Monday, November 28, 2011

விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வுலகம் கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் கருத்தரங்கம் -பாஸ்கரன்


எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எழுதியுள்ள ஐந்து நாவல்களில் மூன்று நாவல்களை மையமிட்டு நெல்லை மாவட்ட தமுஎகச 7.11.11 அன்று திருநெல்வேலியில் மூன்று அமர்வுகள் கொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. கரிசல் கிருஷ்ணசாமியின் இசையோடு நிகழ்வு தொடங்கியது. தமுஎகச நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தனது வரவேற்புரையில், “மிகச்சிறந்த நாவல்களின் பட்டியலை எவ்வளவு சுருக்கினாலும் அதில் ஜாகிர்ராஜா நாவல்கள் இடம்பெறும். வடக்கேமுறி அலிமா பல இரவுகளைக் கடந்து வானில் மின்னும் நட்சத்திரமாக ஒளிர்கிறது. இவருடைய வெம்மை, பௌர்ணமிக் கிணறு உள்ளிட்ட சிறுகதைகளும் வாசிப்பின் பேரனுபவத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நகரத்தை நோக்கியும் இவருடைய படைப்புகளைக் குறித்த உரையாடலை நகர்த்த வேண்டும்என்றார்.


துவக்க உரை நிகழ¢த்திய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஜாகிர்ராஜா படைப்புகள் முன் வைக்கும் அரசியல் குறித்து விரிவாகப் பேசினார். விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களைக் குறித்த பதிவுகள் குறைவான தமிழ்ச் சூழலில் ஜாகிரின் படைப்புகள் அந்த வெற்றிடத்தை நிரப்புவதுடன் மிகுந்த கலா நேர்த்தியோடு வாசகனை வந்தடைகிறது. இஸ்லாமியர்களுடன் பழகியுள்ளபோதும் அவர்களின் மூடுண்ட வாழ்க்கை குறித்து அதிகம் உணராமலே இருந்திருக்கிறோம் என்னும் குற்ற உணர்வை இவரின் படைப்புகள் ஏற்படுத்துகின்றன. எழுத்தின் வாயிலாக இவர் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வை இவரைப்போல வேறு எவரும் துணிச்சலாகப் பதிவு செய்ததில்லைஎன்று ச.த. குறிப்பிட்டார்.



மீன்காரத் தெரு முதல் அமர்வுக்கு கவிஞர் கிருஷி தலைமை வகித்துப் பேசுகையில் 2006 தமுஎகச நாவல் போட்டிக்குத் தான் நடுவராக இருந்து மீன்காரத் தெரு நாவலை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததை நினைவுகூர்ந்தார். ஜாகிர்ராஜா எழுத்துகளில் வெளிப்படும் லாஹிரி வாசகனுக்கு உவப்பானது என்றும் அவர் கூறினார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் தனது சிறப்புரையில் ஜாகிர்ராஜாவின் ஐந்து நாவல்களையும் வாசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் யாருக்கும் எளிதில் வசப்படாத நதியின் வெள்ளமெனப் பிரவாஹிக்கும் அபூர்வமான மொழி நடை அவருக்கு வாய்த்திருக்கிறது. நான் இறைநம்பிக்கை உள்ளவன் என்பதால், இது இறைவன் அவருக்கு அளித்த வரம் என்றே கருதுகிறேன். நானே பொறாமைப்படும்படியான படைப்புகளை அவர் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். மீன்காரத் தெருவை வாசித்தால் நாவல் நெடுக மீன் கவுச்சி அடித்துக் கொண்டேயிருக்கிறது இதுதான் அவர் எழுத்தின் பலம். நான் எழுதும்போது பல நேரங்களில் வார்த்தைகள் கிடைக்காமல் அவற்றின் பின்னே ஓடியிருக்கிறேன். ஆனால் ஜாகிர்ராஜாவை துரத்திக்கொண்டு வார்த்தைகள் ஓடி வருவதை நான் அனேக இடங்களில் பார்த்து வியக்கிறேன்என்று மனம் திறந்து பேசினார்.

வடக்கேமுறி அலிமா இரண்டாம் அமர்வுக்குத் தலைமைதாங்கிய செந்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிற உலக இலக்கிய வரிசையில் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் நிற்பதாகக் குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய இலக்கிய விமர்சகர் ம. மண¤மாறன் ஜாகிரின் மற்றெல்லா நாவல்களை விடவும் அலிமா மிகவும் மாறுபட்ட நாவல். 2000-க்குப் பிறகு வெளிவந்த தமிழ் நாவல்களில் வடக்கேமுறி அலிமாவுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. நாவலின் வடிவமும், போக்கும், மொழி நடையும் இதுவரைக்குமான தமிழ் நாவல்களின் கட்டமைப்பைத் தகர்த்தெறிந்துள்ளதுஎன்று குறிப்பிட்டார்.



மீன்குகை வாசிகள் அமர்வுக்குப் பேராசிரியர் கோமதிநாயகம் தலைமை வகிக்க எழுத்தாளர் நாறும்பூநாதன் சிறப்புரையாற்றினார். நாறும்பூ தனது உரையில் மனித உறவுகளை மிக விரிவாகப் பேசும் படைப்புகள் ஜாகிர்ராஜாவுடையது. மீன்குகை வாசிகளில் ஷேக்கா தாத்தாவிற்கும் ஆஜாத் என்கிற பேரனுக்கும் நடக்கின்ற உரையாடல் காவியத்தன்மை கொண்டது. மனித விழுமியங்களின் உயர்ந்த தளத்தில் நின்று கதாபாத்திரங்களை அணுகும் தன்மை இவருடையது. இந்நாவலில் இடம் பெறும் பெண்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைக் கூர்ந்து அவதானிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்த நாவலின் தொடர்ச்சியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்என்றார்.


நெல்லை சந்திப்பு கிளைச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். எழுத்தாளர்கள் முஜிபுர் ரகுமான்,

எஸ். அர்ஷியா, ஓவியர் வள்ளி, முனைவர் கண்ணா. கருப்பையா, சண்முகசுந்தரம், ஆய்வு மாணவ மாணவியர், வாசகர்கள் மற்றும் பல தமுஎகச தோழர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மௌனமான உரையாடலின் வழியே நிறைவடைந்தது.