Friday, April 13, 2012

கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்”

எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்று வெகு காலமாய் சொல்லிக்கொண்டே வருவதை மரபாகக் கொண்டிருந்தாலும் ஒரு எழுத்து என்பது நேர்மையான வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். ஒரு நல்ல மனிதனாக, நேயமுள்ள குடும்பத்திற்குப் பொறுப்பானவனாக இருந்து விட்டால் எழுத்து தேவையில்லை. அப்படி வாழ்ந்தால் போதுமானதே. இந்தப் போதாமையால்தான் அவரவர் சமூகத் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் எழுத்தைக் கைக்கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு படைப் பாளனுக்கும் நேர்கிறது. எனவேதான் எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்பதை சொல்லித்தீர வேண்டிய நிர்ப்பந்தம் நிகழ்கிறது. ஜாகிரைப் பொறுத்தளவில் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு துளியையும் கூர்ந்து கவனித்து அதைப் படைப்புக்குள் பதிவுசெய்து கொண்டே போவதை இத்தொகுப்பின் சிறுகதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் காட்டுகிறது. வாழ்வதையே படைப்பாகக் காட்டி வாழ்கிறார்.
காய்ந்து கிடக்கிற நதியில் எல்லாமும் கிடக்கின்றன. அதுகுறித்து நதியிடம் எந்தவிதமான கருத்தோ கோபமோ ஆனந்தமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீர் நிறைந்து கரைமேவி ஓடுகையில் நதியின் அழகு சொல் லொண்ணா எண்ணக்குவியலை மனத்துள் விதைக்கிறது. சாதாரண மனிதன் குளிக்க இறங்கி ஆனந்தம் கொள் கிறான். நீச்சல் தெரிந்த குழந்தைகள் ஆசையில் அலுப்பு தீருமட்டும் நதியில் விளையாடி களைக்கின்றன களிப்பில். நீச்சல் தெரியாதவன் நதியைப் பார்க்கையில் பயத்துடன் எதிர்கொள்கிறான். கவிஞனுக்கு நதி ஆயிரம் சொல்லித் தருகிறது. பல்லாயிரம் படைப்புகளில் நதி நுரைத்துப் பொங்கி ஓடிக்கொண்டுதானிருக்கிறது. இப்படிப்பட்ட நதி காய்ந்து கிடக்கும் காலங்களில் பார்க்க வலி பொங்குகிறது. எல்லாமும் அதில் கொட்டப்படும் போது ஆத்திரம் வருகிறது. இதற்கும் நதி எதுவும் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கை எல்லோர் வாழ்விலும் நதியைப்போல வறண்டும் நிறைந்தும் கிடக்கிறது. வாழ்கிற நிலைப் பாட்டில்தான் எல்லாமும் சமன்படுகிறது.

அவரவர் தன்மைக்கேற்ப அல்லது அமைந்துவிடுகிற சூழலுக்கு ஏற்ப இந்த நிலைப்பாட்டை சமன் செய்கிற அல்லது சமன் செய்துவிட்டதான திருப்தியில் வாழ்க்கை முடிந்துபோகிறது. இங்கே இந்த நிலைப்பாட்டிற்காக காயங்களும் மகிழ்ச்சியும் உருவாக்கம் கொள்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் மதமும் இனமும் ஜாதியும் பேதங்களும் வேராக நிற்கின்றன. இது சாதாரண மனிதனை அவஸ்தைப்படுத்துகிறது. படைப் பாளனுக்குச் சவாலாக அமைகிறது. தன்னுடைய சமன்பாட் டிற்காகவும் தன்னைப்போன்றோரின் சமன்பாட்டிற்காகவும் இந்தச் சவாலை ஏற்கும் கட்டாயத்தை அவன் பிறந்து வளர்ந்த சமூகமே அவனுக்கு விதிக்கும்போது காயங்களால் தாக்கப்பட்டும் அவமானங்களால் உணர் வூட்டப்பட்டும் வலிகளின் வெப்பத்தில் உருகுகிறான். படைப்பாளனாகக் களத்தில் நிற்பவன் இவ்வெப்பத்தைப் படைப்புக்குள் பரப்பி அதை எல்லோருக்கு மான வலியாக உணர்த்தி நிற்கிறான். ஜாகிர்ராஜாவும் இப்படித்தான்.

எப்போதும் ஏராளமான காயங்களையும் உணர்வுச் சிதைவுகளையும் அவமானங்களையும் சந்தித்த வடு மாறாமல் தொடர்வதை மனம் கசிவோடு ஒவ்வொரு கதையிலும் உணர முடிகிறது. எனவே புனைகதையின் ஒரு முக்கியக் கூறாக இருக்கும் சிறுகதை புனையப்படும் கதை எனும் பொருண்மைக்கு அழுத்தமான பொருளாக வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புனைதல் எனும் நிலையில் "பெருநகரக் குறிப்புகள்” தொகுப்பை வாசித்து முடிக்கையில் மனம் நனைகிறது. ஒரு சமூகம் என்பது அதில் அடங்கியுள்ள மக்கள் கூட்டத்தை வைத்து அடையாளப்படுத்துவது அதன் பொருளாக அறியப்படுவது. எனவே அதன் பொறுப்பு என்பது பொதுமையானது, சமமானது, நலம் பயக்குவது என்பதைத் தாண்டி, காக்க வேண்டிய சமூகமே நசுக்கிச் சிதைப்பதைச் சிறுவயது முதல் கவனித்து அதை மறக்க முடியாமல் மன்னிக்கவும் தயாராக இல்லாமல் கடுமையாக விமர்சித்து ஒவ்வொரு கதையிலும் நெஞ்சு நிமிர்த்தும் ஜாகிர் எனும் படைப்பாளனின் தெளிவு அதிசயமானது, ஆச்சர்யமானது, பாராட்டுக்கு மிக உரியதும்கூட. ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் சொல்லும் விதமும் உணர்த்தும் விதமும் மொழிநடையும் எதார்த்தமும் அழிக்கமுடியாத அழுத்தம் கொண்டு லபக்கென்று விழுங்குவதுபோல வாசிக்கிற மனசுக்குள் போகிறது. இருப்பினும் சில கதைகளில் சிறுவயது நிகழ்வுகளில்கூட இடையிடையே இன்றைய வயது ஜாகிர்ராஜா கருத்துச் சொல்வது யதார்த்தம் மீறியது என்றாலும் அது பட்டுக் காய்த்துப்போன வடுவின் உறுத்தல் எனும் நிலையில் ஏற்றுக்கொள்ளவே தோன்றுகிறது.

