Monday, January 9, 2012
சித்தி ஜூனைதா பேகம் (1917-1998)
உதயசங்கர்: ரயில்நிலையக் கலைஞன்
Tuesday, December 13, 2011
Monday, November 28, 2011
விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வுலகம் கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் கருத்தரங்கம் -பாஸ்கரன்
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எழுதியுள்ள ஐந்து நாவல்களில் மூன்று நாவல்களை மையமிட்டு நெல்லை மாவட்ட தமுஎகச 7.11.11 அன்று திருநெல்வேலியில் மூன்று அமர்வுகள் கொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. கரிசல் கிருஷ்ணசாமியின் இசையோடு நிகழ்வு தொடங்கியது. தமுஎகச நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தனது வரவேற்புரையில், “மிகச்சிறந்த நாவல்களின் பட்டியலை எவ்வளவு சுருக்கினாலும் அதில் ஜாகிர்ராஜா நாவல்கள் இடம்பெறும். வடக்கேமுறி அலிமா பல இரவுகளைக் கடந்து வானில் மின்னும் நட்சத்திரமாக ஒளிர்கிறது. இவருடைய வெம்மை, பௌர்ணமிக் கிணறு உள்ளிட்ட சிறுகதைகளும் வாசிப்பின் பேரனுபவத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நகரத்தை நோக்கியும் இவருடைய படைப்புகளைக் குறித்த உரையாடலை நகர்த்த வேண்டும்” என்றார்.
துவக்க உரை நிகழ¢த்திய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஜாகிர்ராஜா படைப்புகள் முன் வைக்கும் அரசியல் குறித்து விரிவாகப் பேசினார். “விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களைக் குறித்த பதிவுகள் குறைவான தமிழ்ச் சூழலில் ஜாகிரின் படைப்புகள் அந்த வெற்றிடத்தை நிரப்புவதுடன் மிகுந்த கலா நேர்த்தியோடு வாசகனை வந்தடைகிறது. இஸ்லாமியர்களுடன் பழகியுள்ளபோதும் அவர்களின் மூடுண்ட வாழ்க்கை குறித்து அதிகம் உணராமலே இருந்திருக்கிறோம் என்னும் குற்ற உணர்வை இவரின் படைப்புகள் ஏற்படுத்துகின்றன. எழுத்தின் வாயிலாக இவர் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வை இவரைப்போல வேறு எவரும் துணிச்சலாகப் பதிவு செய்ததில்லை” என்று ச.த. குறிப்பிட்டார்.
மீன்காரத் தெரு முதல் அமர்வுக்கு கவிஞர் கிருஷி தலைமை வகித்துப் பேசுகையில் 2006 தமுஎகச நாவல் போட்டிக்குத் தான் நடுவராக இருந்து மீன்காரத் தெரு நாவலை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததை நினைவுகூர்ந்தார். ஜாகிர்ராஜா எழுத்துகளில் வெளிப்படும் லாஹிரி வாசகனுக்கு உவப்பானது என்றும் அவர் கூறினார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் தனது சிறப்புரையில் “ஜாகிர்ராஜாவின் ஐந்து நாவல்களையும் வாசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் யாருக்கும் எளிதில் வசப்படாத நதியின் வெள்ளமெனப் பிரவாஹிக்கும் அபூர்வமான மொழி நடை அவருக்கு வாய்த்திருக்கிறது. நான் இறைநம்பிக்கை உள்ளவன் என்பதால், இது இறைவன் அவருக்கு அளித்த வரம் என்றே கருதுகிறேன். நானே பொறாமைப்படும்படியான படைப்புகளை அவர் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். மீன்காரத் தெருவை வாசித்தால் நாவல் நெடுக மீன் கவுச்சி அடித்துக் கொண்டேயிருக்கிறது இதுதான் அவர் எழுத்தின் பலம். நான் எழுதும்போது பல நேரங்களில் வார்த்தைகள் கிடைக்காமல் அவற்றின் பின்னே ஓடியிருக்கிறேன். ஆனால் ஜாகிர்ராஜாவை துரத்திக்கொண்டு வார்த்தைகள் ஓடி வருவதை நான் அனேக இடங்களில் பார்த்து வியக்கிறேன்” என்று மனம் திறந்து பேசினார்.
வடக்கேமுறி அலிமா இரண்டாம் அமர்வுக்குத் தலைமைதாங்கிய செந்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிற உலக இலக்கிய வரிசையில் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் நிற்பதாகக் குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய இலக்கிய விமர்சகர் ம. மண¤மாறன் “ஜாகிரின் மற்றெல்லா நாவல்களை விடவும் அலிமா மிகவும் மாறுபட்ட நாவல். 2000-க்குப் பிறகு வெளிவந்த தமிழ் நாவல்களில் வடக்கேமுறி அலிமாவுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. நாவலின் வடிவமும், போக்கும், மொழி நடையும் இதுவரைக்குமான தமிழ் நாவல்களின் கட்டமைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
மீன்குகை வாசிகள் அமர்வுக்குப் பேராசிரியர் கோமதிநாயகம் தலைமை வகிக்க எழுத்தாளர் நாறும்பூநாதன் சிறப்புரையாற்றினார். நாறும்பூ தனது உரையில் “மனித உறவுகளை மிக விரிவாகப் பேசும் படைப்புகள் ஜாகிர்ராஜாவுடையது. மீன்குகை வாசிகளில் ஷேக்கா தாத்தாவிற்கும் ஆஜாத் என்கிற பேரனுக்கும் நடக்கின்ற உரையாடல் காவியத்தன்மை கொண்டது. மனித விழுமியங்களின் உயர்ந்த தளத்தில் நின்று கதாபாத்திரங்களை அணுகும் தன்மை இவருடையது. இந்நாவலில் இடம் பெறும் பெண்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைக் கூர்ந்து அவதானிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்த நாவலின் தொடர்ச்சியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார்.
