Wednesday, January 26, 2011

ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்

தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்துப் பேச வருவோர் அது சில நூற்றாண்டுப் பராம்பர்யம் கொண்டதெனச் சொல்லி மகிழ்வர். நம்முடைய பழந்தமிழ்ச் செய்யுள்கள், சங்ககாலக் கவிதைகள் காப்பியங்களினூடே இடம் பிடித்துள்ள கிளைக்கதைகள் - காய சண்டிகை, ஆபுத்திரன் கதைகள், சிலப்பதிகாரத்தில் தேவந்தி மற்றும் பராசரன் கதைகள் போன்றவற்றில் சிறுகதைக் கூறுகள் வெளிப்பட்டுள்ளன. ‘பரமார்த்த குரு’ கதைகளை எழுதிய வீரமாமுனிவரின் உரைநடை வெளிப்பாடுகளில் நாம் கதைகளுக்குரிய சில லட்சணங்களைக் கண்டடைய முடிகிறது. எஸ். எம். நடேச சாஸ்திரியார் 1800 களின் இறுதியில் வெளியிட்ட ‘திராவிட மத்திய காலக் கதைகள்’, அதே நூற்றாண்டில் வாழ்ந்த தாண்டவராய முதலியார் எழுதிய பஞ்சதந்திரக் கதைகள், கதாமஞ்சரி போன்ற கதைக் கொத்துகளும், 20-ம் நூற்றாண்டின் கால்பகுதி வரை வாழ்ந்து மறைந்த செல்வக் கேசவராய முதலியார் எழுதிய ‘அபிநவக் கதைகளும்’ தமிழ்ச்சிறுகதைத் தளத்திற்கு அஸ்திவாரங்களென்று குறிப்பிடலாம். விடுதலை உணர்வு வலுப்பட்டிருந்த காலத்தில் பாரதியும், மாதவையாவும், வ.வே.சு. அய்யரும் சுதேசமித்ரன் போன்ற இதழ்களில் கதைகளை எழுதியுள்ளனர்.
1930-களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மணிக்கொடி’ இதழ், சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பி.எஸ். ராமய்யா, ந.பிச்சமூர்த்தி போன்றோரும், தமிழ்ச் சிறுகதையின் சிகரம் தொட்டவரெனக் கருதப்படும் புதுமைப்பித்தனும், ந.சிதம்பர சுப்ரமணியன், எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், க.நா.சு., கு.ப.ரா., சி.சு. செல்லப்பா, மௌனி போன்றவர்களும் பயணம் செய்த தடமாக அது இருந்தது.
இந்தியக் கதை மரபை எடுத்துக்கொண்டால் கதைகளின் பிறப்பிடமாக இந்திய நாடே இருந்திருக்கிறது என்பதை வரலாற்றின் அடிப்படையில் வைத்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பாரசீகனும், அராபியனும் இங்கிருந்து கற்றுக்கொண்ட கதைக்கலைதான் மத்திய கிழக்கு நாடுகளெங்கும் வியாபித்து வேர்விட்டுக் கிளை பரப்பியதாகச் சொல்கிறவர்கள் உண்டு.
பல லட்சம் அத்தியாயங்களில் மாந்த்ரீக மொழியில் சொல்லப்பட்ட ‘பிருகத்’ என்னும் நீண்ட கதைப்படைப்பு கி.பி. 6ம் நூற்றாண்டுகளில் விளங்கியுள்ளது.
தமிழ்ச் சூழலில் கதைகள் நம்முடைய பாரம்பர்யமான பண்பாட்டு வெளிப்பாடுகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஒரு பூம்பூம் மாட்டுக்காரனும், குடுகுடுப்பைக்காரனும், குறிசொல்லியும், ஜோதிடக் கலைஞனும் கதைசொல்லிகளே, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம், புராணக்கதைகளை வெளிப்படுத்துகின்ற தெருக்கூத்து, பொம்மலாட்டம், பாவைக்கூத்து போன்ற யாவும் கதைமரபின் கண்ணிகளே.
இன்றைக்குப் பல்வேறு உத்திகளாலும் வெளிப்பாட்டு த்வனிகளாலும் மொழியின் உபயோகங்களாலும் ஒருவித உன்னத நவீன நிலைமை அடைந்து விட்டதாகக் கருதப்படும் தமிழ்ச்சிறுகதைப் பரப்பிலே ஹரிகிருஷ்ணனின் கதைகள் எவ்விதமாய் இயங்குகின்றன இவருடைய உலகம் எது, உள்ளடக்கம் எது; எதுமாதிரியான அரசியலை இவை முன்வைக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க அவசியமிருக்கிறது.