இத்தொகுப்பு மட்டுமல்ல ஜாகிர்ராஜாவின் கதைகள் முழுக்கவே ஒரு சிறப்பான அம்சமாகப் பார்ப்பது அவற்றில் எந்தத் திணிப்பும் இல்லை. வலிகளுக்கான அறிவுரை மருந்தும் இல்லை. தனக்குத் தன்னுடைய பிறந்த சமூகம் விதித்ததை, அதனால் பட்ட இன்னல்களை சிறுவயது முதலே மனத்தில் அழிக்கமுடியாத காய பிம்பமாக உள் வாங்கிப் பின்பருவத்தில் படைப்பு மனமாக உருக்கொண்ட நிலையில் படைப்பில் அதனைக் கொட்டுகிறார். படிப்போர்க்கு நீதி சொல்வதல்ல இக்கதைகளின் நோக்கம். ஒரு சமூக வலியை காட்சிப்படுத்துவதில் இவை சிறப்புறுகின்றன. மேலும் சமூகத்தை எதிர்ப்பது அல்லது போர்க்கொடி உயர்த்துவதும் நோக்கமல்ல. ஆனால் தான் பட்ட வலியை தன் சாதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பட்ட அவமானங்களையும் படும் வேதனை களையும் மாற்றி சமூகம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை உறுத்தலோடு உணர்த்துவது தன்னுடைய படைப்பு நோக்கமாக ஜாகிர் கொண்டிருக்கிறார் என்றே உணர முடிகிறது. இஸ்லாமியச் சமூகத்தின் சடங்குகளையும் மரபுகளையும் தேவைப்படும் சூழல்களில் கதைகளில் இயல்பாகச் சொல்லும் போக்கில் அவர் கொண்டிருக்கும் பற்றும் தெளிவுறத் தெரிகிறது. ஒரு தாய் அல்லது தந்தை தவறு செய்யும்போது அதை வயதில் குறைந்த மகன் சுட்டுவிரல் நீட்டிக் குற்றத்தை உணர்த்தும்போது அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனோபாவத்தைத் தவிர்த்து சமூகம் ஜாகிரின் படைப்பு மனத்தைக் கருதவேண்டும் என்றே தோன்றுகிறது. குற்றங்களைக் கண்டிக்கும் உரிமை ஒரு மகனுக்கு உண்டு என்பதைக் கட்டாயம் ஏற்க வேண்டும். இதைத்தான் ஜாகீர் சிறுகதைகள் உணர்த்துகின்றன.
காதலின் நுட்பமும் நேயமும் உணரப்படாமை, மனித மதிப்பீடுகள் அலட்சியப்படுத்தப்படுதல், மனம் சிதைத்தல், பசியின் தாகம், நட்பின் அழுத்தம், உறவின் மேன்மை, வாழ்வதற்காக அலைக்கழிக்கபடும் வாழ்க்கை, சடங்குகளின் பெயரால் சாதிகளின் பேதத்தால் மிருகமெனப் பாயும் மேலாதிக்கங்கள், அதற்கான போராடுதல்கள், அவற்றின் தோல்வியும் அவமானங்களும், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் நிகழும் மன வெடிப்புகள் போன்றவை இவரது கதைகளின் கருக்களங்களாக நுரைத்துக் கிடக்கின்றன. சக்கிலி மத்தை, (மந்தைய எங்களுக்குன்னு ஒதுக்கிக் குடுக்கற வரைக்கும் நாங்க யாரும் எடுப்பு கக்கூஸ் அள்றதுக்கு வர மாட்டோம்), மழை - மகனைப் புரிந்துகொள்ளாத தந்தை (....அங்கேயே சென்ட்ரல் தண்டவாளத்திலேயோ கூவத்திலோ விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளலாம். உன் தீதார்கூட எங்களுக்குத் தேவையில்லை..... நல்லவர்களுக்கொல்லாம் சீக்கிரமாய் மௌத் வந்துவிடுகிறது. வேணும் ஸலாம். நாயன் துணை), மனத்தை உருக்கும் வெம்மை (....மனதுக்குள் சுடர்விட்ட வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை அவன் தன் பிஞ்சு வாயால் ஊதி ஊதி அணைக் கிறான்.

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனுக்கு இந்த சிறைச்சாலையின் நெடிய சுவர்களுக்குள்ளிருந்து நான் கூறும் வாழ்த்துகள் கேட்கவா போகிறது), சுவடுகள் வாழ்வின் அவலத்தை மிக நெருப்போடு உணர்த்தி வலிக்கச் செய்கிறது (....நெடுஞ்சாலைகளும் எல்லாவிதமான சீதோஷ்ணங்களும், யாசகக் குரல்களும், புறக்கணிப்பும் அத்தாவுக்கு ரத்தத்தில் கலந்தவை.) அறைச்சுவர்கள் சிரிக்கின்றன, (....அவர்களுக்கு உடமையான பெட்டிகளிலிருந்து மேலும் பல ஜாதிப் பாம்புகள் எட்டிப் பார்க்கின்றன....சற்றுமுன் நிகழ்ந்த வாதங்கள் மறந்து கண்களுக்கு முன்னால் பானம் நிறைந்த குவளை தோன்றவும் குளிர்ந்துபோனான்), அடையாளம் - பசியின் மகத்துவத்தை, மேன்மையை அடையாளப்படுத்துவது (....பள்ளி வாசல் வீதியில் அவள் கிழக்கும் மேற்குமாய் அலைந்ததைக் கண்டு ராவுத்தப் பசங்கள் சிரியாய்ச் சிரிப்பார்கள்...... நம்மளப் போல ஏழைக்கி பட்டினி கெடக்குற நாளெல்லாம் நோம்புதா) இவையெல்லாம் தொகுப்பின் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய கதைகள். வாழ்வை ஒருமுறைக்கு நூறு முறையாகப் பரிசீலித்து வாழ வேண்டிய தேவையை உணர்த்துபவை.

தேர்ந்த எழுத்தாளுமையை ஒவ்வொரு கதையும் வெளிக்காட்டுகிறது. தடையற்ற பிரவாகம் சொற்களினூடாக பாம்பு செல்வதுபோல அமைந்திருப்பது படிப்பதற்கான ஆர்வத்தை குறைக்காது காக்கிறது. என் வாழ்க்கையும் அதன் மீது கொட்டப்பட்ட சமூகத்தின் ஆதிக்கக் குப்பையும் அதனைப் பற்றவைத்து நெருப்புக் காட்டிய சாதியப் பிரிவும் தவிர வேறு வேண்டியதில்லை என்பதான ஜாகிரின் எழுத்து அதன் மூலம் ஒரு பொதுமையான சமூக அவலத்தை, அசிங்கத்தை உரித்துக் காட்டுவது இக்கதைகளின் சாகா வெற்றியாகக் கருதிக்கொள்ளலாம். கதைகளின் மொழிநடை தேர்ந்த நடையாக உள்ளது. அவற்றிலும் எளிமையும் இயல்பும் அதேசமயம் செழுமையான அழுத்தமும் கொண்டு மைந்துள்ளது. சிலவற்றைச் சான்று காட்டலாம்.

நான் இங்கு கொட்டும் பனியிலும், மழையிலும் வம்பாடு பட்டு தொகை தொகையாக அனுப்பினால் தின்று தெறித்து ஊரைச் சுற்றுவது உன் வழக்கமாகிவிட்டது. மானம், ரோஷம் என்பது மருந்துக்குக்கூட இல்லாத மழுங்கைதான் நீ.

....தணிக்கவியலாத வெம்மை... அதன் இறுக்கமான பிடி மலைப் பாம்பின் நெரிப்பென எலும்புகளை முறிக்கிறது.

யாசகக் குரல். அதுவும் அக்காவின் சோகம் ததும்பிய யாசகக் குரல் எத்தனை துன்பமானது. ஒரு நாளேனும் அத்தா இதை உணர்ந்ததில்லை. புவ்வாவின் ஆல்பம் குட்டை மர பீரோவுக்குள் இருக்கிறது. ஆல்பத்தில் கணக்கற்ற கன்னிகள் நீந்துகிறார்கள். அது பெருமூச்சுகளின் சமுத்திரம் என மாறுகிறது... விதவிதமான பெண்களின் நீண்டகால கனாக்கள் ஆழத்தின் ஆழத்துள் பாறைப் பாசியாய் படர்ந்து கிடக்கிறது. அபிலாஷைகளின் இழைகளால் நெருக்கி நெய்யப்பட்டது அவர்களின் ரூபங்கள்.

வாழ்வின் உண்மைகளுக்குள் நீந்திக்கொண்டிருக்கிற படைப்பாளனின் உணர்வுபூர்வமான இத்தொகுப்பும் படைப்பாளனும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இத்தொகுப்பை வாசித்துவிட்டு எதுவும் பேசலாம். இடமிருக்கிறது. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஏதாவதொரு சிறுகதையில் வாழ்வதற்கான சாத்தியங்களை இத்தொகுப்பு கொண்டிருப்பதை இத்தருணத்தில் சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.


Thursday, April 5, 2012

இருதயச் சுவர்களில் எழுதிச் சென்ற கலைஞன்



கீரனூர் ஜாகிர்ராஜா

புத்தகச் சந்தைகள் இம்மண்ணில் காலூன்றி வலுப்பெற்ற பிறகு புதிய புத்தகங்களின் வரவு கணிசமாகப் பெருகியுள்ளது. கலை இலக்கியம் மட்டும்தான் என்றில்லை; விதம்விதமான தலைப்புகளுடன் வகை பல மாதிரியான நூல்கள் அச்சாகிக் குவிந்த வண்ணமுள்ளன. வாங்குகிற எல்லோருமே வாசிக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலவில்லையாயினும், புத்தகங்கள் நாலா திசைகளிலும் சிதறிப் பரவலாகியுள்ளதை மட்டும் அனுமானிக்க முடிகிறது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் பதிப்புத்துறை வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளதும், வாழும் ஆளுமைகளின் ஆக்கங்கள் மட்டுமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் விட்டுச் சென்ற பதிவுகளெல்லாம் அச்சாகி நினைவுகளை நெஞ்சகத்தில் மீட்டிப் பார்க்கும்படியான நெகிழ்வான சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளதும் முக்கியமானது. அவ்வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர் வெ. ஆறுச்சாமியின் முயற்சியில் அவ்வியக்க வெளியீடாக ‘சுவரெழுத்துப் புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா - சிந்தனைப் பொறிகள்’ நூல் வடிவம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் சுவரெழுத்தை ஒரு பிரச்சார உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டதில் பெரும்பங்கு பொதுவுடமை இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்குமானது. மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினரின் பத்திரிகை வாசிப்புகளைத் தாண்டிய வெகுமக்கள் கவன ஈர்ப்பு சுவரெழுத்துகளுக்கு உண்டு.