நெல்லை சந்திப்பு கிளைச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். எழுத்தாளர்கள் முஜிபுர் ரகுமான்,
எஸ். அர்ஷியா, ஓவியர் வள்ளி, முனைவர் கண்ணா. கருப்பையா, சண்முகசுந்தரம், ஆய்வு மாணவ மாணவியர், வாசகர்கள் மற்றும் பல தமுஎகச தோழர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மௌனமான உரையாடலின் வழியே நிறைவடைந்தது.
Wednesday, October 19, 2011
கேட்டுக்கொண்டேயிருக்கும் யாசகக் குரலும் ரத்தப் பெருக்கோடு அலையும் அவளின் துயரமும்... தேய்பிறை இரவுகளின் கதைகளை முன் வைத்து...
Wednesday, January 26, 2011
ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்
1930-களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மணிக்கொடி’ இதழ், சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பி.எஸ். ராமய்யா, ந.பிச்சமூர்த்தி போன்றோரும், தமிழ்ச் சிறுகதையின் சிகரம் தொட்டவரெனக் கருதப்படும் புதுமைப்பித்தனும், ந.சிதம்பர சுப்ரமணியன், எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், க.நா.சு., கு.ப.ரா., சி.சு. செல்லப்பா, மௌனி போன்றவர்களும் பயணம் செய்த தடமாக அது இருந்தது.
இந்தியக் கதை மரபை எடுத்துக்கொண்டால் கதைகளின் பிறப்பிடமாக இந்திய நாடே இருந்திருக்கிறது என்பதை வரலாற்றின் அடிப்படையில் வைத்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பாரசீகனும், அராபியனும் இங்கிருந்து கற்றுக்கொண்ட கதைக்கலைதான் மத்திய கிழக்கு நாடுகளெங்கும் வியாபித்து வேர்விட்டுக் கிளை பரப்பியதாகச் சொல்கிறவர்கள் உண்டு.
பல லட்சம் அத்தியாயங்களில் மாந்த்ரீக மொழியில் சொல்லப்பட்ட ‘பிருகத்’ என்னும் நீண்ட கதைப்படைப்பு கி.பி. 6ம் நூற்றாண்டுகளில் விளங்கியுள்ளது.
தமிழ்ச் சூழலில் கதைகள் நம்முடைய பாரம்பர்யமான பண்பாட்டு வெளிப்பாடுகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஒரு பூம்பூம் மாட்டுக்காரனும், குடுகுடுப்பைக்காரனும், குறிசொல்லியும், ஜோதிடக் கலைஞனும் கதைசொல்லிகளே, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம், புராணக்கதைகளை வெளிப்படுத்துகின்ற தெருக்கூத்து, பொம்மலாட்டம், பாவைக்கூத்து போன்ற யாவும் கதைமரபின் கண்ணிகளே.
இன்றைக்குப் பல்வேறு உத்திகளாலும் வெளிப்பாட்டு த்வனிகளாலும் மொழியின் உபயோகங்களாலும் ஒருவித உன்னத நவீன நிலைமை அடைந்து விட்டதாகக் கருதப்படும் தமிழ்ச்சிறுகதைப் பரப்பிலே ஹரிகிருஷ்ணனின் கதைகள் எவ்விதமாய் இயங்குகின்றன இவருடைய உலகம் எது, உள்ளடக்கம் எது; எதுமாதிரியான அரசியலை இவை முன்வைக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க அவசியமிருக்கிறது.
இலக்கணம் வகுப்போர் சிறுகதைக்கு எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் வேண்டி நிற்பர். நல்லது ஙீ கெட்டது என்னும் மோதலைக் கேட்பர். சிறுகதைக்கு மையத்தை நோக்கிய நீச்சல் அவசியம் என்கிறவர்கள் உண்டு. திருப்பமும் தேவையாம். மௌனம், ஒருமை, தீவிரத்தன்மை, ஒற்றைப் படையான நகர்வு எல்லாமும் இங்கே சிறுகதைக்குரிய இயல்புகளென வகுக்கப்பட்டுள்ளது.
‘நாயி வாயிச் சீல’ தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும், மேற்கண்ட சிறுகதைப்பண்புகளை ஒருவித முரட்டு தைரியத்துடன் நிராகரித்தபடி அதனதன் எல்லையற்ற இலக்குகளை நோக்கிப் பிரயாணிக்கின்ற தன்மை கொண்டுள்ளவையாக அனுமானிக்க முடிகிறது.
வாழ்க்கை கற்றுத் தருகின்ற அல்லது நிர்பந்திக்கின்ற எண்ணிலடங்காத விஷயங்கள் அனுபவச் சேகரங்களாகி, ஒரு சமயத்தில் புனைவின் நுட்பத்துடன் சிருஷ்டியாக வெளிப்படுவது இயல்பெனினும்; அவ்வகை அனுபவங்களுக்கும் படைப்புக்கும் தொடர்பில்லையெனக் கூறுவோர் உண்டு. நாயி வாயிச் சீல தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஹரியின் அனுபவங்களின் தொகுப்பாகத்தான் எனக்குப் படுகிறது ‘‘இவை ரத்தமும் சதையுமான என்வாழ்விலிருந்து நான் உங்களுக்குத் தருவது’’ - என்னும் வாக்கு மூலம் ஒவ்வொரு கதையையும் வாசித்து முடிக்கும்போது நம்மை எட்டி விடுகிறது.
இலக்கியத்தின் மேல் போலியாகவும் பாவனைகளாகவும் படிந்துள்ள மரபானவற்றின் மேல், படைப்பாளிக்கு நியாயமாக எழுகின்ற கோபங்கள்தான் இக்கதைகளின் தலைப்பு, உள்ளடக்கம், மொழிவெளிப்பாடு இத்யாதி விஷயங்களில் ஒருவித மீறலாக நாம் அடையாளங் காண்பது. ஏற்கனவே உள்ள நியமங்கள் மீது இக்கதைகள் எழுப்புகின்ற கேள்விகள் நியாயமானவை. இவ்வகை மீறல்கள்தான் புதிய வடிவங்களை நிர்மாணிக்க வல்லவை. நம்முடைய முன்முடிவுகளும் நம்முடைய அளவுகோல்களும் நம்மைப் பற்றியுள்ள கற்பிதங்களும் இவ்வகைப் புதிய வடிவ எழுச்சியின் முன் சரணடைகின்றன.
