Thursday, March 28, 2013

மகேந்திரன் உருவாக்கிய மௌனம்


மகேந்திரனை இன்றளவும் நினைத்துப் பார்க்கத் தக்க நல்ல விளைவுகள் சிலவற்றை அவர் தமிழ் சினிமாவிற்குள் நிகழ்த்திக் காட்டியிருப்பது என்னை இந்தத் தொடரில் அவருடைய Ôசினிமாவும் நானும்Õ புத்தகம் குறித்த அபிப்ராயங்களை எழுதத் தூண்டியது. மகேந்திரனுக்கு சற்று முன்னர் தமிழில் பாரதிராஜாவின் வருகை சில நல்ல விளைவுகளை உருவாக்கியிருந்ததை ஒப்புக் கொள்ள வேண்டும்.  புதுமைகள் எல்லாமும் நீர்க்குமிழ்களைப் போல ஒருநொடியில் உருவாகிக் கலைந்து போவன அல்ல. காலம் தான் எது புதுமை என்பதைத் தீர்மானிக்கிறது.  சினிமாவைப் போன்ற கலை வடிவங்களில் நேற்றைக்கான புதுமைகளை, நாளைக்கு கடந்து செல்லும் தருணங்கள் வாய்த்தபடி இருக்க வேண்டும். அவ்வாறு சம்பவிக்கிற போது மட்டுமே கலை வடிவம் எதுவாயினும் உயிர்ப்புடன் இருக்க முடியும். மகேந்திரன் இவ்வாறு சிலவற்றை அனாயசமாகக் கடந்து வந்தவர். அவரால் தமிழ் சினிமா சில அங்குலங்களேனும் நகர்ந்திருக்கிறது.
 பாரதிராஜா ஒரு ஆரவாரமான தெற்கத்தி கிராமத்தை தமிழ்த்திரையில் காட்சிப்படுத்தினார்.  குறிப்பிட்ட சமூகம் மொழி கலாச்சாரக் கூறுகள், விதவிதமான மானுடரூபங்கள், முரண்கள், நேசம், காதல் என தனது பிந்தைய படங்களில் இன வரைவியல் ஒன்றை காட்சி மொழியில் எழுதிக்காட்டும் நுட்பம் அவருக்கு கைகூடி வந்தது. அவரைப் போன்ற ஒருவர் செய்யவே கூடாத தவறுகள் சிலவற்றையும் பின்னாட்களில் அவர் செய்தார். அது இன்னொரு பக்கம்.
 மகேந்திரனின் கிராமங்களில் நமக்குத் திகட்டுகிற மாதிரி மண்வாசனை வீசக்காணோம். அவர் தம் படைப்புகளில் ஏதாவதொரு சமூகத்தை மையப்படுத்துகிற கதைக்களங்களையும் அமைப்பதில்லை. (சாசனம் உள்ளிட்ட சில படங்கள் விதிவிலக்கு) எப்படி யோசித்தாலும் எனக்கு மகேந்திரன்  ஒரு பெரிய  மௌனியாகவே புலப்படுகிறார். திரையில் அவர் உருவாக்கும் மௌனம் அசாத்தியமானது. காட்சி தரும்  ஆழ்ந்த நிசப்தத்தில் கதாபாத்திரங்களை உடல்மொழியால் பார்வையாளர்களுடன் உரையாட வைக்கிறார். இளையராஜாவின் வாத்தியங்கள் கூட அவருடன் சேர்ந்து ஒரு வினோதமௌனத்தைக் கடைப்பிடித்தது வியக்கத்தக்க விஷயம். தமிழ் சினிமாவில் சம்பவித்த இந்த மௌனம் தான், முக்கியத்துவமானது. ஸ்ரீதர், பாலசந்தர் போன்றவர்களையும் இதற்கு முன் உதாரணங்களாக சொல்ல முடியும் என்றாலும் மகேந்திரன் உருவாக்கிய விசேஷமான மௌனத்தை  நாம் வியந்துதான் சுட்ட முடியும்.  முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், ஜானி, பூட்டாத பூட்டுகள், கைகொடுக்கும் கை என்று  நிறைய உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.  இந்த மௌனம்தான் பாலுமகேந்திரா, மணிரத்னம் என வேறுவேறு தருணங்களில் தமிழ் சினிமாவில்  நீட்சி கண்டது.
 ஒரு காலத்தில் வாத்தியங்கள் இசைக்காத, வசனங்களற்ற காட்சிகளில் பார்வையாளர்கள் உடனடியாக எதிர்வினையாற்றுவார்கள்.  உய்ய்... என்ற விசில் ஒளிகள் கிளம்பும், கெட்ட வார்த்தைகள் நாராசமாக வெளியேறும்.  மகேந்திரனின் காட்சிமொழிதான் முதல் முதலாக அவனைப் போன்ற சகிப்புத் தன்மையற்ற பார்வையாளனை மௌனத்தை அங்கீகரிக்கத் தயார் செய்தது. இங்கிருந்துதான் மகேந்திரன் என்னும் படைப்பாளியை நாம் உரசிப் பார்க்க வேண்டும்.  குறிப்பிட்ட அந்த விசேஷமான மௌனத்தை திரைமொழியில்  பரீட்சார்த்தம் செய்து பார்க்க மகேந்திரன் கடந்து வந்திருக்கிற தொலைவும், கொடுத்திருக்கிற விலையும் அதிகம்.
 மகேந்திரன் எம்.ஜி.ஆரின் கண்டுபிடிப்பு. அவரால் திரைத்துறைக்கு அழைக்கப்பட்டு பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் பயிற்சி பெற்றவர். நான் சிறு வயதில் விரும்பிப் பார்த்த பல ஜனரஞ்சகப் படங்கள்  மகேந்திரனால் எழுதப்பட்டவை என்பதைப் பின்னாளில் அறிந்தபோது ஆச்சரியம் கொண்டேன். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் தந்த மகேந்திரனா, இதையெல்லாம் எழுதியது என்றும் திகைத்துப் போயிருக்கிறேன். தங்கப் பதக்கம், நிறைகுடம், மோகம் முப்பது வருஷம், ஆடு புலி ஆட்டம், பகலில் ஒரு இரவு, கங்கா  இப்படிப் பல படங்கள். வாழ்க்கை குறித்த கவலைகள் ஏதுமின்றி சுதந்திரமாகத் திரிந்த காலத்தில் விமர்சனப் பார்வை துளியும் இல்லாமல் நான் பார்த்து அனுபவித்த படங்கள் இவை. இவற்றையும் வெறும் பொழுதுபோக்குப் படங்கள் என முத்திரையிட்டுப் புறக்கணித்து விட இயலாத அளவிற்கு ஒவ்வொன்றும் சில விசேஷ அம்சங்கள் கொண்டவையாக இருந்ததையும் நினைத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த அனுபவங்களைக் குறித்து மகேந்திரன் இப்படி எழுதுகிறார்.  ÔÔபடிக்கிற காலத்தில் தமிழ் சினிமாவில் நான் கண்டு வெறுத்த குறைகளையே, இப்போது நானும் செய்து ஜெயித்துக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வு என்னை சவுக்கால் அடித்துக் கொண்டேயிருந்தது. துக்ளக் பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்த நான் தமிழ்ப்படங்களை எப்படியெல்லாம் விமர்சித்திருக்கிறேன்? நானா இப்போது அதே தவறுகளைச் செய்கிறேன்?ÕÕ
இதுபோன்ற சுயவிமர்சனங்களிலிருந்துதான் மகேந்திரன் இந்தப் புத்தகத்தை உருவாக்குகிறார். அவருடைய ஆளுமையில் என்னை வெகுவாகக் கவர்ந்த  அம்சம்  அவர் இலக்கியங்களைப் படமாக்கிய விதம். குறிப்பாக இலக்கியப் படைப்பொன்றை எவ்வித நெருடலும் இன்றி அவர் தன் சுயவிருப்பத்திற்கு மாற்றி திரைக்கதையாக்கும் வித்தை. உமா சந்திரனின் முள்ளும் மலரும் நாவலில் இருந்து அவர் இந்த உத்தியைக் கையாளத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து புதுமைப்பித்தனின் சிற்றன்னை சிறுகதை, சிவசங்கரியின் நண்டு, பொன்னீலனின் உறவுகள், இப்படி சில நாவல்கள்; கடைசியாக கந்தர்வனின் சாசனம் சிறுகதை. இலக்கியங்களைப் படமாக்குவதற்கான உந்துதலை அவர் சத்யஜித்ரேயிடம்  இருந்து  பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன். ரே இயக்கிய புகழ் பெற்ற திரைப்படங்களான பதேர் பாஞ்சாலி, அபராஜிதா, அபுசன்சார் மூன்றும் வங்கமொழி எழுத்தாளர் பிபூதிபூஷன் எழுதிய நாவல்களை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதையாக்கப்பட்டவை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
உமாசந்திரனின் முள்ளும் மலரும் நாவலை வாசித்துக் கொண்டிருந்தபோது காளி கதாபாத்திரத்தின் கை முறிந்து போகும் அத்தியாயத்துடன் மேற்கொண்டு வாசிக்காமல் நாவலை மூடி வைத்துவிட்டதாக மகேந்திரன் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ளலாம்.  முள்ளும் மலரும் நாவலை வாசித்தவர்களும், முள்ளும் மலரும் படம் பார்த்தவர்களும் நம்மில் இருக்கிறார்கள். அந்த நாவல் வெகுஜனதளத்தோடு நின்றுபோன ஒரு பிரதி.  அது தீவிரவாசகர்களை வந்து அடையவே இல்லை. இரண்டையுமே  அணுகிய  ஒரு சிலர் உண்டு.  மகேந்திரன் பல விஷயங்¢களை இவ்வாறு பரீட்சார்த்தம் செய்து பார்த்திருப்பதை இரண்டையுமே அணுகியவர்கள் அறிந்திருக்கக்கூடும். ஒரு வாசகனாக திருப்தியோ, அதிருப்தியோ கொண்ட மனம் பார்வையாளனாக  மிகுந்த திருப்தியை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்  அதுதான் கதையை செதுக்கி செதுக்கி காட்சிமொழியாக்கிய மகேந்திரனின் ஆளுமை.
 பலநூறு பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை வாசித்துக் கொண்டிருக்கும்போது 50 பக்கத்திலேயே ஒரு இயக்குனருக்குத் தேவைப்படும் முக்கிய அம்சம் கிடைத்துவிடும். அது போதும் திரைக்கதைக்கு... என்று சொல்லும் மகேந்திரனை நம்மில் பலரும் வியந்து பார்க்க வாய்ப்பிருக்கிறது.
புதுமைப்பித்தனின் சிற்றன்னையை மகேந்திரன் கையாண்ட  விதத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வாசித்த அந்தக் கதையை ÔÔஅப்போதே தூக்கிப் போட்டு விட்டேன் ஆனால் மனதிலிருந்து அல்லÕÕ  என்று சொல்லுமிடத்தில் இருந்து  நாம் உதிரிப் பூக்கள் என்னும்  உலகத்தரத்திற்கு  நிகரான ஒரு தமிழ்த்திரைப்பட உருவாக்கத்தை அசைபோட்டுப் பார்க்க வேண்டும்.  ÔÔகுழந்தைகள் ராஜா, குஞ்சு இருவரையும் நான் மனதால் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவர்கள் எனது அருகிலேயே எப்போதும் இருந்தார்கள்ÕÕ என்று தொடர்ந்து சொல்கிறார் மகேந்திரன். எப்படி சார் முடியும் உங்களால்...  அந்தக் குழந்தைகள் தானே உதிரிப்பூக்கள்?  என்று நாம் அவரை திருப்பிக் கேட்கலாம்.
 சிற்றன்னை கதையில் குழந்தைகளின் தாய் இறந்துவிட்டாள் என்ற செய்தியை மேலும் வளர்த்து அவள்  எப்படி இறந்தாள் என்பது மட்டுமின்றி அவளின்  தங்கை,  தந்தை,  என உபகதாபாத்திரங்களை சிருஷ்டித்தது மட்டுமே மகேந்திரன்  உருவாக்கிய திரைக்கதையின் சிறப்பு அல்ல.  சிற்றன்னையில் சித்தரிப்புப் பெற்ற கல்லூரிப் பேராசிரியரான  சுந்தர வடிவேலு என்னும் நேர்மையான கதாபாத்திரத்தை எதிர்மறையாக உருமாற்றியதுதான்  திரைக்கதையில்  நிகழ்த்திய  உச்சபட்ச செயல்பாடு. இதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்.
மகேந்திரன் ஏற்கெனவே வரையப்பட்ட சித்திரத்தின் ஒரு பக்கத்தை கலைத்து அதை வேறொரு புதிய சித்திரமாக மாற்றுகிறார். ஏற்கெனவே இருந்த சித்திரத்தை வரைந்தவர் தமிழ் இலக்கிய உலகின் ஒரு குறியீடாக மதிக்கப்பட்டவர். புதுமைப்பித்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்த மாற்றத்திற்கு சம்மதித்திருப்பாரா  என்றெல்லாம்  கேள்விகள்  எழுப்ப இயலாத அளவிற்கு கால ஓட்டத்தில் நெடுந்தூரம் கடந்து வந்தாயிற்று. கிட்டத்தட்ட உதிரிப்பூக்களும் கூட இன்றைக்கு தமிழ் சினிமாவின் ஒரு குறியீடாக மாறிவிட்டது.
 ÔÔமுள்ளும் மலரும் படப்பிடிப்பு முடிந்தபிறகு மூடி வைத்த இடத்திலிருந்து உமா சந்திரனின் நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.  அதிர்ச்சியாக இருந்ததுÕÕ என்கிறார்  இந்நூலின் ஒரு இடத்தில் மகேந்திரன். ஆக அவர் வாசித்தவரைக்குமான நாவலை கணிசமான அளவிற்கு மாற்றியும், நிறைய சேர்த்தும், திரைக்கதையாக்கியது புலப்படுகிறது. நான் படம் பார்த்துவிட்டு நாவலையும் வாசித்தவன் என்கிற முறையில் மகேந்திரனின் கவர்ந்து  கொள்ளும் திறனை, காட்சி ஊடகத்திற்கேற்ப வளைத்து, நௌ¤த்து நீக்கிச் சேர்க்கிற உத்திகளை எண்ணி வியக்கத்தான் முடிகிறது.
 மகேந்திரனின் இந்தப் புத்தகம் ஒரு கலைஞனின் தன் வரலாறாகவும் சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதையைப் போலவும் அமைந்திருக்கிறது. துக்ளக் இதழில் மகேந்திரன் பணியாற்றிய சந்தர்ப்பமொன்றில் ஜிமிஜிஙிமிஜிஷி என்கிற ஆங்கில மாத இதழில்  யிளிபிழிகீகிசீழிணி என்ற ஹாலிவுட் நடிகர்  போலீஸ்  உடையில் துப்பாக்கி ஏந்தி குதிரையில் உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்க்கிறார். அந்த நடிகரின் ஒரு கண் கருப்புபட்டையால் மூடப்பட்டிருக்கிறது. அந்த யிளிபிழிகீகிசீழிணி தான் மகேந்திரன் 1970களில் உருவாக்கிய புகழ் பெற்ற கதாபாத்திரமான எஸ்.பி.சௌத்ரிக்கு (தங்கப்பதக்கம்) உந்துதல்.
ÔÔஎதிர்பாராத தற்செயல் நிகழ்ச்சிகள்தான்  என் வாழ்வில் நான் பயணிக்கும் பாதையை தீர்மானித்திருக்கின்றனÕÕ  என்னும் வரிகளை அதற்குப் பொருத்தமான பல சம்பவங்களைக் கூறி ஒரு சுலோகம் போல  உச்சரிக்கிறார்  மகேந்திரன். ஏற்கெனவே கதை   சொல்லி முடிவாகியிருந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திற்கு புதுமுகங்களைத் தேர்வு செய்யும் பொருட்டு மும்பைக்குச் சென்று கடற்கரையையட்டிய விடுதியில் அறை எடுத்துத்  தங்கிய மகேந்திரன்,  நிறைய புதுமுகங்களைப் பார்த்து சலித்து அன்றைய இரவை சிந்தனையுடன் களிக்க வேண்டியதாகிறது. மறுநாள் அதிகாலை எழுந்து விடுதி ஜன்னல்கதவுகளைத் திறக்கிறார். ஒரு யுவதி  ஜிஸிகிசிரி ஷிஹிமிஜில் கடல் அலைகளின்  ஓரமாய் ஓடுகிற காட்சி அவர் கண்களுக்குப் படுகிறது.ÔÔஇன்று தன் உடல் ஆரோக்கியத்திற்காக இப்படி ஓடுகிற பெண் திருமணத்திற்கு பின் வாழ்க்கை  தரும் நிர்ப்பந்தங்களின் காரணமாக எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்கும்?ÕÕ என்று பளீரென ஒரு மின்னல் கீற்று அவர் மனதில் வெட்டுகிறது. நெஞ்சத்தை கிள்ளாதே கதையும் அந்தநேரத்தில் உருவாகிறது.
 ஒளிப்பதிவாளருக்கு உதவியாளராக சுகாசினி வேலை செய்து கொண்டிருந்தபோதுதான் அவரை நடிகையாக மகேந்திரனால் பார்க்க முடிந்திருக்கிறது. அதாவது அசோக் குமாருக்கு உதவியாளராக இருந்த சுகாசினியைத் தான் அவர் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் நாயகியாக அறிமுகம் செய்கிறார். இவ்வாறு அவருடைய திரைவாழ்வில் நிகழ்ந்த பல வினோதமான சம்பவங்களை இந்நூல் நெடுகிலும் அவர் சொல்லிப் பார்க்கிறார்.  வணிக இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில்,  ÔÔஇந்த டூயட் பாடல்களை தூக்கி எறிந்தாலே சினிமாவில் நல்ல மாற்றம் வரும்ÕÕ என்கிறார். பாடல்காட்சிகளை அவர் மிகையின்றி நேர்த்தியாகப் படமாக்கியுள்ள விதத்தை நாம் இந்த இடத்தில் அசை போட்டுப் பார்க்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக மகேந்திரன் உதவி இயக்குனர்களுக்கு சொல்லும் ஒரு ஆலோசனை என்னை ரொம்பவும் சிந்திக்க வைத்தது. ÔÔஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். பசியில்லாமல் சென்று வாய்ப்புக் கேளுங்கள். அது ஆரோக்கியமாக இருக்கும். தயக்கமோ, கூச்சமோ இருக்காது. வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போகமாட்டீர்கள் இன்னொருவரைத் தேடி கம்பீரமாகச் செல்வீர்கள்ÕÕ வாழ்க்கையைப் பணயம் வைத்து சினிமாவில் போராடும் இளைஞர்கள் இந்த வரிகளை மனதில் இருத்திக் கொள்ளலாம்.
 மகேந்திரனை ஒரு விரிவான நேர்காணல் எடுக்கத்தான் நான் திட்டமிட்டிருந்தேன். அதற்கான அவகாசம் இல்லாமல் நாட்கள் கடந்து கொண்டே இருந்தன. எனவே இத்தொடரில் எழுதி அந்த மனக்குறையை சமன் செய்து கொண்டேன்.
¥ பொன்னியின் செல்வனை படமாக்கத் தமிழில் எவ்வளவோ முயற்சிகள் நடந்து முடியாமல் போனது. எம்ஜிஆருக்காக நீங்கள் எழுதிய பொன்னியின் செல்வன் திரைக்கதைப் பிரதி  இன்னும் உங்களிடம் உள்ளதா?
¥ பூட்டாத பூட்டுக்கள் தோல்வியடைந்தபோது ÔÔவாழ்வின் அருவருப்பான  பகுதிகளைக் கிளறிப்பார்ப்பது கலைஞனின் செயல் அல்லÕÕ என்று புரிந்து கொண்டதாக  சொல்லியிருக்கிறீர்கள். இதில் எந்தளவிற்கு நியாயம் இருக்கிறது?
¥ குறைமாத குழந்தையாய் ஏழு மாதத்தில் பிறந்த உங்களைத் தன்  அடிவயிற்று கதகதப்பில் காப்பாற்றிய டாக்டர் சாராம்மாவின் புகைப்படத்தை தேடிக் கொண்டிருந்தீர்களே, கிடைத்ததா?
 ¥ ஒரு திரைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். நுட்பமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவிற்கு மாற்று   அடையாளத்தை உருவாக்கிய உங்களால் இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து ஏன் கடைசிவரை மீள முடியவில்லை?
இது போன்ற சில எளிய கேள்விகள் என்னிடம் மீந்து இருக்கின்றன. மகேந்திரன் என் இருதயத்திற்கு  மிக மிக நெருக்கமானவர். எப்போது வேண்டுமானாலும் நான்  அவரைப் பார்க்கலாம். மகேந்திரனின் உபசரிக்கும் பண்பும், உரையாடும் தோரணைகளும் (அவருடைய ஓவியத்திறன் உட்பட) விசேஷமாக குறிப்பிட்டு சொல்லத்தக்கவை. இப்போது வாய்ப்பில்லை என்றாலும் இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த கம்பீரத்தைக் குறித்தும் கொஞ்சம் எழுத வேண்டும்.