சுவரெழுத்தைக் கலையாக மாற்றுவது ஒருவகையில் நம் குழந்தைகள் தான். குழந்தைகளுள்ள ஒவ்வொரு வீட்டுச் சுவர்களும் கண்டிப்பாக பென்சில் கிறுக்கல் களைக் கண்டிருக்க வேண்டும். இவையே குழந்தைமையின் ஆதி மனப்பதிவுகள்.

எங்கள் வீட்டுப் புழக்கடைச் சுவரில் விறகுக்கரி கொண்டு நானெழுதிய வாசகங்களும் வரைந்து கிறுக்கிய சித்திரங்களும்தான் என் எழுத்து வாழ்க்கைக் கான தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும்.
கோடையின் வெறிச்சோடிய தெருச்சுவரொன்றில் ‘பச்சை ரத்தம் குடிக்கும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா’ என்கிற குருவிநீலம் கரைத்தெழுதப்பட்ட வாசகங்கள் தீடீரெனப் பதிந்திருக்க அதை திகைத்துப் படித்த கணத்தை இன்னும் மறக்க முடியவில்லை.


இன்றைக்கு சுவரெழுத்து வழக்கொழிந்து வருகிறது. பெரிய ஜவுளி நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே சுவர்களை ஆக்ரமித்திருக்கின்றன. நவீன ஃப்ளெக்ஸ் கலாச்சாரம் வந்து எல்லாத்தெரு முனைகளிலும் பவிசு காட்டி நிற்கிறது. நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல் நேரத்திலும் கூட சின்னங்கள் வரையப்படாத சுவர்களே அதிகம்.

1980 களின் மத்தியில் கோவையில் சுற்றித்திரிந்த காலக்கட்டத்தில் வெங்கிட்டாபுரம் நண்பர்கள் ரவி, கந்தசாமி ஆகியோருடன் ஒரு நிகழ்வில் சுவரெழுத்து சுப்பையாவை சந்தித்துள்ளேன். அந்த நேரத்தில் சுப்பையாவின் திறன்களைத் தாண்டி அவருடைய ஆக எளிமையான தோற்றத்தின் மீதுதான் என் கவனம் குவிந்திருந்தது. பல வருஷங்களுக்குப் பின் சுப்பையாவின் எண்ணங்கள் நூலாகி அதற்கொரு அபிப்பிராயத்தைப் புத்தகம் பேசுது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வேனென கனவிலும் நினைத்ததில்லை.

சாலை அமைக்கப் பயன்படும் தார் எடுத்துக் காய்ச்சி சூடு ஆறிய பின் அதில் மண்ணெண்ணெய் ஊற்றி கையை விட்டுக் கலக்கி சுருட்டி வைத்த மெல்லிய துணியால் தொட்டுத் தொட்டு சுவரில் எழுதும் முறை சுப்பையாவுடையது. தமிழகமெங்கும் இப்படித்தான் பெரியாரின் கருத்துகளை சுப்பையா பதிவு செய்திருக்கிறார். ஆரம்பக் கல்வியைக் கூட முறையாகப் பெற்றிராத இவர் பெரியாரிசத்தை தரவாகக் கற்று ஊர் ஊராய் சுற்றிச் செய்திருக்கும் பணிகளை நினைக்க மலைப்பாய் இருக்கிறது. இதற்கென இவர் நன்கொடை ஏதும் பெற்றதில்லை. பழகிய தோழர்களிடம் அவர் கேட்டுப் பெற்றது பழைய டைரிகளை மட்டுமே.

சுப்பையாவின் சிந்தனைப் பொறிகளை வாசிக்கையில் சூடான மிளகாய் பஜ்ஜியை காரத்துவையலில் தோய்த்துச் சாப்பிட்ட மாதிரி உறைப்பாயிருக்கிறது. குப்பைத் தொட்டியைக் காட்டி‘இதில் எழுதுங்கள் அண்ணே’ என்றால் சுப்பையா உடனே “புராணத்தை இதிலே போடு” என்றெழுதுவாராம். பெரியார் வித்து.

நூலில் சுமார் 600 பக்கங்கள் கட்டெறும்பு ஊர்ந்து செல்வது போன்ற அவருடைய கையெழுத்தில் அத்தனையும் பகுத்தறிவுத் தெறிப்புகள். இந்துப் புராணங்களை ‘ஒரு கை’ பார்க்கும் சுப்பையா, கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் விட்டு வைக்க வில்லை.

‘‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன்.......’’ என்ற மு. கருணாநிதியின் புகழ்பெற்ற பராசக்தி படவசனத்தை மெச்சிப் பேசாத திராவிட இயக்கத்தினர் இருக்க முடியாது. ஆனால் கறாரான கொள்கைப் பிடிப்புள்ள சுப்பையா “கோயில் கூடாது என்பதற்காக அல்ல என்றால் கடவுள் இருப்பதாக நம்புகிறாயா? இது பெரிய அயோக்கியத்தனம்” என்று விமர்சனம் செய்வாராம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் தி.மு.கவினரின் நழுவல்களை சுப்பையா போன்ற பிடிப்புள்ள நாத்திகர்களால் ஜீரணிக்க முடியாதுதான்.

சுப்பையாவுடன் பழகிய பலரும் இந்நூலில் அவருடனான தங்களின் அனுபவங்களை விளம்புகின்றனர். அவை பல தகவல்களை நமக்குத் தருகின்றன.

ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர், தோழர் ஈ.வெ.ராமசாமி, பெரியார் ஈ.வெ.ராமசாமி, தந்தை பெரியார், அய்யா போன்ற பல விதமான விளிப்புகளில் பெரியாருக்கே விருப்பமானது ‘தோழர் ஈ.வெ. ராமசாமி’ என்பதுதான். “தோழர் என்றே விளியுங்கள்” இது பெரியார் எழுதிய குடி அரசு தலையங்கம்.

சொற்பொழிவாற்ற வரும்போது பெரியார் தனக்குச் சேரும் பெருங்கூட்டத்தைப் பார்த்து வியந்து போய் “நேற்று சுப்பையா வந்தாரா” என்று கேட்பாராம். பெரியார் பேசவுள்ள ஊர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகச் சென்று தம்பட்டமடித்தவர் சுப்பையா.

இப்படிப்பட்ட செயல்வீரர் தன் அந்திம காலத்தில் மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் அனாதைப் பிணமாகக் கிடந்தார் என்பதும், திராவிடர் கழகத் தலைமை இவர் போன்ற பெரியார் பெருந்தொண்டரின் புகைப்படத்தைக்கூட வைத்திருக்கவில்லை என்கிற தகவலும் நம்மைக் கலங்கடிக்கிறது.

எனது வடக்கேமுறி அலிமா நாவலில் அதன் நாயகி கழிவறைகளில் எழுதிச் செல்வதும் அதே நாவலில் வரும் கரிக்கோடன் என்னும் சுவரெழுத்துக் கலைஞன் குறித்த புனைவும் சுப்பையாவுடன் தொடர்புடையதாக இருப்பது குறித்து இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஈடுபாடுமிக்க சுவரெழுத்துப் பிரச்சாரகர்கள், இயக்க மேடைகளில் உரத்த குரலெடுத்து நிகழ்வைத் தொடங்கி வைக்கும் பாடகர்கள், கூச்சமில்லாமல் தெருப்புழுதியில் புரண்டு நடிக்கும் கலைஞர்கள் இவ்வாறான அடித்தள உறுப்பினர்களால் மட்டுமே ஒரு இயக்கத்தின் அஸ்திவாரம் உறுதியாகக் கட்டப்படுகிறது.

இன்றைக்கு சுப்பையாவிற்கு தருவதற்கென பழைய டைரிகள் நம்மிடம் நிறைய இருக்கின்றன. சுப்பையாதான் இல்லை. அவருடைய வடிவில் இனிவரப்போகும் சுவரெழுத்துக் கலைஞர்களுக்காக அந்தப் பழைய டைரிகளை நாம் பொத்திப் பாதுகாத்து வைப்போம்.