இக்கதைகளில் பிரயோகிக்கப்பட்டுள்ள வட்டாரமொழி இக்கதைகளின் வெற்றியைத் தீர்மானிக்கிற சக்தியாக உள்ளது. விவரணைகளுக்கு நவீன மொழியையும் உரையாடல்களுக்கு வட்டார வழக்கையும் கையாளுகின்ற என்னிடம் அவை ஓயாமல் கேள்விகளை எழுப்புகின்றன. முதல் சொல்லாடலிலிருந்து முடிவு வரை, கொச்சையானதென நம்மால் நம்பப்பட்டுள்ள வட்டார மொழி பொங்கும் இசை வெள்ளமெனப் பாய்ந்தோடுகின்ற அதிசயத்தை இக்கதைகள் முதன்முதலாக நமக்கு உணர்த்துகின்றன.
‘‘கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ்சூள வெச்சாப்பிடி அனாமுத்தாப் பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே. அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா’’
‘‘மூணு தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழுவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசருப் பசுங்கக்கிட்ட குடுத்துர்றான்’’ ‘‘சின்னப்பட்ட கழுதைக்கி செனக்கழுத கூத்தியாளாம். சேட்டு பன்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரான்’’
‘‘ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல’’
“பொழப்புப் போயி பொடக்காலியில நின்னுக்கிட்டு போவுட்டுமா வருட்டுமாங்குது. வவுசி வந்து வாசல்ல நின்னுக்கிட்டு வருட்டுமா போவுட்டுமாங்குது’’
“அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது’’ ‘‘தவுசு நாடகத்துல வர்றபேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப் பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்சமாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம்’’
‘‘ ஆர்ரா புண்டவாயா உனுக்கென்றா கேடுகாலம்? வவுத்துக்கு சோறு திங்கிறியே, உனக்கு அறுவு இல்ல? நெனவு இல்ல? தாயோட ஒண்ணுடா இந்த கேனச்சி, இவள வந்து இந்நேரத்துக்கு கூப்டுறியே ங்கோயா உன்ன என்னான்னுடாப் பெத்தா? ஈனப்பானங் கெட்டத் தாயோலி! தம்பி எந்திரிச்சிக்கிட்டுத் தாளம்போட்டா கல்லு மேல வெச்சி நைநைன்னு கொட்றது. இல்ல காராம்முள்ள வெச்சி தேய்க்கிறது?’’
‘‘நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி சுடுகாட்டுல. மவ மூஞ்சியப்பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந்தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம். நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்? தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா? ஏழுய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு, மொண்டி, மொடம் இப்படி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக் கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறு பண்டிவேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக் கண்ணுச் சாமி!’’
_ இவ்வாறு தொகுப்பெங்கும் ஹரிகிருஷ்ணன் முன்வைக்கின்ற சொல்லாடல்கள் கொங்கு மண்டலத்தின் வால் முனையான சேலம் ஏர்வாடி வட்டார வழக்கைத் தோண்டித் தோண்டி நமக்குத் தருகிறது. இவ்வழக்கு பல சமயங்களில், எங்க ஊர் ஆயா ஒருத்தி காரை தூர்ந்த திண்ணையில் கால் நீட்டியமர்ந்து இழந்த தன் வாழ்வின் எச்சங்களை வெற்றிலையாய் உரலில் இடித்துச் சவைக்கிற மாதிரியும், அவளே, காணாத தன் சனஞ்சாதியைக் கண்டு விடும்போது ‘‘இப்புடியெல்லாம் ஆயிப்போச்சே சாமீ...’’ என்று உரத்த குரலெடுத்து ஒப்பாரி வைப்பது போன்றும் பிரம்மைகளை எனக்குத் தருகின்றன.
ஹரிகிருஷ்ணனின் மொழி எனக்க மிக நெருக்கமாக நான் உணர்ந்த மொழி. என் மண்ணின் மொழி. பெயருக்கு முன்னால் ஒரு அடையாளம் போல ஊர்ப் பெயரையும் சுமந்து திரியும் நான் பெருநகரத்து இரைச்சலில், நெரிசலில் என்னை அன்னியமாய் உணர்ந்த சந்தர்ப்பங்கள் தான் அனேகம். இக் கதைகளின் வழியே என் வேர்களை நான் எட்டநின்று தரிசித்த திருப்திகொண்டேன். ஆனால் வேறொருவிதத்தில் இக்கதைகள் என் குற்ற உணர்ச்சிகளைத் திருகித் தூண்டிவிடுகின்றன. மற்றொரு விதத்தில் பெருமிதமும் கொள்ள வைக்கின்றன.
நாட்டார் வழக்கை கதை மொழியாகக் கொண்டு ஒரு சிலர்தான் வெற்றி பெற்றுள்ளனர். கி. ராஜாநாராயணன் அதற்கொரு சிறந்த உதாரணம். ஆனால் இத் தொகுப்பிலுள்ள கதைகளைப் போன்ற உள்ளடக்கம் கொண்டவற்றை கி.ரா., பாலியல் கதைகளென்றே தனியாக அடையாளப்படுத்துகிறார். ஹரி ‘‘என் படைப்புலகமே இவை தான்’’ என்று முன் வைக்கிறார். இதற்கொரு துணிச்சல் தேவைப்படுகிறது.
வாழ்வில் எதிர் கொள்ளும் குரூரங்களின் போதும், அவற்றைப் பதிவு செய்கிறபோதும், பிறிதொருவர் வழியே அவற்றை வாசக அனுபவமாக உணரும் தருணங்களிலும் நம் மனதின் சமநிலை குலைந்து தகர்ந்து விடுகிறது. நாயி வாயிச் சீல’ வாசிப்பனுபவம் எனக்கு அதைத் தந்தது. இந்தத் திக்கத்த சனத்துடன் நானும் ஒருவனாகக் கரைந்து போனபோது நிம்மதியாக உணர்ந்தேன்.
