Monday, January 9, 2012

சித்தி ஜூனைதா பேகம் (1917-1998)

இன்னுமொரு ஐந்தாண்டுகளில் சித்தி ஜுனைதா பேகம் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் நூற்றாண்டு தொடங்குகிறது என்று நான் இப்போது சொல்லுவேனேயானால் நூற்றாண்டு விழாக்களைத் தாராளமாகச் சளைக்காமல் வெகு விமர்சையுடன் கொண்டாடிப் பழக்கப்பட்ட நம் தமிழ்ச்சமூகம் என்மேல் வியப்பானதொரு பார்வையை வீசக்கூடும். அவ்வை, ஆண்டாள் தொடங்கி இன்றைக்குப் பெரும் வீச்சுடன் உடலரசியலை எழுதிச் செல்லும் பெண் படைப்பாளிகள் வரை ஒரு பிரும்மாண்டமான பட்டியலொன்று கண்முன் விரிந்திருப்பினும், பெண் எழுதுவது ஏனோ நம்மவர்க்கு வியப்பளிக்கக் கூடிய சங்கதியாகவே இருக்கிறது.

காலகாலமாகப் பெண்களை அகப்பையும் கையுமாக அடுக்களைக்குள் அடக்கி வைத்த ஆணாதிக்க மனோபாவத்தையுமே கூட நான் மேலே குறிப்பிட்ட வியப்புக்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். என்னதான் கலை இலக்கியமும், பெண் விடுதலையும் பேசிக் களித்தாலும் பெண்ணை நாம் ஒரு எல்லைக்கோடு வரைக்கும்தான் அனுமதிக்கின்ற மன விசாலத்தைப் பெற்றிருக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்களை வேசைத்தனம் செய்பவர்கள் என்று நாக்கூசாமல் சொல்வதற்கு நம்முடைய ஆன்மீகவாதிகளை அனுமதித்திருக்கிறோம். கற்பு உள்ளிட்ட கலாச்சாரப் பண்பாட்டு வெளியில் பெண் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இஸ்லாம் மதம் ஒருபடி மேலேபோய் கோஷா, பர்தா, தலாக் என்று விதம் விதமாய்ப் பெண்களை முடக்கி வைப்பதில் நியாயம் கற்பிக்கிறது. சமுதாயக் காவலர்கள் இல்லையென்று மறுப்பர். இஸ்லாம் சமூகப் பெண்கள் வாழையடி வாழையாய் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாகவே மாறிப்போய் மனம் மெய் மொழியால் தம்மை அடங்கிச் செல்பவர்களாகவும், அடிபணிந் தவர்களாகவுமே உணர்ந்திருக் கின்றனர்.
இந்த வாழ்வு அந்தச் சமூகப் பெண்களுக்கான முழுமையான வாழ்வாகாது என்பதை ஒரு சிலர் உணர்ந்திருக்கக்கூடும், ஆனால் மௌனம் தான் இப்போதைக்கு எதிர்வினை. இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்படுவதிலிருந்து இந்தத் திட்டமிட்ட வன்முறையானது தொடங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு வாழ்க்கையை எதிர்கொள்வதில் எத்தனை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எழுத மனம் கூசுகின்றது.

எல்லோரும் குறிப்பிடுவதுபோல ஒரு மூடுண்ட சமூகமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அம்மக்கள் ஒருவித மறைமுகமான பெருமிதம் கொண்டிருக்கின்றனரோ என்னும் சந்தேகமும் கூடவே எழுகிறது.
அத்தி பூத்தாற்போலவே அங்கிருந்து பெண்கள் எழுத வருகின்றனர். அவர்களும் மதம் வலியுறுத்துகின்ற அறக்கோட்பாடுகளுக்கு உட்பட்ட பேனாக்களோடும், மனநிலையுடனுமே வருகின்றனர். இவை அறிவுத்தளத்தில் என்ன விளைச்சலைத் தந்துவிடப் போகிறது? தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகத் தோப்பில் முஹம்மது மீரான் தொடங்கி குறைந்தது ஐந்தாறு ஆளுமைகளை உடனடியாக நம்மால் அடையாளங் காட்ட முடியும். ஆனால் நானறிந்தவரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன்வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு?

இது குறித்து விவாதிக்காமல் பெண்ணெழுத்தின் அடர்த்தி குறித்து சிலாகிப்பதில் பொருளில்லை என்றே கருதுகிறேன். தலித் சமூகம் சார்ந்து எழுத வல்ல பெண் பிரதிநிதிகள் உள்ளனர். பெண்களுக்கான சகல பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்ப இன்றைக்கு அவரவர் தரப்பில் பிரதிநிதித்துவங்களுக்குக் குறைவில்லாத நிலையில், பெண்கள் அறிவு சார்ந்த தளத்தில் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் விதிக்கின்ற ஓரிடத்திலிருந்து போதுமான அளவு பதிவுகள் இல்லாமல் பெண் எழுத்து எவ்வாறு பூரணத்துவம் பெறும்? இஸ்லாம் சமூகத்துப் பெண்களை எழுதவிடாமல் தடுக்கின்ற கரங்கள் எவை? இதற்கு மாற்றாக நாம் என்ன எதிர்வினை நிகழ்த்தப் போகிறோம் என்கிற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக உங்களிடம் முன்வைக்கிறேன்.

பெண் எழுதுவதா என்று பிற்போக்குத் தனத்துடன் கேள்வி எழும்பத் தோதான இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், ஒரு தமிழ் முஸ்லிம் பெண் துணிச்சலாக எழுத வந்தது ஆச்சரியகரமானது. சித்தி ஜுனைதா பேகம் 1917ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகூரில் பிறந்தவர். தந்தை ஷரீப் பெய்க் ஒரு பன்மொழி அறிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும் அறியப்பட்டவர்.

நாகூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த அறிஞர் சி.என். அண்ணாதுரையின் முன்னிலையில் தைப்பொங் கலைக் குறித்து கவிதை மொழியில் பேசி அவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். மற்றொரு சகோதரரான முஜீன் பெய்க் ஒரு பத்திரிகை ஆசிரியர். காரைக்காலிலிருந்து ‘பால்யன்’ என்றொரு இதழைப் பதிப்பித்து பல்லாண்டுகள் நடத்தியிருக்கிறார். இவ்வாறு ஒரு இலக்கியப் பின்புலத்துடன் சித்தி ஜுனைதா பேகம் இயங்கி வந்ததையும், முனவ்வர் பெய்க் அவர் எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் என்பதையும் கவிஞர் நாகூர் ரூமியின் மூலமாக நாம் அறிகிறோம். ரூமிக்கு ஜுனைதா பேகம் உறவு முறையில் பெரியம்மா. ஆச்சிமா என்று அவரை ரூமி அன்புடன் விளிக்கிறார்.
‘கன்னித் தமிழுக்கு இனிமை சேர்த்த
கவிஞர்களைத் தந்த நாகூராம்....’

என்கிற வரிகளுள்ள காயல்பட்டினம் ஷேக்முகம்மது பாடிய இனிமையான பாடலைக் கேட்டிருக்கிறேன். நாகூருக்கு அப்படிப்பட்ட தனிச் சிறப்பு உண்டு. இஸ்லாம் சமூகத்தின் எண்ணற்ற புலவர்களையும் அறிஞர்களையும் வளர்த்தெடுத்த பூமி அது. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள சாகுல்ஹமீது வலியுல்லா நபிமுகம்மதுவின் வம்சாவழியைச் சேர்ந்தவர், மெய்ஞானச் சிறப்புள்ளவர் என்பது யாவரும் அறிந்த செய்தி. சாகுல்ஹமீது ஆண்டகையின் பிறந்தநாளை முன்னிட்டு நாகூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பிற சமயத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் மற்றொரு எழுத்தாளரான ஆபிதீன் நாகூரைச் சேர்ந்தவர். தமிழில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பூர்வீகமும் நாகூர்தான். இவற்றைச் சித்தி ஜுனைதாவின் பிறப்பிடம் குறித்த கூடுதல் தகவல்களாகக் கொள்ளலாம்.

ஜுனைதா பேகத்தின் கல்வி குறித்து நாம் அவதானிக்கையில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்ள வேண்டியுள்ளது. மற்றெல்லா இஸ்லாமியப் பெண்களையும் போலவே ஜுனைதாவும் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்புவரை ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு கிடைத்தால் போதுமானது என்று சமூகம் தீர்மானித்திருக்கிறது. எட்டு வயதுக்குமேல் ஒரு பெண் கல்விச்சாலைக்குச் செல்வது தடுக்கப்பட்டதற்கான பின்னணியை நாம் உளவியல் ரீதியாக அணுகினால், பெண்ணின் ஒழுக்கம் சார்ந்து பெற்றோர் கொள்ளும் அச்சமும், திருமணம் முடிந்து கணவனைப் பராமரிக்கப் போகின்ற பெண்ணுக்குக் கல்வி அவசியமில்லை என்கிற பிற்போக்கு எண்ணமுமே காரணமாக இருக்கமுடியும். இத்தனைக்கும் ஜுனைதாவின் தகப்பனார் கல்வியின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்தவர்.

மூன்றாம் வகுப்பு என்னும் ஆகக்குறைந்த கல்வித் தகுதியுடன் மட்டுமே 1930களில் ஒரு முஸ்லீம் பெண் புதினங்களும் கட்டுரைகளும் எழுதி, குறிப்பிடத்தக்க ஆளுமையாக உருவெடுத்ததற்குப் ‘பரம்பரை வித்து’ தான் காரணம். காலகாலமாகத் தொடர்ந்து ஊறிக் கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆன்மீக வித்து அது என்கிறார் நாகூர் ரூமி. மேலும் பாவினங்களில் வண்ணம் அதிகமாகப் பாடிக் குவித்த வண்ணக்களஞ்சியப் புலவரின் பரம்பரை என்று தன்னை ஜுனைதா பேகம் கருதியதும் காரணமாக இருக்கலாம்.

வாழ்ந்த காலத்தில் சமூகத்தால் புதுமைப் பெண்ணாகக் கருதப்பட்ட அவருக்குப் பால்ய விவாகம்தான் வாய்த்திருக்கிறது. பன்னிரண்டு வயதில் பகீர்மாலிமார் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் பகீர் அவர் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரியான கணவரல்ல என்று தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியதாகவே அறிகிறோம். பன்னிரண்டு வயதில் திருமணம் நடைபெற்று, நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, பதினாறு வயதில் விதவைப் பட்டம் சுமந்த வாழ்வு சித்தி ஜுனைதா பேகத்தினுடையது.

இன்றைக்குப் பெண்ணின் திருமண வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 வயதை அடையும்போதுதான் ஒரு பெண் மன, உடல்ரீதியான வளர்ச்சியும் கர்ப்பத்தைத் தாங்குகின்ற சக்தியும் பெறுகிறாள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 1930களில் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின்னும் இஸ்லாமியப் பெண்ணின் திருமண வயது 18க்கும் கீழேயே இருக்கிறது. அவள் பூப்பெய்திய நாளிலிருந்தே மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கி, பதினாறே வயதிற்குள் முதல் குழந்தையைப் பெற்று முப்பது வயதுக்குள் பாட்டியாகி முதுமையை இளமையில் வரவேற்கும் அவலம் சபிக்கப்பட்டிருக்கிறது. அவளுடைய அறைக்குள் வெளிக்காற்று நுழைவதற்கான சாத்தியதைகளே இல்லை. உள்ளேறும் பத்திரிகைகள் எல்லாமும் இஸ்லாமிய அறநெறிக் கோட்பாடுகளை வலியுறுத்துவனவே. சிறுபத்திரிகைகள், நவீன இலக்கியம், மாற்றுசினிமா இத்யாதிகளை அவளறியாள்.

முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் சித்தி ஜுனைதா பேகம் தன் பிள்ளைகள் உயர்கல்வி (11ஆவது வகுப்பு வரை) பெறுவதற்காக நாகூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்கிறார். தனக்குக் கிடைக்காத கல்வியை, தன் பெண் பிள்ளைகள் பெற வேண்டுமென அவர் தீர்மானித்ததை முஸ்லீம் சமூகம் பின்பற்றியிருப்பின், மூடுண்ட சமூகம் என்னும் விமர்சனத்தை எளிதாகத் தவிர்த்திருக்க முடியும்.

சித்தி ஜுனைதா பேகம் தனது கணவர் இறந்த பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கியிருக்கிறார். கணவனில்லாத வேதனையையும், தனிமையையும் அவர் தனது எழுத்தால் நிராகரித்தார் அல்லது கடந்து சென்றார் என்றும் கொள்ளலாம். பதினாறு வயதில் ஒருத்தி கைம்பெண்ணானது நினைத்துப் பார்க்கவும் கொடுமையான விஷயம். இதை சித்தி அடைந்திருக்கிறார். ஆனால் விதவையென வீட்டினொரு மூலைக்குள் முடங்காது துணிச்சலாக எழுத்துலகில் பிரவேசித்ததுதான் அவரை அக்காலப் பெண்களில் தனித்து மாறுபடுத்திக் காட்டுகிறது.

ஜுனைதா பேகத்திற்கு அந்தக் காலத்திலேயே டைரி எழுதுகின்ற பழக்கம் இருந்திருக்கிறது. இன்றைக்கு யோசித்தாலும் எத்தனை இஸ்லாமியப் பெண்கள் டைரி எழுதும் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிட முடியும். டைரியில் தனது மனதைத் தினந்தோறும் பதிவு செய்பவர்கள் இந்தச் சமூகத்துடன் ஏதோ ஒரு விதத்தில் மனந்திறந்து உரையாடத் தயாராக இருக்கிறார்கள் என்பது உளவியல் பகுப்பாய்வு. ஜுனைதா, தான் சமூகத்துடன் பேச விரும்பியதை டைரிக் குறிப்புகளாகவும் கட்டுரை, புதினங்களாகவும் எழுதி வைத்தார். அவர் எழுதத் தொடங்கியதும் எடுத்த எடுப்பில் நாவலுக்குத் தாவிவிட்டதும் ஒரு பேராச்சரியந்தான்.