Wednesday, April 4, 2012

தேய்பிறை இரவுகளின் கதைகள் -- விமர்சனம்

கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணம்!

எஸ்.அர்ஷியா


தேய்பிறை இரவுகளின் கதைகள் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பதினேழு ஆண்டுகாலத் தனிமையை நம்மிடம் பகிர்வதாக இருக்கின்றன. தன்னை தனது சுற்றுச் சூழலை நேர்மையானப் படைப்பாளியாகக் கேள்விகளுக்கு உட்படுத்துவதுடன் தன் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுய உணர்தலும் கொள்கிறார். வாழ்வின் மீது தீராத பற்றும் சக மனிதர்கள் மீது இனிய தோழமை அன்பும் கொண்டிருக்கும் இந்தப் படைப்பாளி அதன்மூலம் தான் அறிந்த மிகவும் எளிய மனிதர்களைப் பற்றி மிகச் சரளமான மொழியில் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகிறார்.

வழக்கமாக இஸ்லாமியச் சிறுகதைகள் ஏகன் இறைவனின் கருணையையும் நபி பெருமான் அவர்களின் பராக்கிரமங்களையும் ஊரில் பெரிய மனிதராகக் கணிக்கப்பட்டவர் ஹஜ் பயணம் புறப்படும் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது அவர் ஊர் திரும்பும் கொண்டாட்டம் பற்றியதாகவோ இருக்கும். தொழச் சொல்லியும் ஜக்காத் கொடுக்கச் சொல்லியும் வலியுறுத்தும் கதைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. அப்படிச் செய்தால் வாழ்க்கை வளம்பெறும் என்று பயான்கள் செய்யப்படுவதுண்டு. தொழப்போகாமல் தூங்கிக்கொண்டிருப்பவன் வாய்க்குள் இப்லிஷ் மூத்திரம் மோண்டுவிடும் பயமூட்டல் கதைகள் மட்டுமே இஸ்லாமியக் கதைகள் என்று அடையாளம் காட்டப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன.

அப்படித் தொழப்போயும் ஏழை எளியவர்கள் ரம்ஜான் குத்பாவுக்கு புதுத்துணி வாங்க முடியாமல் கஷ்டப்படுவதையும் பிறை பார்த்து ஊரெல்லாம் கொண்டாட்டத்தில் இருக்கும்போது சோர்ந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவர்களுக்கு யாரோ வழிப்போக்கர் புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு மறைந்துபோகும் அற்புதங்கள் நிறைந்தக் கதைகள் ரம்ஜான் மாதத்தில் வணிகப் பத்திரிகைகளிலும் இஸ்லாமியப் பிரச்சாரப் பத்திரிகைகளிலும் பிரசுரமாவதுண்டு. தொழுதலுக்கானப் பரிசு என்று அதை வியந்தோதியும் வந்தார்கள். அந்தக்கதைகளும்கூட முந்திய ஆண்டு எழுதிய அதே எழுத்தாளர் பாத் திரங்களின் பெயர் ஊர் மாற்றி எழுதியதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிலவேளைகளில் பிறை தெரியாத அவஸ்தைக் கதைகளும் வந்ததுண்டு. பக்ரீதுக்கு இருக்கவே இருக்கிறது ஆடுகளும் அதுகுறித்த வதைகளும்.

இவையெல்லாம் இல்லாமல் எளிய மக்களின் பாடுகளையும் வாழ்க்கையின் முரண்களையும் பொருளாகக் கொண்டு ஒன்றிரண்டு கதைகள் எப்போதாவது வந்ததுண்டு. நிச்சயமாக இஸ்லாமியப் பத்திரிகைகளில் அவை அச்சானதில்லை. அதை எழுதியவர்கள் அவற்றை ஏன் தொடரவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. கேள்விக்கு பதிலாக ஒருசிலர் நட்சத்திரங்களாகத் தோன்றியதுமுண்டு. அப்படித் தோன்றியவர்களில் கீரனூர் ஜாகிர்ராஜாவிடம் கூடுதல் ஒளி தென்படுகிறது.

முப்பால்போல தேய்பிறை இரவுகளின் இந்தக்கதைகள் மூன்று வகைமைகளைக் கொண்டதாக இருக்கின்றன. அதை அவர் எழுதிய காலத்தின் அடிப்படையிலும் இடங்களின் சூழலிலும் கதைகளின் தன்மையிலும் பகுக்கலாம். எப்படிப் பகுத்துக் கொண்டாலும் அதை வாசிக்கும்போது அதற்குள் உறைந்து கிடக்கும் வீரியம் இதற்கு முன் வெளிப்படாததாக இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய எழுத்தாளர்களால் இட்டுக்கட்டப்பட்டதை அல்லது மறைக்கப்பட்டதை உடைத்து வீசுவதாகவும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் உடைய உடைய இதற்கு முன் உண்மை என்று நம்பப்பட்டு வந்த 'மூடாக்குகள்' சிதறி முகத்தில் அறைகின்றன.

முதல் சிறுகதையான வெம்மை லெளகீகத்தின் திசைகள் தோறும் விரிந்திருக்கும் பிடிக்குள் அடங்காமல் மனச் சுதந்திரத்துடன் அலைய விரும்பும் ஒருவன் சமூகத்தின் மறைமுக வாழ்வியல் மிரட்டல்களுக்கும் ஏளனப் பார்வைகளுக்கும் ஆட்பட்டு உள்ளுக்குள் குமுறும் வாழ்வற்ற அவஸ்தையை அப்பட்டமாக்குகிறது. பிறந்த கணத்திலிருந்து இல்லாத அதீதமான ஒரு வெம்மை கல்யாணமான நாள் முதல் உடலைக் கவ்விக் கொண்டு விடமாட் டேனென்கிறது என்று சொல்லும் துயர் அரசு பதவியோ முறையான வருமானமோ அல்லது அரசியல் சம்பாத்தியமோ இல்லாத எல்லா இளைஞர்களுக் கும் பொருந்திப் போகும் ஒன்று. ஒட்டுமொத்த உலக இளைஞர்களின் துயரம். மனைவியின் கிழிந்த துப்பட்டிக்குப் பதிலாக கறுப்பு வண்ண பர்தாவை வாங்கித்தர முடியாமல் வீட்டுக்குள் உருவாகும் அவலம் நிறைந்த சச்சரவு அவனை வெளிநாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போகிறது. துப்பட்டிக்கு மாற்றாக இங்கு கண்டறியப்படும் கறுப்பு வண்ண பர்தா தாய்மண்ணைப் பிரிந்துபோகின்ற மனத்தின் அடிவேரைக் கொத்தாகப் பிடுங்கிய இஸ்லாமிய இளைஞர்களின் ஜீவ உடல் உழைப்பு ரத்தமும் வியர்வையுமாக மணல் காட்டிலும் பொரிக்கும் வெயிலிலும் உறிஞ்சப்பட்டு அதற்கு மாற்றாக சாதாரணப் பண்டமாக இறக்குமதி செய்யப்படும் குறியீடு. கூடவே அதைக்கொண்டு பெண்ணைப் போர்த்தும் அடிமைத்தனத்தையும் இறக்குமதி செய்கிறது. இப்போது வெளியாகும் எந்த இஸ்லாமியப் பத்திரிகையை கையில் எடுத்தாலும் அதன் வண்ண மயமான அட்டையில் பர்தாக்களின் விளம் பரங்களைக் கண்ணாறக் காணலாம். அதனடியில் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று அடிக்கோடு குறிப்பு இடப்பட்டிருக்கும். மனைவி மக்களைப் பிரிந்து பணத்தின் மீதான வேட்கையுடன் புது நட்பு களுடன் ஒண்ட முடியாமல் முற்றிலும் மாறான இயற்கை அமைப்பில் உடல் உபாதைகளுக்கு ஆளாகி பொலிவிழந்து மன உலைச்சலுக்கு உள்ளாகி அவன் ஈட்டிக்கொண்டு வருவதை பெருஞ்செல்வமாகப் பார்க்கும் சமூகம் அதற்குள் பொதிந்து கிடக்கும் அவனது பேசா மொழியையும் மெளனமுமான உணர்வுகளையும் கண்டு கொள்வதில்லை. அதை அந்தஸ்து என்கிறது. அதில் அவன் தோல்வியடையும்போது அது வன்மமாக உருவெடுக்கவும் செய்யலாம். மனப்பிறழ்வுக்கும் வகை செய்யலாம். இஸ்லாமிய இளைஞர் களுக்கு துபாய் என்றால் மற்றவர்களுக்கு அமெரிக்கா. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் 'இன்னுமா பயணம் புறப்படவில்லை?' எனும் குரல் இஸ்லாமியர்கள் வாழும் தெருக்களில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