ஒவ்வொருவர் உலகமும் தனித்தனியானது. விசித்ரமானது. அவ்வகையில் கூத்துக்கலையை ஏற்றுக்கொண்ட விளிம்பு நிலைப் பிரஜைகளின் உலகம் அசாதாரணமானது. நம்மால் உன்னதம் என்று கொண்டாடப்படுகின்ற யாவும் அங்கே அர்த்தமிழந்து போகின்றன. அவர்களுடைய கனவுகள் எல்லாம் நமக்கு அன்னியமாகவும் நம்முடைய எதிர்பார்ப்புகளெல்லாம் அவர்களுக்கு சாதாரணமானவையாகவும் இருப்பது கண்கூடு. இந்த இடைவெளி நீளமானது. இதைக் குறைக்கவல்ல அதிசயம் ஒரு போதும் நிகழ்ந்துவிடாது. இதுதான் நம்முடைய இயலாமை.
ஹரிகிருஷ்ணனின் கதைகளில் சமகால சிறுகதைக் கூறுகள் எதுவும் இல்லை. அகமன சஞ்சாரமில்லை. பக்கம் பக்கமான விவரணைகள், வலிந்து திணிக்கின்ற பாலியல் சித்தரிப்புகள் இல்லை. இக்காரணங்களினாலேயே இவை தனித்துவம் பெறுகின்றன. இதே காரணங்களுக்காக நம்முடைய இலக்கிய மேதைமைகள் இவற்றைப் புறக்கணிக்கின்ற சந்தர்ப்பங்களையும் உருவாக்கித் தருகிறார் ஹரி.
இக்கதைகளின் நெடுந்தடமெங்கும் குருதியும் வியர்வையுங் கலந்த நறுமணம் கமழ்கிறது. வழக்கொழிந்த வசவுச் சொற்கள் கூத்துங் கும்மாளமுமாய் கொடியேறிப் படபடக்கின்றன. இதுகாறும் அழகியலோடு சித்தரிப்பைப் பெற்ற திருநங்கையரின் வாழ்வு அசலான முறையில் காட்சிப்பட்டுள்ளது. காலச்சூழலில் தமிழ்ச் சிறுகதையுலகம் தவிர்த்தும் தவறவும் விட்ட நாட்டார் தன்மைகள் மீண்டும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஹரிகிருஷ்ணன் புதுவிதமான எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார். கூத்துக்கலைஞர்களிடமிருந்து பெற்று அவர் தமிழுக்குத் தர நிறைய இருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கிறது.
Thursday, January 13, 2011
தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகீர் ராஜா
கல்லிலே உருவான இந்த அதிசயத்தைக் காணத்தான் கொங்கு மண்டலத்திலிருந்து 16 வருடங்களுக்கு முன்னால் நான் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்தது. கரையேறி மீன் விளையாடும் காவிரிக்கரையை இலக்கியங்களில் படித்துவிட்டு வற்றிய காவிரியைக் கண்டபோது எனக்கு மனம் திடுக்கிடத்தான் செய்தது. நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி வரும் காவிரியை மோகமுள்ளிலும் அம்மா வந்தாளிலும் வாசித்துவிட்டு ஒரு மணல் காட்டை தரிசித்தபோது திசைமாறி வந்துவிட்டோமோ என்னும் அன்றைய என் தவிப்பு, தவிப்பின் வடு இன்றளவும் மாறாமலிருக்கிறது. ஜானகிராமனின் கதைமாந்தனைப்போல படித்துறையில் ஆற அமர உட்கார்ந்து அகண்ட காவிரியில் லயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் என் ஆதி நம்பிக்கை வறட்சி குதிரைகளின் குளம்படி ஓசை அசரீரியாய் கேட்க, ஒரு புராதன நகரத்துக்குள் புழங்கித் திரிபவனாயிருக்க வேண்டுமென்பதுதான் அன்றைய என் கனவாயிருந்தது. அதுதான் என்னைத் தஞ்சாவூருக்கு இழுத்து வந்தது.
தஞ்சாவூரின் எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் ராஜராஜேச்வரம் எனப்படும் பெரியகோவில் நம் கண்களுக்கு காட்சியளிக்குமென எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் பஸ்ஸை விட்டு இறங்கி பெட்டியும் கையுமாக அண்ணாந்து பார்த்தபடி நடக்கிறேன். வணிக வளாகங்களால் சூழப்பட்ட நகர்மயமாகியிருந்த சற்று படாடோபமான தஞ்சாவூரைத்தான் அன்றைக்கு என்னால் காண முடிந்தது. பிறகொரு கிடைத்ததற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. தஞ்சாவூரின் பல நூற்றாண்டு கால வரலாற்றையும், பெரியகோவிலின் உன்னதங்களையும், அவலங்களையும், அகண்ட காவிரியின் சுழிப்புகளையும் அதன் வற்றிய சோகச் சரிதத்தையும் தன் நெஞ்சிலே புதைத்து வைத்துத் திரிந்த ஒரு ஆன்மாவைச் சந்திக்க வாய்த்தது. அவர் பெயர் தஞ்சைப் பிரகாஷ். இலக்கியத்திலேயே இது ஒரு இருட்டடிக்கப்பட்ட பெயர். ஆனால் நான் அறிந்து கொள்ள துடித்த புராதனத் தஞ்சையின் வளம்மிக்க பக்கங்களை மட்டுமல்ல பெரியகோவிலின் நிஜமான பிம்பத்தை குறிப்பாக, ராஜராஜசோழனால் சிவதுரோகியாக்கப்பட்ட பாவப்பட்ட ஏழைக் கூட்டத்தை பிரகாஷ்தான் எங்களுக்குச் சொன்னார். அவர்களின் வழியே உடலில் சூடு போடப்பட்டு சோழ மண்டலத்தின் பல பாகங்களிலிருந்தும் இழுத்து வரப்பட்ட 400 பெண்கள் தளிச்சேரிப் பெண்டுகளாக தேவரடியார்களாக தாசிகளாக்கப்பட்ட வரலாற்றின் கறைபடிந்த இருள்பக்கங்களையும் கதைசொல்லி ரூபமெடுத்த அவருடைய வாய் வழியாகத்தான் கேட்க நேர்ந்தது.