இலக்கிய வடிவங்களில் நாவல் மிக முக்கியமானது. கவிதைகளும், கதைகளும் தராத வாழ்க்கையின் பக்கங்களை நாவல் தந்து நிற்கிறது. மையக் கதையும் அதன் விரிவும், அங்கிருந்து பிரிகின்ற கிளைக் கதைகளும் குவியலான கதாமாந்தர்களும், தத்துவ தரிசனமும் ஒற்றைத் தன்மையற்ற பன்முகத்தின் பிரதிபலிப்பும் நாவலை சாதாரணத் தன்மையிலிருந்து அசாதாரணத்திற்கு நகர்த்துகிறது. பேரனுபவத்தைத் தருகிற பேரிலக்கிய வடிவம் நாவல். ஆனால் ஜுனைதா பேகம் நாவல் வடிவத்தைக் கையாண்டிருக்கிற விதத்தில் நமக்குச் சில மாற்று அபிப்பிராயங்கள் இருக்கிறது. எனினும் விவாதிக்கும் அளவு அதில் பிரச்சனைகள் இல்லை. 1930களில் தமிழில் நாவல் வடிவம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை தான். அதே கால கட்டத்தில் ஆங்கில மொழிப் பரிச்சயமுள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களில் சிலர் ஒன்றுகூடி, ஆங்கில இலக்கியங்களைத் தீவிர வாசிப்பிற்குள்ளாக்கி தமிழ்ச் சிறுகதையில் வடிவப் பரீட்சார்த்தம் செய்து பார்க்கின்றனர். குறிப்பாகப் பி.எஸ்.இராமைய்யா பொறுப்பேற்று நடத்திய மணிக்கொடி இதழில் இது நிகழ்கிறது. மணிக்கொடியின் சிறுகதையாளர்கள் எவரும் நாவல் எழுதுவதில் அப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, வெளியுலகத் தொடர்புகளற்று வீட்டிலிருந்தவாறே ஆர்வ மேலீட்டால் எழுதத் தொடங்கிய ஜுனைதா பேகம் இந்த அளவிற்கு இயங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘‘நான் என் எழுத்துலக நுழைவிற்கு
எனக்கு முன் மாதிரியாக
யாரையும் பின்பற்றவில்லை. எனது
சிறுகதை, நவீனம்
எல்லாம் இயல்பாக எனக்கமைந்த சொந்த
நடை என்றே
நினைக்கிறேன். நான் முதன் முதலில் எழுதிய நெடுங்கதை காதலா? கடமையா?
என்பது. இந்த நவீனத்தை நான்
எழுத எந்தக் காரணமும் எனக்கில்லை. நான் எழுத வேண்டும் என்ற எனது சொந்த அவாதான்’’
என்பதாக 1999இல் வெளிவந்த ‘முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்கு’ அவரளித்த நேர்காணலில் குறிப்பிடுவதிலிருந்து அவர் தன் எழுத்துக்கு எவரையும் ஆதர்சமாகக் கொள்ளவில்லை என்பதும் புலனாகிறது.
சித்தி ஜுனைதா பேகம் தான் எழுதிய நாவலை நெடுங்கதை என்றே குறிப்பிடுகிறார். ஆயினும் தமிழில் நாவல் எழுதிய முதல் முஸ்லீம் பெண் என்னும் சிறப்பு அவரை இயல்பாகவே வந்தடைகிறது. மட்டுமல்ல; நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண்கள் இருவரில் ஒருவராக அவர் இருக்கக்கூடும். மற்றொருவர் ‘தாஸிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவலை எழுதிய மூவலூர் இராமாமிருதம் அம்மாள்.
‘‘பெரியோர் தம் உயர்ந்த நூல்கள்
சிலவற்றை யான் படித்தபொழுது உரைநடையில்
ஒரு சிறு புதுக்கதை எழுத வேண்டும் என்னும்
விருப்பம் என்னை வெகுநாளாகத் தூண்டியது. யான் பத்திரிகைகட்குக் கட்டுரைகள் அடிக்கடி வரைந்து அனுப்பியதைக் கண்ட
என் பெற்றோர், உறவினர், என் சினேகிதிகள் அனைவருமே அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று பெரிதும் விரும்பினர். அன்னார்தம் விருப்பத்தையும் எமது விழைவையும் நிறைவேற்றுவான் வேண்டி இச்சிறு புத்தகத்தை வெளியிடுகிறேன்’’ என்று ஜுனைதா எழுதுவதிலிருந்தும், மேலும் ‘‘நச்சுடை நாகங்கள் சிலவற்றைத் தன் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர்தம் தூற்றுதலுக்கு அஞ்சிப் பத்திரிகைகளுக்குப் பெயர்போடாது கட்டுரைகள் அனுப்புமாறு என்னைத் தூண்டியவரும்...’’ என்று எழுதும் போதும் அவர் எழுத நேர்ந்த பின்னணியும் எழுதியதால் ஊரார் வெளிப்படுத்திய எதிர்ப்பும், அது போன்ற எதிர்ப்புகளைத் தொடர்ந்து பெயர் போடாது எழுதி வந்ததும் தெரியவருகிறது.

‘‘நாவல் வெளிவந்த பிறகு கூட்டம் கூட்டமாக வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் தெருப் பள்ளித் தெரு வீட்டுக்கு வந்து ஆச்சிமாவைப் பார்க்க வந்தார்களாம். சும்மா அல்ல; ஒரு கெட்டுப் போன நல்ல குடும்பத்துப் பெண்ணை விசாரிக்க வருவது போல’’

இந்தத் தகவலை என்னிடம் ஆச்சிமாவே நேரடிப் பேச்சில் இதே வார்த்தைகளில் சொன்னது. அம்மாவும் இதை உறுதிப்படுத்தினார்கள். ஒரு முஸ்லிம் பெண்! நாவல் எழுதுவதா? அதுவும் ‘காதல்’ என்ற சொல்லுடன்! எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?’’ என்று நாகூர் ரூமி விவரிப்பதிலிருந்து ஜுனைதா பேகம் தன் எழுத்துக்காக எதிர்கொண்ட இன்னல்களை மேலும் அவதானிக்கலாம்.
‘‘இந்த எனது சிறு நவீனத்திற்கு ‘தாருல் இஸ்லாம்Õ ஆசிரியரும், நபிகள் நாயக மாண்பினை எழுதிய பெரியாருமான பா. தாவுத்ஷா சாகிபு அவர்களிடம் ஒரு மதிப்புரை கேட்டோம். ‘இது ஒரு பெரிய திறமையா? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா?’ என்று ஏளனமாகப் பேசியதாக என் சகோதரர் உசேன் முனவ்வர் பே சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் மகாமகோபாத்யாய தக்ஷிணாய கலாநிதி டாக்டர் உ..வே. சாமிநாதையர் அவர்கள் என்னை ஏத்திப் போற்றி ஒரு மதிப்புரை வழங்கினார்கள்’’.

தனது சமூகத்தைச் சார்ந்த அறிவுலக வாதிகளாலேயே அவர் புறக்கணிப்பிற்கும் ஏளனத்துக்கும் உள்ளானதை மேற்கண்ட நிகழ்விலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எந்த இதழாசிரியரால் மதிப்புரை தராமல் மறுக்கப்பட்டாரோ அதே தாருல் இஸ்லாம் இதழில் 1995இல் ‘முஸ்லிம் பெண்களும் விவாக விலக்கும்‘ என்றொரு கட்டுரையை சித்தி ஜுனைதா பேகம் எழுதியுள்ளார். இதன் மூலமாகக் காலமாறுதலையும் படைப்பாளியின் போராட்டக் குணத்தையும் வெகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

‘‘சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய காதலா? கடமையா? என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது....’’

இது டாக்டர் உ.வே.சா. 1938இல் சித்தி ஜுனைதா பேகத்தின் நாவலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. ஊர் ஊராகச் சுற்றியலைந்து, ஓலைச்சுவடிகளைச் சேகரித்து எண்ணற்ற தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த உ.வே.சா.வின் முன்னுரையைப் பெற்றதும் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டதும் ஜுனைதா பேகத்தின் எழுத்து வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். மட்டுமல்ல; தமிழ்ச்சிறுகதையின் ஒரு குறியீடாக மாறிவிட்ட புதுமைப்பித்தன் ‘‘முஸ்லீம் பெண்டிர் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம்’’ என்று ஜுனைதா பேகத்தின் நாவல் குறித்து அபிப்ராயம் தெரிவித்திருப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

என் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் படிப்பதும்தான் என்று குறிப்பிடும் ஜுனைதா பேகத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் வளமான பயிற்சி இருந்திருக்கிறது. திருக்குறள், நாலடியார் நளவெண்பா, மணிமேகலை, சிலப்பதிகாரம், மாணிக்கவாசகர், திருமூலர், பாரதி பாடல்கள் வரை அவர் ஊன்றிக் கற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் உள்ளன. இதுவரைக்குமான இஸ்லாமியப் பெண்கள் எவருக்கும் இம்மாதிரியான சுதந்திரம் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரைக்கும் இலக்கிய நூல்கள் யாவும் தீண்டத்தகாத பிரதிகளே. “இடமும் இருப்பும் ஒரு மனிதனின் குணாம்சத்தைத் தீர்மானிக்கின்றது’’ என்று முன்பு எங்கோ ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பேன். சித்தி ஜுனைதா பேகத்தின் சூழல் அவருக்குப் பலவிதங்களில் துணை புரிந்திருக்கிறது. பிறந்து வளர்ந்த ஊரும், பெற்றோரும், வாசிப்பிற்கான சுதந்திரமும் ஜுனைதாவைப் படைப்பாளியாக மலர்த்தியிருக்கிறது. இது அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்துவிடாது.

‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா? கடமையா? நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.

‘சித்தி ஜுனைதா பேகம் _ பன்னூலாசிரியை’ என்று தனது வீட்டின் முகப்பில் பெயர்ப்பலகை மாட்டி வைத்துக்கொண்டு இயங்கியிருப்பவரை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியங்கொள்ள முடிகிறது. கருத்துக்களை முன்வைப்பதில் அவருக்கு எவ்வித மனத்தடையும் இருந்ததாகத் தெரியவில்லை. 1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கிவிட்ட காலகட்டத்தில் சித்தி தாம் எழுதிய காதலா? கடமையா? நாவலில், “தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய் நாட்டை மீட்பதற்காக உடல் பொருள் ஆவியைத் தத்தஞ் செய்து பெரியாரைப் பின்பற்றுவேன்’’ என்று எழுதியிருப்பது இவரது தமிழினப் பற்றைக் காட்டுகிறது _ என்று கம்பம் சாகுல் அமீது என்பார் ‘இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்கிற தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு மத அடிப்படைவாதிகளால் புறக்கணிக்கப்படும் தர்கா நேர்ச்சைகளைப் பற்றிச் சித்தி ஜுனைதா பேகம் ‘‘நாகூர் கந்தூரி இதோ கதவைத் தட்டுகிறது பக்தி, நம்பிக்கை, வேடிக்கை இது மாதிரி பல்வேறு காரணங்களுக்காக நாகூரைத் தேடிக் கூட்டங் கூட்டமாக மக்கள் இதோ வரமுயன்று கொண்டிருக்கின்றார்கள். ஊரே கோலாகலமாகத் திருவிழாக் கோலம் பூணுகின்றது.’’ என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். மற்றொரு இடத்தில் ‘‘இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப்பட்டிருப்பினும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக் கடைந்திருக்கவும், மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதிவிடுதலே அறிவையளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ?’’ என்று கேட்கிறார். அவர் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ள புரட்சிகரக் கருத்துகளில் சிலவற்றையேனும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ள கட்டாயம் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.

பெண்கள் தமக்குப் பிடித்தவரையே மணஞ் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது. ஒத்த நலனும், ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடுமாடுகளைப் பிணைப்பதைப் போல் பிணைத்து விடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது.

இஸ்லாமியப் பெண் தன் கணவனின் பெயரோடு தன்னை இணைத்துக் கொள்ளத் தேவையில்லை. ஜபீரா, ஷேக் பரீதை மணந்து கொண்டால் ஜபீராதான். அவள் மிஸஸ். ஷேக் பரீதாக மாறிவிடுவதில்லை. ஒரு முஸ்லிம் பெண் தன்னில் தானே ஒளி வீசுகின்றாள். அவள் பெயருக்கு அவளே உரிமை பெற்றவள்.
- இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிக்கின்றது எனக் கூறி உலகை ஏமாற்றப் புகுவது அறியாமை. ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வதே அறம். பல பெண்களை ஒருவன் மணக்கலாம் என்னும் கட்டுக்கள் நீக்கப்படல் நியாயம்.
- இஸ்லாமியப் பெண்கள் பொம்மைகளல்ல.

- பெண்கள் சினிமா பார்த்தால் ஆகுமா என்றால் ஆகும் என்றுதான் நான் கூறுவேன். ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமன்று. ஆணுக்கு ஆகும் என்றால் பெண்ணுக்கு ஆகும் என்பதுதான் என் கருத்து.
தமிழகத்து முஸ்லீம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியே போல, எழுதியும் பேசியும் வாழ்ந்தும் காட்டிய சித்தி ஜுனைதா பேகம் தனது 82ஆவது வயதில் 19.3.1998 அன்று மரணமடைந்தார். மரிப்பதற்கு முன்பு வரை அவர் எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருந்தார் என்றறிகிறோம். இலக்கியப் பணியில் அவர் ஒருபோதும் சலிப்புற்றதில்லை என்றே
அவரைக் குறித்து எழுதியுள்ள பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

பெண் கல்வி, பெண் விடுதலை என்றெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தில், இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த சித்தி ஜுனைதா பேகம் ஒரு எதிர்க்குரலாக வரலாற்றில் பதிவாகியுள்ளார். ஆனால் அவரைக் குறித்த இலக்கியப் பதிவுகள் சொற்பமே. நாகூர் ரூமியின் முயற்சியில் காதலா? கடமையா? நூல் வெளிவந்தது ஒரு முக்கியப்பணி. எனினும் சித்தி ஜுனைதாவின் பிற எழுத்துக்கள் பதிவாகியதாகத் தெரியவில்லை. அதற்கான அவசியமும் தேவையும் உள்ளது என்றே நம்புகிறோம்.

நானறிந்தவரை அ. வெண்ணிலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆபிதீனின் வலைப்பதிவில் ஜுனைதா இடம் பெற்றிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் இனியேனும் அவரைக் குறித்த உரையாடல்களைத் துவக்கலாம். மேதைமைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றிவிடுவதில்லை. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் தீவிர இலக்கியத்திற்கு வர வேண்டும். இலக்கியத்துள் அவர்கள் பிரவேசிக்கையில் அவர்களைச் சுற்றியுள்ள எல்லாத் தடைகளும் நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை என்னுள் எப்போதும் நீடிக்கிறது. சித்தி ஜுனைதா பேகம் இஸ்லாமியப் பெண்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய ஆளுமை என்று மீண்டுமொருமுறை அழுத்தம் கொடுக்கிறேன்.