அப்படி ஈட்டிக்கொண்டு வரும் பொருட்கள் வாழ்க்கையை மட்டுமல்ல நகர்களின் புராதனங்களையும் மாற்றியமைத்து உயர்கோபுரக் கடைகளாகி மாட மாளிகைகளாகி தொன்மங்களை காவு வாங்கி விடுகின்றன. அப்படிக் காவுக்கு உள்ளான தஞ்சாவூரில் உறவுக்கார ஹனிபா மாமுவைத் தேடிக்கொண்டு போகும் 'ரெட்டை மஸ்தானருகில்' சிறுகதை புதிய வேதனையைத் திறந்துகாட்டுவதாக இருக்கிறது. ரெட்டை மஸ்தான் என்பது அந்த ஊரிலிருக்கும் ஒரு தர்ஹா. இஸ்லாமிய மக்களுடன் பிற சமூகத்தினரும் ஆறுதலும் தேறுதலும் கொள்ளும் இடமாகும். அதனருகில் ஏதோ ஒரு அற்புதம் நடக்கப்போகிறது என்பதானத் தூண்டுதலை தலைப்பு கொண்டிருந்தாலும் அதுபேசும்பொருள் முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. புதிதாக அறிமுகமான ஒரு கால்குலேட்டர் எப்படி ஒரு கணக்குப் பிள்ளையின் வாழ்க்கையை முடக்கிவிட்டதோ அதே வேலையை கூடுதலாகக் கம்ப்யூட்டரும் செய்து ஹனிபா மாமுவின் தங்க நிற மூடியைக் கொண்ட பேனாவை மங்கலாக்கியதுடன் வாழ்தலுக்கான புதிய ஒப்பனையை - பெண்களின் பிரத்யேக ஒப்பனையை - அவரை ஏற்றுக் கொள்ளச் செய்திருப்பதை மனஅவசத்தோடு காணச் செய்கிறது. வாழ்தலுக்காக எதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நோக்கும்போது அதிர்ச்சியைத் தாண்டிய நடுக்கம் தோன்றுகிறது.

பிறரைக் காவுகொண்டு களிநடனம் ஆடுகின்றப் 'பெருநகரக் குறிப்புகள்' கலையின் எவ்வகையைச் சார்ந்தவருக்கும் கட்டாயம் கிடைக்கின்ற அனுபவப் பேழை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவம் அதனுள்ளிருந்து எழுந்துவந்து பொருந்திப் போகும். மனக்கிளர்ச்சியைத் தரும். முன்புபட்ட அவஸ்தைகளை மீள் உருவாக்கம் செய்து பார்க்கும்போது கடந்துவந்த திசைகள் மனசில் தவிப்பையும் முகத்தில் புன்சிரிப்பையும் அரும்பச் செய்யும். ஒருவேளைத் தேநீருக்காக... ஒருவேளை உணவுக்காக... தூங்கும் இடத்துக்காக... அவசரத்துக்குக் கைமாத்து கேட்பதற்காக... அலைந்து திரிந்ததை இப்போது பெருமுயற்சிகள்போல பேசச் சொல்லும். அதனூடே தொடர்ந்த பயணம் வெற்றி பெற்றிருந்தால் அவற்றுக்குப் பெயர் நான் நடந்து வந்த பாதை என்று மாறிப்போய்விடுகிறது. அதேவேளையில் தோல்விகள் அதனை காலந்தோறும் குறிப்புகளாக வைத்து பொக்கிஷமாகப் பார்க்கச் செய்கிறது. விஜயராஜின் டிரங்க் பெட்டி நிரம்பி வழிந்ததாகச் சொல்லப்படும் இடம் எப்படியும் வென்றுவிடுவோம் எனும் நம்பிக்கையின் ஆணிவேர். அதுதான் இன்னும் இன்னும் இளைஞர்களை பெருநகரம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. பெருநகர வீதிகளில் நடந்துபோகும் அத்தனைபேரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கிறது. நாளைய பெருநகரக் குறிப்புகள் அவர்களாலும் எழுதப்படும்.

தொகுப்பின் மிக முக்கியமானக் கதையாக 'குடமுருட்டி ஆற்றின் கரையில்' அமைந்து போயிருப்பது தற்செயலானது அல்ல. இஸ்லாமியக் குடும்பங் களில் வரன் தேடும் வைபவம் என்பது புவ்வா போன்றவர்களாலும் வீட்டுக்கு 'சபக்' சொல்லிக் கொடுக்க வரும் உஸ்தாத்பீக்களாலும் நடத்தப்படுகிறது. இவர்கள்தான் நடமாடும் மேட்ரிமோனியல்கள். உள்நுணுக்கங்கள் தெரிந்தவர்கள். எல்லைகளைத் தொடுபவர்கள். உள் விளிம்புகளை வளைத்து எதை யும் சாதித்துக் காரியம் கைகூடிவரச் செய்யும் திறமை அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருப்பது வியப்பு தருவதாக இருக்கிறது. இந்தக்கதையில் வரும் புவ்வா அதையும் தாண்டிய மனுஷியாக இருப்பது அவள் மீது பிரேமையை உருவாக்குகிறது. வாழ்க்கை இழந்து இரண்டு குழந்தைகளுடன் உழன்ற உம்மசல்மாவுக்கு இரண்டாவது நிக்காஹ் நடத்தி வைக்கவும் தெம்பிருந்தது புவ்வாவுக்கு என்ற வரிகள் அந்த பிரேமைக்கு வலுசேர்ப்பதாக இருக்கின்றது. அதே புவ்வாவுக்கு தனது காரியதரிசியான ஹைரூன்னிஸாவுக்கு ஓரிடத்தைக் கோர்த்து விடுவதில் மனமுரணும் இருக்கிறது. அவளிடமுள்ள மெல்லியதான இந்த மனவிலகல்... இந்த முரண்... யதார்த்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. அவளுக்குள் ஓடும் வாழ்வியல் அரசியல் கதைக்கு ஓர் அம்சத்தைத் தருகிறது. யதார்த்தத்துக்கும் மாயவாதத்துக்கும் இணைப்பாக சாயாக்கடை ஜக்கரியா இருக்கிறார். அப்துல் காதர் ஜீலானி ஆண்டகை மீரான் மைதீன் கதைகளிலும் எஸ். அர்ஷியாவின் கதைகளிலும் ஜாகிர்ராஜாவின் கதைகளிலும் இடம் பெறுவதில் ஒரு ஓர்மை இருப்பதாகவே படுகிறது. அவர் அற்புதங்களை நிகழ்த்தும் சாதாரண மனிதராகவே காட்சிக்கு வருவதும் அப்படித்தான். அதனாலேயே இந்தக்கதை மற்ற இஸ்லாமிய எழுத்தாளர்களின் கதைகளிலிருந்து ஓர் அங்குலம் முன்னுக்கு இருக்கிறது. யாருமறியாத ரகசியக் கொலுசொலிக்க ஹைரூன் குடத்தை எடுத்துக்கொண்டு அந்த இருளில் ஆற்றை நோக்கி நடந்தாள். நல்ல வியாபாரம் கொழிக்கிற நேரத்தில் சாயாக்கடையில் ஜக்கரியா இல்லாதது புவ்வாவுக்கு ஏமாற்ற மளித்தது என்பதுடன் கதை முடிந்து போகிறது. ஆனால் ஹைரூன்னிஸா வெறுமனே பருத்துப் பிதுங்கும் மார்புகளைக் கொண்ட சதைக்கோளம் அல்ல. உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் ஆன பெண் என்பதை உணர்த்தும் கதை அந்த இடத்திலிருந்துதான் கிளைக்கிறது. அதுவே தொகுப்பில் இந்தக்கதையை முக்கியமான இடத்துக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