பிரகாஷ் கடைசியாகத் தொடங்கி நடத்திய இலக்கிய அமைப்புக்குப் பெயர் தளி. தளி அமைப்பின் கூட்டங்கள் நடந்த இடம் அசல் தளிச்சேரி. இன்றைக்குப் பெரிய கோவிலின் உள்ளே நுழைகிறவர்களுக்கு அந்த தளிச்சேரி பசுமையான புல்வெளியாகக் காட்சியளிக்கலாம். ஆனால் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில்தான் தளிச்சேரிப் பெண்டுகளின் வதைபடும் வாழ்க்கை நடந்திருக்கிறது. தளி என்றால் கோவில், சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம். தஞ்சாவூரிலிருந்த எரியூர் அரிகுலகேசரி ஈச்வரம், கடம்பூருக்கருகில் திவிலன்கோவில், திருவாரூரிலிருந்த பெரியதளி, பிரமீச்வரம், திருவாழனேரி, ஒலோகம மகாதேவீச்வரம், அருமொழி ஈச்வரம், உலகீச்வரம் போன்ற ஆலயங்களிலிருந்தும் அந்தப் பெண்கள் தஞ்சாவூருக்கு கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஒரு பாதி. மறுபாதியினர் ராஜராஜனால் விதிக்கப்பட்ட வரியைக் கட்ட முடியாமல் சிவதுரோகியாக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் மற்றும் ராஜராஜனால் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் . இவர்களில் அரசகுடும்பத்தினரும் அடக்கம். அலகிடுபவர்களாக, மெழுகிடுபவர்களாக, விளக்கேற்றுபவர்களாக, ஆடுமகளிராக அதற்கும் அப்பால் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேய்ச்சல் நிலமாகவும் அவர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வகையில் இந்த தளிச்சேரியிலிருந்து தான் என்னுடைய இலக்கியப் பயணம் தொடங்கியது. இன்றைக்கு நவீனமான புல்வெளியாக்கப்பட்ட அந்த இடத்தில்தான் எங்கள் படைப்பரங்கம் நடைபெற்றது.
தஞ்சைப் பெரியகோவில் தன் விதானங்களை அகண்ட ஆகிருதியை படைப்பாளிகளுக்குத் திறந்து வைக்கிறது. இங்கே வழிபாட்டுக்காக வருகிறவர்களை விட தங்கள் மன அவசங்களுக்கு வடிகால் தேடி வருகிறவர்களே அதிகம். திறந்த வெளியும் செதுக்கப்பட்டுள்ள கலைச்சிற் பங்களும், பசும்புல் வெளியும், நெடிதுயர்ந்த கோபுரமும் நெஞ்சிலே பாரஞ்சுமந்து வருகிறவர்களை ஆசுவாசப்படுத்த ஆற்றுப்படுத்த வல்லவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆகிருதியைச் சுற்றிவரும் பொழுது பத்தாம் நூற்றாண்டுப் புராதன நிழல் நம்மேல் கவிகிறது. கீழைச் சாளுக்கியரின் நிலமாயிருந்த வேங்கி நாடென்றழைக்கப்பட்ட இன்றைய ஆந்திரம், கங்கபாடி என்றழைக்கப்பட்ட இன்றைய மைசூர், நுளம்பர்களின் பிரதேசமாகயிருந்த பெங்களூர், பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள், குடகுநாடு, கேரளத்துக் கொல்லம், கலிங்கம், தென் இலங்கைத் தீவிலுள்ள ஈழம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி என்னும் வடகர் நாடகம், மராட்டியம், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் தமிழகத்தின் பாண்டியநாடு யாவற்றையும் வெற்றிகண்டு அபய குலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள் மொழி, அழகிய சோழன், ரணமுகபீமன், ராஜாச்ரயன், ரவிகுல மாணிக்கன், ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜகேசரி வர்மன், ராஜமார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துங்கதுங் கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், தெலிங்ககுல காலன், நிகரிலிசோழன், நித்யவினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச்சோழன், மூர்த்த விக்கரமா பரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைலகுல காலன் என்று மூச்சுவாங்குமளவு தனக்கு நூற்றுக்கணக்கான பெயர்களைச் சூடிக்கொண்ட ராஜராஜனின் படைகளையும் போர்ப் பரணிகளையும் வரலாற்றுப் பரிச்சயமுள்ள படைப்பாளிகளால் உள்வாங்கிக் கொள்ள முடியும். நம்முடைய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், இலக்கியப் பீடங்கள் காரணமில்லாத புனைப்பெயர்களைச் சூடிக்கொள்வர். ராஜராஜன் சூடிக் கொண்டவை காரணப்பெயர்கள். பிறகு ஆன்மீகம் என்கிற பரவச நிலையை விடுத்து சற்றே நம் பகுத்தறிவின் சாளரத்தை மூடிவைத்துவிட்டு இங்குள்ள கலையழகை யெல்லாம் அதனதன் தொன்மத்துடன் பொருத்திப் பார்ப்போமானால் இன்னொரு மாறுபட்ட லோகத்துக்குள் நம்மால் சஞ்சரிக்க முடியும்.
மேம்போக்காக நுனிப்புல் மேய்கிற தன்மையுடன் கலைப்ரக்ஞையற்ற கண்களால் பெரியகோவிலைப் பார்க்கிறவர்களுக்கு எதுவும் அனுபவித்தறிய முடியாது. பெரியகோவில் கோபுரத்தின் குறுகிய படிக்கட்டுகளின் வழியே கருவறைக்கு மேலே உள்ள திருச்சுற்றில் சிவனின் 108 விதமான நடனத்தோற்றங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 81 தோற்றங்கள் வரை செதுக்கப்பட்டு என்ன காரணத்தினாலோ 27 நிலைகள் செதுக்கத் தோதான நிலையில் விடப்பட்டுள்ளது. சிற்பங்கள் செதுக்கப்பட்ட பிறகு சிற்பிகளின் கண்களை ராஜராஜன் குருடாக்கி விட்ட தாகவும் ஒரு வதந்தி உண்டு.
பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டி ருக்கிறது. பேராசிரியர் அடையாளப்படுத்தியபிறகு இந்திய தொல்லியல் துறை உள்ளே நுழைகிறது. சோழர்கால ஓவியங்களுக்கு மேல் நாயக்கர் கால ஓவியங்கள் படிந்திருக்கின்றன. இவையும் 400 ஆண்டுகாலப் பழமைவாய்ந்தவை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல 1000 ஆண்டு பழமைவாய்ந்த சோழர்கால ஓவியங்கள் தனியாகவும் 400 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த நாயக்கர்கால ஓவியங்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகின்றன.
சோழர்கால ஓவியங்களை ஆய்வு செய்தவர்கள் அவை ‘ப்ரெஸ்கோ ப்யூனோ’ அரிய வகையைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை விட வரையப்பட்ட பாணிகளால் இந்த ஓவியங்கள் உயர்தரமானவை என்று இதற்குப் பொருள். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரிய மூலிகைச் சாறுகளுடன் மரப்பிசின் கலந்து தயாரிக்கப்பட்ட வர்ணக்கலவைகளை இந்த ஓவியங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மட்டுமல்ல புராணக் காட்சிகள், போர்க்கோலங்கள், கடவுளர்கள், மன்னன் ராஜராஜன், அவனது மனைவியர், ராஜராஜனின் குருமார்கள், நடனமாதர்கள், சோழர்கால ஆண்கள், பெண்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை இந்த ஓவியங்கள் துல்லிய மாகச் சித்தரிக்கின்றன.
ஆடல் மகளிர்களை அதற்குரிய வனப்புடன் தீட்டியிருக்கிற அதே தூரிகைகள் குடும்பப் பெண்கள் சமையலறையில் சமைப்பது உள்ளிட்ட பல காட்சிக்கோணங்களையும் பதிவு செய்திருப்பதும் சாமானிய மாந்தர்களும் இக்காட்சிப் புலத்துள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய தாகும். ஆனால் இந்த ஓவிய மேளாவை நிகழ்த்திக்காட்டிய எந்த ஓவியனின் பெயரும் பதிவாகவில்லை என்பதுதான் ஆகத்துயரமாகும். ஓட்டைச் சுவரிலிருந்து வெளிப்பட்டு ஓவியங்களைக் காட்டித்தந்து சிறகடித்த அந்தப் பெயர் தெரியாச் சிறுபறவைக்கு காலம் நன்றி கூறுவதைப் போல, ஒரு காலகட்டத்தையே தங்கள் தூரிகைக் கரங்களால் வார்த்துத் தந்திருக்கிற அந்த ஓவியக் கலைஞர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றியறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ராஜசிம்மன் என்கிற பல்லவ மன்னனால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்ட கச்சிப்பேட்டுப் பெரிய கோவிலைப் பார்த்த பிறகுதான் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட நினைத்ததாகக் கூறுகிறவர்கள் உண்டு. இலங்கையை வெற்றிகொண்ட ராஜராஜன் அங்கிருந்த பௌத்தவிஹார்களின் காட்சிப் பொலிவில் மயங்கி, இவற்றையெல்லாங் கடந்த ஒரு கலைக் கோட்டத்தை உருவாக்க எண்ணிப் பல காலங்கள் பலவிதமாய் மனதில் அசைபோட்டு செயல்வடிவம் தந்தது தான் ராஜராஜேச்வரம் என்று அபிப்ராயப்படுகிறவர்களும் உண்டு.
எதிர்காலத்தில் உன் புகழ் போர்களின் மூலமாக மட்டுமே அறியப்படாமல் நீதிமான்களும், கல்வியாளர் களும், கலை விற்பன்னர்களும், மதியூக அரசியல் மேதாவிகளும் மட்டும் உன்னைப் பாராட்டாமல் சைவ சமயத்தாரும் உன்னைப் போற்றிப் பாட ‘தளிக்குளம்’ கோவில் பெரியகோவிலாக வேண்டும் என்று தமக்கை குந்தவை வேண்டிக்கேட்டுக் கொண்டதன் பேரில்தான் ராஜராஜன் பெரியகோவிலை நிறுவினான் என்று நிறுவுகிறவர்களும் உண்டு.