சித்தி ஜுனைதா பேகத்தின் பிற படைப்புகள்
1. செண்பகவல்லி தேவி (அ) தென்னாடு போந்த அப்பாஸிய குலத் தோன்றல் _வரலாற்று நாவல்.
2. மகிழம்பூ _ நாவல்
3. இஸ்லாமும் பெண்களும் _ கட்டுரைத் தொகுப்பு
4. மலை நாட்டு மன்னன் __ தொடர்கதை.
5. ஹலிமா (அ) கற்பின் மாண்பு
6. பெண் உள்ளம்
7. திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு
8. காஜா ஹஸன் பசரீ: முஸ்லீம் பெருமக்கள் வரலாறு
துணைநூற்பட்டியல்
காதலா? கடமையா?, ஸ்நேகா, 2003



உதயசங்கர்: ரயில்நிலையக் கலைஞன்



உதயசங்கரின் எழுத்துக்கள் என்னுள் இறங்கிப் பல வருஷங்கள் கழித்துதான் அவரை நேரில் நான் சந்தித்தது. எப்போதும்போல பெரிய கோவில் புல்வெளியில்தான் அவருடைய பெயரை முதலில் கேட்டறிந்ததும். நண்பர்களிடையே சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்த பேச்சு எழும்போது குறிப்பாகக் கரிசல் எழுத்துக்களைப் பற்றிய சம்பாஷனைகளில் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, பா.செயப்பிரகாசம், பூமணி,
ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி ஆகிய பெயர்களுடன் தவறாமல் இடம் பெறும் பெயராக உதயசங்கருமிருந்தது.
கோவில்பட்டி குறிப்பிடத்தக்க இலக்கிய மையமாக விளங்கியது, அப்போது நானறியாத செய்தி. தஞ்சாவூர்தான், தமிழுக்குப் பெரிய இலக்கிய பிதாமகர்களைத் தந்திருப்பதாக ஒரு பிரம்மை இருந்தது. கி.ரா.வையும், தமிழ்ச்செல்வனையும், கோணங்கியின் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்களையும் படித்த பிறகு கரிசல் இலக்கியத்தின் மேல் என் கவனம் திரும்பியது. எப்போதும் வெயில் கொளுத்தியபடி இருக்கும் கந்தக பூமியும், பிழைப்புக்கு தீப்பெட்டி ஆபீஸ்களை நம்பிய பெண்மணிகளும், குழந்தைகளும் வறட்சியும், வறுமையிலும் அன்பை ஒருவருக்கொருவர் நேர்ந்து பரிமாறிக் கொள்ளுகிற அழகும் அடடா... தமிழிலக்கியத்தின் இன்னொரு அசலான பக்கத்தை இதுவரை பார்க்கத் தவறியிருக்கிறோமே என்னும் பதைபதைப்பை என்னுள் ஏற்படுத்திய எழுத்து கரிசல் எழுத்து.
நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி, சுழித்துக் கொண்டோடிய காவிரிக்கரை எழுத்து கூதிர்காலக் காற்றின் சுகானுபவமென்றால், கரிசல் எழுத்துக்கு அதற்கு நேர்மாறான உறைப்பான, சுளீரென்று தவறுக்குத் தண்டனையாய்ப் பெறும் தீச்சூட்டின் தன்மை உண்டு. கரிசல் இலக்கியம் காட்டும் அழகியல் தமிழர்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்தது. அதேபோன்று புதுமைப்பித்தனுக்கு நிகரான ஆளுமையாக
கு.அழகிரிசாமியை என் வாசிப்பனுபவத்தினூடாகக் கண்டதும் சற்றுப் பிறகுதான். வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தரிசனம் தருவதில்லை. தந்தால் மாறுபட்ட ரசனைகளுக்கு வாய்ப்பில்லாமலே போய்விடும். அபூர்வமான அனுபவங்கள் எதுவும் ஆரம்பத்திலேயே நமக்கு வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தால் அபூர்வம் என்று அதற்குப் பெயரில்லை.
உதயசங்கரை ஒரு ரயில் பயணத்தின்போதுதான் முதன் முதலாக சந்தித்தேன். பாரதி புத்தகாலயம் மேலாளர் தோழர் நாகராஜனுடன் நானும் 2010 திருவனந்தபுரம் புத்தகக் காட்சிக்குச் பயணமானபோது வழியில் கோவில்பட்டி சந்திப்பில் ஏறி எங்களுடன் உதயசங்கர் இணைந்து கொண்டார். அன்று முதல் அவர் என் சஹிருதயனாகிவிட்டார் என்றும் கூறலாம். உதயசங்கர் ‘ரயில் மனிதன்’ என்றொரு பிம்பம் என்னுள் இருந்தது. அதற்கான காரணங்களும்தான். ரயில்வேயில் வேலை செய்யும் அவர் தற்போது குமாரபுரம் ஸ்டேஷனில் பணியைத் தொடர்கிறார். மாமேதை கு. அழகிரிசாமியின் கதைக் களம் அது. ‘‘சின்ன ஸ்டேஷன். அங்கே ரயில்கள் நிற்காமல் கடந்து செல்ல, விசேஷமாய் ஏதோ ஒரு ரயில் மட்டும் நிற்கும்’’ குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் குறித்து இப்படி நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உதயசங்கரை நேரில் பார்த்தபிறகு ‘ரயில்வே அதிகாரிகளுக்கான கருப்புக் கோட்டு வெள்ளைச் சீருடையில்’ அவரைக் கற்பனை செய்து பார்த்தாலும் அவ்வளவாகப் பொருந்தவில்லை.
ஒடிசலான தேகமும், வெள்ளந்தியான சிரிப்புமாய் அவரைப் பார்க்கிற எவரும் ஒரு நெருக்கத்தை உணர்வர். கண்ணாடிக்குள்ளிருந்து தெறிக்காமல் அமுங்கிப் புன்னகைக்கும் சிவந்த வெளிச்சமான கண்கள். அந்தரங்கமாய் அவருடன் உரையாடக் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் (பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நடத்திய வரலாறும் புனைவும் - மூன்று நாள் கருத்தரங்கில் நானும் அண்ணன் ச. தமிழ்ச் செல்வன், தோழர்கள் சு.வெங்கடேசன், பிரளயன், மணிமாறனுடன் உதயசங்கருடன் பேசிக் கழித்த சில இரவுகள்) அவருடைய அங்கதம் ததும்புகிற உரையாடல் கேட்டுக் களித்திருக்கிறேன். உண்மையில் மணிமாறனுடனும் உதயசங்கருடனும் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் பழகிய நெருக்கத்தைக் கொஞ்சம் நாட்களில் உணர்ந்தேன். அது என்ன மாயமோ தெரியவில்லை.
இலக்கியத்தில் நான் அகரம் எழுதிப் பழகத் தொடங்கிய காலத்திலிருந்து உதயசங்கர் கதைகள் எழுதி வருகிறார். இலக்கிய உலகம் ஏன் இப்படி ஒரு நல்ல கலைஞனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறது என்று நான் பல இரவுகள் சிந்தித்திருக்கிறேன். முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகத் தீவிரமாய் இயங்கி வந்திருக்கிற இந்த எழுத்தாளனின் வீட்டுக் கதவுகளை விருதுகள் தேடி வந்து தட்டியிருக்க வேண்டாமா? நாம் வாசித்தவரை ஒவ்வொரு கதையிலும் தேர்ந்த கலைப் படைப்பிற்கேயுரிய வடிவமைதியும், மொழியும் இயைந்திருக்கின்றதே? ஒரு முற்போக்கு அமைப்பிலிருந்து செயல்பட்டவாறு பிரச்சாரமும் பேருணர்ச்சியும் தவிர்த்த கதைகளைத்தானே இவர் முன்வைக்கிறார்? பிறகு ஏன் உதயசங்கரைக் கொண்டாடத் தயக்கம்? இப்படியான கேள்விகள் எனக்கு மட்டுமல்ல அவரை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் வந்துதான் தீர வேண்டும். வராவிடில் அவருடைய இலக்கிய நேர்மை குறித்து நான் சந்தேகிப்பேன்.
உதயசங்கர் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். வரிசையில் நிற்கையில் முண்டியடித்துக் கொண்டு முன் செல்லும் வழக்கமில்லாதவர். எங்கும் எதிலும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பவர். இவை இன்றைய பரபரப்பான இலக்கியச் சூழலுக்குப் பொருந்தி வருமா, தெரியவில்லை. ஒரு முறை நான் நவீனத் தமிழ் எழுத்துக்களில் புதுமைப் பித்தனிலிருந்து இன்றைய தலைமுறை வரைக்குமுள்ளவர்கள் எழுதிய காதல் கதைகளைத் தொகுக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ‘‘நான் எழுதிய கதைகள்கூட இருக்கிறது ஜாகிர்’’ என்று அவர் எனக்குச் சொல்லவேயில்லை. நானாகத் தேடி ‘பால்ய சினேகிதி’ கதையைத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவருடைய கதை ஒன்றை நான் என்னுடைய ‘காஃபிர்களின் கதைகள்’ தொகுப்பிலேயே சேர்த்திருக்க வேண்டும். தவறிப்போனது.
அப்படி ஒரு தொகுப்பைச் செய்கிறேன் என்பதும் அவர் முன்பே அறிந்தது தான். இப்படிப்பட்டவர் ஒரு சந்திப்பில் ‘‘என்னுடைய தேர்ந்தெடுத்த கதைகள் சிலவற்றை பாரதி புத்தகாலயத்திற்காக தொகுத்துக் கொடுங்கள் ஜாகிர்’’ என்று கேட்டபோது, லேசான தயக்கத்துடன் சம்மதித்தேன். அந்தத் தயக்கத்துக்கும் அவர் படைப்பின் மீதான என் அபிப்ராயத்துக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அவருடைய படைப்புலகில் மீண்டும் பிரவேசிக்க இதை ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்திக் கொண்டேன். அவருடைய நாற்பத்தெட்டுக் கதைகளிலிருந்து இருபத்திரண்டு கதைகளை என் ரசனை அடிப்படையில் தேர்வு செய்தேன். ‘‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’’ என்கிற பொருத்தமான தலைப்பைத் தீர்மானம் செய்துகொண்டு முன்னுரையாக என்ன எழுதலாம் என யோசித்தபோது தவறியும் அதில் அவருடைய கதைகளைப் பற்றி அதிகம் சொல்லிவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்படி ஒரு முன்னுரை எழுத வாய்த்தது. கதை வரிசையையும் முன் பின்னாக மாற்றிக் கலைத்துப் போட்டு அடுக்கியிருக்கிறேன்.
இந்த 22 கதைகளில் எது ஒன்றையும் வாசகன் புறக்கணித்து விட முடியாது. ‘நான் தேர்ந்தெடுத்தவையாக்கும்’ என்கிற அழுத்தம் தந்து இதைச் சொல்லவில்லை. உதயசங்கர் கதைகளின் இயல்பும் அதுதான். புறக்கணிக்க முடியாத எழுத்து. கரிசல் இலக்கியத்துக்கேயுரிய சில கதைகளுடன் இன்றைக்கு எழுதிவரும் தீவிரமான படைப்பாளிகளைக் கடந்து செல்லும் நவீன அம்சம் சரிவரப் பொருந்திய கதைகளுமாக இத்தொகுப்பு உருவாகியிருக்கிறது.
உதயசங்கர் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை குணாம்சங்களை எள்ளலுடன் விமர்சிக்கின்றன. கலையின் உன்னதமறிந்த டேனியல் பெரிய நாயகம் கடைசியில் மகனிடம் ‘இதெல்லாம் நமக்கு வேண்டாம்‘ என்று புத்திமதி சொல்கிறார். இப்படித்தான் நிறைய அப்பாமார்கள் இருந்திருக்கிறார்கள். மகன்களும் தலையசைத்துக் கலை மீதான காதலை உதறித் தள்ளியிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் என்கிறது பொதுப்புத்தி. இதை மீறி வந்தவர்கள் கலைஞர்களாகியிருக்கின்றனர். இதுவும்கூட யதார்த்தமில்லையா?
சக மனிதனிடம் கொள்ளும் அவநம்பிக்கையை மட்டுமே வேறொரு கதையில் உள்ளடக்கமாய் வைக்கிறார் உதயசங்கர். குடும்ப அமைப்பின் வன்முறைகளை அங்கதத்துடனும், பொட்டிலறைந்தாற்போன்றும் பல பாணிகளில் எழுதிப் பார்த்திருக்கிறார். இளம் பருவத்தின் ரம்மியங்கள், அபிலாஷைகள் இவரது படைப்புகளில் அதே த்வனியுடன் பதிவாகத் தவறவில்லை.
வெயில், மறதியின் புதைசேறு, சோமையாவின் பாட்டு போன்ற கதைகள் அவருடைய படைப்பெழுச்சியின் உன்னத விளைச்சல் என்றே கூறலாம். உதயசங்கர் கதைகளில் பெயிண்டர் பிள்ளை, ஆவுடையப்ப பிள்ளை என்று நிறையப் பிள்ளைமார்கள் வருகிறார்கள். அவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பும் அபாரமாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் ஜாதி குறித்துப் பேசவரவில்லை. உதயசங்கரும் அப்படிப்பட்டவரில்லை. தான் சார்ந்திருக்கும் அல்லது அவ்வாறு கருதப்படும் சமூகத்தை உள்வாங்கிக் கொண்டு படைப்பில் வெளிப்படுத்துவது பாவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு படைப்பாளியின் கடமை இதுவாகவே இருக்க முடியும். எந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து ஒருவனுக்கு இயங்க வாய்த்திருக்கிறதோ அந்த வாழ்க்கையைப் படைப்புகளில் பிரதிபலிப்பது அவனுடைய சமூகத்தைக் குறித்த விமர்சனங்களை அவன் செய்வதாகவே பொருள் கொள்ள முடியும். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், தோப்பில் முஹம்மது மீரான் இன்னும் பலரும் இதையே செய்தனர்.
குறுநாவல்கள் எழுதியிருக்கின்ற உதயசங்கரை நாவல் எழுதச் சொல்லி அவரை சந்திக்கின்ற நேரங்களிலெல்லாம் வற்புறுத்துகிறேன். அவருடைய உத்தியோகம் சார்ந்த ரயில்வே துறையின் பின்னணியில் ஒரு நாவலை எழுதிவிட வேண்டுமெனும் முனைப்பிலிருப்பதாகவும் விரைவில் அது நிறைவேறும் என்றும் என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். பார்ப்போம். ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’ கதையை அவர் விரித்திருந்தால் முக்கியமான நாவலாக அது மாறியிருக்கும். அதே போன்று, ‘ஒரு விளக்கும் இரண்டு கண்களும்’ கதைக்கும் ஒரு சர்வதேசியத் தன்மை உண்டு. அக்கதையின் ஓரிடத்தில் கீழ்க்கண்ட விவரணையை அவர் எழுதியிருப்பார்.
‘‘1947-ம் ஆண்டில் சர்சிரில் ராட்கிளிஃப் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோடுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத இந்த பருத்த ஆங்கிலேய வழக்கறிஞர், தான் வரையும் கோடு இந்திய நிலப்பரப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர முடியாதவராக இருந்தார். அவரது பென்சில் கூறுபோட்டது நிலப்பரப்பை மட்டுமல்ல என்பதை மிகமிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டார். அப்போது யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை’’
இந்த வரிகளைப் படித்தபோது என்னையுமறியாமல் மனம் கலங்கிப் போனது. சதத்ஹஸன் மன்ட்டோவின் கதைகளில் வெளிப்படும் தேசப் பிரிவினையின் துயரார்ந்த அதே வெளிப்பாடாக இதை நான் உணர்ந்தேன். இப்படியெல்லாம் எழுத உதயசங்கரைவிட்டால் தமிழில் ஆள் கிடையாது. தேசப்பிரிவினை நடந்து முடிந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அது தரும் வலியும் ரணமும் நம்மைப் பற்றித் தொடர்கிறது. மிக எளிதாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளி எறிவதுபோல நடந்தது, இரண்டு தேசிய இனத்தின் பிரதான பிரச்சனையாக உருவெடுத்து இன்றைக்கும் வேதாளம்போல் நின்று நம் மக்களின் நிம்மதியைக் குலைக்கிறது. எல்லோரும் மறந்துவிட்ட விஷயத்தை எழுதிப் பார்க்க இப்படி ஒருவர் இருக்கத்தான் செய்வார்.
உதயசங்கரைக் குறித்துச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் சம்பிரதாயமான முன்னுரையை அந்தச் சம்பிரதாயத்துக்குள்ளிருந்து எவ்வாறு விடுவிப்பது என்பதே எனது நோக்கமாக இருந்து ஓரளவு தப்பித்தும் இருக்கிறேன் என்று மனம் சமாதானம் கொள்கிறது. உதயசங்கர் என்னும் என் முன்னோடிக் கலைஞனை, நண்பனை, காலம் தான் கௌரவிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கிறேன்.
-கீரனூர் ஜாகிர்ராஜா