இலக்கணம் வகுப்போர் சிறுகதைக்கு எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் வேண்டி நிற்பர். நல்லது ஙீ கெட்டது என்னும் மோதலைக் கேட்பர். சிறுகதைக்கு மையத்தை நோக்கிய நீச்சல் அவசியம் என்கிறவர்கள் உண்டு. திருப்பமும் தேவையாம். மௌனம், ஒருமை, தீவிரத்தன்மை, ஒற்றைப் படையான நகர்வு எல்லாமும் இங்கே சிறுகதைக்குரிய இயல்புகளென வகுக்கப்பட்டுள்ளது.
‘நாயி வாயிச் சீல’ தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும், மேற்கண்ட சிறுகதைப்பண்புகளை ஒருவித முரட்டு தைரியத்துடன் நிராகரித்தபடி அதனதன் எல்லையற்ற இலக்குகளை நோக்கிப் பிரயாணிக்கின்ற தன்மை கொண்டுள்ளவையாக அனுமானிக்க முடிகிறது.
வாழ்க்கை கற்றுத் தருகின்ற அல்லது நிர்பந்திக்கின்ற எண்ணிலடங்காத விஷயங்கள் அனுபவச் சேகரங்களாகி, ஒரு சமயத்தில் புனைவின் நுட்பத்துடன் சிருஷ்டியாக வெளிப்படுவது இயல்பெனினும்; அவ்வகை அனுபவங்களுக்கும் படைப்புக்கும் தொடர்பில்லையெனக் கூறுவோர் உண்டு. நாயி வாயிச் சீல தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஹரியின் அனுபவங்களின் தொகுப்பாகத்தான் எனக்குப் படுகிறது ‘‘இவை ரத்தமும் சதையுமான என்வாழ்விலிருந்து நான் உங்களுக்குத் தருவது’’ - என்னும் வாக்கு மூலம் ஒவ்வொரு கதையையும் வாசித்து முடிக்கும்போது நம்மை எட்டி விடுகிறது.
இலக்கியத்தின் மேல் போலியாகவும் பாவனைகளாகவும் படிந்துள்ள மரபானவற்றின் மேல், படைப்பாளிக்கு நியாயமாக எழுகின்ற கோபங்கள்தான் இக்கதைகளின் தலைப்பு, உள்ளடக்கம், மொழிவெளிப்பாடு இத்யாதி விஷயங்களில் ஒருவித மீறலாக நாம் அடையாளங் காண்பது. ஏற்கனவே உள்ள நியமங்கள் மீது இக்கதைகள் எழுப்புகின்ற கேள்விகள் நியாயமானவை. இவ்வகை மீறல்கள்தான் புதிய வடிவங்களை நிர்மாணிக்க வல்லவை. நம்முடைய முன்முடிவுகளும் நம்முடைய அளவுகோல்களும் நம்மைப் பற்றியுள்ள கற்பிதங்களும் இவ்வகைப் புதிய வடிவ எழுச்சியின் முன் சரணடைகின்றன.
இக்கதைகளில் பிரயோகிக்கப்பட்டுள்ள வட்டாரமொழி இக்கதைகளின் வெற்றியைத் தீர்மானிக்கிற சக்தியாக உள்ளது. விவரணைகளுக்கு நவீன மொழியையும் உரையாடல்களுக்கு வட்டார வழக்கையும் கையாளுகின்ற என்னிடம் அவை ஓயாமல் கேள்விகளை எழுப்புகின்றன. முதல் சொல்லாடலிலிருந்து முடிவு வரை, கொச்சையானதென நம்மால் நம்பப்பட்டுள்ள வட்டார மொழி பொங்கும் இசை வெள்ளமெனப் பாய்ந்தோடுகின்ற அதிசயத்தை இக்கதைகள் முதன்முதலாக நமக்கு உணர்த்துகின்றன.