ஜின்னா என்கிற இந்தியன்


ஜின்னாவின் டைரி என்றொரு நாவலை நான் எழுதத் தொடங்கி, அதற்கான விளம்பர அறிவிப்பு பத்திரிகையில் வெளிவந்த போது, எனது நண்பர்களில் சிலர் தலைப்பு பயங்கரமாக இருக்கிறது ஜாகிர்ÕÕ என்றனர். உண்மையில் நான் எழுத முயற்சித்தது நண்பர்கள் கருதிக் கொண்டது போல ஒரு அரசியல் வரலாற்று நாவலை அல்ல. ஆனாலும் ஜின்னா என்னும் பெயர் அவர்களுக்கு அப்படியான யூகத்தைத் தந்திருந்ததில் வியப்பதற்கு ஏதுமில்லைதான்.
 என் பள்ளிப் பிராயத்தில் இந்திய வரலாற்றின் மேல் எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. என் கல்வியையும் வரலாறு சார்ந்ததாக உருவாக்¢கிக்  கொண்டு, அதைக் குறித்த தேடல்களுடனேயே பயணித்திருப்பேனேயானால் ஒரு வேளை என் தலைவிதி வேறுவிதமாக மாறியிருக்கக்கூடும்.  ஆனாலும் இன்றைய என் நிலையில் பெருமளவு அதிருப்தி இல்லை. நான் எதை நினைத்தேனோ அதுவாகவே ஆகியிருக்கிறேன்.
 1980களில் பள்ளிக்கூட நாட்களில் என் தாத்தா தன் தவச்சாலையான எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்து கொண்டு முகமது அலி ஜின்னா என்னும் பெயரைத் தனது சக நண்பர்களுடனான உரையாடல்களின் வழியே அடிக்கடி உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன். ஜின்னாவைக் குறித்த சில ஆங்கிலப் புத்தகங்களையும் அவர் புரட்டிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது. எனக்கு அப்போது ஜின்னாவைக் குறித்த எவ்விதப் புரிதலும் கிடையாது. அதிகபட்சமாக அது ஒரு இஸ்லாமியப் பெயர் என்பதைத் தவிர்த்து. என் பாடப் புத்தகங்களிலும் ஜின்னாவைக் குறித்த பதிவுகள் இருந்ததில்லை. இந்திய வரலாறு ஒரு மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறு என்பதை என் வாசிப்பனுபவங்களின் வழியாக வெகுவாகப் பின்னால் நான் அறிந்துகொண்டு,  அதிர்ச்சியும்  கலவரமும் அடைந்திருக்கிறேன். வரலாற்றைக் கூட மறைக்க முடியும், அல்லது எழுதப்படுகின்ற வரலாற்றை சிலர் தங்களுக்குச் சாதகமாக எழுதிக் கொள்ள முடியும் என்பதே ஒரு இந்தியனாக நான் அறிந்து கொண்ட முதல் பயங்கரவாதம். இந்த அனுபவம் தந்த பேரதிர்ச்சியிலிருந்து நான் விடுபடுவதற்கு வெகுகாலம் பிடித்தது. பிறகு வரலாறு என்பதே ஒரு புளுகு மூட்டை, அதிகார வர்க்கங்களைத் தவிர்த்துவிட்டு மக்களால் எழுதப்படுகின்ற எதிர்வரலாறு, மாற்று வரலாறே நிஜமான வரலாறு என்பதை எளிதாகப் புரிந்து கொண்டேன். இப்போது அதிர்ச்சிகளும் பயங்கரங்களும் என்னிலிருந்து விடைபெற்றிருந்தன.  எய்ட் இந்தியாவில் வேலைபார்த்து, கோபாலபுரத்தில் தங்கியிருந்த 2008ஆம் ஆண்டின் இளவேனிற்கால நாளன்றில் அகல் பதிப்பகம் பஷீர் அலுவலகத்தில் இந்த மாமனிதர் ஜின்னா புத்தகத்தைப் பார்த்தேன். திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞரும், மார்க்சிய சிந்தனையாளருமான இரா.சி. தங்கசாமி என்பவர் எழுதியிருந்தார். அட்டை உள்ளிட்ட புறவடிவ வேலைப்பாடுகள் என்னை ஈர்க்காவிட்டாலும் உள்ளடக்கம் செறிவாக இருப்பதைப் புரட்டிப் பார்க்கையில் உணர்ந்து பஷீரிடம் கேட்டு புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்.
பிறகு அவ்வப்பொழுது அந்தப் புத்தகத்தை எடுப்பதும் தீவிரமாக எதையோ தேடுவதும் அடிக்கோடுகள் இடுவதுமாக நாட்கள் கடந்தன.
 ஜின்னாவின் இளமைப் பருவம் முதல், அவருடைய இறுதிநாட்கள் வரை சுமார் 15 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டு, நாள் உள்ளிட்ட ஆதார சுருதிகளுடன் எளிய மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது. ஜின்னாவின் கல்வி, வழக்கறிஞர் பணி, அரசியல் பிரவேசம், மணவாழ்க்கை, தேசப் பிரிவினையில் ஜின்னாவின் பாத்திரம் என அடுக்கடுக்காகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்த வாசிப்பில் எனக்கு இது காந்தி க்ஷிs ஜின்னா என்கிற  இரு பெரும் தலைவர்களின் கருத்து மோதல்களையே மைய இழையாகக் கொண்டு பின்னப் பட்டிருப்பதாகத் தோன்றியது.
ÔÔமுதலில் நான் ஒரு இந்து. எனவே நான் ஒரு இந்தியன் என காந்தி கூறியபோது முதலில் நான் ஒரு இந்தியன் அதன் பிறகுதான் ஒரு முஸ்லிம் என தெளிவாகக் கூறிய ஜின்னா, அந்த வாக்கியத்தை தன் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நிரூபணம் செய்து கொண்டேயிருந்திருக்கிறார். ஏனெனில் அவர் பிற இந்தியத் தலைவர்களைப் போல காந்தியால் ஆகர்ஷிக்கப்பட்டவரல்லர். 17 வயதிலேயே தாதாபாய் நவ்ரோஜியின்   அரசியல் பள்ளியில் இணைந்து அவருடைய வழிகாட்டலின் மூலம் அரசியலில் பிரவேசித்தவர்.
 ஜின்னாவின் விசேஷகுணம் எனப் பிறர் கொண்டாடத்தக்க அளவிலிருந்தது அவருடைய கறாரான மதச்சார்பற்ற தன்மைதான் என்று நான் கருதுகிறேன். 1906இல் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டபோது அதை மதநிறுவனம் என்று விமர்சித்த ஜின்னா லீக்கில் இணைவதற்கு பதிலாக காங்கிரஸில் இணைந்ததும், இஸ்லாமியர்களுக்கு தலைமை தாங்குமாறு  அழைப்பு விடுக்கப்பட்டபோது தாட்சண்யம் ஏதுமின்றி நிராகரித்து நான் முஸ்லிம்களின் தலைவனல்ல  இந்தியாவின் தேசியத் தலைவன்.  முஸ்லிம்களுக்காக மட்டும் நான் செயல்பட முடியாது என்று கர்ஜித்தவர்.
 தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜின்னா இந்த கறாரான போக்கைக் கடைப்பிடித்தார்  என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்தவர்கள் எல்லோரும்  இஸ்லாமியரல்லாதவர்களே. தாடி வைக்காமல், தொப்பி அணியாமல், ரமலான் காலத்தில் விரதம் மேற்கொள்ளாமல் விஸ்கியும், சிகரெட்டும் கையுமாக  இருந்து மதத்தின்  சகல சம்பிரதாயங்களையும் தவிர்த்த காரணத்தால் ஜின்னாவுக்கு காஃபிர் பட்டம் தேடி வந்தது. பொதுவாகவே அவருக்கு ஜாதி மதங்களின் மீதான தீவிரமான ஒவ்வாமை இருந்தது. எனவே நாத்திகன் என்றும் அவருடைய மூதாதையர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் என்பதால் அதன் எச்சம் அவருக்குள் விழுந்திருப்பதாகவும் பல்வேறு விமர்சனங்களை ஜின்னா எதிர்கொண்டார்.
ஜின்னாவின் சுருக்கெழுத்தராக வேலை செய்தவர் பாலக்காட்டைச் சேர்ந்த அய்யர், சமையல்காரர் கோவாவைச் சேர்ந்த இந்து, கார் ஓட்டுநர் சீக்கியர், மருத்துவர் பார்சி இனத்தவர். இதை அவர் திட்டமிட்டுச் செய்ததாகவும் சொல்லப்பட்டதுண்டு. இருந்து விட்டுப் போகட்டுமே கொந்தளிப்பான அக்கால கட்டத்தில் இதுபோன்ற துணிச்சல் யாருக்கு வரும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது எனக்கு. சட்டம் பயின்று  1897ல் வழக்குரைஞர் தொழில் செய்யப் பதிவு செய்துகொண்ட ஜின்னாவின் Ôவக்கீல் வாழ்க்கைÕ ஏற்ற இறக்கங்களும் விசேஷமான திருப்பங்களும் கொண்டது. குடும்பம் எதிர்பாராமல் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியுடன், கராச்சி தனக்கேற்ற களமல்ல,  எனக் கருதி ஜின்னா பம்பாய்க்கு வந்து சேர்கிறார். அங்கே வந்த பின்பும் ÔÔஎங்க ஆத்துக் காரரும் கச்சேரிக்குப் போகிறார்ÕÕ என்கிற  கதையாகத்தான் அவருடைய வக்கீல் பிழைப்பு இருந்திருக்கிறது. ஆனால் பம்பாய் அட்வகேட் ஜெனரல் சர்மக்பர்சனின் அலுவலகத்தில் கிடைத்தற்கரிய வாய்ப்பாக முக்கியமான சட்ட நூல்களை அவர் பயின்றதும் பிறகு தற்காலிக நீதிபதியாக ஆறுமாதங்கள் பணிபுரிந்து நிரந்தர நீதிபதியாகக் கிடைக்கவிருந்த வாய்ப்பை உதறித்தள்ளி தான் வாதாடும் வழக்குகளுக்கு ஒருநாள் கட்டணம் ரூ.1500 என நிர்ணயித்து எண்ணற்ற வழக்குகளில் ஆஜராகி வெற்றி கண்டது, 1926களில் இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரானது என கதாநாயகனொருவனின் சாகஸங்களுக்கு நிகரானது. ஜின்னாவின் நுட்பங்கள் கூடிய வாதாடும் திறன் அன்றைய பம்பாய் நீதிமன்றத் தாழ்வாரங்களில் பேசுபொருளாகின.  ÔÔபண்பு, துணிவு, உழைப்பு, முயற்சி ஆகிய நான்கு தூண்களில்தான் மானிட வாழ்க்கை என்னும் கம்பீரமான கட்டிடம் எழுப்பமுடியும். தோல்வி என்பது வாழ்வில் நான் அறியாத சொல்ÕÕ இதைத்தான் தனது வெற்றியின் ரகசியம் என ஜின்னா நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
 ஜின்னா அரசியலுக்கு வந்தபோதும் வந்த பின்பும் பாகிஸ்தான் பிரிவினை குறித்த எவ்விதமான முன் முடிவுகளும் திட்டங்களும் அவருக்கு இருந்ததில்லை. முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டபோது அதில் அவர் இணையவுமில்லை. தலைமை தாங்க அவர் மனப்பூர்வமாக விரும்பியதுமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை அது போலாக்கியது. காங்கிரசையும் முஸ்லிம்லீக்கையும் இணைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமாக இருந்தது. இந்த இடத்தில் சட்டசபைக்கு முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிக்கு ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட்டதை விமர்சிப்பவர்கள் உண்டு. அதேபோன்று முஸ்லிம் லீக்கைப் புறக்கணித்த அவர் அஞ்சுமன் -இ-இஸ்லாம் அமைப்பில் உறுப்பினரானது, முஸ்லிம் வஃக்பு சட்ட  முன்வரைவை சட்டசபையில் தாக்கல் செய்தது போன்ற செயல்பாடுகளுக்காகவும் நடுநிலைவாதிகளால் விமர்சிக்கப்பட்டார். இவை சரியான பிரதிநிதித்துவமற்ற சிறுபான்மை சமூகத்திற்காக அவர் மேற்கொண்ட காரியங்கள் எனக் குறிப்பிடுகிறவர்களும் உண்டு.
 இந்திய  அரசியலில் மதம் கலப்பதை அறவே விரும்பாத ஜின்னா இந்து-முஸ்லிம் ஒற்றுமை சாத்தியமானது என்று பெரிதும் நம்பியிருந்தார். தேசவிடுதலைக்கு முன்னதாக இதை நிறைவேற்றிக் காட்டவேண்டும் என்கிற வெறி அவரிடம் இருந்தது. ஆனால் மதச்சார்பற்ற தன¢மை, சாதுர்யமான செயல்பாடுகள் இவற்றால் காங்கிரஸில் முக்கியமான இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஜின்னாவின் வேகமான வளர்ச்சி காங்கிரஸ் தலைமைக்கு உள்ளூற அச்சத்தை அளித்தபடியிருந்தது. ஜின்னாவின் வளர்ச்சியைத் தடுக்கிற மலினமான உத்திகளை காங்கிரசில் ஒரு பிரிவு தொடர்ந்து பிரயோகித்து வந்தது.
 தேசியநீரோட்டத்திலிருந்து ஜின்னாவை அகற்றுவதில் இந்துத்துவவாதிகளின் திட்டமும், முஸ்லிம் மக்களை வழிநடத்த ஜின்னாவைக் கவர்ந்திழுப்பதில் இஸ்லாமிய வகுப்புவாதிகளின் திட்டமும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நடந்தேறின. இவை இரண்டும் தேர்ந்த சதி, என்பதை நடுநிலையாளர்கள் அவதானித்து வந்தனர்.
காங்கிரஸில் தான் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதை உணர்ந்த ஜின்னா மெல்ல மெல்ல லீக்கைத் தழுவினார். (காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தபோது ஜின்னா காங்கிரஸின் முக்கியமான இடத்திலிருந்தது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது)  மேல்நாட்டுப் பாணியில் தைக்கப்பட்ட நாகரீக உடைகளை அணிந்தபடி, மேல் தட்டு வர்க்கத்தினமிடையே கலந்து பழகிய ஒரு வழக்கறிஞர், இஸ்லாமியர்களை அரசியல் இயக்கமாக ஒன்று திரட்டி, இந்து தேசிய இயக்கத்துக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துவிடுவார் என்று 1935ஆம் ஆண்டிற்கு முன்னர் காங்கிரசார் நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்ÕÕ என்று ஒருகட்டத்தில் இந்நூலாசிரியர் குறிப்பிடுவதை நாம் பொருட்படுத்தவேண்டியுள்ளது. இதையே தோழர் இ.எம்.எஸ் தனது இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்னும் நூலில் ÔÔஇந்திய அரசியலின் ஆரம்ப நாட்களில் ஒரு முற்போக்காளராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய ஜின்னா பிற முஸ்லிம் தலைவர்களைப் போலன்றி ஒட்டுமொத்த இந்திய முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக வட்டமேசை மாநாட்டுக்காலம் வரையிலும் பாடுபட்டு வந்தார். தீவிர உணர்வு மிக்க ஒரு தேசியவாதியாக இருந்த இந்த முற்போக்கான அரசியல் தலைவர் முஸ்லிம் குறுங்குழுவாதத்தின் சிறந்த பிரதிநிதியாக இறுதியில் தம்மை மாற்றிக் கொண்டிருந்தார். முஸ்லிம் முதலாளி வர்க்கம் வளர்ச்சி பெற்றதும் இதன் விளைவாக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத முதலாளிவர்க்கப் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் இவற்றின் பின்னணியில் தான் ஜின்னாவின் அரசியல் வாழ்வில்  ஏற்பட்ட இந்த மாற்றத்தை மதிப்பீடு செய்ய முடியும்Õ என்று குறிப்பிடுகிறார்.ÕÕ (பக்832)
 தோழர் இ.எம்.எஸ்.ஸின் கருத்துப்படி ஜின்னாவை வர்க்க கண்ணோட்டத்தில் அணுக மாமனிதர் ஜின்னா என்னும் இந்நூலில் எவ்விதமான சந்தர்ப்பமும் இல்லை. ஒரு சில இடங்களைத் தவிர்த்து இந்நூல் முழுக்கவும் தலைப்புக்கேற்ற விதத்தில் ஜின்னாவை மாமனிதராகச் சித்தரிக்கும் விதத்திலேயே தகவமைக்கப்பட்டுள்ளது..
 காந்திக்கு நிகரான காந்தியின் எதிரியாக ஜின்னா மட்டுமே விளங்கினார். பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு கட்டம்வரை காந்தியை வலுவான எதிரியாக பாவிக்கவில்லை. மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய சமயத்தில் காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவான தொனியிலேயே செயல்பட்டார். ஜின்னாவின் முயற்சியால் அமைதிப்பட்டிருந்த இஸ்லாமிய வகுப்புவாதத்தை காந்தி கிலாபத் இயக்கத்திற்கு அளித்த ஆதரவின் மூலமாக  (அலி சகோதரர்களை இணைத்துக் கொண்டு) கிளர்ந்தெழச் செய்ததையும்  துருக்கியில் கிலாபத் இயக்கம் அமைதியுற்றதும் காந்தியும் கிலாபத் இயக்கத்தை இந்தியாவில்   கைவிட்டு இஸ்லாமியரின்  பிரச்சனைகளை இஸ்லாமியர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவித்ததும் பிரிவினைக்கு முந்தைய காந்தியின்  கைங்கர்யங்கள்  காந்தியின் கிலாபத் இயக்க ஆதரவுச் சறுக்கல்களும் அதற்கான ஜின்னாவின் கடுமையான எதிர்ப்பும் இந்நூலில் விரிவான முறையில் பதிவு பெற்றுள்ளன. மேலும் காந்தியின் மதம்சார்ந்த அரசியல் கோட்பாடுகள் இந்நூலின் பல பக்கங்களில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 காங்கிரஸை விட்டுப் பிரிந்து சென்ற பின் 1946 இல் காங்கிரஸ் அமைத்த இடைக்கால அரசாங்கத்தில் நிதி மற்றும்  வணிகத்துறைகளை  இஸ்லாமியர்களுக்குப் பெற்றுத் தந்தது  ஜின்னாவின் சாணக்கியத் தனம்   என்று கூறப்பட்டது.  1946ல் தாக்கல் செய்யப்பட்ட அந்த பட்ஜெட்டில்தான் உப்புவரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்த லியாகத் அலிகான்  அதை ஒரு ÔÔசோசலிஷ பட்ஜெட்ÕÕ என வர்ணித்தார். இதுவும் ஜின்னாவின் இடத்தை அகில இந்திய அளவில் உயர்த்தியது. காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் துறைகளுக்கான நிதி ஆதாரங்களுக்கு லியாகத் அலிகானை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை நேரு, படேல் போன்ற தலைவர்களை  உணர்ச்சிவயப்பட்ட நிலையில் யோசிக்க வைத்தது. இதனால் பாகிஸ்தானைப் பிரித்துத் தருவது, அதன் மூலமாக தங்களுக்குத் தடைக்கல்லாக நிற்கின்ற  ஜின்னாவை  இந்தியாவை விட்டு அப்புறப்படுத்துவது என ஒரு சமரசமற்ற திட்டம் அவர்களால் உருவாக்கப்பட்டது. மறுபக்கம் இஸ்லாமிய   வகுப்புவாதிகள்  ஜின்னாவின்  மதச்சார்பற்ற செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்தவர்களாக பொறுமிக் கொண்டிருந்தனர்.
பால்ய விவாகத்தைத் தடை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சாரதா சட்டம் இந்துக்களுக்கு மட்டுமானதாக இருந்ததை ஜின்னா கடுமையாக வாதாடி இஸ்லாமியர்களுக்குமானதாக  மாற்றியதும்,  ஜின்னாவின் முயற்சியால் ஷரியத் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு  உடலுறுப்புகளை வெட்டியும், கல்லெறிந்தும் கொல்வதுமான அரேபிய நாட்டின் காட்டுமிராண்டித்தன வழக்கத்திலிருந்து  இந்தியாவிலுள்ள இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் காப்பாற்றப்பட்டது என ஜின்னாவின் மீதான அடிப்படைவாதிகளின் கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது. முஸ்லீம் லீகிலிருந்து ஜின்னா பிற்போக்குவாதிகளை களையெடுத்துக் கொண்டேயிருந்தார். மவுலவிகள், மவுலானாக்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார்.
 1946ஆம் ஆண்டு இறுதி வரையிலும் கூட ஜின்னா பிரிவினைக்கான சிந்தனையற்றிருந்ததாகவே வரலாற்றாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். சுயராஜ்ய இதழில் இராஜாஜியும் இதைக் குறிப்பிடுகிறார். ஆனால் நேரு மிகத் தெளிவாக இருந்திருக்கிறார். ÔÔஇந்தியாவில் உள்ள பிரச்சனைகளில் ஜின்னா தொடர்ந்து தலையிடாமல் இருப்பதற்கும் அரசியலை விட்டு அவரை முற்றிலும் விலக்கி வைப்பதற்கும் பாகிஸ்தானை அல்லது ஏதாவது ஒரு பகுதியை உருவாக்கி விடுவது நல்லதுÕÕ என்றே அவரது நாட்குறிப்பும் கூறுகிறது.
விடுதலைக்குப் பிறகான இந்திய அரசாங்கத்தில் ஜின்னாவின் தலையீட்டை விரும்பாத காரணத்தால் காங்கிரஸே முன்னின்று பிரிவினையைச் செய்தது. வேறு வழியின்றிப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது அதை இரண்டு துண்டுகளாக மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் எனப் பிரித்து வாங்கியதற்காக கடைசியாக நடந்த முஸ்லீம் லீக் கூட்டத்தில் ஜின்னாவிற்கு துரோகிப் பட்டம் கிடைத்தது.
தேசப்பிரிவினைக்கு ஜின்னா ஒப்புக் கொண்டபோதும், பாகிஸ்தான் உருவாகி சில நாட்களிலும் ஜின்னாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் அவர் மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலகாததை வெளிக்காட்டியது. மௌலவிகளின் வழி காட்டலில் புதிய இஸ்லாமிய அரசு  பாகிஸ்தானில் அமையுமா என்று கேட்கப்பட்டபோது ÔÔமுட்டாள்தனமாகப் பேசாதீர்கள்ÕÕ என்று ஜின்னா நிருபர்களிடம் சீறியிருக்கிறார்.   புதிய அரசை இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பின்பற்றச் சொல்லி  சில உலமாக்கள் கேட்டுக் கொண்டபோது அப்படியான எண்ணம் இல்லை என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். அப்போதே ஜின்னாவை ஓரங்கட்டுகிற திட்டம் பாகிஸ்தானில் உருவாகியிருக்க வேண்டும். ஏனெனில் புதிய தேசத்தைக் கண்டவர்கள் அறிந்தோ அறியாமலோ இந்தியாவின் மீது வன்மத்தையும், பிரிந்ததால் வெற்றிப் பூரிப்பையும் கொண்டிருந்தார்கள். ஜின்னாவின் மனநிலை அப்படி ஒரு போதும் இல்லை என்பதுதான் உண்மை பாகிஸ்தானிலிருந்த சிறுபான்மையினர் (இந்தியர்) நலனில் ஜின்னா கொண்டிருந்த ஆர்வம் பாகிஸ்தானியர்களின் மனநிலைக்கு ஒவ்வாததாகவே இருந்தது. பழைய வெறுப்பிலேயே இந்தியர்கள் பார்க்கப்பட்டனர். 1948 இறுதியில் கராச்சியில் நடந்த கலவரத்தைக் கண்டு ஜின்னா திகைத்து தெம்பிழந்து போனார். இதற்கிடையில்  அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் ஜின்னாவைக் கொலை செய்யும் முயற்சியும் நடந்தது. சிறுபான்மையினராகிய இந்துக்களுக்கு  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்து இந்துக்களின் அகதிமுகாம் ஒன்றில் ஜின்னா கதறி அழுதது இந்தியாவரை எதிரொலித்தது. ஆதரவற்ற கையறு நிலையில் ஜின்னா இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விரும்பியது வரலாற்றின் உச்சகட்டச் சோகம்.
 மன உளைச்சல்களாலும்  தொடர்ந்து புகைப்பிடிக்கும்  பழக்கத்தாலும்  நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜின்னா 11.9.1948 அன்று இரவு மரணமடைந்தார். ஜமாத்- இ-இஸ்லாம்  தலைவர் ஜின்னாவைப் போன்ற காஃபிருக்கு, நாத்திகருக்கு, மதவிரோதிக்கு இறுதிச் சடங்குகள் செய்யமாட்டேன் என மறுத்ததுடன் அவரது மரண தினத்தை மகிழ்ச்சிக்குரிய நாளாகக்  கொண்டாடினார்.
 ஜின்னாவைப் போல இத்தனை மோசமான துயரம் ஆசியக் கண்டத்தில் எந்தத் தலைவருக்கும் நேர்ந்ததில்லை. ஒரு மதத்தின் பிரதிநிதியாக விருப்பமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவரை மதமே தீர்த்துக்கட்டியது.  தனக்கு விசுவாசமில்லாதவரை மதம் ஈவுஇரக்கமற்ற முறையில் விழுங்கத் தயங்காது என்பதற்கு ஜின்னாவின் வாழ்க்கை ஒரு உதாரணம். மாமனிதர் ஜின்னா என்னும் இந்த 220 பக்க நூல் ஏற்கெனவே  எழுதப்பட்ட இந்தியாவின் சரித்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.  இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் எந்தப் பக்கத்தில் ஜின்னா விருப்பு வெறுப்பற்ற முறையில் பதிவாகியிருக்கிறார்? இந்தக் கேள்வி தரும் உளைச்சல்தான் இந்த புத்தகத்தின் வாசிப்பனுபவம். ஜின்னா கடைசிவரை ஒரு பாகிஸ்தானியாக மாறவில்லை. அவர்  ஒரு இந்தியனாகத்தான் வாழ்ந்தார்.