Monday, November 28, 2011

விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வுலகம் கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் கருத்தரங்கம் -பாஸ்கரன்


எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எழுதியுள்ள ஐந்து நாவல்களில் மூன்று நாவல்களை மையமிட்டு நெல்லை மாவட்ட தமுஎகச 7.11.11 அன்று திருநெல்வேலியில் மூன்று அமர்வுகள் கொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. கரிசல் கிருஷ்ணசாமியின் இசையோடு நிகழ்வு தொடங்கியது. தமுஎகச நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தனது வரவேற்புரையில், “மிகச்சிறந்த நாவல்களின் பட்டியலை எவ்வளவு சுருக்கினாலும் அதில் ஜாகிர்ராஜா நாவல்கள் இடம்பெறும். வடக்கேமுறி அலிமா பல இரவுகளைக் கடந்து வானில் மின்னும் நட்சத்திரமாக ஒளிர்கிறது. இவருடைய வெம்மை, பௌர்ணமிக் கிணறு உள்ளிட்ட சிறுகதைகளும் வாசிப்பின் பேரனுபவத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நகரத்தை நோக்கியும் இவருடைய படைப்புகளைக் குறித்த உரையாடலை நகர்த்த வேண்டும்என்றார்.


துவக்க உரை நிகழ¢த்திய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஜாகிர்ராஜா படைப்புகள் முன் வைக்கும் அரசியல் குறித்து விரிவாகப் பேசினார். விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களைக் குறித்த பதிவுகள் குறைவான தமிழ்ச் சூழலில் ஜாகிரின் படைப்புகள் அந்த வெற்றிடத்தை நிரப்புவதுடன் மிகுந்த கலா நேர்த்தியோடு வாசகனை வந்தடைகிறது. இஸ்லாமியர்களுடன் பழகியுள்ளபோதும் அவர்களின் மூடுண்ட வாழ்க்கை குறித்து அதிகம் உணராமலே இருந்திருக்கிறோம் என்னும் குற்ற உணர்வை இவரின் படைப்புகள் ஏற்படுத்துகின்றன. எழுத்தின் வாயிலாக இவர் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வை இவரைப்போல வேறு எவரும் துணிச்சலாகப் பதிவு செய்ததில்லைஎன்று ச.த. குறிப்பிட்டார்.



மீன்காரத் தெரு முதல் அமர்வுக்கு கவிஞர் கிருஷி தலைமை வகித்துப் பேசுகையில் 2006 தமுஎகச நாவல் போட்டிக்குத் தான் நடுவராக இருந்து மீன்காரத் தெரு நாவலை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததை நினைவுகூர்ந்தார். ஜாகிர்ராஜா எழுத்துகளில் வெளிப்படும் லாஹிரி வாசகனுக்கு உவப்பானது என்றும் அவர் கூறினார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் தனது சிறப்புரையில் ஜாகிர்ராஜாவின் ஐந்து நாவல்களையும் வாசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் யாருக்கும் எளிதில் வசப்படாத நதியின் வெள்ளமெனப் பிரவாஹிக்கும் அபூர்வமான மொழி நடை அவருக்கு வாய்த்திருக்கிறது. நான் இறைநம்பிக்கை உள்ளவன் என்பதால், இது இறைவன் அவருக்கு அளித்த வரம் என்றே கருதுகிறேன். நானே பொறாமைப்படும்படியான படைப்புகளை அவர் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். மீன்காரத் தெருவை வாசித்தால் நாவல் நெடுக மீன் கவுச்சி அடித்துக் கொண்டேயிருக்கிறது இதுதான் அவர் எழுத்தின் பலம். நான் எழுதும்போது பல நேரங்களில் வார்த்தைகள் கிடைக்காமல் அவற்றின் பின்னே ஓடியிருக்கிறேன். ஆனால் ஜாகிர்ராஜாவை துரத்திக்கொண்டு வார்த்தைகள் ஓடி வருவதை நான் அனேக இடங்களில் பார்த்து வியக்கிறேன்என்று மனம் திறந்து பேசினார்.

வடக்கேமுறி அலிமா இரண்டாம் அமர்வுக்குத் தலைமைதாங்கிய செந்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிற உலக இலக்கிய வரிசையில் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் நிற்பதாகக் குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய இலக்கிய விமர்சகர் ம. மண¤மாறன் ஜாகிரின் மற்றெல்லா நாவல்களை விடவும் அலிமா மிகவும் மாறுபட்ட நாவல். 2000-க்குப் பிறகு வெளிவந்த தமிழ் நாவல்களில் வடக்கேமுறி அலிமாவுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. நாவலின் வடிவமும், போக்கும், மொழி நடையும் இதுவரைக்குமான தமிழ் நாவல்களின் கட்டமைப்பைத் தகர்த்தெறிந்துள்ளதுஎன்று குறிப்பிட்டார்.



மீன்குகை வாசிகள் அமர்வுக்குப் பேராசிரியர் கோமதிநாயகம் தலைமை வகிக்க எழுத்தாளர் நாறும்பூநாதன் சிறப்புரையாற்றினார். நாறும்பூ தனது உரையில் மனித உறவுகளை மிக விரிவாகப் பேசும் படைப்புகள் ஜாகிர்ராஜாவுடையது. மீன்குகை வாசிகளில் ஷேக்கா தாத்தாவிற்கும் ஆஜாத் என்கிற பேரனுக்கும் நடக்கின்ற உரையாடல் காவியத்தன்மை கொண்டது. மனித விழுமியங்களின் உயர்ந்த தளத்தில் நின்று கதாபாத்திரங்களை அணுகும் தன்மை இவருடையது. இந்நாவலில் இடம் பெறும் பெண்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைக் கூர்ந்து அவதானிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்த நாவலின் தொடர்ச்சியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்என்றார்.


நெல்லை சந்திப்பு கிளைச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். எழுத்தாளர்கள் முஜிபுர் ரகுமான்,

எஸ். அர்ஷியா, ஓவியர் வள்ளி, முனைவர் கண்ணா. கருப்பையா, சண்முகசுந்தரம், ஆய்வு மாணவ மாணவியர், வாசகர்கள் மற்றும் பல தமுஎகச தோழர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மௌனமான உரையாடலின் வழியே நிறைவடைந்தது.

Wednesday, October 19, 2011

கேட்டுக்கொண்டேயிருக்கும் யாசகக் குரலும் ரத்தப் பெருக்கோடு அலையும் அவளின் துயரமும்... தேய்பிறை இரவுகளின் கதைகளை முன் வைத்து...

ம. மணிமாறன்

வாழ்க்கை ‘அ’வில் துவங்கி ‘ஃ’ல் முடியாத போது வாழ்க்கையைச் சொல்கிற கதைகளின் மீதான வாசிப்பு மட்டும் எப்படி ஒரே நேர்கோட்டில் நிகழ சாத்தியம். கதைகள்-நாவல்கள்-கதைகள் என்று அமைந்திருக்கும் கீரனூர் ஜாகிர்ராஜா வின் படைப்புலகிற்குள் என்னைப் போலவே பலரும் நாவல்கள் - சிறுகதைகள் என்றே பயணித்திருப்பார்கள். மீன்காரத் தெருவின் வழியாகத்தான் வாசகர்களில் பலர் ஜாகிரின் கதைப் பரப்பிற்குள் பிரவேசித்திருப்பார்கள். நானும் கூட அப்படித்தான்.

மீன்காரத் தெருவிற்கு முந்தைய ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள், அதற்குப் பிறகான கதைகள் என யாவற்றையும் தொகுத்து பாரதி புத்தகாலயம் ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’ - என வெளியிட்டிருக் கிறது. தமிழில் இன்று வரையிலும் எட்கர் ஆலன்போவையும், ஓஹென்றியையும், மாப்பசானையும் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேறு எந்த இலக்கிய வகைமையை விடவும் தமிழ்ச் சிறுகதை வளர்ந்து ஒரு செவ்வியல் தன்மையை அடைந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.

கதை அது தோன்றிய நாளில் இருந்து விதி விலக்குகளையும், மீறல்களையும் நிகழ்த்திடும் கலைஞர்களைக் கண்டடைந்தே வளர்ந்து கொண்டு இருக்கிறது. மௌனி, ந.பிச்சமூர்த்தி, கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், ரமேஷ்-பிரேம் என அந்தப் பட்டியல் நீண்டு செல்லும் தன்மையிலானது. அந்த வரிசையில் ஜாகிருக்கும் இடமுண்டு என்பதை அவரின் தேய்பிறை இரவுகளின் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன
.
பித்தனும், கு.ப.ரா.வும் ஜாகிருக்குள் குழைந்து வெளிப்படுவதை அவரின் கதைகளுக்குள் கரைகிற எவராலும் அறிய முடியும். தொகுப்பிற்குள் உறைந்திருக்கும் 39 கதைகளும் மூன்று வேறு வேறான புள்ளிகளில் துவங்கி விதவிதமாக விரிவு கொள்கிறது. தமிழ் சினிமாவிற்குள் இயங்கிடத் தவித்தலைகிற யுவன்களின் பெருநகரத்துக் குறிப்புகள் ஒரு புள்ளி. ஜாகிரின் படைப்புலகின் தனித்த அடையாளமாக இன்று நிலைபெற்றுள்ள மத அடிப்படைவாதத்தின் மீது எழுப்பப்படும் கேள்விகள் மற்றொரு புள்ளி. இவ்விரண்டையும் தாண்டி இத்தொகுப்பிற்குள் என்னை ஈர்ப்பதாக இருந்தது; வாழ்க்கை முன் வைக்கும் சவால்களை அதன் போக்கிலேயே எதிர்கொள்ளும் கதைகள். இம் மூன்றாவது கதைகளுக்குள் ததும்பி நிற்கும் தஞ்சை நிலப்பரப்பும், கீரனூரும் வாழ்க்கையின் சகல முடிச்சுக்களையும் அவிழ்த்துப் பார்க்கிறது.

வாசிப்பின் அரசியல் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய காலமிது. எல்லாவற்றையும் கச்சிதமாக சொல்லி முடித்திடும் கதைகளால் வாசகன் ஈர்க்கப்படுவதில்லை. வாசகன் தனக்கான இடத்தை கதைகளில் கண்டடைகிற போதுதான் அவனுடைய வாசிப்பு செயல்பாடு ஆழ்ந்த அர்த்தம் பெறுகிறது

இப்படியான வாசக இடைவெளிகளால் நிறைந்திருக் கிறது ஜாகிரின் கதைகள். ஒவ்வொரு கதையும் முடிந்த பிறகு வேறு ஒரு கதையாக வாசகனுக்குள் துவங்கி வளர்கிறது. ஒரு கதையை வாசித்து முடித்தவுடன் எவரும் அடுத்த கதைக்குள் நுழைந்திட முடியாது. வாசித்த கதைகள் முன் வைத்திடும் சவால்களை எதிர்கொண்டு தனக்குள் பதில் சொல்லிப் பார்த்தபிறகே அடுத்த கட்டத்திற்குள் நுழைவது சாத்தியம்.

