Saturday, December 6, 2008

கொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம் - ஹெச்.ஜி.ரசூல்

காட்சி 1

ஏழாம் நூற்றாண்டில் அரபு மண்ணில் நிகழ்ந்தது.

அந்த உருவங்கள் சிலைகள் என்றழைக்கப்பட்டன.

பதூயீன்கள்,குறைசிகள்,ஹுதைல்,ஸிமிட்டிக்,பழங்குடிகளின் நம்பிக்கைகள் அதில் பொதிந்து கிடந்தன. மழையை பெய்விக்குமென ஒரு உருவம்,நற்பலனைதருமென பிறிதொரு உருவம்,வளமையைப் பெறுமென ஒரு உருவம்,சக்திக்கு பிறிதொரு உருவம் ஹோபல்,மனாத்,லாத்,உஜ்ஜாஉருவங்களாக ,சிலைகளாக காட்சியளித்தன..

தொலைதூர அரூப கடவுள் தத்துவத்தின் மீது கலகம் செய்து மனித உயிர்ப்பின் ரூபம் கிறிஸ்துவிடம் உருவம் பெற்றது.தந்தையின் பிள்ளைகளாய் மனிதகுலத்தின் மாந்தர்கள் ஆயினர். தந்தைக் கடவுள் உருவம் பெற்றார்.

வணங்குவதற்கு மட்டுமே உருவங்களென்ற குறைத்தல்வாத கணிப்புகள் தீவிரமடைந்தன்.உருவத்தின் கலைநுட்பங்கள் இறையியலின் காலடியில் வீழந்து கிடந்தன.. கஅபதுல்லாவில் காட்சியளித்த உருவங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகள் ,நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள் உருவமற்று அலைந்தன. மண்ணால் படைக்கப்பட்ட நம்பிக்கையின் முதல் மனிதன் ஆதத்திற்கு உருவம் உண்டு. என்ன உருவமென்பது மட்டும் புதிராக மிஞ்சுகிறது.

உருவமற்ற அல்லாவைச் சொன்ன நபிமார்களுக்கு உருவம் உண்டு.

காட்சி 2

அரபுமண்ணின் நஜ்துவில் முகமதுபின்சவுது ஆட்சியாளர்,வகாபிச இயக்கத்தின் முன்னோடி முகமது இப்னு அப்துல் வகாபின் வழிகாட்டுதலில் 1801ல் ஈராக்கின் கர்பலா மீது படையெடுத்து நபிமுகமதுவின் பேரன் இமாம் அலியின் புதல்வர் இமாம் ஹுசைனின் நினைவுச் சமாதி அடையாளங்களயும் அழித்தொழித்தனர்.1802ல்மக்காவின்மீது படையெடுத்து நபிமுகமதுவின் மகளான பாத்திமா நாயகத்தின் நினைவிடங்களயும் தரைமட்டமாக்கினர்.சமாதியில் தென்பட்ட உருவங்கள் நினைவின் தடங்களிலிருந்து துடைத்தெறியப்பட்டன. இமாம் ஹுசைனின் உருவம் எப்படி இருந்திருக்கும்? அன்னை பாத்திமாநாயகி உருவம் எப்படி இருந்திருக்கும்?

காட்சி 3

புத்தனின் உருவம் ஒளி பருந்தியது.போதி மரத்தடியில் மனதை சாந்தப்படுத்திய அந்த உருவம் துலக்கமாய் சிரித்தது.ஆப்கன் மண்ணின் தலிபான் ஆட்சியாளர்கள் பாமீனியனின் வரலாற்றூச் சின்னங்களை,புத்தனின் உருவங்களை உடைத்தனர்.

காட்சி 4

ஜாகிர்ராஜாவின் கதையாடலில் இடம்பெறும் கருத்தலெப்பை உருவங்களின் அழகுகளை நேசிப்பவன். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குள் உருவங்கள் விலக்கப்பட்டதாய் நிகழ்வதால் அதன்மீது தன் நுண்ணிய உரையாடல்களை செய்கிற மனோபாவம் வெளிப்படுகிறது. பால்ய காலத்தில் துவங்கிய விடைகாணமுடியாத கேள்விகள், முற்றுப் பெறாத வாக்கியங்கள் இவற்றில் நிறைய உண்டு.