உருவம் கதையில் வரும் மனைவியை இழந்த மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது அடையாளங்களுக்குள் உலவும் ஓர் மனிதராகத்தான் தெரிகிறார். பயான் செய்யும் மெளலவிகளும் மிகச்சாதாரண மனிதர்கள்தாம். அவர்கள் மூக்கால் சுவாசிப்பவர்களாகவும் வாயால் உண்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனனம் செய்து துப்பும் வாசகங்கள் நம்மிலிருந்து அவர்களை தூரத்தில் நிறுத்தி அவர்களுக்கு அந்தஸ்தைக் கொடுத்து விடுகிறது. அவர் செய்யும் தொழில் உன்னதமாக்கப்பட்டதால் அவருக்கு அந்த அந்தஸ்து. அவ்வளவுதான். தாடி வளர்த்து குல்லா அணிந்து அத்தர் மணம் கமழ பயான் செய்பவர்களில் பலர் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது சாதாரணமாகவே பார்க்கக் கிடைக்கும். மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது கூட தன்னிலையை ஒப்புக் கொள்வதாக "வாஸ்தவத்தில் நான் இப்படிப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் நாளா மனசில கொழப்பம். இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு படம் கெடச்சுட்டாப் போதும்னு இப்பத் தோணுது. ஏன்னு தெரியல... எல்லாம் அல்லாஹ் அறிவான்..." என்று சொல்கிறார். இந்த இடம் மிக முக்கியமானது. எந்த மனிதனாலும் நினைவுகளைத் தாண்டிவிட்டுப் போகமுடியாது. அதுபோல இழப்புகளையும். மதம் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகள் எல்லா இடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் செல்வாக்குடன் திகழும் இஸ்லாமியக் குடும்பங்கள் எத்தனையிருக்கும் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவைகளும்கூட சிதைந்துகொண்டு வருகின்றன என்பது கண்கூடு. அனிபா ராவுத்தரின் ஆயிஷா மன்சில் அப்படிச் சிதைந்து போனவைகளில் ஒன்று. கடன்கூட பெற முடியாத நிலைக்கு உள்ளாகும் அனிபா ராவுத்தரின் கடந்த காலம் படாடோபமாகத்தான் இருந்திருக்கும். இன்று பள்ளிவாசல் ஹவுஜில் ராஜமீனைக் களவாடிய குற்றத்துக்கு உள்ளாகி நிற்கிறார். களவாடிய மீன் மருமகனுக்கு குழம்பாகியோ... பொறிக்கப்பட்டோ போயிருக்கும். ஆனால் அவமானம்? ஹவுஜில் மீன்கள் வளர்க்கப்படுவது தொன்மம். அவற்றை பிடிக்கக்கூடாது என்று சொல்வதுண்டு. வளர்ந்து முதிர்ந்த மீன் என்னாகும் என்ற கேள்வி வேடிக்கைப் பார்க்க... பொறிபோட வரும் சிறுவர்களிடம் இருக்கவே செய்கிறது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா டாக்கிகளில் (நீர்க்குளங்கள்) மீ ன் பிடிக்கக்கூடாது என்று தகவல் பலகையே இருக்கிறது. ஆனால் அக்குளத்து மீன்கள் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டேதான் இருக்கின்றன. வந்துபோகும் யாத்திரிகர்கள் யாரும் அதைத் திருடும் வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போது நகரின் முக்கியமான தொழுகைப் பள்ளிவாசல்களில் ஒலு செய்வதற்காகக் கட்டப்பட்ட ஹவுஜ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக குழாய்கள் நிறுவப்படுகின்றன. ஹவுஜ் இருந்த இடங்கள் பத்துக்குப் பத்து கடைகளாகி நிர்வாகத்தின் வருமானத்துக்கும் ஊழலுக்கும் அடிகோலுகின்றன.

அதுபோல செம்பருத்தி பூத்த வீடு யாரையும் வசீகரித்துவிடும் வல்லமை கொண்ட கதை. இளமையைத் தொடும் ஆண்பெண் இருபாலர் யாருக்குமே காதல் இல்லாமல் போகாது. குறைந்த பட்சம் மனசுக்குள்ளாவது இருந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பின் ஊர் திரும்பும் நாயகன் தன் இளமைக் கால நாயகி எஸ். மயிலாத்தாவின் செம்பருத்தி பூத்த வீட்டைப் பார்க்கக் கிளம்புகிறான். அதில்தான் எத்தனை சுகம்? எதிர்பார்ப்பு? வீடு மாறாமல் அப்படியே இருப்பதில்தான் எத்தனையெத்தனை ஆனந்தம்! விட்டுப்போன இடைக்காலத்தை மீட்டெடுக்கும் நினைவுகளின் வழியே ஊடுருவும் மனசு. 'ஆத்தா' - 'ஆத்தா' - 'ஆத்தாவ்' - ரொம்ப நாளாயிப் போச்சு இப்டியெல்லாங் கூப்புட்டு கொஞ்சம் வெட்கமாக்கூட இருந்துச்சு. திரும்பத் திரும்பக் கூப்புட்டுப் பாத்துக்கிட்டேன் எனும் வாசகங்களில் அந்த இளம்வயதுக்கே திரும்பிப்போய்விடும் சூத்திரம் ஒளிந்து கிடக்கிறது. வீட்டைப் பார்த்துவிட்ட வனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கும் ஆவலை மனம் கிளறுகிறது. "மாப்ள அந்தப் புள்ள செத்துப் போயி ஏழெட்டு வருஷமாசேடா" என்கிறான் நண்பன். அவன் மனசுக்குள் பாலாய்ப் பொங்கிக் கொண்டிருந்த அத்தனையும் அடங்கிப்போய்விடுகிறது. போதும் இங்கேயே கதையும் முடிந்துவிட்டதாக உணர முடிகிறது. அதன் பின்பு எதுவாக இருந்தாலும் அது கூடுதல்தான். மாயந்தான் என்றறிந்தாலும் இப்படியான விடலை நினைவுகள் இல்லாத யுவனும்யுவதியும் இந்த லோகத்தில் இல்லவே இல்லை. அந்த சுகமான வலிகள்தான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போகின்றன. காதலும் அதை யொற்றி எழக்கூடிய நினைவுகளும் பசுமையானவை. அதற்குள் பயணம்செய்து எழுத்தாக மீட்டெடுக்கும் லாவகம் படைப்பாளியிடம் தெளிந்து கிடக்கிறது.

ஊர்ஊராய்ச் சுற்றி யாசகம் வாங்கிப் பிழைக்கும் சலீமின் பார்வையிலிருந்து விரியும் சுவடுகள் கதை தருமம் என்ற சொல்லிலிருந்து கிளைந்து அதைப் பெற முயற்சிப்பவர்கள் படும் அவலத்தையும் அவசத்தையும் வெளிப்படுத்துவது. யாசகத்துக்கு பெண்களும் குழந்தைகளுமே முன்னிருத்தப்படுகின்ற னர். அதுதான் தொழிலில் கூடுதல் பொருளீட்டலைப் பெற்றுத் தருகிறது. அந்த முன்னிலைப்படுத்தல்தான் மகளின் அலறலை "உனக்கு பிரம்மையாக இருக்கலாம்" என்று அத்தாவை சொல்ல வைக்கிறது. யாசகம் கேட்டுப்பெறுதல் எனும் எளிய பார்வையைத் தாண்டி அதற்குள் உறைந்து கிடக்கும் மற்றவையான அவமானம் புறந்தள்ளல் கண்டுகொள்ளாமை யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறது. கதையில் வரும் அக்காவின் அலறலை சமூகத்தின் அலறலாகக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

வேற்றுக் கிரக அவாந்திரப் பெருவெளியில் பொம்மையுடன் கைகோர்த்தவாறு திரியும் குழந்தை தெளபிக் இடம்பெறும் ஆண்பொம்மை ராட்சஸப் பறவையின் சிறகுகள் கதையில் வரும் சக்கரை முகமதுவின் மன உலைச்சல் ஆதிமை நீஸா என்றொரு சிநேகிதி போன்ற சிறுகதைகள் நிஜங்களுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. சடங்குக்காக செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில் மக்கள் கொள்ளும் ஆர்வம் கடமையாக்கப்படுகிறது.

அதேவேளையில் ஆடான நீஸாவின் சிநேகிதி ஆயிஷா 'சைத்தாம் புடிச்சவளாக' ஆக்கப்படுவது ஆட்டை அறுப்பதுபோல நெஞ்சை அறுக்கிறது. கறுப்புக்கோட்டு பக்ரீத் ஆடுகள் எளிய விளிம்புநிலை மக்களின் பாடுகளை உரித்துக் காட்டுவனவாக இருக்கின்றன. சுவர்கள் சிரிக்கின்றன உள்வெளி போன்ற கதைகள் நிகழ்த்துதலைத் தாண்டிய பதிவுகளாக மட்டுமே இருக்கின்றன. நிழலின் சாயலும் சாயலின் நிழலும் 'சென்னை வாழ்க்கையைப் படம் பிடிக்கிறதா?' என்றாலும் புல் ஓபன் நைட்டின் ஜிப் திடீரென கீழிறங்கி இருந்ததைக் கவனித்தான்."இதுதான் சர்ர்ர்ரியலிசம்..." என்றபடி சுதந்திரமானான் எனும் பகடி ரசிப்பதாக இருந்தது. வேறுகதைகளில் இல்லாதது.