வெகுஜன சினிமாவின் மீது ஏற்றப்பட்டிருக்கும் வசீகரத்தில் தன்னைத் தொலைத்து கொத்துக் கொத்தான கதைகளைச் சுமந்தபடி பெருநகரை முற்றுகையிட்டு அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களைப் பற்றியதே ‘பெருநகரக் குறிப்புகள்’. சினிமாக் கனவில் அன்பு, நட்பு என ஒன்றையும் மிச்சமில்லாது அழித்திடும் கொடுங்கனவின் துயரத்தை மிக நுட்பமாக பதிவு செய்த படைப்பிது. கேட்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் அற்றவர்களிடம் கதைகளின் சொற்கள் ஏற்படுத்திடும் பீதி இந்த நிமிடம் வரை என்னை வதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. கதை கேட்க யாரும் வாய்க்காத போது தனியே கதை சொல்லியபடிதான் அலைவார்கள். பெருநகரெங்கும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தன்னந்தனியே கதை சொல்லிக் கொண்டலைவதான கோட்டுச் சித்திரம்தான் பெருநகரக் குறிப்புகளாக வடிவம் பெற்றிருக்கிறது.

கனவுகளைச் சுமந்தலையும் படைப்பாளியை வீடு எப்படி எதிர்கொள்ளும். அதிலும் இஸ்லாமானவன் சினிமா எடுக்கப் போகிறேன் என ஊரைவிட்டுக் கிளம்பினால் அவனை சுற்றத்தார் எந்த இடத்தில் வைத்து மதிப்பிடுவார்கள் என்பதை சொல்லிப்பார்த்த கதை ‘மழை’. மழைக்குள் கொட்டித் தீர்க்கும் அப்பாவின் கொடூரமான வார்த்தைகளை எப்படி எதிர் கொண்டானோ அந்தக் கலைஞன். வாசிக்கும் எவரையும் புரட்டிப் போடும் சி.ஏ.சர்புதீனின் கடிதம் நமக்குள் முகமறியாத அவரின் மகனுக்காக வருத்தம் மிகச் செய்கிறது.

முதற்புள்ளியின் இரண்டு கதைகளை மட்டுமே பேசிப் பார்த்திருக்கிறேன். இன்னும் இத்தொகுப்பிற்குள் ‘நிழலின் சாயலுக்குள்’ படைப்பாளிக்குத் தன்னையே தந்தவள், சினிமாக் கனவில் எதையும் இழக்கத் தயாராகிற ‘பரகத் நிஷா’ ஓடிக் கொண்டேயிருக்கிற ஓராயிரம் இளைஞர்களின் ஒற்றைத் துளியான ‘சீனு, ஜீ ’ என கதைப் பக்கங்களில் சினிமாக் கனவைத் தொலைக்க முடியாமல் பலரும் அலைவுறுகிறார்கள்.

பேஸ்ட் இல்லாமல் குத்திட்டு நிற்கும் பிரஸ், கலைந்து கிடக்கும் வசீகரமான அறைகள், உடலைப் புரட்டி எடுக்கும் பசி என வதைக்கும் மனநிலையிலும் அவர்களுக்குள் படைப்பு மனம் வற்றாமல் தான் இருக்கிறது. எனவே கொல்லும் பசியும் கூட பின்னணி இசையுடன் பசியின் வாதையைச் சொல்லும் குறும்படமாக அவனுக்குள் ரூபம் கொள்கிறது. பிரம்மாண்டமான மாபெரும் சினிமாவிற்குள் தன் இடத்தை அடைவதற்காக நண்பர்களை காவு கொள்ளத் துடிக்கும் குரூரமனநிலையும் தான் வாய்க்கிறது என்பதையும் ஜாகிர் மிக அழுத்தமாகப் பல கதைகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

‘வெம்மை’- இந்த தொகுப்பின் கனத்தை உறுதி செய்திடும் கதை. ‘இந்தியாவில் அதுவும்
தஞ்சாவூரிலிந்து கொண்டு பிழைப்புக்காக வெளிநாடு செல்வதைத் தவிரவும் வேறென்ன பெரிதாகச் சாதித்திட முடியும்’. இந்த வரிகளை எளிதாக எவராலும் வாசித்துக் கடக்க முடியாது. தஞ்சை நெல்விளையும் சொர்க்கபூமி என்று நமக்குள் உருவாகியிருக்கும் பிரம்மையின் மீது தாக்குதலை நிகழ்த்துகிற வரிகள் இவை. தஞ்சை இஸ்லாமியர்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்கள் என்பதை ஏற்க மனம் தடுமாறத்தான் செய்கிறது.

வளைகுடா நாடுகளுக்குச் சென்று உழைப்பை விற்றுப் பிழைப்பதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை இஸ்லாமிய இளைஞர்களுக்கு என்பதை ஜாகிரின் பலகதைகள் வெம்மையைப் போலவே மிக அழுத்த மாகப் பதிவு செய்திருக்கின்றன. நாட்குறிப்பிற்குள் தகித்துக் கிடக்கிறது வெம்மை. நாட்குறிப்புகளையும் கூட கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். கத்தியைப் போல மிகக் கூரான வார்த்தைகளால் கதையாடியிருக் கிறார் ஜாகிர். ‘வன்மம் முளைக்காத வரை பரிசுத்தம். அது தளைக்கத் தொடங்கினால் அவஸ்தை’. ‘வியாதிக்காரன் கையோடு வைத்திருக்கிற மருந்துப் பொதியைப் போல புத்தகங்கள்’ என வெம்மையில் துவங்கி வழி நெடுக 39 கதைகளுக்குள்ளும் வாழ்க்கையின் சிக்கல்களை விசாரித்துப் பார்க்கும் வரிகள் நிறைந்திருக்கிறது.

உருவ வழிபாட்டை ஏற்பதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு உண்டு. ‘உருவம்’ எனும் கதைக்குள் இவற்றின் மீதான விசாரணையை நிகழ்த்திப் பார்க்கிறார். மௌலவி உருவ வழிபாடு கூடாது என்பதைக் கடுமையாக பின்பற்றச் சொல்கிறவர். பிரியமானவர்களின் புகைப்படங்களுக்குக் கூட வீட்டில் இடமில்லை. ஆனாலும் மௌலவிக்கு ப்பிரியமான அவரின் மனைவியின் புகைப்படத்தை எப்படியும் வைத்திருப்பார் என்பதைத் தேடியலைவதும், கண்டடைவதுமாக கடக்கிறது கதை. விதிகளை மீறி நிற்கும் யதார்த்தங்களை சொல்லிப் பார்க்கிறது கதை.

‘சைத்தான் மீது எறிந்த கல்’- கதை புனித ஹஜ் பயணத்தின் மிக முக்கியமான சைத்தானின் மீது கல்லெறியும் சம்பவத்திற்குள் உறைந்திருக்கும் மனதையும், அவற்றின் மீதான கேள்விகளையும் எழுப்புகிறது.

“பாவம் போலிருந்தது வட்ட வடிவிலான அந்தத் தொட்டி. சைத்தானை விரட்டிய இடத்தில் சைத்தானாக உருவம் கொடுக்கப்பட்ட தொட்டி. ஆண்டுதோறும் லட்சோப லட்சம் ஹாஜிகளிடம் செருப்படியும், கல்லடியும் வாங்கி நிற்கிறது அந்தத் தொட்டி. ‘இதுவல்ல சைத்தான் - இது ஒரு ஏற்பாடு அவ்வளவுதான்’ என நாயகம் திருமேனியே வந்து சொன்னாலும் இந்த ஆவேசம் அடங்குமா? சடங்குக் காக செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில்தான் எத்தனை விதமான ஆக்ரோஷம். அலைமோதல். விவாதத்தின் மையப்புள்ளி இதுதான். சடங்குகளையும், நம்பிக்கைகளையும் காலத்தோடு பொருத்திப் பார்க்காமல் பின்பற்றுகிற போதுதான் அடிப்படை வாதம் மனதிற்குள் துளிர் விடுகிறது.

இதையே வேறு ஒரு கோணத்தில் சொல்லிப் பார்க்கிறது ‘பக்ரீத் ஆடுகள்’ கதை. தமிழ்நாட்டில் மேல்தட்டு இஸ்லாமியர் பலருக்கும் தாங்கள் ஏதோ அரேபிய பாலைவனத்தில் இருந்து ஒட்டகத்தின் மீதேறி தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்கிற நினைப்பிருக்கிறது. தமிழ் இஸ்லாத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தவ்ஹீதுகளுக்குள் துளிர் விடும் அரபு மனம் தர்ஹாக்களையும், சந்தனக்கூடு திருவிழாக்களையும் ஹராம் என்கிறது. எனவே தான் காலம் காலமாக தமிழ்நாட்டில் பக்ரீத் அன்று கொடுக்கப்படும் குர்பானியில் ஆடுகளும், மாடுகளும் அகற்றப்பட்டு ஓட்டகங்கள் இடம் பிடிக்கின்றன. ஒட்டகத்தைக் குர்பானி தருவது மிகப் பெரிய கௌரவம் என்பதாக தமிழ் இஸ்லாமியர்கள் பேசத் துவங்கியிருப்பது அவர்களுக்குள் துளிர் விடத்துவங்கியிருக்கும் அரபு மனத்தின் வெளிப்பாடு தான்.

இன்னும் கதைத் தொகுப்பிற்குள் ‘காபிர்’ ‘ரெட்டைமஸ்தானருகில்’, ‘அற்ற நாளின் விஷேசம்’, ‘ராஜமீன்’ ஆகிய கதைகள் குறித்தும் அவை முன் வைக்கும் கேள்விகள் குறித்தும் பேசிப்பார்க்க வேண்டும். அதிலும் ஜவுளிக்கடையில் சேலை உடுத்திக் காட்டும் மாமுவும் அவரின் மீசையற்ற முகமும் எவரையும் நிலைகுலையச் செய்கிறது. வாழ்வு குறித்த அச்சம் மேலிடும் போது மனிதர்கள் கைக்கொள்ளும் தந்திரங்களற்றிருக்கும் உத்திகளையும் ஜாகிரின் கதைமாந்தர்கள் தொகுப்பெங்கும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் தலைவனுக்கு பள்ளிவாசலின் ஹவுஸிற்குள் வாழும் ராஜமீனைக் களவாடுவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

கதைக் கலைஞர்களுக்குள் நிகழும் அறம் குறித்த தர்க்கங்களும், மதிப்பீடுகளும் சமூகத்தின் மதிப்பீடுகளுக்கு நேர் எதிராகத்தான் அமையும். அனீபா எப்படியும் ராஜமீனைக் களவு கொண்டு செல்ல வேண்டும் மோதினார் எதிர்ப்படக்கூடாது என்றுதானே கலைஞன் நினைப்பான். அடையாளம் கதைக்குள் வருகிற மாரிக்கு ரம்ஜான் கஞ்சி கிடைக்காமல் போன துக்கம் இந்த நிமிடம் வரை என்னை வாட்டத்தான் செய்கிறது. வாழ்க்கையை எதிர் கொள்ள இந்துச் சாமிப் படங்களுக்கு பூப்போடுவதால் ஒன்றும் பிழையில்லை. அதற்காகவெல்லாம் காபிர் என ஒதுக்கினால் வட்டிக்குப் பணம் தருபவர்கள், பிறர் மனைவியின் மீது காமம் கொண்டலைபவர்களை யெல்லாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது
கா... பிர்கள் என்றா? என வாசக மனதில் விதவிதமான கேள்வியலைகளை எழுப்பிடும் தன்மையில் அமைந்தவையே ஜாகிரின் ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’.

தேய்பிறை இரவுகளின் கதைகள் மூன்று புள்ளிகள் கொண்டமைக்கப்பட்ட வாழ்வின் கோலம் என்ற போதும் இவற்றிற்குள் அடங்காத வர்ணத் தீற்றலயும் வாசகன் கண்டடைவான். அதிலும் தஞ்சாவூரில் வீடுகள் தோறும் முற்றத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் குறித்த விசித்திரத் தன்மையில் அமைந்த ‘காட்டு வண்டுகளின் வீடு’, ஆதிக் காதலை அழித்திட முடியாது யாவரும் தான் துன்புறுகிறோம் என்பதைச் சொல்லிப் பார்த்த ‘செம்பருத்தி பூத்த வீடு’. அன்பின் வலியெதுவென உரைத்திட்ட ‘நீஸா என்றொரு சிநேகிதி’ போன்ற கதைகளும் தனித்தன்மையில் அமைந்த கதைகள். ‘எரவானம்’ ‘எடுப்பு’, ‘சக்கிலி மந்தை’ போன்ற கதைகளுக்குள் தலித் உளச் சிக்கல், தலித் இஸ்லாத்தின் கூறுகள் தென்படுகின்றன.

39 கதைகளையும் பற்றிய ஒற்றைவரிக் குறிப்புகள் வாசக நேர்மையாகாது. விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டுள்ள மனித வாழ்வின் துயரங்களை இப்படிக் கடந்து செல்வது நியாயமில்லை. இருந்த போதும் வாசகன் கண்டுணரத் தந்த குறிப்புகளே இவை. இதுவரை ஜாகிர் எழுதியிருக்கும் புனைவுப் பரப்பில் வேறு எங்கும் தென்படாத தனித் தன்மையிலமைந்த கதைகள் என ‘குடமுருட்டி ஆற்றின் கரையில்’ ‘சுவடுகள்’, ‘ஆதிமை’, ‘லவ்கீஹா’ ஆகியவற்றை எனக்கு மதிப்பிடத் தோன்றுகிறது.

குடமுருட்டி ஆற்றின் கரையில் வாழும் புவ்வா, ஜக்கரியா, ஹைரூன் ஆகியோர் இதுவரையிலான தமிழ் இஸ்லாமியப் பிரதிகள் எங்கும் தென்படாதவர்கள். ஒரு தேர்ந்த இலக்கியப் பிரதியின் தன்மையில் அமைந்த கதை. வெறும் மேரேஜ் அஸெம்ப்ளர் இல்லை புவ்வா என்பதை கதையை வாசித்துக் கடக்கும் போதுதான் உணர முடியும். சுவடுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும் யாசகக் குரலும், ரத்தப்பெருக்கோடு அலைந்து கொண்டிருக்கும் அவளின் துயரமும் வாசித்துக் கடக்க முடியாதவை. ஆதிமைக்குள் பெருகும் அன்பும். லவ்கீஹாவால் துன்புறும் கலைஞர்களின் துயரமும் தனித் தன்மையிலானது.

ஒட்டுமொத்தமாக ‘தேய்பிறை இரவுகளின் கதைகளை வாசித்து முடித்த பிறகும் கூட சுவடுகளின் அக்காவின் குரலும், அவளின் துயரமும் வாசகனை வாதையுறச் செய்துகொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் இச்சமூகம் குறித்த பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திடப் போகும் கதைகள் இவை.