‘‘கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ்சூள வெச்சாப்பிடி அனாமுத்தாப் பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே. அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா’’
‘‘மூணு தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழுவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசருப் பசுங்கக்கிட்ட குடுத்துர்றான்’’ ‘‘சின்னப்பட்ட கழுதைக்கி செனக்கழுத கூத்தியாளாம். சேட்டு பன்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரான்’’
‘‘ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல’’
“பொழப்புப் போயி பொடக்காலியில நின்னுக்கிட்டு போவுட்டுமா வருட்டுமாங்குது. வவுசி வந்து வாசல்ல நின்னுக்கிட்டு வருட்டுமா போவுட்டுமாங்குது’’
“அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது’’ ‘‘தவுசு நாடகத்துல வர்றபேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப் பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்சமாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம்’’
‘‘ ஆர்ரா புண்டவாயா உனுக்கென்றா கேடுகாலம்? வவுத்துக்கு சோறு திங்கிறியே, உனக்கு அறுவு இல்ல? நெனவு இல்ல? தாயோட ஒண்ணுடா இந்த கேனச்சி, இவள வந்து இந்நேரத்துக்கு கூப்டுறியே ங்கோயா உன்ன என்னான்னுடாப் பெத்தா? ஈனப்பானங் கெட்டத் தாயோலி! தம்பி எந்திரிச்சிக்கிட்டுத் தாளம்போட்டா கல்லு மேல வெச்சி நைநைன்னு கொட்றது. இல்ல காராம்முள்ள வெச்சி தேய்க்கிறது?’’
‘‘நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி சுடுகாட்டுல. மவ மூஞ்சியப்பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந்தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம். நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்? தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா? ஏழுய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு, மொண்டி, மொடம் இப்படி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக் கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறு பண்டிவேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக் கண்ணுச் சாமி!’’
_ இவ்வாறு தொகுப்பெங்கும் ஹரிகிருஷ்ணன் முன்வைக்கின்ற சொல்லாடல்கள் கொங்கு மண்டலத்தின் வால் முனையான சேலம் ஏர்வாடி வட்டார வழக்கைத் தோண்டித் தோண்டி நமக்குத் தருகிறது. இவ்வழக்கு பல சமயங்களில், எங்க ஊர் ஆயா ஒருத்தி காரை தூர்ந்த திண்ணையில் கால் நீட்டியமர்ந்து இழந்த தன் வாழ்வின் எச்சங்களை வெற்றிலையாய் உரலில் இடித்துச் சவைக்கிற மாதிரியும், அவளே, காணாத தன் சனஞ்சாதியைக் கண்டு விடும்போது ‘‘இப்புடியெல்லாம் ஆயிப்போச்சே சாமீ...’’ என்று உரத்த குரலெடுத்து ஒப்பாரி வைப்பது போன்றும் பிரம்மைகளை எனக்குத் தருகின்றன.
ஹரிகிருஷ்ணனின் மொழி எனக்க மிக நெருக்கமாக நான் உணர்ந்த மொழி. என் மண்ணின் மொழி. பெயருக்கு முன்னால் ஒரு அடையாளம் போல ஊர்ப் பெயரையும் சுமந்து திரியும் நான் பெருநகரத்து இரைச்சலில், நெரிசலில் என்னை அன்னியமாய் உணர்ந்த சந்தர்ப்பங்கள் தான் அனேகம். இக் கதைகளின் வழியே என் வேர்களை நான் எட்டநின்று தரிசித்த திருப்திகொண்டேன். ஆனால் வேறொருவிதத்தில் இக்கதைகள் என் குற்ற உணர்ச்சிகளைத் திருகித் தூண்டிவிடுகின்றன. மற்றொரு விதத்தில் பெருமிதமும் கொள்ள வைக்கின்றன.
நாட்டார் வழக்கை கதை மொழியாகக் கொண்டு ஒரு சிலர்தான் வெற்றி பெற்றுள்ளனர். கி. ராஜாநாராயணன் அதற்கொரு சிறந்த உதாரணம். ஆனால் இத் தொகுப்பிலுள்ள கதைகளைப் போன்ற உள்ளடக்கம் கொண்டவற்றை கி.ரா., பாலியல் கதைகளென்றே தனியாக அடையாளப்படுத்துகிறார். ஹரி ‘‘என் படைப்புலகமே இவை தான்’’ என்று முன் வைக்கிறார். இதற்கொரு துணிச்சல் தேவைப்படுகிறது.
வாழ்வில் எதிர் கொள்ளும் குரூரங்களின் போதும், அவற்றைப் பதிவு செய்கிறபோதும், பிறிதொருவர் வழியே அவற்றை வாசக அனுபவமாக உணரும் தருணங்களிலும் நம் மனதின் சமநிலை குலைந்து தகர்ந்து விடுகிறது. நாயி வாயிச் சீல’ வாசிப்பனுபவம் எனக்கு அதைத் தந்தது. இந்தத் திக்கத்த சனத்துடன் நானும் ஒருவனாகக் கரைந்து போனபோது நிம்மதியாக உணர்ந்தேன்.