பஷீராக மாறுவது சுலபமில்லை


பேப்பூர் சுல்தான்  என்றழைக்கப்படும் வைக்கம் முகம்மது பஷீருக்கு 2013 ஜனவரி 21ம் தேதி 105-வது வயது பிறக்கிறது. இதை அறிந்த கணத்தில்  என் மன வாகனம் சற்றும் தாமதிக்காமல் கள்ளிக்கோட்டைக்குப் புறப்பட்டுவிட்டது.
கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) நமக்குப் புதிதில்லை. மிகவும் பரிச்சயப்பட்ட பூமிதான். எனவே அங்கிருந்து பேப்பூருக்குச் செல்வது அத்தனை சிரமமான காரியமாகப்படவில்லை. நான் சென்ற நேரம் பஷீர் பாட்டன் மும்முரமான உரையாடலில் இருந்திருக்க வேண்டும். அவருடைய வீட்டிலிருந்து அலையலையாக மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், பாட்டாளிகள், மாணவர்கள், வியாபாரிகள், பைத்தியக்காரர்கள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் மற்றும் திருடர்கள்... தினுசு தினுசான பலதரப்பட்ட முகங்கள். வெளியேறிய அந்த முகங்களில் உரையாடலின் திருப்தி மட்டும் நிரந்தரமாக வழிந்து கொண்டிருந்தது. அது எனக்கு முக்கியமாகப்பட்டது.
 ஒரு பூனையாகவோ, அணிலாகவோ, தாய்க்கோழிக்குப் பின்னே அலைகின்ற குஞ்சுகளில் ஒன்றாகவோ, ஆட்டுக்குட்டியாகவோ குருவியாகவோ எந்த வடிவெடுத்து பஷீரின் வீட்டுக்குள் நுழையலாமென நான் யோசிக்கிறேன். ஏனெனில் பஷீரின்  வீட்டிற்குள் நுழைய மனிதர்களைக் காட்டிலும் ஏனைய நலிந்த   ஜீவராசிகளுக்கே  அதிகம் உரிமையுண்டு. பஷீரின் உரையாடலும் அவற்றோடுதான் மிக இணக்கமாக இருக்கும்.
முதலில் ஒரு ஆட்டுக்குட்டியாக நுழைந்து அவர் கண்ணெதிரில் வளர்ந்து நிற்கும் செடிகொடிகளை மேய்கிறேன். மங்குஸ்தான் மர நிழலில் சாய்வு நாற்காலியிலிருந்தவாறு  ஏதோ வாசித்துக் கொண்டிருந்த அவர் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மெல்லிய முறுவலுடன் மீண்டும் வாசிப்பைத் தொடர்கிறார். என்னை அவர் விரட்டுவாரானால் ÔÔசுல்த்தானே நான்தான் உங்கள் பாத்துமாவின் ஆடுÕÕ என்று கத்திவிட தீர்மானித்திருந்தேன். இப்போது பூனையாக உருமாறி அவருடைய சாய்வு நாற்காலியின் மேல் தாவிச் செல்கிறேன். கையிலிருந்த புகைந்த பீடியை அணைத்துவிட்டு என்னை மென்மையாக வருடித் தருகிறார். ஒருவேளை அவர் அந்த வருடலைத் தவிர்த்திருப்பாரானால் ÔÔநான்தான் உங்கள் மாந்திரீகப் பூனைÕÕ என்று குழைந்திருப்பேன். மெலிந்து தளர்ந்த அவருடைய  கைகளின்  ஸ்பரிசத்தில்  சிலிர்த்துப்போய் அவர் எதிரில் மனித உருவமெடுத்து அமர்கிறேன். ப்பா..Ôஎன்ன கதை விடுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? இன்னுமா பஷீர் உயிரோடிருக்கிறார்Õ என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஏற்கனவே சொல்லிவிட்டேன். நான் பயணித்தது மன வாகனம் என்று. ஆகவே  நண்பர்களே, நம்முடைய பஷீர் எப்போதும் ஜீவித்திருக்கிறார். அவருக்கு மரணமே இல்லை.  எளிய மலையாளிகளின் சுவாசத்தில் அவர் விரும்பி அருந்துகின்ற சுலைமானி என்னும் கருப்புத் தேநீராக நிரந்தரமாகக் கலந்திருக்கிறார்.

கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழை வேறெந்த மலையாள எழுத்தாளரும் இவ்வளவு தூரம் ஆக்கிரமித்ததில்லை. அனேகமாக 90சதவீதம் பஷீர் தமிழ்ப்படுத்தப்பட்டிருப்பார் என நினைக்கிறேன். வைக்கம் முகம்மது பஷீர் என்கிற பெயரைக் கண்டால் அது யாருடைய  மொழிபெயர்ப்பாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்,  தமிழ் வாசகர்கள் அவரை செல்லமாகக் கைகளில் ஏந்திக் கொள்வார்கள். பஷீர் என்கிற மேதைமைக்கு, அவருடைய கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் நம்மில் உண்டு. ஆயினும் பஷீரின் படைப்புகளை எவ்வளவு தூரம் இவர்கள் உள்வாங்கியிருப்பார்கள் என்கிற சந்தேகம் எனக்கு எப்போதுமே இருக்கிறது.  சரி, பஷீர் என்கிற மகத்தான கதாபாத்திரத்தை, தனிமனித சொரூபத்தை மட்டும் எத்தனைபேர் புரிந்திருக்கக்கூடும்? அது எத்தனை சுலபமான காரியமாக இருப்பினும் கூட. ÔÔபடைப்பைப் பார், படைப்பாளியைப் பார்க்காதேÕÕ என்றல்லவா நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே பார்க்க பஷீர் என்ன ஆணழகனா? சினிமா நட்சத்திரமா?
நிர்வாணம் என்று சொல்லிவிட முடியாத அளவிற்கு ஒரு சிறிய வேட்டியை மட்டும் இடுப்பில் செருகிக்கொண்டு திரிந்த அந்தக் கிழத்திற்குத்தான் தனது வாசகிகளின் கடிதங்களை ÔÔகாதல் கடிதங்கள்ÕÕ என்று சொல்ல ஆண்மை இருந்தது. சபைகளில் உரையைத் தொடங்கும் முன் அவர் கடவுளிடம் வேண்டுவது ÔÔபெண்களுக்கு அதிகம் அழகு கிடைக்க வேண்டுகிறேன். ஆண்களுக்கு இப்போது இருக்கும் அழகெல்லாம் போதும்ÕÕ ஏ அப்பா! என்ன ஒரு கிண்டல்?
 இந்த சந்தர்ப்பத்தில் பஷீரை நான் வேறொரு கோணத்தில் அறிமுகப்படுத்தி நினைக்கிறேன். அவருடைய படைப்புகளைத் தாண்டிய படு சுவாரஸ்யமான குணசித்திரம் அது.
அது எந்த இந்திய எழுத்தாளருக்கும் வாய்க்காதது. வித்தியாசமென்றால் அது எளிமையிலும் சிறந்த பேரெளிமையிலிருந்து உருவாகுவது. கரணமடித்தாலும் நமக்கெல்லாம் வாய்க்காதது. எழுத்தாளன் என்கிற இருமாப்புடன் நெஞ்சுயர்த்தி மீசை முறுக்கி உரத்த குரலில் கூவி இன்னும் கூடாத தமாஷ்களெல்லாம் செய்து கொண்டிருப்பவர்கள்தானே நாம்?
 பஷீர் தோற்றத்தில் மிக சாதாரணம்தான். பிரமாதம் என்று சொல்லத் தக்கவையாவும் அவருடைய விசேஷமான வெளிப்பாடுகள்தாம். அதிலும் அவருடைய அந்த நகைச்சுவையுணர்வு உலகபிரசித்தம். கலைஞர்களுக்கே உரித்தான மனப்பிறழ்வும் இயல்பாகவே சேர்ந்து கொண்டதால் அவ்வெளிப்பாடுகள் எல்லாமும் மிகையற்ற யதார்த்தம் சொட்டுபவை.
எப்படிப்பட்ட எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு தைரியமிருந்ததில்லை. என்னவென்று கேளுங்கள். பஷீரைக் காண வருகிறவர்களை அவர் ஆசீர்வதிப்பதுண்டாம். ஆண்களானால் கையுயர்த்தி ÔÔலோகா ஸமஸ்தர் ஸ¨தினோ பவந்துÕÕ பெண்களானால் ÔÔதீர்க்க சுமங்கலிபவÕÕ திருடர்களானால் ÔÔசுக திருடல்ÕÕ
 
பஷீரைக் குறித்த இந்த நூலை எழுதிய எம்.என். காரச்சேரியிடம் பஷீர் ஒருமுறை சொல்லியிருக்கிறார்,
ÔÔமுகமது நபி தன் மகள் பாத்திமா, மருமகன் அலியுடன் என்னைப் பார்க்க வந்தார்ÕÕ
இது கேட்டுத் திடுக்கிட்டுப்போன காரச்சேரி Ôநபி வந்ததற்கு ஏதேனும் ஆதாரமுண்டாÕ என கேட்கிறார். உடனே பஷீர் தன் அருகில் இருந்த இரண்டு செடிகளை காண்பிக்கிறார். ஒரு செடியில் அழகான சிவப்பு நிற மலர் மலர்ந்திருக்கிறது. மற்றொரு செடி வாடிக் கருகி நிற்கிறது.
ÔÔபூ மலர்ந்த செடி நபி நட்டது. வாடிய செடி அவருடைய மருமகன் அலி நட்டதுÕÕ
பஷீர் சொன்ன இந்த வார்த்தைகளில் தான் எத்தனை உள்ளர்த்தம் பொதிந்திருக்கிறது? இதை நீங்கள் யோசிக்க வேண்டுமானால் கண்டிப்பாக ஒரு இடைவெளி விடுகிறேன்.
  
அலாதியானதொரு இசைப்பிரியர் பஷீர். இசையில் ஆழ்ந்து கிறங்கிப்போன அனேக சம்பவங்கள் அவர் வாழ்க்கையில்  நிறைந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளரான அவர் அதிகமும் பாதுகாத்து வைத்திருந்தவை புத்தகங்கள் அல்ல.  ஒரு பழைய கிராமஃபோனும், ஏராளமான இசைத்தட்டுகளும்தான். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்த பஷீர் இசைக் கச்சேரிகளில் முன் வரிசையில் அமர்ந்து தலையாட்டிக் கொண்டிருந்ததை காரச்சேரி வியந்து எழுதுகிறார். இசையை வெறுக்கிற அல்லது புறக்கணிக்கிற இஸ்லாம் சமூகத்தில் பிறந்த பஷீர் இசையில் தோய்ந்து, உச்சக்கட்டமாக சொன்ன வார்த்தைகள்
ÔÔஇசைதான் இறைவன்ÕÕ
1985-களில் ஷா பானு பிரச்சனை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருந்த நேரத்தில் பஷீர் ÔÔஇப்படியெல்லாம்  தலாக் கொடுப்பவன்களின்  ஆண் இயந்திரத்தை வெட்டித் தோளில் தொங்கவிட வேண்டும்ÕÕ என்று விமர்சித்திருக்கிறார்.
பஷீருக்கு Ôபத்வாÕ கொடுக்கிற துணிச்சல், கடைசிவரை கேரளத்தில் எவருக்கும் இருந்ததில்லை. சீரழிவின் எழுத்தாளன், செக்ஸ் ரைட்டர் என்று வேண்டுமானால் விருப்பத்துக்குத் திட்டித்தீர்த்திருக்கிறார்கள்.
   