சிறந்த எழுத்து என்று வரையறுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வு தார்மீக எழுச்சி சுதந்திரம் ஆழம்என சகல மேன்மைகளும் நிரம்பிய அந்தரங்க நிலை படைப்பாளியிடம் கொட்டிக்கிடக்கிறது. அதனாலேயே கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணத்தைக் கொண்டவையாக அவரது கதைகள் இருக்கின்றன.

இந்தப்பின்னணியில் உருவாகியிருக்கும் கதைகளை முன்னரே சொன்னதுபோல மூன்று வகைமைகளாகப் பகுத்தாலும் அதனுள் சூழல் ஜாகிர்ராஜாவை கீர னூர் தஞ்சாவூர் சென்னை என்று மூன்று இருப்பிடங்களில் இருத்தி உருவாக்கிப் பயணிக்கச் செய்திருக்கின்றது. அவற்றுள் சென்னையைக் காட்டிலும் முதலிரண்டு தளங்களில் பின்னப்பட்டக் கதைகள் நெஞ்சை நிறைக்கின்றன. ஆனாலும் கூட ஜாகிர்ராஜாவின் முன்னே இன்னும் இன்னும் விரிந்து பரந்த களம் ஆடப்படாமல் இருக்கவே செய்கிறது. அதில் நிகழ்த்துவதற்கான மூலங்களும் திறமும் அவரிடம் நிறையவே இருக்கின்றது.

நன்றி : உயிர் எழுத்து. நவம்பர் 2011.

Tuesday, April 3, 2012

வடக்கேமுறி அலிமா ம. மணிமாறன்


vadakke-muri-alima

நாவல்களின் உள்ளுறையாக அமைந்திருப்பவை யாவும் தனிமனிதனின் புற உலக ஞாபகங்கள்தான். அகத்தினுள்ளும் ஞாபகங்கள் உறைந்து கிடக்கத்தான் செய்கின்றன. உலகெங்கும் தன் வரலாற்றையே நாவலாக்கிப் பார்த்தனர் எழுத்தாளர்கள். அதன் எல்லை தன் ஊர், தன் குடும்பம், தன் குலவழியின் பல்வேறு கிளைகள் என்ற அளவில்தான் பயணித்தது. எழுத்தாளர்களின் எழுத்துக்கான கச்சாப்பொருளை தன்னிலிருந்து உருவாக்கி அதனை அடுக்கி, அடுக்கி புனைவாக்கிடும் சக்கரவாட்டச் சுழற்சிக்கு உலகின் எந்த மொழியும் தப்பித்ததில்லை. மகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் “வடக்கே முறி அலிமா எனும் அவரின் நான்காவது நாவல்.

இரண்டாயிரத்துக்குப் பிறகான காலத்தின் மிக முக்கியமான எழுத்துலகப் பிரதிநிதித்துவம் ஜாகிரினுடையது. அவருடைய நான்கு நாவல்களுமே இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி எனும் மூன்று இலக்கியப் பிரதிகளும் எளிய மொழியில் தனித்த தமிழ் இஸ்லாமிய வாழ்வினைப் பதிவு செய்திருந்தன. ஒரு வகையில் அவை யாவும் கூட தன் ஊரின், தனித்த மனிதர்களின் அகலாத ஞாபகங்கள்தான். வேறு எந்த இஸ்லாமிய நாவல்களும் காட்டியிராத அல்லது காட்டத் தயங்கியவற்றின் மீது தன் எழுத்தென்னும் ஆயுதம் கொண்டு பெரும் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சியவர் ஜாகிர். “அலிமா” முற்றிலும் வேறானதொரு படைப்பு. ஒரு நாவலுக்கான வெளிப்பாட்டு முறையை எழுத்தாளன்தான் முடிவு செய்கிறான் என்ற போதும் படைப்பு முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்ள எழுத்தாளன் எடுத்திடும் முயற்சியும் கூட நாவலுக்கான வடிவத்தை தீர்மானிக்கிறது.

அலிமாவின் வாழ்க்கை ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கவில்லை. தன் பால்யத் தோழனான கெபூருடனான கபுறுகளி ஆட்டத்தில் துவங்கி, முஸ்லியாருடன் உடன் போதல், மம்முதுடன் வெளியேறுதல், அக்கம்மாவான செய்யதலி பாத்திமாவுடனான நெருக்கம், எழுத்தாளர், நடிகை என வேறு வேறு அவதாரம் எடுத்தல் என்பது எல்லாப் பெண்களுக்கு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை ஒழுங்கிற்குள் சாத்தியமில்லை. அதுவும் வளமான இஸ்லாமியக் குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படியான வாழ்க்கை அமைந்திட வாய்ப்பே இல்லை. பள்ளிக்கு படிக்கப் போவது, குரான் ஓதிட மதரஸாவிற்குச் செல்வது, பிற ஆடவர் பார்வையில் படும்போது தலையில் முக்காடிட்டுக் கொள்வது, திருமண வயது நெருங்குவதற்கு முன்பாகவே நிக்காஹ் நடந்தேறுவது இவைதான் இஸ்லாமிய பெண்ணிற்கான வாழ்வியல் ஒழுக்கங்கள். இஸ்லாமிய பெண்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களை அலிமாவைக் கொண்டு கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். எனவேதான் வடக்கே முறி அலிமா நேர்கோட்டுத் தளத்திற்குள் இயக்கம் பெறவில்லை. மாறாக ஒரு பின் நவீனத்துவப் பிரதியாக வடிவம் பெற்றிருக்கிறது.

வடக்கே முறி அலிமா இஸ்லாமியத் தளத்திற்குள் இயங்குகிற போதும் கூட அவள் நடிகை, எழுத்தாளர் என பரிணாமம் கொள்கிற போது முற்றிலும் வேறு ஒரு பிரதியாக வடிவம் கொள்கிறது. அதிலும் குறிப்பாக அவளுடைய எழுத்து என்பது கழிவறைச் சுவர்களில் இருந்துதான் பிரதியெடுத்து புத்தகமாக்கப்பட்டது என்பது உச்சபட்ச பகடியாகும். எழுத்தாளப் பெருந்தகைகளைப் பகடித்து கேள்விக்கு உள்ளாக்கிடும் எழுத்தே கழுதைக்கு (பத்திரிகை) அலிமா அளித்த பேட்டி என்பதை வாசகன் அறிந்திடுவான்.

சாதாரணமானவர்களால் அசாத்தியமான பெரும் படைப்புகளை உருவாக்கிட முடியாது என வாசக மனங்களில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்து இயல்பானதல்ல. அவற்றை கட்டமைத்ததில் தமிழ் இலக்கியத்திற்குள் காலம் தோறும் இயங்கி வருகிற சிறு பத்திரிகைகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. பேட்டியில் அலிமா சொல்கிறாள் “என் கழிப்பறை எழுத்திற்கு ஆதர்சம் காசிம்” உடனே பேட்டி எடுக்க வந்தவர் - “யார் அந்த காசிம்? புகழ்பெற்ற அரபு யாத்திரிகர் போல இருக்கிறதே” - வாசகனுக்கு மிக நன்றாகத் தெரியும். காசிம், அலிமாவின் வீட்டுச் சமையல்காரன். அவனுடைய கழிவறைக் குறிப்புகளாக உருப்பெற்ற விதவிதமான மனிதர்களின் குறிகள் எதன் குறியீடு என்பதையும் வாசகன் அறிந்திடும் வகையிலேயே நாவல் இயக்கம் பெற்றிருக்கிறது. ஆனாலும் கூட எழுத்தாளன் ஆதர்சம் பெறுவதற்கான ஆளுமையாக சமையல்காரனான காசிம் இருப்பதை நவீன இலக்கிய உலகம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

அமைப்பியல் வாதம் விவாதத்திற்குள்ளான நாட்களில் “பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங்” எனும் எழுதுதல் முறை உலகெங்கும் விவாதத்திற்குள்ளானது. தமிழிலும் கூட தமிழவன் “சரித்திரத்தின் மீது படிந்த நிழல்கள்” எனும் தன்னுடைய முழு நாவலையும் பாலிம் ஸெஸ்ட் பிரதியாகத்தான் உருவாக்கியிருந்தார். பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங் என்றால் நடந்திருக்கும் நிகழ்வுகளின் மீது எழுத்தாளர் தன்னுடைய புனைவை எழுதுகிறபோது நிஜமும், புனைவும் கலங்கி வேறு ஒன்றாக வெளிப்படும் என்பதுதான். அப்படியான புனைவுப் பிரதிகள் பகடியாக வெளிப்படுவதை ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அப்படியான பெரும் பகடிகளின் தொகுப்பாகவும் நாவல் வெளிப்படுகிறது. வாசகனின் கவனத்திற்கென ஒன்றிரண்டை ஞாபகமூட்டுவது சரியாக இருக்கும் என்று படுகிறது.