நீளமான ஐந்தடிக் கொம்பின் நுனியில் ஜவ்வுமிட்டாய் உருண்டைப் பிடித்து ஊரை,தெருவை,சுற்றி வரும் மிட்டாய் அமீதுவிடம் உருவம் செய்த மிட்டாய் வாங்கி வீட்டிற்கு வரும் போது உருவமா செய்யிறத வாங்கிட்டு வாறியே உருவம் நமக்கு ஆகுமாடா என அம்மா கேட்ட கேள்விக்கு கருத்த லெப்பையின் பதில் நீயும் நானுங்கூட உருவம்தானம்மா..என்பதுதான்.

மிட்டாய் அமீதுவின் கைவண்ணம் விதவிதமான உருவங்களில் ஜவ்வுமிட்டாய்களை புனைந்து விற்கிறது.கடிகாரம்,மோதிரம்,பஸ் ,சைக்கிள்,பாம்பு,தேள் என பலவிதமான பொருட்கள்,வாகனங்கள்,பூச்சிகள்,விலங்குகள் குழந்தைகளை ருசி கூட்டி மகிழ வைக்கும். கருத்தலெப்பை இப்படியான பொழுதொன்றில் மிட்டாய் அமீதுவிடம் செய்யக் கேட்டது சைத்தானின் உருவம்.அதிர்ச்சியுற்ற மிட்டாய் அமீது கைதேர்ந்த கலைஞன் சைத்தானுக்கு உருவம் தர பிரயத்தனப்பட்டு கலைத்து குலைத்து கடைசியாக உருவாக்கிய சைத்தானின் உருவத்தைப் பார்த்து தானே பயந்து போனான்.

கருத்தலெப்பையின் அப்பாவைப் பெற்றவள் ராதியம்மா. வயது முதிர்ந்த அவள் தஸ்பீகுமணி உருட்டியவாறு தொழுகை வணக்கத்தை மேற்கொள்பவள். கருத்த லெப்பையின் சின்ன வயதில் பயப்படுகிற காலத்தில் ஓதி ஊதுவாள்.உடலோடு உறைந்து கிடந்த ஷைத்தான் பயந்து அலறி ஓடுவதை கைநீட்டி காண்பிப்பாள்.அவள் காட்டியதிசையில் இருட்டு மட்டுமே தெரிந்திருக்கிறது. ராதியம்மாவுடனான கருத்தலெப்பையின் உரையாடல் இஸ்லாமிய கலாச்சாரத்தின் அறியப்படாத நுணுக்கங்களை லெப்பைக்கு கற்று தந்திருக்கிறது.

கருத்த லெப்பையின் மிக முக்கிய உரையாடலில் ஒன்று கனவு பற்றியது.ராதியம்மாவிடம் கேட்ட ஒரு அதிசயிக்கத்தக்க கேள்வி நாயகம் ரசூலுல்லாவை கனவில் நீங்க பார்த்ததுண்டா என்பதுதான்.

ஆம் பார்த்திருக்கேன் என்ற ராதியம்மாவின் பதில் கருத்தலெப்பைக்கு அதிர்ச்சியூட்டுகிறது. எப்படி ராதியம்மா நாயகத்தை கனவுல பார்க்கமுடியும் என்பதற்கு ராதியம்மா மரபு வழிப்பட்ட நம்பிக்கையை பதிலாகத் தருகிறாள்.

குரான்ல முஜம்மில் சூராவை தினமும் இஷா தொழுகைக்கு அப்புறம் தொடர்ந்து ஓதிவரணும்.அப்புறம் நாயகத்தைப் புகழ்ந்து ஓதுற தாஜுஸ் ஸலவாத்தை ஓதணும் ஓதுனா நாயகத்தோட தரிசனம் கனவுல கிடைக்கும்.