பஷீரின்  இயற்பெயர் கொச்சு முகம்மது. வைக்கம் முகம்மது பஷீர் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராக அரசியல் கட்டுரைகள் எழுதியபோது சூட்டிக் கொண்ட புனைப் பெயர். பஷீரின் அரசியல் ஈடுபாடுகள் நாம் அதிகம் அறிந்திராத பக்கங்கள். பதினாறு வயதுகளில் பஷீருக்கு காதல் மோகமும் அரசியல் தாகமும் சேர்ந்தே வந்திருக்கிறது. தந்தை பெரியார் ஈடுபட்ட வைக்கம் போராட்டம் தான் அவரைக் கவர்ந்த முதல் அரசியல் நிகழ்வு.
1925-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்திற்கு வந்த மகாத்மா காந்தியின் வலது தோள்பட்டையை பஷீர் தொட்டதுதான் அவருடைய வாழ்க்கைச் சரிதத்தில் மிக முக்கியமான சம்பவமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு மனித சமூகத்திற்கு கிடைத்த நிகரற்ற நறுமணமாகவும் கேட்கக்  கிடைத்த  ஜீவனுள்ள இசையாகவும் காந்தியை அவர் வர்ணித்திருக்கிறார். பின்னாட்களில் காந்தியின் செயல்பாடுகளில் அவர் முரண்பட்டதும் உண்டு. உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்குபெற்றதற்காக கோழிக்கோட்டிலும்  ÔÔபாக்கியம் கெட்ட என் நாடுÕÕ என்ற கட்டுரை எழுதியதற்காக பிரிட்டிஷாரால் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகாலம் திருவனந்தபுரத்திலும்  சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.
பஷீருக்குள் ஒரு கம்யூனிஸ இதயம் எப்போதுமே இயங்கி வந்திருக்கிறது. 1937ல் பஷீர் எழுதிய  Ôகாரல்மார்க்ஸ்Õ என்கிற சிறந்த கட்டுரை உலகெங்கிலுமுள்ள  ஏழைப்பாட்டாளி  வர்க்கத்தின் மீது மார்க்ஸ் கொண்டிருந்த  பேரன்பையும், பரிவையும் அந்த மாமனிதனின் உன்னத செயல்பாடுகளையும் மலையாளிகளுக்கு அடையாளப்படுத்திய ஆவணமாகும். கே.சி.ஜார்ஜ், கே.தாமோதரன், கோவிந்தன் நாயர் உள்ளிட்ட கேரளத்து இடதுசாரித் தலைவர்களுடன் பஷீர் இணக்கமும் நெருக்கமும் கொண்டிருந்தார். பகத்சிங்கைத்  தன் ரோல்மாடலாக, ஆதர்ஷ புருஷராகவே கருதிய பஷீர், மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்த்துக் கொண்டு வானரசேனை என்றொரு தீவிர  அமைப்பையும் உருவாக்கி அரைக்கால் டிராயரும் முறுக்கிய மீசையுடன் தொப்பியும் ஷ§வுமணிந்து பகத்சிங்கின் நகலாகவே நடமாடிய காலங்கள் இருந்திருக்கின்றன. இவ்வாறான ஆர்வக்கோளாறான மனநிலைகளிலிருந்து தான் பஷீர் மகோன்னதமான மனிதராக, கலைஞனாக உருமாறியிருக்கிறார்.
கூலித்தொழிலாளியாக, குறி சொல்பவனாக, ஓட்டல் சர்வராக, மருந்து அரைப்பவனாக, பிட்டராக, மந்திரவாதி ஒருவனின் கையாளாக, டியூஷன் மாஸ்டராக, விற்பனைப் பிரதிநிதியாக, பத்திரிகையில் புரூப் பார்ப்பவராக, பரதேசியாக, இந்து துறவிகளில் ஒருவராக, சூஃபியாக ....அப்பப்பா வாழ்க்கை என்னும் மேடையில் பஷீர் தரித்த வேடங்கள் கணக்கிலடங்காதவை.  எனவே அவர் படைத்த கதாபாத்திரங்களதிகமும் பாவப்பட்ட விளிம்புநிலைப் பிரஜைகளாகவே இருந்ததில் நாம் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை.
சிறந்த வாசகராக நான் மதிக்கும் என் நண்பர் ஒருவர் ஒரு சந்திப்பின்போது என்னிடம் ÔÔஉங்கள் எழுத்து ஈர்த்த அளவுக்கு பஷீரின் எழுத்துக்கள் ஏனோ என்னை பெரிய அளவுக்கு ஈர்க்கவில்லைÕÕ என்று சொன்னார். எனக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது. பஷீர் காட்டும் உலகத்தைப் புரிந்துகொள்ள முதலில் பஷீராக நீங்கள் மாறவேண்டும். அது சுலபமல்ல.  தமிழ்வாசகர்கள் அவர்கள் நவீன இலக்கிய வாசகர்களானாலும் இங்குள்ள ஒருவித எழுத்து மாயைக்கு, சிக்கலான மொழிப் பிரயோகத்திற்கு பழகிப்போயிருக்கிறார்கள். பஷீரை மொழி பெயர்ப்பவர்கள்  பஷீரின் ஆன்மாவை மொழி பெயர்ப்பவர்கள் அல்லர். அவர் பிரயோகிக்கிற கொச்சை மலையாளமும், வழக்குச் சொற்களும் அகராதிகளுக்குள் நீச்சலடித்தால் அகப்படாதவை. அந்த வகையில் தமிழ் வாசகர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.
பஷீரின் கதை சொல்லும் பாங்கு இங்குள்ள அதி நவீனர்கள் சிலருக்கு எரிச்சலூட்டக்கூடும். அதிகமும் சுயசரிதைத் தன்மை கொண்ட Ôநான்Õ எழுத்து அவருடையது. ஒன்றுக்கு இரண்டு Ôநான்Õ போட்டால் நம்மவர்கள் கொதித்துப் போவார்கள். ஸ்டேட்மென்ட் என்றும் தட்டை என்றும் குற்றம் சுமத்துவார்கள்.
 புத்தூஸ், படுக்கூஸ், டுங்குடுதஞ்சி, பப்ளிமூஸ்குண்டி, பளுங்கூஸன், ஹ¨ந்தராப்பி, புஸ்ஸாட்டோ,  லுட்டாப்பி என்றெல்லாம் அவர் பயன்படுத்துகிற மலையாள முஸ்லிம் நாட்டார் வழக்கையும், ஆனவாரி பொன்குரிசு, ஒத்தக்கண்ணன் போக்கர், மண்டன் முத்தபா, தொரப்பான் அவரான் போன்ற அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஹீத்தினஹா லிட்டலித்தாப்போ என்று அவர் எழுதிய பாடலையும் கேட்டால் முகம் சுளிப்பார்கள்.
பஷீரின் நாவலொன்றில் நாயகன் துயரம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் பொருட்டு ஒரு ரயில் தண்டவாளத்தில் தலை வைக்கிறான். ரயில் அந்த தண்டவாளத்தில் ஓடாமல் பக்கத்து தண்டவாளத்தில் சீறிப் பாய்ந்து செல்கிறது. மற்றொரு கதையில் நாயகன் பேரழகியாக நினைக்கிற நாயகிக்கு காற்றுப்பிரிகிறது. நாயகனுக்கோ அவள் மீதுள்ள அபிமானம் உடைந்து சிதறுகிறது. கதையின் பெயரே பர்ர்ர்... இந்த இரண்டு விஷயங்களையுமே தமிழ் சினிமாக்காரர்கள் லபக்கியிருக்கிறார்கள்.
பஷீரின் வாழ்க்கையையும் ஒரு சுவையான திரைக்கதையாக்க முடியும். மலையாளிகள் ஏனோ இதை செய்யத்தவறியிருக்கிறார்கள்.
 இந்த நூலை மொழி பெயர்க்க சாகித்ய அகாடமி, தோப்பில் முஹம்மது மீரானை அழைத்தது மிகச் சிறந்த தேர்வு. ஏனெனில் தோப்பிலுக்குள் எப்போதும் பஷீர் உண்டு. அவரும் தன் பணியை மிக அனுபவித்துச் செய்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் மலையாள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துகிறார். இது மலையாளமறியாத தமிழ் வாசகர்களுக்கு மிரட்சியூட்டக்கூடும். மற்றொன்று பிரதி முழுக்கவுமே மெய்ப்புத் திருத்தம் செய்யப்படவில்லை பக்கத்துக்கு இருபது பிழைகள். சும்மா நோக்கத்துக்கு விரவிக்கிடக்கிறது. சாகித்ய அகாதமி போன்ற பொறுப்புள்ள  நிறுவனங்கள்  இதில் கவனம்  செலுத்தாதது ஆச்சரியமேற் படுத்துகிறது. இந்நூலிலுள்ள விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு என்னால் இருநூறு பக்கங்களுக்கு பஷீரைக் குறித்த ஒரு சுவாரசியமான உரையாடலைத் தரமுடியும். அது காரச்சேரியின், தோப்பிலின் வெற்றி!
இறுதியாக... எங்கள் வாப்பூப்பாவை, மூதாதையை, அத்தாவுக்கு அத்தாவாகிய ராத்தாவை, தாத்தனைப் பாட்டனை, வாப்பாக்களையும் உம்மாக்களையும் முதன் முதலாக இலக்கியத்தில் பதிவு செய்த பிரம்மாவை, ச.த. பாணியில் சொல்வதானால் எங்கள் குலசாமியை ஒரு பெரிய சலாம் வைத்து வணங்குகிறேன்.

ஒரு மீன் வியாபாரி கவிதைகள் விற்கிறான்



நீயும் குழந்தைகளும் என்றென்றைக்கும் என்னுடையவர்கள் மட்டும் தானென்று நான்நம்பவில்லை. இதுபோன்ற துர்விதி என்னை வேட்டையாடுமென்றால் நாளை உங்களை ரட்சிப்பதற்கான எனது கடைசி தந்திரமும் தவறிப்போகும் பட்சத்தில் உனக்கு விருப்பமில்லை என்றாலும் உனது இதயம் வேறு ஒருவனுடைய சூடு தேடிச் செல்லும். அவன் பரிசாய்த் தருகின்ற இனிப்புப் பலகாரங்களிலும் விளையாட்டுச் சாதனங்களிலும் நமது குழந்தைகள் சந்தோஷத்தில் மூழ்கிப் போவார்கள்.
பிறகு... பிறகு... அர்த்தமற்ற இந்த வாழ்க்கையின் வெள்ளரித் தோட்டத்தில் நான் வெறும் சோளக் கொல்லை  பொம்மைதான்.ÕÕ
          -பவித்ரன் தீக்குன்னி (மலையாளம்)
 தமிழும் மலையாளமும், சகோதர மொழிகள் என நாம் கூறிவந்தாலும், திராவிட மொழி இனங்களில் மலையாளத்துக்கென்று சில தனித்த பண்புகள் உள்ளன. மிகப் பழமை வாய்ந்த இலக்கண நூலான தொல்காப்பியத்தின் இலக்கண விதிகளுக்கேற்ற  சொல்லாட்சிகள் மிகுதியாக மலையாளத்தில் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. எண்ணற்ற திராவிட சொற்களை தமிழர்களாகிய நாம் நிகண்டுவின் துணை கொண்டுதான் பொருள் உணர முடிகிறது. ஆனால் மலையாளத்தில் அவை Ôவழக்குச் சொற்களாகவேÕ நீடிக்கக் காணலாம். மூல திராவிட மொழியிலிருந்து பிரிந்த மலையாளத்தில் செந்தமிழும், சமஸ்கிருதமும், இரண்டறக் கலந்திருக்கின்றன.  இப்படி கலப்பான மொழியைக் கொண்டு ஒரு இலக்கிய நடையை உருவாக்கி அதற்கு Ôமணிப்பிரவாளம்Õ என்றும்   பெயரிட்டனர். முன்பு நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் சிலர் மணிப்பிரவாள நடையில் எழுதினார்கள். அதற்கு தனித்தமிழ்வாதிகளின் எதிர்ப்பும் விமர்சனமும் தீவிரமாக இருந்தது. ஆனால் மலையாளத்திலும், சமஸ்கிருதத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அந்த Ôபிரவாள நடையில்Õ ஒரு கிறக்கம் உண்டு. எழுதத் தொடங்கிய புதிதில் மணிப்பிரவாள நடையில் எழுதமுயன்று வாங்கிக்கட்டிக் கொண்ட அனுபவம் எனக்கிருக்கிறது.
பவித்ரன் தீக்குன்னியை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும்போது இந்தப் பீடிகைகள் தேவையற்றவை என்றே தோன்றுகிறது. ஏனெனில் இலக்கியப் பாரம்பரியப் பெருமிதமோ, வம்சாவழிக் கசடுகளோ, இவர் மேல் பதிந்து கிடக்கக் காணோம்.  வாழ்க்கை இவர் மேல் நிர்ப்பந்தித்த கொடூரங்கள் யாவற்றையும் எதிர்கொண்டு இன்றுவரை அவரால் எப்படி ஒரு கவிஞனாக தன்னுடைய இருப்பை அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதில் தான் தீக்குன்னியின் சாகசம் வெளிப்படுகிறது.  
ஆம்! நிச்சயமாக இது ஒரு சாகசம்தான்!  சில மாதங்களின் முன்னர் நான் பவா செல்லத்துரையின் ஒரு கட்டுரைத் தொகுப்பை வாசிக்கையில் மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு குறித்த அவரின் பதிவு ஒன்று எனக்கு மிகுந்த மனசஞ்சலத்தை அளித்தது. இன்றைக்கு தீக்குன்னியை வாசிக்கும்போது, அந்த சஞ்சலம் பலநூறு மடங்குகளானதாக உணர்கிறேன். எனினும்  சுள்ளிக்காடும், தீக்குன்னியும் இரு வேறு துருவங்கள். இருவருக்குமான வாழ்க்கை இடர்பாடுகள் வேறு வேறுவிதமானவை. 
ஒரு படைப்புக் கலைஞன் வறுமையை எதிர்கொள்வது இலக்கியத்திற்கு புதிய செய்தி இல்லைதான். தமிழில் பாரதியும், புதுமைப்பித்தனும் பெரும் முன்னுதாரணங்கள். இவர்கள் மட்டும் தானா என்றால் இல்லை. இவர்களுக்கு முன்னாலும், புலமைப் பாரம்பரியம் தரித்திர வயப்பட்டதாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் ÔÔசேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்ÕÕ என்று எழுதி வைத்தனர்.
நம்முடைய சமகால எழுத்தாளர்கள் இதைக் காட்டிலும் துன்ப துயரங்கள் படுகின்றனர். வாழ்க்கை இவர்களைப் பார்த்து பரிகசிப்பது பிறர் கண்களுக்குத் தெரிவதே இல்லை. தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் கலைஞர்களாக சபிக்கப்பட்டுவிட்டனர். சாபத்தை வரமாக்கிக் கொண்டு எவரிடத்தும் சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களாக தமிழின் உன்னதமான சிருஷ்டிகர்த்தாக்களில் பலரும்  உள்ளடுங்கி ஒதுங்கி வாழும் அவலம் இன்றளவும் தொடர்கிறது.
 மலையாளம் கலைஞனை மதிக்கத் தெரிந்த உலகம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். பவித்ரன் தீக்குன்னியின் அனுபவங்களை வாசிக்கும்போது அச்சமும், பீதியும் நம்மையும் அறியாமல் நம்மேல் வந்து கவிந்து கொள்கிறது. 1974ல் கோழிக்கோடு மாவட்டத்தில் தீக்குன்னி என்னுமிடத்தில் பிறந்த பவித்ரனின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி.  தந்தை மனம் பிறழ்ந்தலைபவர். ஒரு பச்சையான அயலை மீனைக் கடித்துத் தின்று கொண்டிருந்த தன் தந்தையின் வாயிலிருந்து அந்த மீனின் செவிலும், குடலும், வெளியே தொங்கிக் கொண்டிருந்த காட்சியை  எவ்வித அருவருப்பும் இல்லாமல் ÔÔஒரு மீன் வியாபாரி கவிதைகள் விற்கிறான்ÕÕ  என்னும் தன்னுடைய முன்னுரையில் தீக்குன்னி குறிப்பிடுகிறார். தீக்குன்னிக்கும் கூட மீன் வியாபாரம்தான். உபரியாக லாட்டரி டிக்கெட் விற்பனையும் நடத்தும் இவர் தேர்தல் காலத்தில் கம்யூனிஸ்டு இயக்கத்துக்காக மைக்கைப் பிடித்துக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
சமீபமாக வாசிக்கின்ற கவிதைத் தொகுப்புகளி லெல்லாம் அபூர்வமான சில முன்னுரைகளைக் கவிஞர்கள் எழுதிவிடுகின்றனர். கவிதைகளைக் கடந்து அவை மனதை அசைத்துப் பார்த்துவிடுவது ஆச்சரியமாகவே இருக்கிறது. 79 பக்கங்களில் முடிந்துவிடும் இத்தொகுப்பில் பவித்ரன் தீக்குன்னி 22 பக்கங்களைத் தன்னுடைய முன்னுரைக்காக மட்டுமே எடுத்துக் கொள்கிறார். அந்த முன்னுரையில் அவருடைய வாழ்க்கை அவலங்கள் அப்படியே அட்சரங்களாக குற்றுயிரும், குலையுயிருமாகச் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை வாசிக்கும்போது பவித்ரன் பட்ட பாட்டுக்கு முன்னால் நம் துன்பம் கொஞ்சம் என்றுதான் எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும். 
ÔÔஅம்மா ஒரு மோசமான பெண் என்று என்னிடம் யார்யாரோ சொன்னது உண்டு. அப்போதெல்லாம் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்றாலும் நான் ஐந்து வயது முதலே அம்மாவை வெறுக்கத் தொடங்கி விட்டேன். வெறுப்பு அதிகமானபோதெல்லாம் யாருடைய கண்களிலும் படாமல் எங்கெல்லாமோ அலைந்து திரிந்தேன். ஆனாலும் ஓயாமல் அடித்துப் பொழிகின்ற ஒரு ஆடி மாத மழையைப் போல அம்மா இன்னும் என் மனசுக்குள் இருக்கிறாள்ÕÕ என்று அவர் எழுதும்போது அம்மா பிள்ளை பாசம் குறித்து வலிந்து வலிந்து எழுதப்படுகின்ற நம் எழுத்துக்கள் எல்லாமும், பஸ்பமாகி விடுவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவ்விடத்தில் எனக்கு தி.ஜானகிராமனின் Ôஅம்மா வந்தாள்Õ  நாவலின் அப்பு நியாபகத்திற்கு வரவே செய்தான். அப்புவிற்கேனும் சுழித்துக்கொண்டோடும் காவிரியின் படித்துறையில் அமர்ந்து அழ வாய்த்தது.
 ஒரு ஓணம் பண்டிகை நாளில் கடன் தொல்லை தாளமாட்டாமல் திருச்சூர் ரயில்நிலைய  தண்டவாளத்தில் படுத்து தீக்குன்னி தன் மனைவி மக்களுடன் தற்கொலைக்கு முயற்சித்த அந்த கசப்பான பக்கங்களை உங்களிடம் விவரித்துச் சொல்ல எனக்கு மன தைரியம் போதவில்லை. ஆதலால் இம்மட்டிலும் அதை முடித்துக்கொள்கிறேன்.
 ஒரு பட்டினி நாளில் தன் மகளை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு கோயில் வாசலில் பிச்சை எடுக்கப்போகிறான் கவிஞன். Ôகவிஞன்Õ Ôகவிஞன்Õ என்று தன்னைக் கூவிக்கொண்டாலும் பிச்சை விழவில்லையே? மகளை நன்றாகக் கிள்ளிவிட்டு வலியால் அவள் வாய்விட்டுக் கதறி அழுதவுடன் தான் கொஞ்சம் போல மனிதமனம் இரங்குகிறது. சில சில்லறை நாணயங்கள் சிதறி விழுகின்றன. அதில்தான் அன்றைக்கு உணவு.
 மலையாளிகள் ஏன் இத்தனை அப்பட்டமாக எழுதுகின்றனர்? அவர்களுக்கு ஏன் ஒளிவு மறைவாகப் பூசிமெழுகி எழுதத் தெரியவில்லை? என்.டி.ராஜ்குமார் ஏன் இதைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க வேண்டும்? இப்படியெல்லாம் எனக்கு கேட்கத் தோன்றுகிறது.
 அலையடங்கிய கடலின் அவஸ்தையோடு தான் நாங்கள் இருக்கிறோம். கவிதைகளுக்குள் அதே அவஸ்தைதான் தோன்றுகிறது. நெஞ்சுக்குள் அடங்கிக் கிடக்கும் தீயைப் போல
என்று பவித்ரன் எழுதுகிறார்; மகத்தான கவிதையன்றும் நான் எழுதியதில்லை என்று சொல்லிக் கொண்டே.
வழிநெடுகத் தொடரும் வாதைகளோடும், Ôகிறுக்கனுக்க மகன்Õ என்னும் அடைமொழியோடும், தீக்குன்னி நடந்தாலும் கவிதைகள் எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை. தனக்கான ஒரே Ôபாதுகாப்பு வளையம்Õ என்று அவர் கவிதைகள் எழுதுவதைத் தான் குறிப்பிடுகிறார். இந்த நெஞ்சுரம்தானே தேவை ஒரு கலைஞனுக்கு?
கவிதைகளை எளிமைப்படுத்தி விட்டார் என்றும் தன் வரலாறைக் கவிதையாக முன் வைக்கிறார் என்றும், கவிதைக்கான இறுக்கத்தைத் தரக்கூடிய சமஸ்கிருத எல்லைகளைத் தவிர்த்துவிட்டார் என்றும் இவர்மேல் ஒருபாடு குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் வழியே  இதுகாறும் மலையாளக் கவிதைகளின் சுயம் என்னவாக இருந்தது என நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இவர்தான் இப்போதைக்கு மலையாளக் கவிதைகளின் ரட்சகன் என்று நம்மால் தீர்ப்பளித்துக் கொள்ள முடியும்.
 பவித்ரனின் இந்த நீண்ட முன்னுரை, அவருடைய தொகுப்புக்கு பலவீனமா, பலமா என்று சொல்லத் தெரியாமல் தத்தளிக்கிறேன். முன்னுரையைப் படித்துவிட்டு கவிதைகளை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையை முதல் முதலாக இத்தொகுப்பில் தான் அடைந்தேன். பிறகு என்னை நானே தேற்றிக் கொண்டு மீண்டும் மீண்டும் கவிதைகளை வாசித்தேன். குற்றியாடி பேருந்து நிலையத்து வேசிகள் சுண்ணாம்பு தேய்த்து  வெற்றிலையிட்டு சிவப்பாக்கிக் கொண்ட உதடுகளுடன் என்னை முத்தமிடத் துரத்திக் கொண்டே வருகிறார்கள். முல்லைப் பூவும் வியர்ப்பும் கலந்த விசித்திர மணத்திலிருந்து கண்ணீரின் மொழியில் ஒவ்வொரு வேசியும்  ஒவ்வொரு கதை சொல்லத் துவங்குகிறாள்.

