Sunday, March 22, 2009

எல்லோருக்குள்ளும் ஒரு கருத்த லெப்பை - க. சுப்பிரமணியன், நன்றி கனவு

உ ருவ வழிபாடும் அரூப வழிபாடும் இரண்டு வழிமுறைகள் விதவிதமாய் செதுக்கி, வடித்து, வரைந்து உருவங்களே அனைத்துமாய் ஆகி புரதானத்தை இழந்து விடுவது ஒரு எல்லையென்றால், உருவங்களை ரசிக்கின்ற கலைமனம் கூட குற்றமாய் ஆகிவிடுவது மற்றொரு எல்லை.

விதவிதமாய் மிட்டாயில் உருவங்களைப் படைக்கும் அமீதுவிடம், குழந்தையாய் இருக்கும் கருத்தலெப்பை செய்துதரக் கேட்பது சைத்தானை. அதே கருத்த லெப்பையால் அமீதுவுக்குள் வீணாகிக் கொண்டிருக்கும் ஒரு ஓவியனையும் அடையாளம் காண முடிகிறது.

‘உருவம் நமக்கு ஆகுமாடா’ எனக் கேட்கும் அம்மா விடம் ‘நீயும் நானும்கூட உருவம்தானேம்மா’ என்று சொல்லும் அவனது ரூபங்களின் மீதான காதல் ரகசிய மாக அமீது மூலம் அண்ணல் நபியை உருவமாய்ச் செய்து பார்க்கத் துடிக்குமளவுக்கு வளர்ச்சி பெறுகிறது. நாவலின் மற்றொரு முக்கிய இழையாக ஓடுவது ராவுத்தர் - லெப்பை அடையாளம் சார்ந்து ஊருக்குள் இருக்கும் பேதம். பள்ளிவாசல் மகாசபைத் தேர்தலில் நூர்முஹம்மது லெப்பை காரியதரிசி பொறுப்புக்கு போட்டியிடுவதைத் தொடர்ந்து ராவுத்தர்களிடம் கிளம்பும் ஆத்திரமும் அதன் விளைவுகளுமாய்ப் பயணிக்கிறது.

சிலருக்கு சிந்தனையும் இன்னும் சிலருக்கு செயல்களும் வசப்பட்டுவிடும். செயலும் சிந்தனையும் ஒரே லயத்தில் வாய்ப்பவர்கள் அரிது. மாட்டிறைச்சி தின்னும் லெப்பைகளின் நியாயம் எடுபடுவதில்லை என்று வருந்தும் அம்மா இடுப்பொடிய பிழியும் முறுக்குகளை எண்ணிக்கையில்லாமல் அண்டாவின் கொள்ளளவே கணக்காய் வாங்கும் முதலாளிகளின் நியாயத்தை எண்ணிப் பொருமும் ராவுத்தரை எதிர்த்து கொடி பிடிக்காமல் அனுப்பியதும் திரும்பி வந்ததற்கான அம்பாவை ‘அவனையும் சேத்துதான் சொல்றேன்’ என்று சீறும் கருத்தலெப்பையால் யதார்த்தத்தில் எதையுமே மாற்ற முடிவதில்லை. தன் ப்ரியத்துக்குரிய அக்கா ருக்கையாவின் வாழ்க்கையில் கூட எதுவும் செய்ய முடிவதில்லை. அதிகபட்சமாக ராவுத்தர் அண்ட்-கோவுக்கு மாற்றாக ஒரு லெப்பை அண்ட்-கோ குறித்து கனவுதான் காண முடிகிறது.

மேலும் மிட்டாய் அமீதுவிடம் ‘நீ மொதல்ல பித்துலெவக் கொட்டத்த அடக்கி ஒங்க அக்காக்காரிய வாழவெய்யிடா. அப்புறமா ராவுத்தனுங்க கொட்டத்த அடக்கலாம்’ என்று பேச்சுக் கேட்கத்தான் முடிகிறது. ஆழமாய்ப் பார்த்தால் நம்மில் பெரும்பாலோருள்ளும் ஒரு கருத்தலெப்பையை அடையாளம் காணலாம். ஜாகிரின் பேனா தயக்கமின்றியும் எளிதாகவும் அஹமது கனி ராவுத்தருக்கு பன்னிரண்டு வயது விடலைப் பையனிடம் ஏற்படும் ப்ரியத்தையும், மழையிரவில் சுயநினைவின்றி தபாலாபீஸ் திண்ணையில் கிடக்கும் கருத்த லெப்பையைத் தன் தாகம் தீர்க்க குதுபுதீன் பயன்படுத்திக் கொள்வதையும், தன் அம்மாவின் பருத்த பிருஷ்டம் கருத்த லெப்பைக்குள் ஏற்படுத்தும் இனம் புரியாத சங்கடத்தையும் சொல்லிவிடுகிறது.

சாம்பான் மாடத்து பாவா, கொடிக்கால் மாமு, சின்னப் பேச்சி என்று எழுபது பக்க குறுநாவலுக்குள் இன்னும் பேசுவ தற்குத் தோதான கதாபாத்திரங்கள் இருக்கவே செய்கின்றன. இன்னும் விரிவாய் எழுதுவதற்குத் தோதான களமிருந்தும் குறுநாவலாகவே வார்த்திருக்கிறார் ஆசிரியர். ஒரு வேளை இத்தனை நறுக்காகச் சொன்னதனால்தான் இந்தச் சுவையோ!

கருத்த லெப்பை
குறுநாவல் : கீரனூர் ஜாகிர்ராஜா
மருதா, 6(32) அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை 92. பக்கம் 72, ரூ. 40

No comments:

Post a Comment