கட்டடக் கலை என்று பார்க்கும்போது பத்தாம் நூற்றாண்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனைதான் பெரியகோவில். இதற்கு சில நூற்றாண்டு களுக்குப் பிறகு மொகலாயர்களின் கட்டடக்கலை வியப்பூட்டும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் உருவங்களைப் புறக்கணிக் கின்ற இஸ்லாமிய வேத அடிப்படையில் சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு இடமில்லாமல், அவை சலவைக்கற் களால் எழுப்பப்பட்ட சன்னிதானங்களாகவே காட்சியளிக் கின்றன. என் பிள்ளைகளுக்கு எங்கோ தொலைவில் யமுனா நதி தீரத்திலிருக்கின்ற தாஜ்மஹாலைக் காட்டு வதைவிடவும் அருகிலிருக்கின்ற பெரியகோவில் என்கிற இந்த அதிசயத்தைக் காட்டுவதில் தான் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. நண்பர்களே! ராஜராஜனின் கலாரீதியான செயல்பாடுகளைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. நட்டுவக்காரர்கள், பாட்டுக்காரர்கள், கானபாடிகள், வங்கியக்காரர்கள், பாடவியக்காரர்கள், வாத்தியக்காரர்கள், உடுக்கை வாசிப்போர், வீணை வாசிப்போர், ஆரியம்பாடுவோர், தமிழ் பாடுவோர், கூத்தர், கெட்டி மத்தளம் வாசிப்போர், கந்தர்வத் துறையார், சங்கு ஊதுவோர், பக்கவாத்தியர், உவச்சர்கள் என்று 17வகை யான கலைஞர்களை பெரியகோவிலுக்காக வென்றே பராமரித்துக் காபந்து செய்தவன் ராஜராஜன். சரி; கலை இவனாட்சியில் உச்சத்திலிருந்தது! ஒப்புக் கொள்வோம்! ஆனால் ஜனங்கள் என்ன நிலையிலிருந்தார்கள். மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்களென நாம் ஆய்ந்து பார்க்கையில் ராஜராஜனுக்குப் பின்னடைவுதான் என்கிற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சோகம்தான்! ஒரு கோயிலுக்காக தன் சாம்ராஜ்யத்தின் பெரும் பகுதிச் செல்வமனைத்தையும் தாரைவார்த்த இந்தத் தஞ்சை மன்னன் தனதாட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களை, பாட்டாளி வர்க்கத்தை, கடைநிலைச் சமூகத்தை எந்த லட்சணத்தில் நடத்தினான் என்றும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைகள் தேவைதான். கலைஞர்கள் போற்றி ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் கற்களால் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டத்துக்குக் கீழே உழைப்பாளிகளின் உதிரம் சிந்தப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறை, நல்லெருது, ஓடக்கூலி, ஈழம் பூட்சி, தரகுப்பட்டம், தறி உறை, மீன்பாட்டம், வட்டி நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப்பாறை, குசக்காணம் என்று மீனவர்கள், உழவர்கள், சலவைத் தொழிலாளிகள், நெசவாளர்கள், தரகர்கள், ஆட்டிடையவர்கள், ஓடக்காரர்கள், கள் இறக்குவோர் உள்ளிட்ட உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர் மேல் வரிச்சுமையை ஏற்றி வைத்தவன் ராஜ ராஜசோழன். சனாதன தருமம் வேர்பிடிக்கவென்றே திட்டமிட்டு பார்ப்பனர் களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கிவிட்டு குடிமக்களில் ஒருவன் திருமணம் செய்து கொண்டால் அதற்குரிய ‘கண்ணாலக் காணம்’ என்கிற வரியைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டவன் ராஜராஜன். அவனுடைய கல்வி நிறுவனங் களிலே கற்பிக்கப்பட்டவை எல்லாம். மீமாமிசை, வியா கரணம், இதிகாசம், சிவதருமம் என்று வடமொழிக்குரிய இலக்கண இலக்கியங்கள்தான்! தமிழக வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் தேங்கிவிட்ட வலங்கை, இடங்கைக் குலங்களின் போராட்டங்கள் ராஜராஜன் காலத்து எச்சம்தான்!
இந்த அகண்ட ராஜேச்வரத்தின் கல்வெட்டுகளில்தான் தமிழகத்திலேயே முதன் முதலாக சமஸ்கிருத அட்சரங்கள் பொறிக்கப்பட்டன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல வரிசெலுத்த முடியாதவர்களை சிவதுரோகியாக்கி, அவர் களுடைய நிலங்களை விற்று, கோவில் நிர்வாகத்திடம் சேர்ப்பித்தது ராஜராஜனின் ஊர்சபை! பிறகு அந்த நிலங்கள் பிராமணர்களுக்குச் சொந்தமான பிரம்மதேயங்களாக, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான சதுர்வேதி மங்கலங் களாக மாற்றம் பெறுகின்றன. இந்த ஊர்சபை நிர்வாகம் குறித்து பெரிய பாராட்டுகளை ராஜராஜனுக்கு வழங்குகின்ற இன்றைய நண்பர்கள், அந்த ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மட்டுமே அங்கம் வகிக்க முடிந்தது என்கிற சங்கதியை வசதியாக மறந்துவிடுகின்றனர் அல்லது மறைக்கின்றனர்.
செழிப்பான தஞ்சாவூர் கிராமங்கள் ஒவ்வொன்றின் வளத்தையும் வாழ்வையும் உறிஞ்சித்தான் பெரிய கோவில் கோபுரம் நிமிர்ந்திருக்கிறது. ரூபாய்க்கு 10 வட்டி என்பது இந்தக் காலத்திலேயே கொடுமையாக இருக்கும் போது 12 சதவிகித வட்டிக்குப் பணம்கொடுத்து, அதை வசூலிக்க ஒரு குண்டர் படையையும் வைத்திருந்து லேவாதேவி வேலைபார்த்தவனாக ராஜராஜனுக்கு இன்னொரு மங்கிய முகம் உண்டு. நிலப்பிரபுத்துவம் என்கிறபொருளியியல் ஏற்பாடு ராஜராஜன் காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது. சொந்த நிலமுள்ளவனுக்குத்தான் அவன் காலத்தில் மதிப்பு. ஒருவன் கோவில் பண்டாரமாக விரும்பினால்கூட அவனிடம் குறிப்பிட்டளவு நிலம் வேண்டும்.
இன்னொரு விஷயம்; தளிச்சேரிப் பெண்களுக்கு ராஜராஜன் வீடு கொடுத்தான், நிலம் கொடுத்தான், ஊதியம் கொடுத்தான், எல்லாம் தந்து பராமரித்தான் என்கிற நண்பர்களிடம் நம்மால் கேட்க முடியும். அந்த 400 பெண்டுகளிடமும் உயர்சாதிப் பெண்களுக்கு விசேஷ சலுகைகளும், சிவதுரோகியாக்கப்பட்ட குடும்பங்களி லிருந்து வந்த ஏழைப்பெண்களுக்கு வேறுவிதமாகவும் பாரபட்சமான முறையையும்தான் காட்டினான்! மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் யாவும் வளமான பூமி. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தரிசு நிலம் இப்படியான பாகுபாடும் காட்டப்பட்டி ருக்கிறது.
ராஜராஜனைப் பொறுத்தவரையில் இந்த கோயில் கட்டுவது அவனுடைய இலக்காக இருந்திருக்கிறது. அதற்கான பொன்னையும் பொருளையும் தன்னுடைய கஜானாவிலிருந்து தாரை வார்த்ததுபோக மீதியை எப்படியெல்லாம் தேற்றுவது என்று யோசிக்கிறபோதுதான் அவனுடைய பொருளாதார மூளை குடிமக்களைச் சுரண்டு கின்ற யோசனையைச் சொல்லி யிருக்கிறது. அந்தக் கால கட்டத்துப் பெண் களின் கோபுர தற்கொலைகளும், மக்கள் கிளர்ச்சிகளும் பொற்கால ஆட்சியின் புகழ் பாடுகையில் மறைக்கப்படுகிறது.