**
அழுவதற்கு கண்ணீர் கூட இல்லாத
மனைவியின் கைகளில்
இளம் சூடுள்ள இதயத்தைக்
கொடுத்து விட்டு
நான் அந்த கிணறை நோக்கி நடக்கின்றேன்
மீன் குட்டையை கழுவுவதற்கு
**
செவிள் களைந்து துண்டுகளாக்கி
கீறி மிளகு தேய்த்து எண்ணெயிலிட்டு
 பேராசையோடு அவளென்னை
எவ்வளவு சீக்கிரம்
அகப்பையிலெடுக்கிறாள்.
**
ஒவ்வொரு வேசியின் நெஞ்சுக்குள்ளும்
வயது முதிர்ந்தவர்களின் மகா சமுத்திரங்கள்
அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
 கண்களில் தோல்விகளின் சவக்கல்லறைகள்
 மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது.
 உதட்டிலும் நெற்றியிலும் வாழ்க்கையின்
 கறைபடிந்திருக்கின்றது
 அவற்றின் மேல் எதுவும் அறியாமல் நாங்கள்
 முத்தமிட்டு திமிர்பிடித்து அலைகின்றோம்.
**
 இவையெல்லாம் தீக்குன்னி கவிதைகளின் சில தெறிப்புகள். பவித்ரன் தீக்குன்னியின் கவிதைகளில் வாழ்க்கையைத் தவிர வேறெதுவும் இல்லை. அது சரி... வாழ்க்கையைத் தவிர்த்து வேறென்ன வேண்டும் கவிதை எழுத?
எழுத்துப்பிழைகள் வஞ்சகமின்றி  விரவிக்கிடக்கும் தொகுப்பு இது. இப்படி ஒரு படைப்புக்கு முன்னால் இது மாதிரி குறைகளெல்லாம் சாதாரணமானவைகள் தான். என்.டி.ஆர். இதை அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார் என்று சொல்வது மிக்க அலங்காரமான வார்த்தையாகிவிடும். பவித்ரனின் அசாதாரணமான வலிகளை தன்னுடையதாகவே பாவிக்க முடிந்த ஒருவரால் மட்டுமே செய்ய முடிந்த காரியம்இது.
 ÔÔதான் ஒரு நல்ல கவிஞனான பிறகும் ஜீவிதம் என்பது நெஞ்சிலும் இலக்கிய அரசியல் என்பது புறமுதுகிலும் குத்திக் குத்தி எப்போதுமே இவரை புண்படுத்திக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இங்கிருந்துதான் இவரது கவிதையே ஆரம்பமாகிறதுÕÕ என ஒரு சில வரிகளில் சுட்டி விடும் ராஜ்குமாருக்குள் பவித்ரன் தீக்குன்னி ஒரு பச்சை அயிலைமீனாக செவிலும், குடலுமாக இறங்கி வெகுநாட்களாகியிருக்க வேண்டும்.

Wednesday, March 27, 2013

கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம்



ஊருக்கு உவக்காததைச் சொல்ல
ஒருவனுக்குத் தனிநரகம் உண்டென்றால்
அங்குதான் ஜீவிப்பேன் நான்...                                                                            
−க.நா.சு.

  மறைந்த எழுத்தாளர் க.நா.சு.வின் நூற்றாண்டு இது என்பதால் தமிழின் பெரும்பாலான சிறு பத்திரிகைகள் அவரைக்குறித்த கட்டுரைகளைக் கேட்டு எழுதி வாங்கி வெளியிட்டு ஓய்ந்திருக்கின்றன.  ஒரு எழுத்தாளரின்   நூற்றாண்டை இப்படி எல்லாம் விமர்சையாக கௌரவிக்க வேண்டும்தான். இயன்றால் இன்னும் அதிகமாகக் கொண்டாட வேண்டும்தான். க.நா.சு.வும் இந்தப் புகழுரைகளுக்குத் தகுதியானவரே. எனக்கும் கூட கா.ந.சு.வை எழுதவேண்டும் எனத் தோன்றியதில் ஒருவித நியாயம் இருக்கிறதுதான். ஓரளவு அவருடைய எழுத்துக்களை வாசித்தவனாக, அவருடைய இலக்கியப் பங்களிப்பைக் குறித்து அறிந்தவனாக, அவருடன் நீண்டகாலம் பழகி நிழல்போல் தொடர்ந்து சென்றதால் அவருடைய Ôவால்Õ என்று வர்ணிக்கப்பட்ட தஞ்சை ப்ரகாஷ் என்பவருடன் இருந்து, அவர் வாய்ஓயாமல் க.நா.சு.வைக் குறித்துப் பேசியதை எல்லாம் காதுகொடுத்துக் கேட்டவனாக இருந்ததால் நெருடல்கள் எதுவுமின்றி இதை எழுத முடிந்தது.
 எனது பிராயத்தில், கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா என்கிற இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு முன், நான் சிறிதுகாலம் கலை கலைக்காகவே என்கிற வீராப்புடனும், (எனக்குப் போதித்தவர்களின் பாதிப்புகளால்) பிறகு ÔÔகலை கலைக்காகவும், கலை மக்களுக்காகவும்ÕÕ  என நானே உருவாக்கிக் கொண்ட ஒருவித இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டுடனும், (இது Ôவிசித்ரன்Õ என்கிற பெயரில் ஆர்வக்கோளாறுடன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியபோது, அதன் முகப்புக்கென நான் உருவாக்கிய ஸ்லோகம்.)  பிறகு தெளிந்து, கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதே என்னும் இறுதியான கொள்கைப்பிடிப்பிற்கும் வந்துசேர்ந்தவன். இம்மூன்று நிலைகளிலும் க.நா.சுவை என்னால் வேறுவேறு மாதிரியாக அணுகமுடிந்ததில்லை. என்பதுதான் ஆச்சரியம். அவர் எனக்கு எப்போதும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார். க.நா.சு.வை குறித்த உச்சபட்ச சிலாகிப்புகளையும், காட்டமான விமர்சனங்களையும், ஒருங்கே கேட்டு வளர்ந்தவனாக நான் இருந்திருக்கிறேன்.
க.நா.சு. விமர்சனமாக எதையும் அணுகவில்லை. அவர் சிக்ஷீவீtவீநீ  கிடையாது. தனது ஆழ்ந்த வாசிப்பின் வழியே ரசனை வெளிப்பாடாகத்தான் தன் கருத்துக்களை முன்வைத்தார் என்று இப்போது தமிழ்ச் சூழலில் எல்லோரும் பேசிக் கொள்கின்றோம். ஆனால் ப்ரகாஷ் எழுதுவதைப்போல் அவரை சிம்மசொப்பனமாகக் கருதியவர்கள் இங்கே இருக்கவே செய்தனர் என்பதும் உண்மைதான்.
ÔÔக.நா.சு.விற்கு கவிதை வராது. க.நா.சு.விற்கு விமர் சனம் தெரியாது. க.நா.சு. எழுதுவது இலக்கியம் அல்ல...  அது சரி... அந்த என் கவிதையைப் பற்றி க.நா.சு. என்ன சொல்லியிருக்கிறார்?ÕÕ இப்படித்தான் பலரும் அப்போது அவரை வெறுத்தபடி அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளத் துடித்தனர்.
 தனது எழுத்து வாழ்க்கையில்  அவர் விடாது கடைப்பிடித்த சில நல்லனவற்றை, இளம் எழுத்தாளர்கள் தங்களுக்கு சாதகமாக எவ்வாறெல்லாம் உள்வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான் இந்தத் தொடரில் நான் க.நா.சு.வைப் பேச வந்ததன் நோக்கம். நீயோ கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானது என்கிறாய். அவரோ அதற்கு மாறான பாதையில் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார். முரணாக இருக்கிறதே? இதில் என்ன நல்லது கெட்டது?ÕÕ என்றும் ஒரு சிலர் வாதிக்கலாம். இப்படித்தான் ஒருமுறை  ஒரு பெரிய எழுத்தாளரின் படைப்புகள்  குறித்து நான் வியந்து பேசப்போக, நண்பர் ஒருவர் வெகுண்டு ÔÔகழிப்பறைப் பீங்கானில் சோறுண்ண முடியாது தம்பிÕÕ என்று உக்கிரமான மறுமொழி தந்தார். எல்லோருடைய ரசனையும் ஒன்றுபோல இருப்பதில்லை, இருக்காது. எதிரியானாலும்  அவரிடமுள்ள நல்லவற்றை வியக்கத் தோன்றும். இது என் குணம்.
  க.நா.சு.வைக் குறித்து எழுத அவருடைய பிரதான சிஷ்யரான ப்ரகாஷ் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாதமிக்காக எழுதிய Ôக.நா.சுப்ரமண்யம்Õ என்னும் புத்தகத்தையே தேர்ந்து கொண்டிருக்கிறேன். இது ஒரு வசதிக்காக, அவ்வளவுதான். இந்த புத்தகத்தில் ப்ரகாஷ் க.நா.சு.வைக் குறித்து பல பக்கங்களில் வியந்து வியந்து எழுதியிருக்கிறார்.  கூர்மையாக சீவப்பட்ட ஒரு பென்சில் முனையைக் கண்டால் கூட எத்தனை நறுவிசாக சீவியிருக்கிறான் பார்  என்று பாராட்டும் உள்ளம் ப்ரகாஷடையது. அதுவே க.நா.சு. ஆனால் கேட்கத் தேவையில்லை. தமிழில் இதுவரை க.நா.சு.வைக் குறித்து எழுதப்பட்டுள்ள பல்வேறு கட்டுரைகளில் பதிவுபெறாத சில பூடகமான, அந்தரங்கமான விஷயங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன்.
 க.நா.சு. வாழ்வில் நிகழ்ந்த பல ருசிகரமான சம்பவங்களை, அவருடைய இலக்கியப் பயணம் நெடுகப் பதித்த சுவடுகளை, வறுமையை, வைராக்கியத்தை, விடாமுயற்சியை ஒவ்வொன்றையும் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு ஒப்பிக்கிற மாணவன் போலல்லாது, ஒரு கதைசொல்லிக்குரிய தோரணையில், உணர்ச்சி மேலிட்டுக் குரல்கம்ம  சொல்லிச் செல்கிறார் ப்ரகாஷ். இப்படி வேறொருவரால் சொல்லிவிட முடியாது. அறிவின்வழி நின்றும், மொழியின் துணை கொண்டும், உணர்ச்சியற்றும், வறட்டுத் தொனியிலுமே  பிறரால்   இதை எழுதியிருக்கமுடியும்.  ப்ரகாஷ் இதை எழுதவில்லை, பேசியிருக்கிறார்.
 நம் எல்லோரையும் போலத்தான் பால்ய காலத்தில் நட்சத்திரங்கள் இறைந்து கிடக்கும் பின்னிரவுக் காலங்களில் ஜானுப்பாட்டியிடம் கதை கேட்பவராக க.நா.சு. வளர்ந்திருக்கிறார். கதைகேட்டு வளர்ந்தவர்களால்தான்   தங்களுக்கானதொரு கற்பனா லோகத்தையும் சிருஷ்டித்துக் கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
 ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ் பெற்று இலக்கியத்தின் கொடுமுடிகளை எட்டிவிட ஆசை கொண்டிருந்தவர்தான் அவருடைய அப்பா நாராயணசாமி அய்யர். எனவே ÔÔதமிழில் எழுதி நீ உருப்படாமல் போகாதே. ஆங்கிலமே உலகாளும் மொழி. ஆங்கிலத்தில் தான் உலக இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதுÕÕ என்று தன் பிள்ளைக்கு புத்திமதிகள் சொல்கிறார்.
 எல்லா எழுத்தாளர்களும் பிராயத்தில் தம் பெற்றோரிடம் ஏதோ ஒரு இடத்தில் முரண் பட்டவர்கள்தாம். ÔÔஎழுத்தாளர்கள் பெற்றோர் இட்ட பெயரைத் துறந்து புனைப் பெயர் சூட்டிக்கொள்வது ஏன் தெரியுமா? தங்கள் தனித்த ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்ளும் பொருட்டுதான்ÕÕ என்று எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் இதுகுறித்து சிந்தித்துள்ளேன். ஓரளவு இந்தக் கருத்தில் உடன்பட்டும்  இருக்கிறேன். ஆனால்  க.நா.சு., க.நா.சுப்ரமணியம் என தூய தமிழில் தன்னுடைய முழுப் பெயருடனும், பிறகு அதன் சுருக்கமான க.நா.சு. எனவும், பின்பு ஆங்கிலத்தில் எழுத நேர்ந்தபோதுகூட ரிணீ.ழிணீணீ.su.  என்றும் தான் எழுதி வந்திருக்கிறார். அதற்கு முன்புவரை கே.என். சுப்ரமணியம், கே.என்.எஸ்., என்று எழுதிக் கொண்டிருந்தவரை இப்படி மாற்றிக் காட்டியவர் Ôஅக்ரஹாரத்து அதிசயம்Õ வ.ரா.
 திருமணம் எல்லாம் நடந்து முடிந்திருந்த நிலையில் Ôஎழுதிப் பிழைப்பது; அதுவும் தமிழில்Õ என்று முடிவு செய்துகொண்ட க.நா.சு., தன் அப்பாவின் முன் சென்று நிற்கிறார். இருவருக்குமான உரையாடல் தொடங்குகிறது. 
என்ன?
சென்னைக்குப் போகிறேன்?
பொண்டாட்டி
அவளை பிறந்தாத்தில், சிதம்பரத்தில் விட்டு விட்டுப் போவேன்?
நான் சொன்னதைக் கேட்க மாட்டாயா?
தமிழில் எழுதப் போகிறேன்?
எழுதி சம்பாதிக்க முடியாது?
அதையும் பார்ப்போம்? 
 முடிவில் கையில் ஒரு டைப் ரைட்டர், கத்தைகத்தையாகக் காகிதங்கள், மொழிபெயர்ப்புகள் இவற்றோடு சென்னைக்கு ரயிலேறினார் க.நா.சு. ஆனால் க.நா.சு.வின் 76வது வயதில் தகழி சிவசங்கரன் பிள்ளை இவரை சந்தித்தபோது இப்போது எழுத்துக்கு எவ்வளவு ரூபாய் வாங்குகிறீர்ÕÕ என்று கேட்க, அவர் அளித்த பதில்  ÔÔஅய்ம்பது ரூபாய்!ÕÕ
   ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் சுயமாக எழுதுவது, 15 பக்கங்களேனும் தமிழுக்கு மொழிபெயர்ப்பது...  இது க.நா.சு. தனக்குத்தானே வரித்துக்கொண்ட விரதம். இதை வாழ்நாள் முழுக்க அவர் கடைப்பிடித்திருக்கிறார் என்பதுதான் அதிசயம். இளம் எழுத்தாளர்கள் அவருடைய இந்த உறுதியை  நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில், நஷ்டம் எதுவும் ஏற்படப் போவதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
 க.நா.சு.வின் பத்திரிகையாசிரியர் அவதாரமும் தோல்வியில்தான் முடிந்தது. அந்தக் காலத்தில் கு.ப.ரா. நடத்திய Ôகிராம ஊழியன்Õ, சாலிவாஹனின் ÔகலாமோஹினிÕ, எம்.வி. வெங்கட்ராமின் ÔதேனீÕ, சீத்தாராமனின் ÔசிவாஜிÕ ஆகிய இதழ்களுக்கு மத்தியில்,  தனது தீராத வறுமைக்கிடையில் க.நா.சு. துணிச்சலாகப் பத்திரிகை நடத்திப் பார்த்திருக்கிறார். ÔசூறாவளிÕ Ôசந்திரோதயம்Õ ஆகிய பெயர்களில் இதழ்களை நடத்தி பொருள் இழப்பைத்தான் சந்தித்துள்ளார். இது அப்போதைய  அவருடைய கஷ்ட  ஜீவிதத்திற்கு ஒவ்வாத காரியமே! ஆனாலும்,  இதழ் நடத்த வேண்டும் என ஆசைப்படாவிட்டால் இலக்கியவாதியாய் வாழ்ந்து என்ன புண்ணியம்? இதழ் நடத்தி காயம்பட்டு பின்னாட்களில் அந்த வீரத் தழும்புகளைத் தடவிப் பார்த்துக் கொள்வதில்தான் எத்தனை சுகம்? 
 தீவிரமான மொழிபெயர்ப்பாளரான க.நா.சு. தான் வியர்வை சிந்தி தமிழ்ப்படுத்தியதை எல்லாம் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு பதிப்பகமாக ஏறிஇறங்கித் திரிந்ததை வாசிக்கும்போது மனம் கனக்கிறது. ÔÔநான்கு திசைகளிலும் எதிர்ப்பு எனும் காலாக்னி.   காலூன்றி நிற்கும் பூமிக்கடியிலோ எரியும் தணல். நிரந்தரமான பணியின்மை. ஒழுங்கான  மாதச்  சம்பளமின்மை. கையில் முதலின்மை,  வானத்திலோ எரிக்கும் வறுமைச் சூரியன். இந்த ஷடாக்னியில் எரிந்து பொசுங்கியபடியே தன் குடும்பத்தைப் பற்றி பிரக்ஞையே இல்லாது நண்பர்கள் என்னும் எதிரிகளோடும் ஆதரவாளர்கள் என்னும்  அயோக்கியர்களோடும் க.நா.சு. வாழ்ந்து வந்தார்ÕÕ என்று ப்ரகாஷ் மேலும் எழுதுகிறார்.
  ÔÔநான் எழுதுவது விமர்சனமல்ல, எனக்கு விமர்சனத்தின் மேல் நம்பிக்கை இல்லைÕÕ என்று சொன்னவர்தான்  க.நா.சு.! அவர் எப்படி விமர்சகர் ஆக நேர்ந்தது?
   அவர் கம்யூனிச எதிரியாகப் பார்க்கப்பட்டாலும் தொ.மு.சி. ரகுநாதன் என்னும் ஒரு கம்யூனிஸ்ட் எழுதிய Ôஇலக்கிய  விமர்சனம்Õ என்னும் நூல்தான் முதன் முதலில் அவரை உலுக்கியிருக்கிறது. ÔÔதமிழில் வந்த முதல் அடிப்படை விமர்சன நூல்ÕÕ என்று க.நா.சு. அதைப் பாராட்டி எழுதுகிறார். அதற்குப் பிறகுதான் தனது பிரபலமான Ôவிமர்சனக் கலைÕ என்ற நூலையும் எழுதி முடிக்கிறார்.
  வ.விஜயபாஸ்கரன் நடத்திய  கம்யூனிச இதழான Ôசமரன்Õ அவரே நடத்திய இலக்கிய இதழான Ôசரஸ்வதிÕ ஆகியவற்றில் க.நா.சு. வின் கட்டுரைகள் விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளன. ÔÔமாற்றுக்கருத்தை மதிக்கிற மனப்பண்பு  இலக்கியப் பண்பாடு கம்யூனிஸ்டுகளிடம்தான்  உருவாகி இருந்ததுÕÕ என்று ப்ரகாஷ் இதைப்பற்றி எழுதுகிறார். 
Ôஇலக்கிய வட்டம்Õ அமைப்பின் மூலமாக Ôஎதற்காக எழுதுகிறேன்Õ, Ôஎன்ன படிக்கிறேன்Õ போன்ற தலைப்புக்களில் இலக்கியக் கூட்டங்களை ஆரோக்கியமான வழியிலே நிகழ்த்திக் காட்டியதும் அவருடைய பணிகளுள் குறிப்பிடத் தக்கது.
  ÔÔஎல்லாவற்றையும் ஒரே வெட்டில்  வெட்டி வீழ்த்தி,  தான் மட்டுமே அவதாரம் எடுத்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி, தமிழ் இலக்கியப் போக்கை சவுக்கடி கொண்டு வீசிச்சுழற்றி 1950களில் வெளிவந்த சுதேசமித்திரன் தீபாவளி மலரில் அவர் எழுதிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தாக்கம், தேக்கம், வீக்கம் என்ற மகத்தான கட்டுரை...ÕÕ என்று ப்ரகாஷ் ஓரிடத்தில் எழுதுவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. ÔÔஎல்லாவற்றையும் ஒரேவெட்டில் வெட்டி வீழ்த்தி தான் மட்டுமே அவதாரம் எடுத்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி...ÕÕ
  தமிழில் சுமார் 20 நேரடி நாவல்களை க.நா.சு. எழுதியிருக்கிறார். ஒரு நாள், அசுரகணம், பொய்த்தேவு, கோதை சிரித்தாள், தாமஸ் வந்தார், அவதூதர், பித்தப்பூ போன்றவை நுட்பமான வாசகர்களின் தேடலுக்குக் கிடைத்தவை. பித்தப்பூ நாவலை ப்ரகாஷே தன் சொந்த செலவில் வழக்கமான பாணியில் அச்சுப் பிழைகளுடன் வெளியிட்டார்.
  இவற்றுள் எல்லாம் தலையாய பணி என்று நான் கருதுவது, நோபல்பரிசு பெற்ற நாவல்களாகத் தேடிப்பிடித்து க.நா.சு.  தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததுதான்.  இதை அவரைத்தவிர வேறெவரும் செய்ததில்லை. நிலவளம், மதகுரு, பாரபஸ், தாசியும்  தபசியும் போன்ற அயல்மொழி நாவல்கள் இப்பட்டியலில் அடங்கும். மயன் என்கிற தனது புனைப்பெயரில் க.நா.சு. எழுதிய கவிதைகள் Ôமயன் கவிதைகள்Õ எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
 அழகி, தெய்வஜனனம், மணிக்கூண்டு என அவருடைய சிறுகதைத் தொகுப்புகளும் அடுத்தடுத்து வெளிவந்திருக்கின்றன. பின்னாளில் இவை ÔÔக.நா.சு. கதைகள்ÕÕ என தொகுக்கப்பட்டுள்ளது.
  ÔÔபல கதைகள் கதைகளாகவே தோன்றாது. நிகழ்ச்சிகளாகவும்,செய்திகளாகவுமே தோற்ற மளிக்கும். அவைகளுக்கு ஒன்றுமில்லாதது போன்ற தோற்றமுண்டு. ஆனால் மிக ஆழமான முக்குளிப்பில்தான் இது தெள்ளத் தெளியவரும்?ÕÕ என்று அபிப்ராயம் எழுதும் ப்ரகாஷ் சில கதைகளைக் கோடிட்டுக்காட்டி அதன் உள்ளடக்கத்தைச் சிலவரிகளிலேயே கூறும்போது நமக்கும் முக்குளிக்கத்தான் தோன்றுகிறது.