பதிப்பகத்தினர் குறித்த பகடியென்றே நான் கோழிக்கோடனைக் கருதுகிறேன். ஆலப்புழை நகராட்சிக் கழிப்பறைச் சுவரினைக் கண்ணுற்ற பிறகு அவர் அலிமாவைப் பின் தொடர்கிறார். மொத்தம் 3800 கக்கூஸ்களில் அலிமாவால் எழுதப்பட்ட ‘என்டெ யாத்ரா’ நூலாக வரும் போது 300 பக்கமாக்கப்பட்டது. 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அவளின் காகிதம் கக்கூஸ் சுவர்; அவளின் பேனா விறகுக்கரி. இதைத் தொகுத்தே கோழிக்கோடன் “என்டெ யாத்ரா” - வாக்கிட அதற்கு “முட்டைச் சிம்னி” விருதும் கிடைக்கிறது. விருதின் பெயர்களைப் பாருங்கள் “கட்டஞ்சாயா”, “ஏத்தன் பழம்” இப்படிப் பலப்பல. தமிழில் தான் விரும்புகிற எழுத்துக்களுக்கெல்லாம் எந்த விதிமுறையும், வரைமுறையும் கைக்கொள்ளப்படாமல், அளிக்கப்படுகிற விருதுகளின் மீதான பகடியாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக “முட்டைச் சிம்னி” - விருது நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிற “விளக்கு”- விருதினை வாசகனுக்கு ஞாபகமூட்டத்தான் செய்கிறது.

தவிர்க்கவியலாமல் யார் இந்த அலிமா என்று எனக்குள் நான் கேட்டுக் கொண்டேதானிருக்கிறேன். அலிமா ஒரு நடிகையாக இருப்பதால் அதுவும் இஸ்லாமியப் பெண்ணாக இருப்பதால், அதிலும் கற்பு, ஒழுக்கம் என கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண்ணிற்கு மட்டுமேயான பாலியல் ஒழுங்குகளை கேள்வி கேட்பவளாக இருப்ப தால் வைத்து அலிமாவை நடிகை குஷ்புவாக்கிப் பார்க்கலாமா? என்ற யோசனையை அவர் எழுத்தாளர் இல்லையே என்ற தர்க்கம் உடனே கலைத்தது. பிறகு யார்? கேரளத்தில் பிறந்து, நடிகையாகி, எழுத்தாளராகவும் இருக்கிற அருந்ததிராயின் சாயலை அலிமாவிற்குள் தேடித் தோற்றேன். அலிமா தன்னை கலாச்சாரப் போராளியாக காட்டிடவில்லையே. இப்படியே வாசகா நீயும் கூட உனக்குள் அலிமாவைத் தேடிக் கண்டடையாமல் தவிக்கப் போவது நிஜம்.

அலிமா கமலாதாஸா, குஷ்புவா, அருந்ததிராயா என்கிற யாதொரு குழப்பமும் இல்லாமல் வடக்கே முறி அலிமாவாக மட்டுமே வெளிப்படுகிற இடங்கள் இரண்டு. ஒன்று அவள் ஆடும் கபுறுகளி ஆட்டம். மற்றொன்று சினிமா நடிகையானதால் ஏற்பட்டுள்ள விழுப்புண்ணிற்கு களிம்பு தடவியபடி லாட்ஜ் அறைச் சிறுவனின் முகத்தில் தன்னுடைய கபுறுகளி ஆட்டத் தோழனான “கெபூரைத் தேடிடும் இடத்திலும்தான். அதிலும் கபுறுகளி ஆட்டம் இந்த நாவலின் உச்சம்.

எல்லா மதங்களும் மறுமை குறித்த பயத்தின் மூலமாகவே இம்மையை நிர்பந்திக்கின்றன. மனித வாழ்வில் கடைப்பிடிக்கப்படுவதாக நம்பப்படுகிற எல்லா நடவடிக்கைகளுக்குள்ளும் மைய இழையாக ஓடிக் கொண்டிருப்பது சொர்க்கம், நரகம் குறித்த கட்டமைப்புகளே. இம்மையில் நன்மை செய்ததாக நம்பி உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை சாட்டையால் விளாசி அலிமா எழுப்பும் கேள்விகளும், அந்த கபர்ஸ்தான் காட்சிகளும் மிகுந்த செவ்வியல் தன்மையிலான பதிவாகும். “மய்யத்துகளின் அருகில் நின்று அலிமாவும், கபூரும் கேள்வி எழுப்புவார்கள். “கலிமா சொல்லுங்கோ”, தொழுதியளா? காசு உண்டாக்கினீங்கோ, ஷஜ் செஞ்சியளா?” “உங்க பாரியாளத் தலாக் கொடுத் தீங்களா”. வட்டி வாங்கினதுண்டா, இல்லங்கி இத்தன பைசா எங்கின வந்திச்சு?” . . . . ஹராமெனும் சொல் இஸ்லாமிய கலைச் சொற்களிலேயே மிகுந்த தனித்துவமான சொல். அது குறித்த தர்க்கத்தையே கபுறுகளி ஆட்டத்தின் போது அலிமா நிகழ்த்துகிறாள். இஸ்லாமியப் பெண்களுக்கு பொதுப்பள்ளி வாசலில் தொழுதிட ஜமாத்துகள் அனுமதிப்பதில்லை. இப்போது தான் பெண்களுக்குத் தனியான தொழுகையிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கபர்ஸ்தானுக்குப் போகிற மரண ஊர்வலத்தில் பங்கேற்றிட தமிழ்ச்சாதிகளில் இருப்பதைப் போலவே பெண்களுக்கு இஸ்லாத்திலும் இடம் இல்லை. ஆனால் நம்முடைய அலிமா கபுறு குழிகளையே கேள்வி கேட்கிறாள். இறுகிய மத அடிப்படை வாதத்தின் மீது கேள்வி எழுப்புகிற வல்லமை கொண்ட எழுத்தாளனே ஜாகிர் என்பதற்கான பல சாட்சியங்களை வாசகன் கண்டடைவதற்கான சாத்தியம் கொண்டதாகவே வடக்கே முறி அலிமாவை மதிப்பிடத் தோன்றுகிறது.

மனப்பிறழ்வு குறித்த தர்க்கங்களும், ஏர்வாடி மனப்பிறழ்வாளர்களின் வாழ்விடம் குறித்த காட்சித் சித்திரங்களும் “வதை முகாமிலிருந்து கேட்கும் குரல்” என்ற பகுதியிலும், அலிமாவின் பேட்டியிலும் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் கோபி கிருஷ்ணன் “உள்ளேயிருந்து சில குரல்கள்” - எனும் மனப்பிறழ்வின் துயரத்தை நுட்பமாகவும், ஆழமாகவும் பதிவு செய்த எழுத்துப் பிரதியாகும். அலிமாவிற்குள்ளும் ஆழமும், அழுத்தமுமாக தர்க்கித்து மனப்பிறழ்வு களின் நுட்பங்கள் பதிவு பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக செய்யதலி பாத்திமா எனும் அக்கம்மாவிற்கு அலிமா எழுதும் கடிதம் கவித்துவ உச்சமாகும்.

சாதாரணர்களின் உலகில் அசாதாரணமானவளான அலிமா மனப்பிறழ்விற்கு உள்ளானவளாகத்தான் தென்படுவாள். எழுத்தாளச் சித்தப்பன் எழுதியபடியே நகர்கிறது. அலிமாவின் வாழ்க்கை என்கிற புனைவு வசீகரமான சோகமாக வாசக மனதினில் படிகிறது. எல்லாம் முடிந்தபிறகும் கூட கபூருடன் பட்டாம் பூச்சிகளை கபர்ஸ்தானில் துரத்தியலைகிற அலிமாவைக் கலைக்கிற பள்ளி வாசலின் வாங்குச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.