்டமிட்டு ஒடுக்கப்படுமானால் அதை எதிர்க்கிறவர்களாகவும் இருக்க வேண்டுமென விரும்பு கிறேன். இஸ்லாமியர்களிடம் கல்வியை விடவும் கலையை விடவும் வணிகம் பெரியது என்கிற எண்ணம் வலுப்பெற்றிருக்கிறது. இதில் மாற்றம் வேண்டும்.''
இஸ்லாமியப் பெண்கள் எழுத வருவதும், துணிந்து தம் வாழ்வைப் பதிவு செய்யவும் சாத்தியமிருக்கிறதா?
"1938-ல் சித்தி ஜுனைதா பேகம் 'காதலா கடமையா' என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதற்கு உ.வே.சா. மதிப்புரை எழுதியிருக்கிறார். அப்போதே ஜுனைதா பேகம் ஒரு முழுநேர எழுத்தாளர். இந்திய விடுதலைக்கு முந்தைய நிலை இது. ஜுனைதாவுக்குக் கிடைத்த சுதந்திரம் ஏன் மற்ற பெண்களுக்கு மறுக்கப்பட்டது?
'கற்புக் கடம்பூண்ட இத்தெய்வமல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண்டிலமால்'
என்று இளங்கோ மெச்சிய கண்ணகியைப் போலவே பெண்கள் இருக்க வேண்டுமென்று தமிழ்ச் சமூகம் விரும்பியிருக்கிறது. இதில் இஸ்லாம் ஒருபடி அதிகம் ஏறி, பெண்களை வீட்டினுள் முடக்கிவைக்கும் 'கோஷா'வைப் பிரயோகித்திருக்கிறது. பெண்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டிருக்க வேண்டும். ஆண்களுக்குத் தாள் பணிந்து நடக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள். பெண்ணின் கல்வி மறுக்கப்பட்டுள்ளது. தங்களுக் கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்து கொள்வதில் சுதந்திரம் வழங்கப்படவில்லை. 1970 வரை தமிழக முஸ்லிம் பெண்களின் நிலை இதுதான். பெண்கள் அந்த காலகட்டத்தில் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்கப்படவில்லை. இந்த நிலையில் யார் எழுத வருவார்?
சல்மா எழுத வந்ததற்குப் பின்னணியில் மனுஷ்யபுத்திரன் இருந்திருக்கிறார். இஸ்லாம் சமூகத்தில் இப்படி எத்தனை ஆண்களால் ஒரு பெண் எழுதுவதற்கு ஆதர்சமாக இருந்துவிட முடியும்? சல்மாவைத் தொடர்ந்து எத்தனை பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள்? எனக்குத் தெரிய எவருமில்லை. இதற்கு வாசிப்பு வறட்சியைக் காரணமாகச் சொல்லலாம். மதரீதியிலான சஞ்சிகை கள் மட்டுமே அவர்களுடைய வாசிப்பு எல்லைக்குள் உலவுகின்றன. அவற்றில் மட்டுமே எழுத அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ் சிறு பத்திரிகைகள் இஸ்லாமிய வீடுகளின் கதவுகளைத் தட்ட வேண்டும். இன்றைக்கு இஸ்லாமியப் பெண்களின் அடிப்படைத் தேவைகள் கல்வியும் உலக அறிவும்தான்.''
மேலும் படிக்க - நக்கீரன் இணையதளத்தில்...
Thursday, January 29, 2009
நன்றி - எஸ். ராமகிருஷ்ணன்.காம்
சிறந்த பத்து தமிழ் புத்தகங்கள் : எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2008 விருப்பப் பட்டியல்
1) கருத்த லெப்பை - கீரனூர் ஜாகிர் ராஜா
2) எரியும் பனிக்காடு - டேனியல்
3) சொல்லில் அடங்காத இசை - இசைக்கட்டுரைகள் - ஷாஜி
4) நார்மன் பெத்யூன் வாழ்க்கை வரலாறு.
5) மார்த்தாஹரி - நாகரத்தினம் கிருஷ்ணனா
6) துங்கபத்திரை- பாவண்ணன்
7) நாடற்றவனின் குறிப்புகள் - கவிதைதொகுப்பு. இளங்கோ
8) நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை - பவா. செல்லத்துரை.
9) சூரனைத்தேடும் ஊர் - ஜனகப்ரியா
10) காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - வி. ராமமூர்த்தி
Thursday, January 22, 2009
Wednesday, January 21, 2009
Wednesday, December 24, 2008
கருத்த லெப்பை - அருவத்தின் உருவம் - ஹரன் பிரசன்னா

கருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.
சிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்தின் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழும். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.
கருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.
அஹம்மது கனி, எந்த ராவுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.
கருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவலிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.
இரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.
மிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ராஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.
சில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.
‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.
அஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
லெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது. நன்றி: http://nizhalkal.blogspot.com
Subscribe to:
Posts (Atom)