க.நா.சு.வின் இலக்கியப் படைப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து ஒரு விமர்சன நூல் எழுதுவதும்கூட முக்கியமானதுதான்.
  புதிய நூல்கள் வெளிவந்தவுடன் அதை வெளியிட்ட பதிப்பகத்துக்கே சென்று, வாங்கிவந்து, விமர்சனமும் எழுதுவார் க.நா.சு. என்றறியும்போது, கிணற்றில் போட்ட கற்களாகத் தூங்கும்.. சமகாலத் தமிழ்நூல்களின் கையறு நிலையை நான் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.  பெருமூச்சொன்று வெளிவந்தது.
  ÔÔஅவர் எழுதிய பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் இன்னும் அச்சேறவில்லை.ÕÕ என்று ப்ரகாஷ் ஆதங்கப்பட்டிருக்கிறார். க.நா.சு.வின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டவுடன் இடதுசாரிப் பதிப்பகங்கள் நீங்கலாக பல பதிப்பகங்கள் ஏற்கெனவே வெளிவந்த அவருடைய பல நூல்களையும் ரொட்டியைத் திருப்பிப்போடுவதுபோல திருப்பிப் போட்டனவே தவிர, புதிய அச்சேறாத அவருடைய எழுத்துக்களைத் தேடிப் பயணிக்கவில்லை என்பது வேதனைக்குரிய சங்கதி. தமிழின் துர்ப்பாக்கியம் இதுதான். 
 க.நா.சு கடைசிவரை வெளிப்படையாகக் கம்யூனிச எதிர்ப்பைக்  காட்டியவர். இந்தப் புத்தகம் முழுக்க இது சாகித்ய அகாடமி வெளியீட்டிற்காக எழுதுவது என்பதையும் கடந்து ப்ரகாஷ§ம்  கம்யூனிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் என்று பக்கத்துக்கு பக்கம் எழுதித் தள்ளியிருக்கிறார். க.நா.சு. மீது  நமக்கு முழுக்க விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதைப் பேசுவதற்கான இடம் இதுவல்ல.
 நான் ஏற்கெனவே  குறிப்பிட்டதைப் போல, இந்த இடத்தில் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றியுள்ள நல்லனவற்றை மட்டுமே  கருத்தில் கொள்வோம். 
  ÔÔஏறத்தாழ 40 ஆண்டுகள் அவருடன் பழகிய உங்களை, உங்கள் படைப்புகளை ஏன் க.நா.சு. பாராட்டவில்லை?ÕÕ என்று ஒரு சந்தர்ப்பத்தில் தஞ்சை ப்ரகாஷிடம் ஒரு எழுத்தாளர் கேட்க நேர்ந்தது. ப்ரகாஷ் அதற்கு  ÔÔஅப்படிப் பாராட்டும் விதமாக என் எழுத்தில் எந்தவிதமான சிறப்பையும் க.நா.சு. காணவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்ÕÕ என்று சொல்கிறார்.
 அவர்தான் க.நா.சு.!
 ***

க.நா.சுப்ரமண்யம்/ தஞ்சை ப்ரகாஷ்
சாகித்திய அக்காதெமி, சென்னை- 600 018.