Wednesday, January 26, 2011

ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்

தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்துப் பேச வருவோர் அது சில நூற்றாண்டுப் பராம்பர்யம் கொண்டதெனச் சொல்லி மகிழ்வர். நம்முடைய பழந்தமிழ்ச் செய்யுள்கள், சங்ககாலக் கவிதைகள் காப்பியங்களினூடே இடம் பிடித்துள்ள கிளைக்கதைகள் - காய சண்டிகை, ஆபுத்திரன் கதைகள், சிலப்பதிகாரத்தில் தேவந்தி மற்றும் பராசரன் கதைகள் போன்றவற்றில் சிறுகதைக் கூறுகள் வெளிப்பட்டுள்ளன. ‘பரமார்த்த குரு’ கதைகளை எழுதிய வீரமாமுனிவரின் உரைநடை வெளிப்பாடுகளில் நாம் கதைகளுக்குரிய சில லட்சணங்களைக் கண்டடைய முடிகிறது. எஸ். எம். நடேச சாஸ்திரியார் 1800 களின் இறுதியில் வெளியிட்ட ‘திராவிட மத்திய காலக் கதைகள்’, அதே நூற்றாண்டில் வாழ்ந்த தாண்டவராய முதலியார் எழுதிய பஞ்சதந்திரக் கதைகள், கதாமஞ்சரி போன்ற கதைக் கொத்துகளும், 20-ம் நூற்றாண்டின் கால்பகுதி வரை வாழ்ந்து மறைந்த செல்வக் கேசவராய முதலியார் எழுதிய ‘அபிநவக் கதைகளும்’ தமிழ்ச்சிறுகதைத் தளத்திற்கு அஸ்திவாரங்களென்று குறிப்பிடலாம். விடுதலை உணர்வு வலுப்பட்டிருந்த காலத்தில் பாரதியும், மாதவையாவும், வ.வே.சு. அய்யரும் சுதேசமித்ரன் போன்ற இதழ்களில் கதைகளை எழுதியுள்ளனர்.
1930-களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மணிக்கொடி’ இதழ், சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பி.எஸ். ராமய்யா, ந.பிச்சமூர்த்தி போன்றோரும், தமிழ்ச் சிறுகதையின் சிகரம் தொட்டவரெனக் கருதப்படும் புதுமைப்பித்தனும், ந.சிதம்பர சுப்ரமணியன், எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், க.நா.சு., கு.ப.ரா., சி.சு. செல்லப்பா, மௌனி போன்றவர்களும் பயணம் செய்த தடமாக அது இருந்தது.
இந்தியக் கதை மரபை எடுத்துக்கொண்டால் கதைகளின் பிறப்பிடமாக இந்திய நாடே இருந்திருக்கிறது என்பதை வரலாற்றின் அடிப்படையில் வைத்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பாரசீகனும், அராபியனும் இங்கிருந்து கற்றுக்கொண்ட கதைக்கலைதான் மத்திய கிழக்கு நாடுகளெங்கும் வியாபித்து வேர்விட்டுக் கிளை பரப்பியதாகச் சொல்கிறவர்கள் உண்டு.
பல லட்சம் அத்தியாயங்களில் மாந்த்ரீக மொழியில் சொல்லப்பட்ட ‘பிருகத்’ என்னும் நீண்ட கதைப்படைப்பு கி.பி. 6ம் நூற்றாண்டுகளில் விளங்கியுள்ளது.
தமிழ்ச் சூழலில் கதைகள் நம்முடைய பாரம்பர்யமான பண்பாட்டு வெளிப்பாடுகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஒரு பூம்பூம் மாட்டுக்காரனும், குடுகுடுப்பைக்காரனும், குறிசொல்லியும், ஜோதிடக் கலைஞனும் கதைசொல்லிகளே, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம், புராணக்கதைகளை வெளிப்படுத்துகின்ற தெருக்கூத்து, பொம்மலாட்டம், பாவைக்கூத்து போன்ற யாவும் கதைமரபின் கண்ணிகளே.
இன்றைக்குப் பல்வேறு உத்திகளாலும் வெளிப்பாட்டு த்வனிகளாலும் மொழியின் உபயோகங்களாலும் ஒருவித உன்னத நவீன நிலைமை அடைந்து விட்டதாகக் கருதப்படும் தமிழ்ச்சிறுகதைப் பரப்பிலே ஹரிகிருஷ்ணனின் கதைகள் எவ்விதமாய் இயங்குகின்றன இவருடைய உலகம் எது, உள்ளடக்கம் எது; எதுமாதிரியான அரசியலை இவை முன்வைக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க அவசியமிருக்கிறது.
இலக்கணம் வகுப்போர் சிறுகதைக்கு எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் வேண்டி நிற்பர். நல்லது ஙீ கெட்டது என்னும் மோதலைக் கேட்பர். சிறுகதைக்கு மையத்தை நோக்கிய நீச்சல் அவசியம் என்கிறவர்கள் உண்டு. திருப்பமும் தேவையாம். மௌனம், ஒருமை, தீவிரத்தன்மை, ஒற்றைப் படையான நகர்வு எல்லாமும் இங்கே சிறுகதைக்குரிய இயல்புகளென வகுக்கப்பட்டுள்ளது.
‘நாயி வாயிச் சீல’ தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும், மேற்கண்ட சிறுகதைப்பண்புகளை ஒருவித முரட்டு தைரியத்துடன் நிராகரித்தபடி அதனதன் எல்லையற்ற இலக்குகளை நோக்கிப் பிரயாணிக்கின்ற தன்மை கொண்டுள்ளவையாக அனுமானிக்க முடிகிறது.
வாழ்க்கை கற்றுத் தருகின்ற அல்லது நிர்பந்திக்கின்ற எண்ணிலடங்காத விஷயங்கள் அனுபவச் சேகரங்களாகி, ஒரு சமயத்தில் புனைவின் நுட்பத்துடன் சிருஷ்டியாக வெளிப்படுவது இயல்பெனினும்; அவ்வகை அனுபவங்களுக்கும் படைப்புக்கும் தொடர்பில்லையெனக் கூறுவோர் உண்டு. நாயி வாயிச் சீல தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஹரியின் அனுபவங்களின் தொகுப்பாகத்தான் எனக்குப் படுகிறது ‘‘இவை ரத்தமும் சதையுமான என்வாழ்விலிருந்து நான் உங்களுக்குத் தருவது’’ - என்னும் வாக்கு மூலம் ஒவ்வொரு கதையையும் வாசித்து முடிக்கும்போது நம்மை எட்டி விடுகிறது.
இலக்கியத்தின் மேல் போலியாகவும் பாவனைகளாகவும் படிந்துள்ள மரபானவற்றின் மேல், படைப்பாளிக்கு நியாயமாக எழுகின்ற கோபங்கள்தான் இக்கதைகளின் தலைப்பு, உள்ளடக்கம், மொழிவெளிப்பாடு இத்யாதி விஷயங்களில் ஒருவித மீறலாக நாம் அடையாளங் காண்பது. ஏற்கனவே உள்ள நியமங்கள் மீது இக்கதைகள் எழுப்புகின்ற கேள்விகள் நியாயமானவை. இவ்வகை மீறல்கள்தான் புதிய வடிவங்களை நிர்மாணிக்க வல்லவை. நம்முடைய முன்முடிவுகளும் நம்முடைய அளவுகோல்களும் நம்மைப் பற்றியுள்ள கற்பிதங்களும் இவ்வகைப் புதிய வடிவ எழுச்சியின் முன் சரணடைகின்றன.
இக்கதைகளில் பிரயோகிக்கப்பட்டுள்ள வட்டாரமொழி இக்கதைகளின் வெற்றியைத் தீர்மானிக்கிற சக்தியாக உள்ளது. விவரணைகளுக்கு நவீன மொழியையும் உரையாடல்களுக்கு வட்டார வழக்கையும் கையாளுகின்ற என்னிடம் அவை ஓயாமல் கேள்விகளை எழுப்புகின்றன. முதல் சொல்லாடலிலிருந்து முடிவு வரை, கொச்சையானதென நம்மால் நம்பப்பட்டுள்ள வட்டார மொழி பொங்கும் இசை வெள்ளமெனப் பாய்ந்தோடுகின்ற அதிசயத்தை இக்கதைகள் முதன்முதலாக நமக்கு உணர்த்துகின்றன.
‘‘கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ்சூள வெச்சாப்பிடி அனாமுத்தாப் பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே. அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா’’
‘‘மூணு தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழுவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசருப் பசுங்கக்கிட்ட குடுத்துர்றான்’’ ‘‘சின்னப்பட்ட கழுதைக்கி செனக்கழுத கூத்தியாளாம். சேட்டு பன்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரான்’’
‘‘ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல’’
“பொழப்புப் போயி பொடக்காலியில நின்னுக்கிட்டு போவுட்டுமா வருட்டுமாங்குது. வவுசி வந்து வாசல்ல நின்னுக்கிட்டு வருட்டுமா போவுட்டுமாங்குது’’
“அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது’’ ‘‘தவுசு நாடகத்துல வர்றபேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப் பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்சமாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம்’’
‘‘ ஆர்ரா புண்டவாயா உனுக்கென்றா கேடுகாலம்? வவுத்துக்கு சோறு திங்கிறியே, உனக்கு அறுவு இல்ல? நெனவு இல்ல? தாயோட ஒண்ணுடா இந்த கேனச்சி, இவள வந்து இந்நேரத்துக்கு கூப்டுறியே ங்கோயா உன்ன என்னான்னுடாப் பெத்தா? ஈனப்பானங் கெட்டத் தாயோலி! தம்பி எந்திரிச்சிக்கிட்டுத் தாளம்போட்டா கல்லு மேல வெச்சி நைநைன்னு கொட்றது. இல்ல காராம்முள்ள வெச்சி தேய்க்கிறது?’’
‘‘நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி சுடுகாட்டுல. மவ மூஞ்சியப்பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந்தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம். நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்? தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா? ஏழுய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு, மொண்டி, மொடம் இப்படி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக் கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறு பண்டிவேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக் கண்ணுச் சாமி!’’
_ இவ்வாறு தொகுப்பெங்கும் ஹரிகிருஷ்ணன் முன்வைக்கின்ற சொல்லாடல்கள் கொங்கு மண்டலத்தின் வால் முனையான சேலம் ஏர்வாடி வட்டார வழக்கைத் தோண்டித் தோண்டி நமக்குத் தருகிறது. இவ்வழக்கு பல சமயங்களில், எங்க ஊர் ஆயா ஒருத்தி காரை தூர்ந்த திண்ணையில் கால் நீட்டியமர்ந்து இழந்த தன் வாழ்வின் எச்சங்களை வெற்றிலையாய் உரலில் இடித்துச் சவைக்கிற மாதிரியும், அவளே, காணாத தன் சனஞ்சாதியைக் கண்டு விடும்போது ‘‘இப்புடியெல்லாம் ஆயிப்போச்சே சாமீ...’’ என்று உரத்த குரலெடுத்து ஒப்பாரி வைப்பது போன்றும் பிரம்மைகளை எனக்குத் தருகின்றன.
ஹரிகிருஷ்ணனின் மொழி எனக்க மிக நெருக்கமாக நான் உணர்ந்த மொழி. என் மண்ணின் மொழி. பெயருக்கு முன்னால் ஒரு அடையாளம் போல ஊர்ப் பெயரையும் சுமந்து திரியும் நான் பெருநகரத்து இரைச்சலில், நெரிசலில் என்னை அன்னியமாய் உணர்ந்த சந்தர்ப்பங்கள் தான் அனேகம். இக் கதைகளின் வழியே என் வேர்களை நான் எட்டநின்று தரிசித்த திருப்திகொண்டேன். ஆனால் வேறொருவிதத்தில் இக்கதைகள் என் குற்ற உணர்ச்சிகளைத் திருகித் தூண்டிவிடுகின்றன. மற்றொரு விதத்தில் பெருமிதமும் கொள்ள வைக்கின்றன.
நாட்டார் வழக்கை கதை மொழியாகக் கொண்டு ஒரு சிலர்தான் வெற்றி பெற்றுள்ளனர். கி. ராஜாநாராயணன் அதற்கொரு சிறந்த உதாரணம். ஆனால் இத் தொகுப்பிலுள்ள கதைகளைப் போன்ற உள்ளடக்கம் கொண்டவற்றை கி.ரா., பாலியல் கதைகளென்றே தனியாக அடையாளப்படுத்துகிறார். ஹரி ‘‘என் படைப்புலகமே இவை தான்’’ என்று முன் வைக்கிறார். இதற்கொரு துணிச்சல் தேவைப்படுகிறது.
வாழ்வில் எதிர் கொள்ளும் குரூரங்களின் போதும், அவற்றைப் பதிவு செய்கிறபோதும், பிறிதொருவர் வழியே அவற்றை வாசக அனுபவமாக உணரும் தருணங்களிலும் நம் மனதின் சமநிலை குலைந்து தகர்ந்து விடுகிறது. நாயி வாயிச் சீல’ வாசிப்பனுபவம் எனக்கு அதைத் தந்தது. இந்தத் திக்கத்த சனத்துடன் நானும் ஒருவனாகக் கரைந்து போனபோது நிம்மதியாக உணர்ந்தேன்.
ஒவ்வொருவர் உலகமும் தனித்தனியானது. விசித்ரமானது. அவ்வகையில் கூத்துக்கலையை ஏற்றுக்கொண்ட விளிம்பு நிலைப் பிரஜைகளின் உலகம் அசாதாரணமானது. நம்மால் உன்னதம் என்று கொண்டாடப்படுகின்ற யாவும் அங்கே அர்த்தமிழந்து போகின்றன. அவர்களுடைய கனவுகள் எல்லாம் நமக்கு அன்னியமாகவும் நம்முடைய எதிர்பார்ப்புகளெல்லாம் அவர்களுக்கு சாதாரணமானவையாகவும் இருப்பது கண்கூடு. இந்த இடைவெளி நீளமானது. இதைக் குறைக்கவல்ல அதிசயம் ஒரு போதும் நிகழ்ந்துவிடாது. இதுதான் நம்முடைய இயலாமை.
ஹரிகிருஷ்ணனின் கதைகளில் சமகால சிறுகதைக் கூறுகள் எதுவும் இல்லை. அகமன சஞ்சாரமில்லை. பக்கம் பக்கமான விவரணைகள், வலிந்து திணிக்கின்ற பாலியல் சித்தரிப்புகள் இல்லை. இக்காரணங்களினாலேயே இவை தனித்துவம் பெறுகின்றன. இதே காரணங்களுக்காக நம்முடைய இலக்கிய மேதைமைகள் இவற்றைப் புறக்கணிக்கின்ற சந்தர்ப்பங்களையும் உருவாக்கித் தருகிறார் ஹரி.
இக்கதைகளின் நெடுந்தடமெங்கும் குருதியும் வியர்வையுங் கலந்த நறுமணம் கமழ்கிறது. வழக்கொழிந்த வசவுச் சொற்கள் கூத்துங் கும்மாளமுமாய் கொடியேறிப் படபடக்கின்றன. இதுகாறும் அழகியலோடு சித்தரிப்பைப் பெற்ற திருநங்கையரின் வாழ்வு அசலான முறையில் காட்சிப்பட்டுள்ளது. காலச்சூழலில் தமிழ்ச் சிறுகதையுலகம் தவிர்த்தும் தவறவும் விட்ட நாட்டார் தன்மைகள் மீண்டும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஹரிகிருஷ்ணன் புதுவிதமான எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார். கூத்துக்கலைஞர்களிடமிருந்து பெற்று அவர் தமிழுக்குத் தர நிறைய இருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கிறது.