நாயகம் எப்படி இருப்பாங்க என வினவிய குரலுக்கு ராதிம்மா நபிகள்நாயகத்தின் தோற்றம் பற்றி வர்ணனைகளை விளக்க விளக்க கண்களை இறுக மூடிக் கொண்ட கருத்த லெப்பையின் மனம் நாயகத்தை வரைந்து கொண்டிருந்தது. ராதியம்மாவிற்கு தெரியாத ரகசியம் அது.

விடிந்ததும் மனதில் தீட்டிய நபிகள் நாயகத்தின் உருவத்தை காகிதத்தில் பதிவு செய்து அமீதுவிடம் ஓடுகிறான் கருத்த லெப்பை. மாறுபட்ட மன உலகங்களின் விசித்திரமான பதிவு இது.

மிட்டாய் அமீது நுட்பம் பொருந்திய கலைஞன். பிறிதொருநாளில் கருத்தலெப்பையைப் பார்த்து பதட்டத்தோடு பேசுகிறான்

காக்கையும் குருவியும் செஞ்சு பொழக்கிற என்னப் போயி ஏதேதோ செய்ய சொல்லிட்டியே நீ வரஞ்சு தந்த படத்தைப் போலவே உருவம் செஞ்சாச்சு. ராவு படுத்தா தூக்கம் வரல்லடா கண்ணுக்கு முன்னாடி அந்த உருவம் வந்து நிக்குது.

மிட்டாய் அமீது கருத்தலெப்பையை அழைத்து தொறகுச்சியால் தோட்டத்து வீட்டை திறந்து அந்த களிமண்ணால் உருவாக்கிய சிலையை நெஞ்சம் படபடக்க காட்டுகிறான்.

ராதியம்மா சொல்லச் சொல்ல கருத்தலெப்பை வரைந்திருந்த நாயகத்தின் உருவம் அது.

அதிசயத்தோடும் ஆர்வத்தோடும் சிலைக்கு அருகில் கருத்த லெப்பை நெருங்கிவர திடீரென சிலைமீது மழைத்துளிகள் விழுகின்றன. கூடவே எங்கிருந்தோ பலதிக்குகளிலிருந்து வீசப்பட்ட கற்கள் அவன் மீது விழ விழ ரத்தம் பீறிட வீழ்கிறான். கொட்டும் மழையில் சிலை கரைந்து கொண்டிருக்கிறது.

மழையில் கரைந்த நபி முகமதுவின் உருவம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுக் கால இஸ்லாமிய வரலாற்றின் ஓவியம் சிற்பம்சார் கலாச்சார இழப்பின் குறியீடு. இது முஸ்லிம் மனோபாவத்தின் மறைக்கப்பட்ட அமுக்கப்பட்ட ஒன்றின் மீதான ஏக்கம்.

அதேநேரம் உச்சப்பட்ட காதலின் ஈடுபாட்டோடு நபிகள்நாயகத்தின் உருவத்தை வரைந்து உருவாக்கிய கலைஞனின் மீது தொடுக்கப்படும் வன்முறையாகவே பல திக்குகளிலிருந்தும் வீசப்பட்ட கற்கள் அர்த்தம் பெறுகின்றன. ஹஜ் சடங்குகளில் ஒன்றான ஷைத்தானின் மீது கல்லெறிதல் இங்கு மறுவடிவம் பெறுகிறது.வீசப்படும் கற்களின் விளைவாக நிகழ்ந்த மரணம் யதார்த்தத்தை புனைவாக மீள்பதிவு செய்கிறது.இஸ்லாத்தின் சமய அதிகார வரம்புகளை மீறும் கலைமனம் எதிர்கொள்ளும் மரணமே இது.

ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை நாவல் பிரதி இதைத் தாண்டி விளிம்புநிலை முஸ்லிம்களின் கலாச்சாரம் சார்ந்த பன்முக வாசிப்புக்கு சாத்தியமுள்ளதாகவே இருக்கிறது.

நாவல்: கருத்தலெப்பை

ஆசிரியர் : ஜாகிர்ராஜா

வெளியீடு:மருதா,அண்னாசாலை

குலசேகரபுரம்,சென்னை- 92

விலை:ரூ.40/பக்கங்கள்: 72

No comments:

Post a Comment