பயனற்ற கண்ணீர்



எழுதவந்த எல்லோரும் கவிதையிலிருந்துதான் எழுத்து  வாழ்க்கையைத் துவக்குகிறோமாயிருக்கும். அது சிறு டைரிக்கிறுக்கலாகவே இருந்தாலும் எழுத வேண்டும் எனும் முதல் உந்துதலை எழுதுகிறவனுக்குத் தருவது கவிதைதான். தயக்கம், குழப்பம், மயக்கம் எல்லாமும் கொண்ட தொடக்ககால எழுத்தாளனைக் கவிதாமோகினி தான் கரம்பற்றி அணைத்து பயம் தெளிவித்து அழைத்து வருகிறாள். பதின்வயது மனம் எப்போதும் அதன் அலைபாயும் குணாம்சங்களுடன் மொழியின் மீதும் மெல்லிய மோகமுற்றுத் தவிக்கிறது. கொஞ்சம் காதல் கொஞ்சம் சமூகக் கோபங்கள், லட்சிய தாகம், எல்லா வேகங்களும் கலந்த கலவைதான் அவன். இவ்வுலகின் மீதான முதல்பதிவை, அல்லது முதல் விமர்சனத்தை கவிதையாகத்தான் அவனால் உருவாக்க முடிகிறது. அது கவிதையா  இல்லையா என்பது குறித்து யாரும் அபிப்ராயம் கூற முடியாது. கூறினாலும் அதைக்குறித்து அவனுக்கு லட்சியமில்லை.
 எழுத்தின் பக்கமே அண்டாத சாதாரண மனிதனும் கவிதை என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறான். அதிகபட்சமாக அதன் வாசகனாகவும் அவனே இருக்கிறான். இப்படிப்பட்ட அந்தரங்க எழுத்துக்காரர்கள் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றனர். அவர்களுக்குப் பிரசுரம், பத்திரிகை, பதிப்பு, வாசகர்கள் என்னும் பிரச்சனைகளில்லை.  
 பாரதி பெருங்கொண்ட தைரியத்துடன் Ôஎமக்குத் தொழில் கவிதைÕ என்று முழங்கினான். எல்லோராலும் இப்படிச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் கவிதை வடிவம் எல்லோருக்கும் இலகுவாக வசப்படுவதில்லை. கவிதை எழுத இலக்கணப் பயிற்சி அவசியமாக இருந்தது அந்தக் காலத்தில்! எப்போதும் மரபுக் கவிதைக்கு இலக்கணப் பயிற்சி தேவைதான். கற்பனையே ஆனாலும் கடவுள் எழுதிய கவிதையிலேயே குற்றம் கண்டு பிடித்த பெரும் புலமைப் பரம்பரை நம்முடையது. Ôசொல்லில் குற்றமா அல்லது பொருளில் குற்றமாÕ என்று கேட்க, Ôசொல்லிற் குற்றமில்லை இருப்பினுமது மன்னிக்கப்படலாம், பொருளில்தான் குற்றம்Õ என கீரன் கூற ஏற்பட்ட அமளிதுமளிகளுக்கிடையில்  மன்னன் பதற்றத்துடன் எழுந்து கேட்டுக் கொள்வான் ÔÔபுலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்ÕÕ 
கவிதை குறித்த மோதல்கள் காலம் தோறும் நடைபெறுகின்றன தான். இலக்கியத்தில் சர்ச்சைகள் தான் சுவாரஸ்யம். சர்ச்சைகளில்லாது போனால் இலக்கிய உலகம் ஸ்தம்பித்துப் போய்விடும். ஆனால் தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாக எழும் சர்ச்சைகளில் இல்லை எவ்வித சுவாரஸ்யமும். தமிழின் முக்கியக் கவியாகக் கருதப்படும் பிரமிளின் கவிதைகளை முன் வைத்து வெங்கட்சாமிநாதனுக்கும் தமிழவனுக்கும் ஒருகாலத்தில் யுத்தம் நடந்தது. பிரமிளின் பல புகழ்பெற்ற படிமங்களை மாயக் கோவ்ஸ்கி, டி.எஸ்.எலியட், பாப்லோ நெரூடாவின் பாதிப்புகள் என்றார் தமிழவன். Ôஇரவினுள் புதைந்து முடங்கிக் கிடக்கும் நிழல்கள்Õ என்னும் பிரமிளின் வரி மாயக்கோவ்ஸ்கியின் விமீஸீ ணீக்ஷீமீ ஷ்மீபீரீமீபீ றீவீளீமீ sலீணீபீஷீஷ்s, கண்ணாடிப் பாலை மீது நடுக்கம் பிறக்கிறதுÕ பாப்லோ நெருடாவின் ஜிலீமீக்ஷீமீ ணீக்ஷீமீ னீவீக்ஷீக்ஷீஷீக்ஷீs tலீமீஹ் னீust லீணீஸ்மீ ஷ்மீஜீt யீஷீக்ஷீ sலீணீனீமீ ணீஸீபீ யீக்ஷீவீரீலீt,  இழந்த படிமங்களைக் கணக்கில் வைÕ எலியட்டின் ணீ லீமீணீஜீ ஷீயீ தீக்ஷீஷீளீமீஸீ வீனீணீரீமீs என்று ஒப்பிட்டுச் சொன்னார் தமிழவன். ஆனாலும் பிரமிள் இன்றளவும் தமிழின் முக்கியக் கவியாகவே மதிக்கப்படுகிறார்.
1970-80களில் பல கல்லூரி மாணவர்களுக்கு மனப்பாடமாக இருந்த மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் தொகுப்பை வாசித்து ÔÔஇவர் இதுவரை கவிதைகளே எழுதவில்லை. இனி எப்போதாவது எழுதலாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் குடியரசுத் தலைவர் ஆகலாம் என்கிற மாதிரிÕÕ என்று காட்டமாக விமர்சித்தார் வெங்கட்சாமிநாதன். கண்ணீர்ப் பூக்களின் அடுத்த பதிப்பில் மு.மேத்தா வெ.சா.வின் இந்த விமர்சனத்தையும் சேர்த்துக் கொண்டார். இது ஒரு எதிர்வினையாகவும் அமைந்தது. தஞ்சாவூர் பெரியகோவில் புல்வெளி இலக்கிய சந்திப்புகளில் அப்போதுதான் எழுதி ஈரம் உலர்வதற்கு முன் வாசிக்கப்பட்ட சில புதிய நண்பர்களின் கவிதைகளை “திணீறீறீs றிஷீமீtக்ஷீஹ்”  என்று சொல்லி ப்ரகாஷ் மட்டையடியாக நிராகரித்ததைக் கண்டு நான் பதறிப் போயிருக்கிறேன்.
ஒரு படைப்புக்கான விமர்சனம், எதிர்வினை, மறுவினை இவை எல்லாம் இலக்கிய உலகில் சகஜம். நன்றாக இல்லை என்று சொல்லி விடுவார்களோ என அஞ்சி ஒரு எழுத்தாளன் படைக்காமல் நிறுத்திவிடுவதில்லை.
 புதுக்கவிதை இயக்கம் வலுப்பெற்ற பிறகு மரபிலக்கணம் குறித்து கவலைப்படாமல் எவர் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்கிற நிலை உண்டானது. இதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய குப்பைகள் சேர்ந்தன, உண்மைதான். ஆனால் புதுக்கவிதையை உரிய இடத்திற்கு உயர்த்தியவர்களுக்கு மரபுப் பரிச்சயமுமிருந்தது. ந.பிச்சமூர்த்திக்கு மரபு தெரியாது என்று சொல்லமுடியாது. வானம்பாடிகளில் பலரும் தமிழை முறையாகக் கற்றவர்கள்தான். கல்யாண்ஜி, கலாப்ரியாவும், விக்ரமாதித்யனும் அப்படித்தான். அது அவர்களுக்கு கூடுதல் பலமாக இருந்தது. ஆனால் மரபுப் பரிச்சயமிருந்துதான் புதுக்கவிதை எழுதவேண்டும் என்கிற நிலை இல்லை. புதுக்கவிதை நவீன கவிதையாகப் பரிணாமம் அடைந்தபிறகு எழுதிய பலருக்கும் மரபு தெரிந்திருக்கவில்லை. அப்படியரு அவசியமுமில்லை. ஆனால் மரபுக் கவிதையைப் போல நிறையக் கவிதைகளை, அதன் வரிகளை ஞாபகத்தில் வைத்திருக்க முடிவதில்லை. நவீன கவிதையின் ஓசையைத் துறந்த தன்மைதான் இதற்கு காரணம். இது தான் நவீன கவிதையின் சுயம்
***
சிவகாமியின் Ôபயனற்ற கண்ணீர்Õ கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இந்தத் தலைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. கண்ணீருக்கான பயன் இருக்க வேண்டும். பயனற்ற கண்ணீரால் எதுவும் நேர்ந்துவிடப் போவதில்லை என்று உணர்த்துவதைப் போன்ற தலைப்பு. சிவகாமி ஒரு பெண் என்பதாலும் என்னை அதிகம் யோசிக்க வைத்த தலைப்பு. பெண்களின் ஆயுதமே கண்ணீர்தான் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. லௌகீஹ வாழ்க்கையை முன்வைத்து உதிர்க்கப்பட்ட சம்பிரதாயமான வார்த்தை அது. மட்டுமல்ல, ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து தோன்றும் பல்வேறு சொல்லாடல்களில் இதுவும் ஒன்றுதான்.
 முக்கியமாக சிவகாமி இந்தத் தொகுப்பின் மூலமாகப் பேச வருவது சமகாலப் பெண்கவிஞர்கள் எழுதிச் செல்லும் உடலரசியல் அல்ல. அரசியல்!
சிவகாமியின் கவிதைகளைக் காட்டிலும் அவர் எழுதியிருக்கின்ற முன்னுரை மிக முக்கியமானது. இதனால் அவருடைய கவிதைகளைக் குறைத்து மதிப்பிடுவதாக நீங்கள் கருதக்கூடாது. அண்மையில் பெண்கவிகள் எழுதிய எந்தத் தொகுப்பிலும் இப்படி ஒரு அர்த்தச் செறிவுள்ள முன்னுரையை நான் வாசிக்கவில்லை. உதாரணத்துக்கு இரண்டு பத்திகளைச் சொல்ல முடியும்.
1.   ÔÔபார்ப்பன எதிர்ப்பு தமிழில் சரியாக விளங்கிக் கொள்ளப்பட்ட அளவு சாதி ஒழிப்பு விளங்கிக் கொள்ளப்படவில்லையெனில் இதில் மொழியின் குறைபாடு என்ன? பூர்வ பௌத்தர்கள் என்றறியப்பட்ட தலித் மக்கள் இந்து ஒடுக்குமுறைக்கெதிராக தங்களை இந்துக்கள் அல்ல என்று அறிவித்துக் கொண்டது போல, சாதியத்தை வேரறுக்கத் தமிழரில்லை என அறிவித்துக் கொள்ள இயலுமா? இந்தக் கேள்வியில் மொழிக்கான  அத்தனை முக்கியத்துவமும் சரிந்து தரைமட்டம் ஆகி, ஆவியாகிக் கரைவதைப் பார்க்கையில் மொழியின் போதாமை கையறு நிலைக்கு என்னைக் கொண்டு செல்கிறதுÕÕ
2. ÔÔஉரை நடையில் எளிதாக விரித்து எழுதுகின்ற விஷயங்களை இடமற்ற கவிதைச் சிமிழுக்குள் அடைக்க பொருத்தமான வார்த்தைகளைத் தேடி அலைகின்றேன். எத்தனை குறைவானது எனது அகராதி என்பதை திரும்பத் திரும்ப முன்னுக்கு வந்து நிற்கின்ற சில சொற்கள் மூலம் அறிகின்றேன். பிறகுதான் புலப்படுகின்றது அவை சொற்களல்ல. திரும்ப அசைபோட்டு உருவாக்கி வைத்துள்ள உணர்வுகளென...ÕÕ
சிவகாமி எனக்குப் புனைவெழுத்தின் வழியே நாவலாசிரியராகத்தான் முதலில் அறிமுகம். எனது வாசிப்பனுபவத்தின் வாயிலாக அவருடைய Ôபழையனகழிதலும்Õ நாவல் அவரைக் குறித்த வலுவான சித்திரத்தை என்னுள் வார்த்து வைத்திருந்தது. கௌரி என்கிற பெண்ணிற்கும் காத்தமுத்து என்கிற தந்தைக்கும் இடையிலான நேசம், பின்பு முரணாகி கண்ணெதிரில் காத்தமுத்துவின் நாயகன் பிம்பம் கலைந்து போவதை கலாபூர்வமாகச் சித்தரித்திருப்பார் சிவகாமி. அதிகமும் சுயவிமர்சனம் செய்துகொண்டு எழுதப்பட்ட தலித் படைப்பாக இதை நான் இன்றைக்கும் மதிக்கிறேன். குறுக்குவெட்டு, ஆனந்தாயி உள்ளிட்ட அவருடைய பிற புதினங்களும் இதே மதிப்பீட்டில் வைத்துப் பார்க்கத்தக்கனவே.சிவகாமியின் முதல் கவிதைத் தொகுப்பு என் வாசிப்புக்கு கிடைக்கவில்லை. எனவே பயனற்ற கண்ணீரே நான் வாசித்த அவருடைய முதல் தொகுப்பு.
ÔÔஅரசியலை அழகின் மேன்மை குறையாது மக்கள் முன்பு நீதியின் கூண்டில் நிறுத்திடும் ஆசை மேலிடுகிறது. அரசியலைக் கவிதையிலிருந்து நீக்கம் செய்தல் தாழி உடைத்து வெண்ணெய் வழிப்பது போலிருக்கிறதுÕÕ
என முன்னுரையில் எழுதிச் செல்லும் சிவகாமி அவ்வழி நின்றே 66 கவிதைகளையும் படைத்துள்ளார். ஒவ்வொரு கவிதையையும் அதனதன் அரசியல் அழகியலோடு விரிவாகப் பேச வேண்டும். அதற்கு இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்கும் என்று  நம்புகிறேன்.
 Ôசிறுமிகளின் சடலங்களில் கருணைÕ என்கிற தலைப்பில் அவர் எழுதியுள்ள கவிதையின் கடைசி வரிகளை மட்டும் பெரும் மனப்பதற்றத்துடன் இங்கே முன் வைக்கிறேன்.
 முட்புதர்களில் ஒளித்து வைக்கப்பட்டு
 வல்லுறவு கறைகளுடன் கிடந்த
 பூக்களின் கடைவாய்ப் பற்களில்
 முழுதும் தின்று முடிக்காத
 பாதி சாக்லேட்டைப் பார்க்கும்போது
 கதறி அழுகிறது கருணை
 அதன் நேரம் குறைக்கப்பட்டதென்று.
***
நண்பரின் கவிதைகளுக்கு முன்னுரை எழுதுவது சுகானுபவம். மதிப்புரை தருவது கடினம். வே.பாபு சேலத்துக்காரர். தக்கை என்னும் இலக்கிய அமைப்பையும் அதே பெயரில் இதழையும் நடத்தி வருகிறார். சேலம் மாவட்ட தமுஎகசவிலும் பாபு ஒரு முக்கியஸ்தர். டிராவல்ஸ் ஒன்றின் நிறுவனர். விருந்தோம்பலில் சிறந்தவர். அதிர்ந்து பேசமாட்டார் அத்திபூத்தாற்போல கவிதைகள் எழுதுவார். அதுவும் ரத்தினச் சுருக்கமாக, ஆனால் கவிதையாக.
 38 வயதாகும் பாபு ஒரு பிரம்மச்சாரி. திருமணம் செய்து கொள்ளாதவர். அப்படி ஒரு எண்ணமும் இல்லாதவர். எங்கள் முந்தைய சந்திப்பிலும் இதை அவர் உறுதிப்படுத்தினார். கவிதை சரியா, பழுதா என்பதைச் சொல்.  இதை எல்லாம் இங்கே ஏன் எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் எழுதித்தான் ஆக வேண்டும். பாபுவின் கவிதைகளை வாசிக்கையில் uஸீபீமீக்ஷீ நீuக்ஷீக்ஷீமீஸீt ஆக ஓடிக் கொண்டிருக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் இந்த பிரம்மச்சர்யத்துக்கும் தொடர்பிருப்பதாகவே நான் கருதுகிறேன். இது என்னுடைய ஒருவரி விமர்சனம்.
Ôமதுக்குவளை மலர்Õ என்று அவர் வைத்திருக்கிற தலைப்பே விநோதம். குவளை மலர்களை மட்டுமறிந்தவர்களுக்கு இது சற்றுக் குழப்பம். பாபுவின் தொகுப்பே மொத்தத்தில் ஒரு விநோத ரஸ மஞ்சரிதான். இப்போது பாபு பதிப்பாளராகவும் அவதாரமெடுத்திருக்கிறார். சூல்ச்சிக்கணும் பாபே! (கவனமாக இருங்கள் பாபு) அவர் பதிப்பித்த 3 புத்தகங்களுக்கும் சென்ற மாதம் சென்னையில் வைத்து ஒரு விமர்சனக் கூட்டம் நடந்தது. பாபுவின் கவிதைகளைக் குறித்து விமர்சனக் கட்டுரை வாசித்த ஒருவர் பாபுவின் தமுஎச, இடதுசாரி இயக்கத் தொடர்பு குறித்து சற்றுக் கிண்டல் தொனிக்கப் பேசினார். ஏற்புரையின்போது பாபு பதில் சொன்னார். அதுவும் அத்தனை சாந்தமாக, புன்னகையுடன் ஆனால் அழுத்தமாக ÔÔநீங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் நான் எப்போதும் கம்யூனிஸ்ட்தான். தமுஎகச தான்ÕÕ சபாஷ் பாபு! இடதுசாரிகளைக் கிண்டலிப்பது தமிழ்நாட்டில் இப்போது ஒரு ஃபேஷன். இது அவர்களையே கிண்டல் செய்துகொள்வது தானன்றி வேறென்ன?
தொகுப்பெங்கும் அம்மு என்கிற பெண் வெற்றிலையின் மத்தியில் ஓடும் நரம்பு மாதிரி நெடுகப் பரந்திருக்கிறாள். பாபுவின் சுவாசப்பை அந்தப் பெண்ணின் கக்கத்திலிருக்கிறது. கவிதையின் தொடக்க வரிகளை பாபு அனாயசமாக எழுதிச்செல்லும் முடிப்பில் எப்போதும் ஒரு அதிர்வைத் தந்துவிடுவதில் குறியாக இருக்கிறார்.
ஒரு சின்னஞ்சிறு பூ என் மதுக்கோப்பையினுள் வந்து விழுகிறது அது அம்முதான்... மதுவோடு இலையைக் குடிப்பவன் பிறகு கிளையை மரத்தை குடிக்கிறான் இறுதியாக ஒரு வனத்தை... இலட்சத்தில் ஒருவனுக்குத்தான் அபூர்வ மலர் கிடைக்கிறது அது உதிரும் தறுவாயில்... ஒருநொடி இறந்தவனின் கண்கள் திறந்து மூடுகின்றன... அதிர்விலிருந்து மீளாதொரு நிலையில் கண்டேன் வண்ணத்துப் பூச்சியின் உடலை எறும்புகள் இழுத்துச் செல்வதை.. ஒரு கணம் ஒளி மிகுந்ததாய் மாறி சட்டென மூழ்குகிறது கனத்த இருளுக்குள் வீடு... பறவைகளில்லா கூண்டுகள் மிக அழகானவை..
இவ்வாறு வெவ்வேறு கவிதைகளின் முடிப்பு வரிகளை எழுதும் இவர் ஓரிடத்தில் எழுதுகிறார் ÔÔமுடிவுகளைப் பற்றி இருவருக்குமே தெரியும். நம் பிரச்சனைகளெல்லாம் ஆரம்ப வரிகளைப் பற்றித்தான்.ÕÕ
 நான் மீண்டும் மீண்டும் வாசித்தபோது கண்டடைந்தது இவருள் இயங்கும் ஒருவித உளவியல் கூறுகளுள்ள கவிதா மனோபாவத்தைத் தான். மனுஷ்யபுத்திரனின் தொடக்ககாலக் கவிதை மனம் பாபுவிற்குள் இயங்குகிறது என்றும்கூட சொல்வேன். இதை அவர் வளர்த்தெடுக்க வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் அவரை இன்றைக்கு எழுதுகின்ற எல்லா இளைஞர்களுடனும் ஒப்பிட்டுவிட முடியாது. தன்னுடைய மேதைமை குறித்த பெரிய எதிர்பார்ப்புகளில்லாத மனிதன். தோன்றும்போது எழுதி, தானே பல நாட்கள் அதை அசைபோட்டு ரசித்து, வாய்க்குமானால் வாசகனுக்கும் பாவிக்கத் தரும் ஒருமாதிரியான பரபரப்பில்லாத தன்மை.. சித்தன் போக்கு!
 கொண்டாட்டங்களையும், குமுறல்களையும் உலர்ந்த வரிகளால் எழுதுகிறார் பாபு. ÔÔநீ சொல்லியபடி வரைந்தபடி இல்லை பறவைகள் நேரில் பார்த்தபோது பறவைகளாக இருந்தன பறவைகள்ÕÕ என்பன போன்ற குறுங்கவிதைகள் வெறுமனே ஆரவாரமின்றி நம்மை நோக்கிப் பாய்ந்து வந்து கணநேரத்தில் வேறொரு அர்த்ததளத்திற்கு கொண்டு போய் நிறுத்துகின்றன. இது ஆகாச ராட்டினப் பெட்டியின் மேலிருந்து விருட்டென அந்தரத்தில் பரவுகின்ற உணர்வைத் தந்துவிடுகிறது.  
சிலவற்றைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகையில் இப்படிச் சொல்வது நியாயம்தான் என்றும் தோன்றுகிறது. முழுக்கவும் தானே விரும்பி வழி நடத்தும் ஒற்றையடிப் பாதையிலேயே நகர்வதால் சமூகப் பிரச்சனைகளைக் கையாளும்போது கவிஞன் நிராயுதபாணியாக நிற்கிறான், இதுபோன்ற தொகுப்புகளில் இப்படி நிகழும்தான், தவிர்க்க முடியாது.
***
கூப்பு ரோட்லே
கையில கெடாய்த்தும்
இருளனெ வெலாக்கி
தூக்கி பெணாங்கி மெதிச்சான்
எச்சாவோ நிந்த
காண்ரீட்டுகாரனே--
ராஜா
இப்படித்தான் புதிராகத் துவங்குகிறது லட்சுமணனின் Ôஒடியன்Õ கவிதைத் தொகுப்பு. கூப்பு ரோடு -- காட்டில் வெட்டிய மரங்களை எடுத்துப்போக வனத்துறைபோடும் சாலை, கெடாய்த்தும் கிடைத்தும்,  வெலாக்கி -- விலக்கி, பெணாங்கி- - சபித்து, எச்சாவோ நிந்த -- எங்கேயோ நின்ற, ராஜா - -யானை இவ்வாறு கவிதையை வாசிக்கிற பலருக்குப் பிடிபடாமலிருக்கிற இருளர் மொழிக்கு அந்தந்தப் பக்கத்திலேயே மெனக்கெட்டு விளக்கங்களையும் தருகிறார் லட்சுமணன்.
ÔÔஎனக்கு அறிமுகமான இருளர் பழங்குடி மக்கள் பற்றிய கவிதைகளை அவர்கள் மொழியான இருளர் மொழியிலேயே எழுதியிருப்பது வாசகனை சித்திரவதைப்படுத்தும் நோக்கத்திலல்ல, அவர்களிடம் கேட்டதை, கேட்டபடி, எழுத்து வடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயே கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்பதாலும் தான்ÕÕ என்று முன்னுரையில் நியாயப்படுத்தும் லட்சுமணனுக்கு இதைச் செய்யவேண்டிய நிர்பந்தம் என்ன? அவரே அதற்கான பதிலையும் தருகிறார். ÔÔபழங்குடி மக்களுக்கென்று மொழிகள் இருக்கின்றன. அவை நமது தமிழ் போலவே அன்பையும், கோபத்தையும், வெறுப்பையும், நேசத்தையும் வன்மையுடன் வெளிப்படுத்தும் ஆற்றலும், ஆழமும் கொண்டவை. அம்மொழிகளை தமிழக மக்கள் அறிமுகம் செய்துகொள்வது அந்த மண்ணையும் மலைகளையும் வெறும் கேளிக்கை இடங்களாக பார்க்காமலிருக்க உதவும்ÕÕ
இக்கவிதைகளுக்கு அணிந்துரை எழுதியிருக்கின்ற நண்பர் Ôசோளகர் தொட்டிÕ நாவலாசிரியர் ச.பாலமுருகன் கோவன் பதி என்றழைக்கப்பட்ட கோயமுத்தூரின் பூர்வீக வரலாற்றுடன், மலைகள் சூழ்ந்த அந்த வனப் பகுதியை ஆண்ட இருளர் பழங்குடிகளின் வரலாற்றையும், லட்சுமணணின் கவிதைகளில் பதிவாகியுள்ள அம்மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கின்ற தொன்மங்களையும் குறிப்பிடுகிறார். முயல்கள் குடியிருப்புகளுக்கு அருகில் வந்து புல்கடிப்பதும், சகுனாகுருவி கத்துவதும், செம்போத்து குறுக்கே போவதும், பாம்புகளைக் காண்பதும் அம்மக்களுக்கு துர்சகுனங்கள். பெருமாட்டி குருவி கத்துவது, இருள்கவியும் நேரத்தில் வாசலில் வந்து கிளிகத்துவது நற்சகுனங்கள். இப்படி இப்படி நிறைய.
 கோவமூப்பன் இருளர் மக்களின் தலைவன், அவனே கோவை வனப்பகுதியைக் கட்டி ஆண்டவன். ஒரு கட்டத்தில் சோழ மன்னனின் நாடு பிடிக்கும் ஆசைக்கு பலியாக நேர்கிறது. கோவமூப்பன். பழங்குடி அரசு வீழ்கிறது. பூர்வகுடிகள் வனங்களடர்ந்த மலைகளின் மேல் விரட்டப்பட்டனர். இவர்களுக்குத் துணையாக பழங்குடித் தெய்வம் மட்டுமே நின்றது... இந்தக் கதையைச் சொல்லும்   நண்பர் பாலமுருகனிடம் நான் கோருவது.... இதை ஒரு நாவலாக எழுதுங்கள் பாலா!
லட்சுமணன் இத்தொகுப்பை காடு, நகரம் என இரண்டாகப் பிரிக்கிறார். காடுதான் வாசகனுக்குப் பெரும் புதிராகவும், புதராகவும், பார்க்கப் பார்க்கத் தீராத விருட்சங்களுடனும், நடக்க நடக்க முடிவுறாத மர்மப் பாதையாகவும், கேட்க கேட்க சங்கீதமாகிற மொழி வளத்துடனும் உள்ளது. பழங்குடி இருளர் மக்களின் மொழியைக் கூர்ந்து கவனிக்கையில் அதில் தமிழும், பிற திராவிட மொழிகளின் கலப்பும், மலை மக்களுக்கேயுரிய குறியீட்டுச் சொற்களும் விரவிக் கிடப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் அதீத நம்பிக்கைகளை பகுத்தறிவுக் கண்ணாடியணிந்து ஒவ்வாதவையென இன்றைக்கு நாம் மதிப்பீடு செய்தாலும் ஒரு காலத்தில் நம் மூதாதையர்களும் இப்படித்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்னும் யதார்த்தத்தையும் உணர¢ந்து கொள்ள முடியும்.
சுள்ளி எடுத்தா அடிக்கே
காட்டுக்குள்ளே போனா புடிக்கே
தேனெடுத்தா பாதி கேக்கே
தானிக்காய் பொரித்தா பாக்கே
எல்லாமே நிம்த்துதுங்கே
எனக்கொன்றும் பெரிய வித்தியாசப்படவில்லை இம்மொழி, இதன் தொனி, இக்கவிதைகள் உணர்த்தும் அரசியல். பாஷை புரியவில்லையென எவரும் சொன்னால் அது வெறும் பாசாங்கு.
 தமிழ் இலக்கியச்சூழலில் எப்போதாவது இப்படிப்பட்ட அபூர்வங்கள் நிகழ்கின்றன. நமக்கு வெகு தொலைவிலிருந்து பரிச்சயமற்ற ஒரு உலகைக் கண்டு இலக்கியமாக்குவது ஆகச்சிறந்த பணி. லட்சுமணனும் பாலமுருகனும் நமக்குக் கிடைத்த பெரும் பேறுகள்.
 கடைசியாக ஒரு வார்த்தை. ஒடியன் என்றால் தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி என்று பொருளாம். மார்க்குவேஸையே எதிர்கொள்ளும் மாந்திரீக யதார்த்தங்கள் நம் வனங்களிலும் மலைகளிலும் உறைந்து கிடக்கின்றன. உருக்கிப் புட்டியில் தர நமக்கு லட்சுமணன்கள்தான் வேண்டும்.
• பயனற்ற கண்ணீர் 
   சிவகாமி | உயிர்மை, சென்னை
• மதுக்குவளை மலர்
  வே. பாபு | தக்கை, சேலம்
• ஓடியன்