Thursday, January 13, 2011

தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகீர் ராஜா

கல்லிலே உருவான இந்த அதிசயத்தைக் காணத்தான் கொங்கு மண்டலத்திலிருந்து 16 வருடங்களுக்கு முன்னால் நான் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்தது. கரையேறி மீன் விளையாடும் காவிரிக்கரையை இலக்கியங்களில் படித்துவிட்டு வற்றிய காவிரியைக் கண்டபோது எனக்கு மனம் திடுக்கிடத்தான் செய்தது. நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி வரும் காவிரியை மோகமுள்ளிலும் அம்மா வந்தாளிலும் வாசித்துவிட்டு ஒரு மணல் காட்டை தரிசித்தபோது திசைமாறி வந்துவிட்டோமோ என்னும் அன்றைய என் தவிப்பு, தவிப்பின் வடு இன்றளவும் மாறாமலிருக்கிறது. ஜானகிராமனின் கதைமாந்தனைப்போல படித்துறையில் ஆற அமர உட்கார்ந்து அகண்ட காவிரியில் லயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் என் ஆதி நம்பிக்கை வறட்சி குதிரைகளின் குளம்படி ஓசை அசரீரியாய் கேட்க, ஒரு புராதன நகரத்துக்குள் புழங்கித் திரிபவனாயிருக்க வேண்டுமென்பதுதான் அன்றைய என் கனவாயிருந்தது. அதுதான் என்னைத் தஞ்சாவூருக்கு இழுத்து வந்தது.

தஞ்சாவூரின் எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் ராஜராஜேச்வரம் எனப்படும் பெரியகோவில் நம் கண்களுக்கு காட்சியளிக்குமென எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் பஸ்ஸை விட்டு இறங்கி பெட்டியும் கையுமாக அண்ணாந்து பார்த்தபடி நடக்கிறேன். வணிக வளாகங்களால் சூழப்பட்ட நகர்மயமாகியிருந்த சற்று படாடோபமான தஞ்சாவூரைத்தான் அன்றைக்கு என்னால் காண முடிந்தது. பிறகொரு கிடைத்ததற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. தஞ்சாவூரின் பல நூற்றாண்டு கால வரலாற்றையும், பெரியகோவிலின் உன்னதங்களையும், அவலங்களையும், அகண்ட காவிரியின் சுழிப்புகளையும் அதன் வற்றிய சோகச் சரிதத்தையும் தன் நெஞ்சிலே புதைத்து வைத்துத் திரிந்த ஒரு ஆன்மாவைச் சந்திக்க வாய்த்தது. அவர் பெயர் தஞ்சைப் பிரகாஷ். இலக்கியத்திலேயே இது ஒரு இருட்டடிக்கப்பட்ட பெயர். ஆனால் நான் அறிந்து கொள்ள துடித்த புராதனத் தஞ்சையின் வளம்மிக்க பக்கங்களை மட்டுமல்ல பெரியகோவிலின் நிஜமான பிம்பத்தை குறிப்பாக, ராஜராஜசோழனால் சிவதுரோகியாக்கப்பட்ட பாவப்பட்ட ஏழைக் கூட்டத்தை பிரகாஷ்தான் எங்களுக்குச் சொன்னார். அவர்களின் வழியே உடலில் சூடு போடப்பட்டு சோழ மண்டலத்தின் பல பாகங்களிலிருந்தும் இழுத்து வரப்பட்ட 400 பெண்கள் தளிச்சேரிப் பெண்டுகளாக தேவரடியார்களாக தாசிகளாக்கப்பட்ட வரலாற்றின் கறைபடிந்த இருள்பக்கங்களையும் கதைசொல்லி ரூபமெடுத்த அவருடைய வாய் வழியாகத்தான் கேட்க நேர்ந்தது.

பிரகாஷ் கடைசியாகத் தொடங்கி நடத்திய இலக்கிய அமைப்புக்குப் பெயர் தளி. தளி அமைப்பின் கூட்டங்கள் நடந்த இடம் அசல் தளிச்சேரி. இன்றைக்குப் பெரிய கோவிலின் உள்ளே நுழைகிறவர்களுக்கு அந்த தளிச்சேரி பசுமையான புல்வெளியாகக் காட்சியளிக்கலாம். ஆனால் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில்தான் தளிச்சேரிப் பெண்டுகளின் வதைபடும் வாழ்க்கை நடந்திருக்கிறது. தளி என்றால் கோவில், சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம். தஞ்சாவூரிலிருந்த எரியூர் அரிகுலகேசரி ஈச்வரம், கடம்பூருக்கருகில் திவிலன்கோவில், திருவாரூரிலிருந்த பெரியதளி, பிரமீச்வரம், திருவாழனேரி, ஒலோகம மகாதேவீச்வரம், அருமொழி ஈச்வரம், உலகீச்வரம் போன்ற ஆலயங்களிலிருந்தும் அந்தப் பெண்கள் தஞ்சாவூருக்கு கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஒரு பாதி. மறுபாதியினர் ராஜராஜனால் விதிக்கப்பட்ட வரியைக் கட்ட முடியாமல் சிவதுரோகியாக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் மற்றும் ராஜராஜனால் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் . இவர்களில் அரசகுடும்பத்தினரும் அடக்கம். அலகிடுபவர்களாக, மெழுகிடுபவர்களாக, விளக்கேற்றுபவர்களாக, ஆடுமகளிராக அதற்கும் அப்பால் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேய்ச்சல் நிலமாகவும் அவர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வகையில் இந்த தளிச்சேரியிலிருந்து தான் என்னுடைய இலக்கியப் பயணம் தொடங்கியது. இன்றைக்கு நவீனமான புல்வெளியாக்கப்பட்ட அந்த இடத்தில்தான் எங்கள் படைப்பரங்கம் நடைபெற்றது.

தஞ்சைப் பெரியகோவில் தன் விதானங்களை அகண்ட ஆகிருதியை படைப்பாளிகளுக்குத் திறந்து வைக்கிறது. இங்கே வழிபாட்டுக்காக வருகிறவர்களை விட தங்கள் மன அவசங்களுக்கு வடிகால் தேடி வருகிறவர்களே அதிகம். திறந்த வெளியும் செதுக்கப்பட்டுள்ள கலைச்சிற் பங்களும், பசும்புல் வெளியும், நெடிதுயர்ந்த கோபுரமும் நெஞ்சிலே பாரஞ்சுமந்து வருகிறவர்களை ஆசுவாசப்படுத்த ஆற்றுப்படுத்த வல்லவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆகிருதியைச் சுற்றிவரும் பொழுது பத்தாம் நூற்றாண்டுப் புராதன நிழல் நம்மேல் கவிகிறது. கீழைச் சாளுக்கியரின் நிலமாயிருந்த வேங்கி நாடென்றழைக்கப்பட்ட இன்றைய ஆந்திரம், கங்கபாடி என்றழைக்கப்பட்ட இன்றைய மைசூர், நுளம்பர்களின் பிரதேசமாகயிருந்த பெங்களூர், பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள், குடகுநாடு, கேரளத்துக் கொல்லம், கலிங்கம், தென் இலங்கைத் தீவிலுள்ள ஈழம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி என்னும் வடகர் நாடகம், மராட்டியம், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் தமிழகத்தின் பாண்டியநாடு யாவற்றையும் வெற்றிகண்டு அபய குலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள் மொழி, அழகிய சோழன், ரணமுகபீமன், ராஜாச்ரயன், ரவிகுல மாணிக்கன், ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜகேசரி வர்மன், ராஜமார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துங்கதுங் கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், தெலிங்ககுல காலன், நிகரிலிசோழன், நித்யவினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச்சோழன், மூர்த்த விக்கரமா பரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைலகுல காலன் என்று மூச்சுவாங்குமளவு தனக்கு நூற்றுக்கணக்கான பெயர்களைச் சூடிக்கொண்ட ராஜராஜனின் படைகளையும் போர்ப் பரணிகளையும் வரலாற்றுப் பரிச்சயமுள்ள படைப்பாளிகளால் உள்வாங்கிக் கொள்ள முடியும். நம்முடைய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், இலக்கியப் பீடங்கள் காரணமில்லாத புனைப்பெயர்களைச் சூடிக்கொள்வர். ராஜராஜன் சூடிக் கொண்டவை காரணப்பெயர்கள். பிறகு ஆன்மீகம் என்கிற பரவச நிலையை விடுத்து சற்றே நம் பகுத்தறிவின் சாளரத்தை மூடிவைத்துவிட்டு இங்குள்ள கலையழகை யெல்லாம் அதனதன் தொன்மத்துடன் பொருத்திப் பார்ப்போமானால் இன்னொரு மாறுபட்ட லோகத்துக்குள் நம்மால் சஞ்சரிக்க முடியும்.

மேம்போக்காக நுனிப்புல் மேய்கிற தன்மையுடன் கலைப்ரக்ஞையற்ற கண்களால் பெரியகோவிலைப் பார்க்கிறவர்களுக்கு எதுவும் அனுபவித்தறிய முடியாது. பெரியகோவில் கோபுரத்தின் குறுகிய படிக்கட்டுகளின் வழியே கருவறைக்கு மேலே உள்ள திருச்சுற்றில் சிவனின் 108 விதமான நடனத்தோற்றங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 81 தோற்றங்கள் வரை செதுக்கப்பட்டு என்ன காரணத்தினாலோ 27 நிலைகள் செதுக்கத் தோதான நிலையில் விடப்பட்டுள்ளது. சிற்பங்கள் செதுக்கப்பட்ட பிறகு சிற்பிகளின் கண்களை ராஜராஜன் குருடாக்கி விட்ட தாகவும் ஒரு வதந்தி உண்டு.

பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டி ருக்கிறது. பேராசிரியர் அடையாளப்படுத்தியபிறகு இந்திய தொல்லியல் துறை உள்ளே நுழைகிறது. சோழர்கால ஓவியங்களுக்கு மேல் நாயக்கர் கால ஓவியங்கள் படிந்திருக்கின்றன. இவையும் 400 ஆண்டுகாலப் பழமைவாய்ந்தவை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல 1000 ஆண்டு பழமைவாய்ந்த சோழர்கால ஓவியங்கள் தனியாகவும் 400 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த நாயக்கர்கால ஓவியங்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகின்றன.

சோழர்கால ஓவியங்களை ஆய்வு செய்தவர்கள் அவை ‘ப்ரெஸ்கோ ப்யூனோ’ அரிய வகையைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை விட வரையப்பட்ட பாணிகளால் இந்த ஓவியங்கள் உயர்தரமானவை என்று இதற்குப் பொருள். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரிய மூலிகைச் சாறுகளுடன் மரப்பிசின் கலந்து தயாரிக்கப்பட்ட வர்ணக்கலவைகளை இந்த ஓவியங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மட்டுமல்ல புராணக் காட்சிகள், போர்க்கோலங்கள், கடவுளர்கள், மன்னன் ராஜராஜன், அவனது மனைவியர், ராஜராஜனின் குருமார்கள், நடனமாதர்கள், சோழர்கால ஆண்கள், பெண்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை இந்த ஓவியங்கள் துல்லிய மாகச் சித்தரிக்கின்றன.

ஆடல் மகளிர்களை அதற்குரிய வனப்புடன் தீட்டியிருக்கிற அதே தூரிகைகள் குடும்பப் பெண்கள் சமையலறையில் சமைப்பது உள்ளிட்ட பல காட்சிக்கோணங்களையும் பதிவு செய்திருப்பதும் சாமானிய மாந்தர்களும் இக்காட்சிப் புலத்துள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய தாகும். ஆனால் இந்த ஓவிய மேளாவை நிகழ்த்திக்காட்டிய எந்த ஓவியனின் பெயரும் பதிவாகவில்லை என்பதுதான் ஆகத்துயரமாகும். ஓட்டைச் சுவரிலிருந்து வெளிப்பட்டு ஓவியங்களைக் காட்டித்தந்து சிறகடித்த அந்தப் பெயர் தெரியாச் சிறுபறவைக்கு காலம் நன்றி கூறுவதைப் போல, ஒரு காலகட்டத்தையே தங்கள் தூரிகைக் கரங்களால் வார்த்துத் தந்திருக்கிற அந்த ஓவியக் கலைஞர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றியறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ராஜசிம்மன் என்கிற பல்லவ மன்னனால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்ட கச்சிப்பேட்டுப் பெரிய கோவிலைப் பார்த்த பிறகுதான் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட நினைத்ததாகக் கூறுகிறவர்கள் உண்டு. இலங்கையை வெற்றிகொண்ட ராஜராஜன் அங்கிருந்த பௌத்தவிஹார்களின் காட்சிப் பொலிவில் மயங்கி, இவற்றையெல்லாங் கடந்த ஒரு கலைக் கோட்டத்தை உருவாக்க எண்ணிப் பல காலங்கள் பலவிதமாய் மனதில் அசைபோட்டு செயல்வடிவம் தந்தது தான் ராஜராஜேச்வரம் என்று அபிப்ராயப்படுகிறவர்களும் உண்டு.