குடவோலை முறை ஜனநாயகத்தைப் பற்றி பாடபுத்தகங்களில் எழுதி எழுதி மாய்ந்துவிட்டனர். ஆனால் சொத்து இருந்தவனுக்குத்தான் குடவோலையும் ஊர்சபையும் என்று நம் குழந்தைகளுக்கு யார் மறு கற்பித்தல் செய்வது? பண்பாடும் இலக்கியமும் வளர்க்கப்பட்ட சிந்தனை யாளர்கள் தோன்றியிருந்த களப்பிரர்களின் ஆட்சிக்காலம் ‘இருண்ட காலம்’ என்றுதான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றுதான் வருணாசிரமம் வளர்க்கப்பட்ட சோழர்காலம் பொற்காலம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.
ராஜராஜன் தன் குடிமக்கள் மீது விதிக்காத வரியே இல்லை. ஏழை விவசாயி ஒரு பயிருக்கு ஊடுபயிராக இன்னொரு பயிரை வளர்த்தால் கூட ‘ஊடு போக்கு வரி’ என்கிற பெயரில் வசூலித்த அந்த மன்னனை நாம் எப்படிக் கொண்டாடுவது? வரிக்கொடுமை தாங்கமாட்டாமல் தங்களை கோயிலுக்கு விற்றுக் கொண்ட 12 குடும்பங்களின் கதை செங்கல்பட்டு மாவட்ட கல்வெட்டுகளில் இன்றளவும் கண்ணீர்க்கதை போல காணக்கிடைக்கிறது.
எங்களடியாள் அங்காடியும் இவள் மகள்
பெருங்காடியும் இவள் மக்களும்
திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக
நீர் வார்த்துக் கொடுத்தோம்
என்கிற வரிகள் ஒப்புதலுக்குக் கொடுக்கப்பட்டவை. ஆனால் இதில் அவர்களுடைய துக்கமும் துயரமும் கையறு நிலையும் பேரோலமும் அடங்கியுள்ளதாகவே உணர முடிகிறது.
ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்றெல்லாம் பிரித்து உருவாக்கியதும் பறைச்சுடுகாடு, கம்மாளச்சுடுகாடு என்றெல்லாம் பிரித்ததும் ராஜராஜன் காலத்து கைங்கரியங்கள்தான். ஊடுபயிர் வளர்த்த ஏழை விவசாயிகளை ஊடுபோக்கு வரியால் பழிவாங்கிய மாமன்னன், நிலங்களை பிராமணர்களுக்குத் தாரை வார்க்கிறான். பிராமணர் குழுக்களுக்கு மொத்தமாக நிலம் வழங்கப்பட்டால் அது பிரமதேயம். தனியொரு பிராமணனுக்குத் தரப்பட்டால் அது ஏகபோக பிரமதேயம். இப்படி வேலிக்கணக்கில் ஏகபோக பிரமதேயம் பெற்ற பிராமணக் கதைமாந்தர்களை நீங்கள் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” போன்ற நாவல்களில்கூட வாசித்துணரலாம். மேலும் இதற்கான கூடுதல் ஆதாரங்களை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்களைக் குறித்து எழுதிய நூல்களிலிருந்தும் கண்டடையலாம். சம்புவரை யர்கள், பழு வேட்டரையர்கள், மலையமான் களெனப் பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சியே சோழர் ஆட்சி என்றும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மூலமாக நமக்கு கூடுதல் தகவல் கிடைக்கிறது. ராஜராஜன் செய்தது இவர்களை எல்லாம் திறம்பட இணைத்ததுதான்.
ராஜராஜன் நிர்மாணித்த பெரிய கோவிலின் பெருமையெல்லாம் அதைக்கட்டிய கல் தச்சர்கள், சிற்பிகள், கடுமையான உடல் உழைப்பாளிகள் இவர்களுடைய வியர்வை யிலும், குருதியிலும், மதிநுட்பத்திலும் அடங்கி யிருக்கிறது.
இன்றைக்குப் ‘பொற்காலம்’ என்று புகழ் பாடுகின்ற இதே நம்முடைய மாநில அரசுதான் 1976-களிலும் இயங்கியது. மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் நிறு வனத்தின் சார்பில் கோ.தங்கவேலு என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “தமிழ் நில வரலாறு” என்னும் நூலில் சோழர்கால ஆட்சி ஏழை விவசாய, உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கு எப்படியெல்லாம் பொல்லாத ஆட்சிக்காலமாக விளங்கியது என்று துல்லியமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருந்தது. அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிறிதொரு சனாதன ஆலோசகர் குழுவினரால் அந்த நூல் தடை செய்யப்பட்டது. பொல்லாத ஆட்சி பொற்காலம் ஆட்சியாவதும், பொற்காலம் இருண்ட காலமாவதும் இன்றைக்கு வரலாற்றைத் திரிக்கிறவர்களின் கைகளிலே இருக்கிறது. ஆனால் இன்றைக்குள்ள நம்முடைய ஆய்வாளர்கள் இந்த இருட்டடிப்புகளை வெளிச்சப்படுத்து கிறவர்களாகத் துணிச்சலுடன் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். கலை போற்றி ஆராதிக்கப்பட்ட காலத்தை நாம் மதிப்புடன் பதிவு செய்கின்ற அதே நேரத்தில் ; ஏழை மக்களும், உழைப்பாளிகளும், பெண்களும் வதைபடும் வாழ்வில் உழன்ற காலத்தை பொற்காலம் என்று மதிப்பிடுவதும், உயரத் தூக்கிக் கொண்டாடி உண்மைக ளை மறைப்பதும் தமிழனின் உண்மையான வரலாறுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்கின்ற துரோகமாகும்!
(அக்டோபர் 31 - தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
நன்றி - செம்மலர்