விட்டல்ராவும் பழைய புத்தகக் கடைகளும்


     தொண்ணூறுகளின் தொடக்கத்தில், தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில் நான் அசோகமித்திரனுடன் இணைத்து விட்டல்ராவையும்  வாசித்துக் கொண்டிருந்தேன். சென்னைப் பெருநகர வாழ்க்கையை எழுதிப் பார்த்த கைகளுள் விட்டல்ராவிற்கு ஒரு பிரதான பங்கிருக்கிறது. என்னுடைய வாசக அவதானிப்பில் அசோகமித்திரனின் நிழலாக நான் விட்டல்ராவைக் கருதுவதுண்டு.
ஒரு காலத்தில் சக பயணியாக கூடவே வந்து, இன்றைக்கு பல்வேறு காரணங்களால் எழுத்தைத் துறந்து வாழ்கின்ற தஞ்சாவூர் நண்பர் இளங்கோ, எனக்கு விட்டல்ராவின் கதைகள் குறித்த ஈர்ப்பை ஏற்படுத்தினார். இளங்கோவைப் போலவே நட்சத்ரன், கவிஜீவன், புத்தகன் என தஞ்சாவூரிலிருந்து மிக நுட்பமான கதை சொல்லிகளாக அடையாளம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பட்டாளமே ஏதேதோ காரணங்களால் எழுதுவதை நிறுத்திக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இதில் புத்தகன் என்கிற சிங்காரவேலு, சமீபத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போனார். இவர்கள் எல்லோரும் சுபமங்களா காலத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விட்டல்ராவைப் பேச வந்த இடத்தில் தஞ்சாவூர் நண்பர்களைக் குறித்தும் மெல்லிய கோடிட்டுக் காட்ட வாய்த்தது ஆறுதலாக இருக்கிறது.
Ôவாழ்வின் சில உன்னதங்கள்Õ என்று விட்டல்ராவ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கி கீக்ஷீவீtமீக்ஷீs லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் விமீனீஷீவீக்ஷீ என்று அதைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் விட்டல்ராவின் படைப்புகளைக் குறித்த விமர்சனங்களோ மதிப்புரைகளோ அதில் கிடையாது. முழுக்கவும் அவர் பழைய புத்தகக்கடைகளில் விலைக்கு வாங்கிய புத்தகங்களைக் குறித்த விவரணங்கள்!  பழைய புத்தகக் கடையில் வாங்கியது என்றாலும், அனைத்தும் தரமான பாதுகாக்கத்தக்க புத்தகங்கள். எல்லாம் தேடித் தேடிக் கண்டெடுத்த பொக்கிஷங்கள்! இதன்மூலம் ராவ் பழைய புத்தகக் கடைகள் குறித்த வரலாறு ஒன்றை எழுதியிருக்கிறார். அப்படித்தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. பழைய புத்தகங்களை விற்பவர்கள், ஒரு புதினத்தில் இடம் பெறும் கதா பாத்திரங்களைப் போல இந்நூலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுடைய உள்ளிட்ட குணாதிசயங்கள் எளிமையான வாழ்க்கை, அகந்தை, சிடுசிடுப்பு, பேரன்பு, அழுக்கும் தூசியும் படிந்த இருப்பிடங்கள் என எல்லாவற்றையும் புத்தக அறிமுகங்களுக்கு ஊடாக ராவ் சுவாரஸ்யமாக விவரித்துச் செல்கிறார்.
ஒரு காலத்துச் சென்னையில் பிரசிதித்தி பெற்றிருந்த மூர் மார்க்கெட்டில் அவர் சந்தித்த நாயக்கர், முதலியார், ஐரே, மௌண்ட்ரோடு தர்காவுக்கு வெளியில் மரத்தடியில் கடை பரப்பியிருந்த அப்துல்கரீம், சேலம் நடேச ஆச்சாரி, ஆழ்வார்பேட்டை மூர்த்தி, லஸ்கார்னர் முருகேசன், ஆழ்வார், எல்.ஐ.சி.கட்டடத்தை அடுத்த நடைபாதைக் கடை ஊமையன், நங்கநல்லூர் எத்திராஜு... இப்படி விதம் விதமான பழைய புத்தக வியாபாரிகளை, விட்டல்ராவ் இந்த நூலில் தனக்கே உரித்த மொழியில் அறிமுகப்படுத்துகிறார்.
மூர்மார்க்கெட் முதலியாரிடமிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்புகள் 12 புத்தகங்கள், கோர்தான்ஹார்னர் எழுதிய
திஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ போன்ற முக்கியமான புத்தகங்களை அவர் வாங்கியிருக்கிறார். இதில் திஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ நூலை எழுதிய கோர்தான்ஹார்னர் இரண்டாம் உலகப்போர்க் கைதி. அது ஒரு யுத்த சேதி சித்திரக் குறிப்பு. யுத்த அனுபவங்களுடன், கைதி முகாம் நாட்களையும் இணைத்து மிகச் சிறந்த கோட்டோவியங்கள் மற்றும் நீர் வண்ண ஓவியங்களுடன் படைக்கப்பட்டுள்ள அழகியல் அம்சம் நிறைந்த நூல் என்று அதைக் குறிப்பிடும் ராவ் அந்த ஓவியங்களையும் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச் செய்திருக்கிறார். கவசமோட்டார் தாக்குதல், ஜெர்மானிய ஒற்றன், இத்தாலிய அதிகாரி மற்றும் போர்க்காட்சிகள் என உண்மையில் அந்த ஓவியங்கள் நமக்கு பிரம்மிப்பூட்டுகின்றன. விட்டல்ராவ் ஒரு சிறந்த ஓவியர் என்பதும் நாமறிந்த செய்தி.
நேருவின் சுயசரிதை, தி டிராயிங்ஸ் ஆஃப் லியனார்டோ டா வின்சி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட Ôஇராமனுக்கு ஒன்பது மணிநேரம்Õ (ழிவீஸீமீ லீஷீuக்ஷீs tஷீ ஸிணீனீணீ) மாப்பசான் கதைகள், கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் முதல் நாவல்,  டிரேசி டைகர், மை நேம் இஸ் ஆரம் போன்ற புத்தகங்களையும், கோலியர்ஸ்,  தி சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட், லைஃப், ஆப்ஜர், என்கவுன்ட்டர், இம்பிரின்ட், தி சண்டே டைம்ஸ், தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா போன்ற இதழ்களையும் ராவ் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியிருக்கிறார்.
நம்முடைய எழுத்தாளர்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளைக் குறித்த அனுபவங்களை எழுதுவதில்லை. பிரபஞ்சன் திருவல்லிக்கேணி நடைபாதை புத்தகக் கடைகளைக் குறித்து எழுதியிருக்கிறார். சிலர் போகிற போக்கில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். ராவ் அந்த அனுபவங்களை ஒரு நூல் முழுக்க எழுதிப் பார்த்திருக்கிறார். அவருடைய வாசிப்பின் ருசி வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கசிந்திருக்கிறது.
Ôமூர்மார்க்கெட் எரிந்து முடிந்ததுÕ என்கிற பத்தாவது அத்தியாயம் சென்னையின் ஒரு கால கட்டத்து வரலாற்று சோகத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது.
ÔÔஎது சங்கமேஸ்வர ஐயரின் புத்தகக் கடை இருந்த இடம்? எது நாயக்கர் கடையிருந்த இடம்? என்றெல்லாம் அடையாளம் சட்டென்று கண்டு கொள்ள முடியாதபடி எல்லாம் கரி, எல்லாம் கருப்பாய்... ஓவென்று வானத்தைப் பார்த்துக் கத்திக் கதறித் தத்தித் தரிகடம், தத்தரிகிடம், தத்தரிகிடம் தித்தோம்....ÕÕ
என்று ராவ் எழுதும்போது மனம் வலிக்கிறது.
 விட்டல்ராவின் இந்த புத்தகம் தமிழி¢ல் ஒரு புதிய முயற்சி என்று கூறுமிடத்து, எனக்கும் பழைய புத்தக வியாபாரிகளுக்குமான உறவை ஒற்றை வார்த்தையில் சொல்லப் போனால் அது... ஏழாம் பொருத்தம்! அவர்கள் மௌனிகள், கர்விகள், ஒரு தங்கச் சுரங்கத்தை கட்டி மேய்ப்பதான பாவனை அவர்களே அறியாமல் அவர்களிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நான் பலமுறை யோசித்து வியந்திருக்கிறேன். ஒரு போதும் சண்டை சச்சரவு இல்லாமல் எங்களுக்கு பேரம் நிகழ்ந்ததில்லை. Ôபேரம் இல்லாமல் பழைய புத்தகம் வாங்குவது எனக்கு அனாச்சாரம்Õ என்கிறார் ஓரிடத்தில் ராவ். வெளியீட்டு விழா முடிந்த ஒரு சில மணி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளுக்கு வந்து சேர்ந்த புத்தம் புதிய சூடு தணியாத புத்தகங்களை எல்லாம், பார்த்து நான் மிரண்ட சம்பவங்கள் உண்டு. இது குறித்து இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. மறுபடியும் பேசுவோம்.
***
  சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள சில நூல்களைச் சமீபத்தில் வாசித்து முடித்தேன். யாழ்ப்பாணப் புகையிலை,  பாகிஸ்தான் போகும் ரயில், தென் காமரூபத்தின் கதை இப்படிச் சில. இந்த வரிசையில் நிர்மலா மோகன் தொகுத்த Ôதமிழ்ச் சித்தர் இலக்கியம்Õ என்னை வெகுவாக ஈர்த்தது. சித்தர் பாடல்களை உதிரியாகப் பல நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த எனக்கு, பதினெண் சித்தர்களின் முக்கியப் பாடல்கள் ஒரே நூலில்  இருக்கக் கண்டதும் மகிழ்ச்சி! சித்தர்கள் மீதான வியப்பும் பிடிப்பும் எனக்குச் சிறுவயது முதலே இருந்து வந்திருக்கிறது. போகர் என்னும் சித்தன் வாழ்ந்த தென்பழனி மலைக்கருகில் பிறந்ததால் எனக்கு இந்த சித்தர்பித்து பிடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனது பிராயத்தில் எங்கள் ஊரில் நோய் கண்டால் சித்தவைத்தியம் செய்வது மிகப் பிரபலம். இன்றைக்கும் பழனியிலுள்ள மலையப்பசாமி வைத்தியசாலை உள்ளிட்ட சில நிறுவனங்களால் சித்த வைத்தியம் பாவிக்கப்படுகிறது.
சித்தர்கள் அழியாத உடலும் சாகாத நிலையும் பெற்றவர்கள் என்பதெல்லாம் சற்று மிகையெனப்பட்டாலும் அவர்கள் பற்றற்றவர்கள்; வெயில், மழை, காடு, மேடு என எதைக் குறித்தும் கவலை கொள்ளாமல் தன் வழியே பயணித்தவர்கள், மெய்ஞானிகள் என்பதில் எவருக்கும் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. திருமூலர், சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், அழுகணிச் சித்தர், கொங்கண நாயனார், சட்டைமுனி, திருவள்ளுவர், அகத்தியர், சுப்பிரமணியர், வால்மீகி, இராமத்தேவர், கருவூரார் என பதினெட்டுச் சித்தர்களின் முக்கியமான பாடல்களையும் வாழ்வையும் இந்த நூல் நமக்கு விளம்புகிறது.
Ôசித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்Õ என்கிறார் மாணிக்க வாசகர். இதில் Ôஅத்தன்Õ என்கிற பிரயோகத்திற்கு தலைவன், தலைமை தாங்குபவர் என்னும் பொருள் உண்டு. அத்தனைத்தான் அத்தாவாக்கி, தமிழ் முஸ்லிம்கள் அப்பா என்னும் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். மாணிக்கவாசகர் மட்டுமல்ல நம்முடைய மகாகவி பாரதியும் தன்னைச் சித்தனாகக் கருதியதுண்டு.
ÔÔஎனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்ÕÕ
என்று அவர் பாடியிருக்கிறார்.
சித்தர்களை வைதீகத்திற்கு ஆதரவாளர்களாகச் சித்தரிக்கும் முயற்சிகள் தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது. ஆசைகளைத் துறக்க வலியுறுத்தும் பாடல்களை உதாரணங்காட்டி அவநம்பிக்கைவாதிகளாக்கிப் பார்த்தவர்கள் உண்டு.
நட்ட கல்லைத் தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணென்று
சொல்லுமந்திரம்  ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோÕÕ
என்று சித்தர் சிவவாக்கியர் வலுவாகக்கேட்கிறார்.
ÔÔஆலயத்துள் நின்ற ஆறு சமயத்தோரும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்ÕÕ
 என்கிறார் திருமூலர். எனவே கலாநிதி கைலாசபதி கூறியதைப்போல சித்தர்களைக் கலகக்காரர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ளலாம். மக்களிடம் படிந்திருக்கிற குறைகளைக் களைவது மட்டுமன்று; ஜாதி மதங்களை நோக்கியும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தவர்கள் சித்தர்கள்.
பறச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
என்கிற சித்தர் சிவவாக்கியர் குரலில் சாதிய சனாதனத்தை ஏற்றத்தாழ்வுகளை வன்மையாகச் சாடும் தொனி பொதிந்திருக்கிறது.
  இஸ்லாம் சமூகத்திலும் சித்தர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் சூஃபிகள் என்றழைக்கப்படுகின்றனர். குணங்குடி மஸ்தான், தக்கலை பீர்முகமது அப்பா போன்ற ஆண் சித்தர்களுடன், தென்காசி ரசூல்பீவி, ஆசியாம்மா உள்ளிட்ட பெண் சித்தர்களும் அங்கே இருந்ததுண்டு. சித்தர் உலகம் ஆழமானது. தத்துவார்த்தச் சுழலில் நம்மை சிக்க வைத்து, சித்தம் தெளியவைப்பது.
***
நட்பு, காதல், அரசியல், கலை இலக்கியம் என எல்லா வெளிகளிலும் நண்பர்களில் சிலர் தங்களின் சுயசாதி அடையாளத்தை தருணம் பார்த்து வெளிப்படுத்திக் கொள்வது, அதற்காக பெருமிதப்படுவது போன்ற அநாகரீகச் செயல்களில் ஈடுபடுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டு நான் அருவருப்படைந்திருக்கிறேன். எங்கெல்லாம் திறமை புறக்கணிப்புக்குள்ளாகி அவ்விடத்தை பிரிதொன்று வலிய அபகரித்துக் கொள்கிறதோ, அங்கே சாதி, மதம், பணம் இவற்றில் ஏதோ ஒன்று தம் பங்கை செவ்வனே செய்திருக்கிறது என சாமானியனும் புரிந்து கொண்டிருக்கும் காலமிது. ஆனால் இதற்கான எதிர்வினை எதுவுமற்று எல்லாவற்றிற்கும் சமரசமாகிக் கொள்ளும் ஒருவித மழுங்கைத் தனத்திற்கு நம்மை ஒப்படைத்து விட்டு ‘ஙே’ என்று நிற்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைச் சுற்றிப் படிந்துள்ள சாதியின் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாமல் வெறுமனே கோஷம் எழுப்பிக் கொண்டிருப்பதில் நான் அவநம்பிக்கை கொள்கிறேன். திரைப்படங்கள், தெருக்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களின் பெயர்களில் சாதியை நீக்க முடிந்தது மட்டுமே இந்த முதுகெலும்பற்ற அரசுகளின் உச்சபட்ச சாதனையாக இருந்திருக்கிறது. ஆனால் காலகாலமாக நம் உள்ளத்தில் படிந்துள்ள சாதிக் கசடை எந்த உத்தரவின் மூலமாக அகற்றப்போகிறோம்? பேராசிரியர். நா. வானமாமலை எழுதிப் பல பதிப்புகள் கண்ட Ôதமிழ்நாட்டில் சாதிசமத்துவப் போராட்டக் கருத்துக்கள்Õ என்றொரு புத்தகம் வாசித்தபோது  எனக்கு இது போன்ற அபிப்ராயங்கள் எழுந்தன.
 இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருந்த எல்லா சாதிகளைச் சேர்ந்த செல்வந்தர்களும் தத்தமது சாதியைப் பிரதானப்படுத்த ஆளுக்கொரு நூல் எழுதுவிக்கிற பணியில் இறங்கியிருக்கிறார்கள். 1901ல் வெளியான வருணசிந்தாமணி வேளாளர் சமூகத்துப் பெருமைகளைப் பேசுகிறது. வேளாளர் சைவ சமயத்தவர் என்பதால் அவர்கள் பிராமணரைவிட மேலானவர்கள் என்று நிரூபிக்க இந்நூலாசிரியர் வேதங்களையும் பழந்தமிழ் நூல்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். 1904ல் கிராமணிகள் தங்கள் சாதியை உயர்த்திக் கொள்ள க்ஷத்திரியகுல விளக்கம் என்றொரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள். க்ஷத்திரியரான ஜனகனிடமிருந்து தான் பிராமணர்கள் பிரம்மஞானம் என்கிற அறிவைப் பெற்றனராம். எனவே க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு குரு முறையாவார்கள் என்று அந்த நூல் கூறுகிறது. 1937ல் வெளிவந்த Ôநாடார் மன்னரும் நாயக்கர் மன்னரும்Õ என்னும் மற்றொரு நூல் நாடார் சாதிப் பெருமைகளை வியந்தோதுகிறது.
பஞ்ச திராவிட முதல்வன்
பரம்பரை பாண்டிய நாடன்
கல்விச் சங்கமுடையவன்
காசு முத்திரை விடுத்தவன்
சப்தகன்னி புத்திரன்
தமிழைக் குறுமுனிக் குரைத்தவன்
இது அந்த நூலில் காணப்படும் நாடார் மகாஜனங்களைக் குறித்த குலப் பெருமைப் பாடல்.
1909ல் வெளியான பரவர் புராணம் பரதவர்களின் உயர்வைப் பாடுகிறது. சந்திர வம்சத்தில் தோன்றிய அர்ச்சுனன் பரதகுலமன்னரின் மகள் சித்திராங்கதையை மணந்து பாண்டியவம்சம் தோன்றியது போன்ற இதிகாச நிகழ்வுகளைப் புனைந்து அவற்றுடன் தம் சாதியைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் போக்கு இந்நூலில் வெளிப்படுகிறது. கார்காத்தார் சாதி உயர்வைப் பேசும் Ôகிளை வளப்ப மாலைÕ என்கிற நூலும் இதே காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
இந்நூல்களின் ஓங்கி ஒலிப்பது ஒற்றைக்குரல்தான். அதாவது பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை இந்நூலாசிரியர்கள் அனைவரும் மறுக்கின்றனர். ஆனால் வருணாசிரமப் பிரிவுகளை இவர்களில் எவரும் எதிர்க்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. வருணாசிரமத்தில் தங்கள் சாதிகளுக்கு அளிக்கப்பட்ட தாழ்ந்த நிலைகளைத்தான் இவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று பேராசிரியர் நா.வா. தெளிவாகத் தனது ஆய்வுரையில் வெளிப்படுத்துகிறார். 48 பக்கங்களே கொண்ட இந்த சிறிய புத்தகம் தமிழ்நாட்டில் சாதிகள் கட்டமைக்கப்பட்ட விதத்தை ஒருவித தீவிரத் தன்மையுடன் பேசுகிறது.
இதை வாசிப்பதும் பிறகு விவாதிப்பதும் கூட சாதியத்துக்கு எதிரான ஒரு முக்கிய செயல்பாடுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

• வாழ்வின் சில உன்னதங்கள்
நர்மதா பதிப்பகம், சென்னை- \- -17
• தமிழ்ச் சித்தர் இலக்கியம்
சாகித்திய அகாதெமி, புதுடெல்லி.
• தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்
பாரதி புத்தகாலயம், சென்னை-- \ 18