எதிர்காலத்தில் உன் புகழ் போர்களின் மூலமாக மட்டுமே அறியப்படாமல் நீதிமான்களும், கல்வியாளர் களும், கலை விற்பன்னர்களும், மதியூக அரசியல் மேதாவிகளும் மட்டும் உன்னைப் பாராட்டாமல் சைவ சமயத்தாரும் உன்னைப் போற்றிப் பாட ‘தளிக்குளம்’ கோவில் பெரியகோவிலாக வேண்டும் என்று தமக்கை குந்தவை வேண்டிக்கேட்டுக் கொண்டதன் பேரில்தான் ராஜராஜன் பெரியகோவிலை நிறுவினான் என்று நிறுவுகிறவர்களும் உண்டு.

கட்டடக் கலை என்று பார்க்கும்போது பத்தாம் நூற்றாண்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனைதான் பெரியகோவில். இதற்கு சில நூற்றாண்டு களுக்குப் பிறகு மொகலாயர்களின் கட்டடக்கலை வியப்பூட்டும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் உருவங்களைப் புறக்கணிக் கின்ற இஸ்லாமிய வேத அடிப்படையில் சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு இடமில்லாமல், அவை சலவைக்கற் களால் எழுப்பப்பட்ட சன்னிதானங்களாகவே காட்சியளிக் கின்றன. என் பிள்ளைகளுக்கு எங்கோ தொலைவில் யமுனா நதி தீரத்திலிருக்கின்ற தாஜ்மஹாலைக் காட்டு வதைவிடவும் அருகிலிருக்கின்ற பெரியகோவில் என்கிற இந்த அதிசயத்தைக் காட்டுவதில் தான் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. நண்பர்களே! ராஜராஜனின் கலாரீதியான செயல்பாடுகளைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. நட்டுவக்காரர்கள், பாட்டுக்காரர்கள், கானபாடிகள், வங்கியக்காரர்கள், பாடவியக்காரர்கள், வாத்தியக்காரர்கள், உடுக்கை வாசிப்போர், வீணை வாசிப்போர், ஆரியம்பாடுவோர், தமிழ் பாடுவோர், கூத்தர், கெட்டி மத்தளம் வாசிப்போர், கந்தர்வத் துறையார், சங்கு ஊதுவோர், பக்கவாத்தியர், உவச்சர்கள் என்று 17வகை யான கலைஞர்களை பெரியகோவிலுக்காக வென்றே பராமரித்துக் காபந்து செய்தவன் ராஜராஜன். சரி; கலை இவனாட்சியில் உச்சத்திலிருந்தது! ஒப்புக் கொள்வோம்! ஆனால் ஜனங்கள் என்ன நிலையிலிருந்தார்கள். மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்களென நாம் ஆய்ந்து பார்க்கையில் ராஜராஜனுக்குப் பின்னடைவுதான் என்கிற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சோகம்தான்! ஒரு கோயிலுக்காக தன் சாம்ராஜ்யத்தின் பெரும் பகுதிச் செல்வமனைத்தையும் தாரைவார்த்த இந்தத் தஞ்சை மன்னன் தனதாட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களை, பாட்டாளி வர்க்கத்தை, கடைநிலைச் சமூகத்தை எந்த லட்சணத்தில் நடத்தினான் என்றும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைகள் தேவைதான். கலைஞர்கள் போற்றி ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் கற்களால் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டத்துக்குக் கீழே உழைப்பாளிகளின் உதிரம் சிந்தப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறை, நல்லெருது, ஓடக்கூலி, ஈழம் பூட்சி, தரகுப்பட்டம், தறி உறை, மீன்பாட்டம், வட்டி நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப்பாறை, குசக்காணம் என்று மீனவர்கள், உழவர்கள், சலவைத் தொழிலாளிகள், நெசவாளர்கள், தரகர்கள், ஆட்டிடையவர்கள், ஓடக்காரர்கள், கள் இறக்குவோர் உள்ளிட்ட உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர் மேல் வரிச்சுமையை ஏற்றி வைத்தவன் ராஜ ராஜசோழன். சனாதன தருமம் வேர்பிடிக்கவென்றே திட்டமிட்டு பார்ப்பனர் களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கிவிட்டு குடிமக்களில் ஒருவன் திருமணம் செய்து கொண்டால் அதற்குரிய ‘கண்ணாலக் காணம்’ என்கிற வரியைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டவன் ராஜராஜன். அவனுடைய கல்வி நிறுவனங் களிலே கற்பிக்கப்பட்டவை எல்லாம். மீமாமிசை, வியா கரணம், இதிகாசம், சிவதருமம் என்று வடமொழிக்குரிய இலக்கண இலக்கியங்கள்தான்! தமிழக வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் தேங்கிவிட்ட வலங்கை, இடங்கைக் குலங்களின் போராட்டங்கள் ராஜராஜன் காலத்து எச்சம்தான்!

இந்த அகண்ட ராஜேச்வரத்தின் கல்வெட்டுகளில்தான் தமிழகத்திலேயே முதன் முதலாக சமஸ்கிருத அட்சரங்கள் பொறிக்கப்பட்டன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல வரிசெலுத்த முடியாதவர்களை சிவதுரோகியாக்கி, அவர் களுடைய நிலங்களை விற்று, கோவில் நிர்வாகத்திடம் சேர்ப்பித்தது ராஜராஜனின் ஊர்சபை! பிறகு அந்த நிலங்கள் பிராமணர்களுக்குச் சொந்தமான பிரம்மதேயங்களாக, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான சதுர்வேதி மங்கலங் களாக மாற்றம் பெறுகின்றன. இந்த ஊர்சபை நிர்வாகம் குறித்து பெரிய பாராட்டுகளை ராஜராஜனுக்கு வழங்குகின்ற இன்றைய நண்பர்கள், அந்த ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மட்டுமே அங்கம் வகிக்க முடிந்தது என்கிற சங்கதியை வசதியாக மறந்துவிடுகின்றனர் அல்லது மறைக்கின்றனர்.

செழிப்பான தஞ்சாவூர் கிராமங்கள் ஒவ்வொன்றின் வளத்தையும் வாழ்வையும் உறிஞ்சித்தான் பெரிய கோவில் கோபுரம் நிமிர்ந்திருக்கிறது. ரூபாய்க்கு 10 வட்டி என்பது இந்தக் காலத்திலேயே கொடுமையாக இருக்கும் போது 12 சதவிகித வட்டிக்குப் பணம்கொடுத்து, அதை வசூலிக்க ஒரு குண்டர் படையையும் வைத்திருந்து லேவாதேவி வேலைபார்த்தவனாக ராஜராஜனுக்கு இன்னொரு மங்கிய முகம் உண்டு. நிலப்பிரபுத்துவம் என்கிறபொருளியியல் ஏற்பாடு ராஜராஜன் காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது. சொந்த நிலமுள்ளவனுக்குத்தான் அவன் காலத்தில் மதிப்பு. ஒருவன் கோவில் பண்டாரமாக விரும்பினால்கூட அவனிடம் குறிப்பிட்டளவு நிலம் வேண்டும்.

இன்னொரு விஷயம்; தளிச்சேரிப் பெண்களுக்கு ராஜராஜன் வீடு கொடுத்தான், நிலம் கொடுத்தான், ஊதியம் கொடுத்தான், எல்லாம் தந்து பராமரித்தான் என்கிற நண்பர்களிடம் நம்மால் கேட்க முடியும். அந்த 400 பெண்டுகளிடமும் உயர்சாதிப் பெண்களுக்கு விசேஷ சலுகைகளும், சிவதுரோகியாக்கப்பட்ட குடும்பங்களி லிருந்து வந்த ஏழைப்பெண்களுக்கு வேறுவிதமாகவும் பாரபட்சமான முறையையும்தான் காட்டினான்! மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் யாவும் வளமான பூமி. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தரிசு நிலம் இப்படியான பாகுபாடும் காட்டப்பட்டி ருக்கிறது.

ராஜராஜனைப் பொறுத்தவரையில் இந்த கோயில் கட்டுவது அவனுடைய இலக்காக இருந்திருக்கிறது. அதற்கான பொன்னையும் பொருளையும் தன்னுடைய கஜானாவிலிருந்து தாரை வார்த்ததுபோக மீதியை எப்படியெல்லாம் தேற்றுவது என்று யோசிக்கிறபோதுதான் அவனுடைய பொருளாதார மூளை குடிமக்களைச் சுரண்டு கின்ற யோசனையைச் சொல்லி யிருக்கிறது. அந்தக் கால கட்டத்துப் பெண் களின் கோபுர தற்கொலைகளும், மக்கள் கிளர்ச்சிகளும் பொற்கால ஆட்சியின் புகழ் பாடுகையில் மறைக்கப்படுகிறது.

குடவோலை முறை ஜனநாயகத்தைப் பற்றி பாடபுத்தகங்களில் எழுதி எழுதி மாய்ந்துவிட்டனர். ஆனால் சொத்து இருந்தவனுக்குத்தான் குடவோலையும் ஊர்சபையும் என்று நம் குழந்தைகளுக்கு யார் மறு கற்பித்தல் செய்வது? பண்பாடும் இலக்கியமும் வளர்க்கப்பட்ட சிந்தனை யாளர்கள் தோன்றியிருந்த களப்பிரர்களின் ஆட்சிக்காலம் ‘இருண்ட காலம்’ என்றுதான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றுதான் வருணாசிரமம் வளர்க்கப்பட்ட சோழர்காலம் பொற்காலம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

ராஜராஜன் தன் குடிமக்கள் மீது விதிக்காத வரியே இல்லை. ஏழை விவசாயி ஒரு பயிருக்கு ஊடுபயிராக இன்னொரு பயிரை வளர்த்தால் கூட ‘ஊடு போக்கு வரி’ என்கிற பெயரில் வசூலித்த அந்த மன்னனை நாம் எப்படிக் கொண்டாடுவது? வரிக்கொடுமை தாங்கமாட்டாமல் தங்களை கோயிலுக்கு விற்றுக் கொண்ட 12 குடும்பங்களின் கதை செங்கல்பட்டு மாவட்ட கல்வெட்டுகளில் இன்றளவும் கண்ணீர்க்கதை போல காணக்கிடைக்கிறது.

எங்களடியாள் அங்காடியும் இவள் மகள்

பெருங்காடியும் இவள் மக்களும்

திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக

நீர் வார்த்துக் கொடுத்தோம்

என்கிற வரிகள் ஒப்புதலுக்குக் கொடுக்கப்பட்டவை. ஆனால் இதில் அவர்களுடைய துக்கமும் துயரமும் கையறு நிலையும் பேரோலமும் அடங்கியுள்ளதாகவே உணர முடிகிறது.

ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்றெல்லாம் பிரித்து உருவாக்கியதும் பறைச்சுடுகாடு, கம்மாளச்சுடுகாடு என்றெல்லாம் பிரித்ததும் ராஜராஜன் காலத்து கைங்கரியங்கள்தான். ஊடுபயிர் வளர்த்த ஏழை விவசாயிகளை ஊடுபோக்கு வரியால் பழிவாங்கிய மாமன்னன், நிலங்களை பிராமணர்களுக்குத் தாரை வார்க்கிறான். பிராமணர் குழுக்களுக்கு மொத்தமாக நிலம் வழங்கப்பட்டால் அது பிரமதேயம். தனியொரு பிராமணனுக்குத் தரப்பட்டால் அது ஏகபோக பிரமதேயம். இப்படி வேலிக்கணக்கில் ஏகபோக பிரமதேயம் பெற்ற பிராமணக் கதைமாந்தர்களை நீங்கள் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” போன்ற நாவல்களில்கூட வாசித்துணரலாம். மேலும் இதற்கான கூடுதல் ஆதாரங்களை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்களைக் குறித்து எழுதிய நூல்களிலிருந்தும் கண்டடையலாம். சம்புவரை யர்கள், பழு வேட்டரையர்கள், மலையமான் களெனப் பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சியே சோழர் ஆட்சி என்றும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மூலமாக நமக்கு கூடுதல் தகவல் கிடைக்கிறது. ராஜராஜன் செய்தது இவர்களை எல்லாம் திறம்பட இணைத்ததுதான்.

ராஜராஜன் நிர்மாணித்த பெரிய கோவிலின் பெருமையெல்லாம் அதைக்கட்டிய கல் தச்சர்கள், சிற்பிகள், கடுமையான உடல் உழைப்பாளிகள் இவர்களுடைய வியர்வை யிலும், குருதியிலும், மதிநுட்பத்திலும் அடங்கி யிருக்கிறது.

இன்றைக்குப் ‘பொற்காலம்’ என்று புகழ் பாடுகின்ற இதே நம்முடைய மாநில அரசுதான் 1976-களிலும் இயங்கியது. மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் நிறு வனத்தின் சார்பில் கோ.தங்கவேலு என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “தமிழ் நில வரலாறு” என்னும் நூலில் சோழர்கால ஆட்சி ஏழை விவசாய, உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கு எப்படியெல்லாம் பொல்லாத ஆட்சிக்காலமாக விளங்கியது என்று துல்லியமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருந்தது. அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிறிதொரு சனாதன ஆலோசகர் குழுவினரால் அந்த நூல் தடை செய்யப்பட்டது. பொல்லாத ஆட்சி பொற்காலம் ஆட்சியாவதும், பொற்காலம் இருண்ட காலமாவதும் இன்றைக்கு வரலாற்றைத் திரிக்கிறவர்களின் கைகளிலே இருக்கிறது. ஆனால் இன்றைக்குள்ள நம்முடைய ஆய்வாளர்கள் இந்த இருட்டடிப்புகளை வெளிச்சப்படுத்து கிறவர்களாகத் துணிச்சலுடன் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். கலை போற்றி ஆராதிக்கப்பட்ட காலத்தை நாம் மதிப்புடன் பதிவு செய்கின்ற அதே நேரத்தில் ; ஏழை மக்களும், உழைப்பாளிகளும், பெண்களும் வதைபடும் வாழ்வில் உழன்ற காலத்தை பொற்காலம் என்று மதிப்பிடுவதும், உயரத் தூக்கிக் கொண்டாடி உண்மைக ளை மறைப்பதும் தமிழனின் உண்மையான வரலாறுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்கின்ற துரோகமாகும்!

(அக்டோபர் 31 - தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி - செம்மலர்