ஒவ்வொருவர் உலகமும் தனித்தனியானது. விசித்ரமானது. அவ்வகையில் கூத்துக்கலையை ஏற்றுக்கொண்ட விளிம்பு நிலைப் பிரஜைகளின் உலகம் அசாதாரணமானது. நம்மால் உன்னதம் என்று கொண்டாடப்படுகின்ற யாவும் அங்கே அர்த்தமிழந்து போகின்றன. அவர்களுடைய கனவுகள் எல்லாம் நமக்கு அன்னியமாகவும் நம்முடைய எதிர்பார்ப்புகளெல்லாம் அவர்களுக்கு சாதாரணமானவையாகவும் இருப்பது கண்கூடு. இந்த இடைவெளி நீளமானது. இதைக் குறைக்கவல்ல அதிசயம் ஒரு போதும் நிகழ்ந்துவிடாது. இதுதான் நம்முடைய இயலாமை.
ஹரிகிருஷ்ணனின் கதைகளில் சமகால சிறுகதைக் கூறுகள் எதுவும் இல்லை. அகமன சஞ்சாரமில்லை. பக்கம் பக்கமான விவரணைகள், வலிந்து திணிக்கின்ற பாலியல் சித்தரிப்புகள் இல்லை. இக்காரணங்களினாலேயே இவை தனித்துவம் பெறுகின்றன. இதே காரணங்களுக்காக நம்முடைய இலக்கிய மேதைமைகள் இவற்றைப் புறக்கணிக்கின்ற சந்தர்ப்பங்களையும் உருவாக்கித் தருகிறார் ஹரி.
இக்கதைகளின் நெடுந்தடமெங்கும் குருதியும் வியர்வையுங் கலந்த நறுமணம் கமழ்கிறது. வழக்கொழிந்த வசவுச் சொற்கள் கூத்துங் கும்மாளமுமாய் கொடியேறிப் படபடக்கின்றன. இதுகாறும் அழகியலோடு சித்தரிப்பைப் பெற்ற திருநங்கையரின் வாழ்வு அசலான முறையில் காட்சிப்பட்டுள்ளது. காலச்சூழலில் தமிழ்ச் சிறுகதையுலகம் தவிர்த்தும் தவறவும் விட்ட நாட்டார் தன்மைகள் மீண்டும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஹரிகிருஷ்ணன் புதுவிதமான எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார். கூத்துக்கலைஞர்களிடமிருந்து பெற்று அவர் தமிழுக்குத் தர நிறைய இருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கிறது.

Thursday, January 13, 2011

தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகீர் ராஜா

கல்லிலே உருவான இந்த அதிசயத்தைக் காணத்தான் கொங்கு மண்டலத்திலிருந்து 16 வருடங்களுக்கு முன்னால் நான் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்தது. கரையேறி மீன் விளையாடும் காவிரிக்கரையை இலக்கியங்களில் படித்துவிட்டு வற்றிய காவிரியைக் கண்டபோது எனக்கு மனம் திடுக்கிடத்தான் செய்தது. நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி வரும் காவிரியை மோகமுள்ளிலும் அம்மா வந்தாளிலும் வாசித்துவிட்டு ஒரு மணல் காட்டை தரிசித்தபோது திசைமாறி வந்துவிட்டோமோ என்னும் அன்றைய என் தவிப்பு, தவிப்பின் வடு இன்றளவும் மாறாமலிருக்கிறது. ஜானகிராமனின் கதைமாந்தனைப்போல படித்துறையில் ஆற அமர உட்கார்ந்து அகண்ட காவிரியில் லயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் என் ஆதி நம்பிக்கை வறட்சி குதிரைகளின் குளம்படி ஓசை அசரீரியாய் கேட்க, ஒரு புராதன நகரத்துக்குள் புழங்கித் திரிபவனாயிருக்க வேண்டுமென்பதுதான் அன்றைய என் கனவாயிருந்தது. அதுதான் என்னைத் தஞ்சாவூருக்கு இழுத்து வந்தது.

தஞ்சாவூரின் எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் ராஜராஜேச்வரம் எனப்படும் பெரியகோவில் நம் கண்களுக்கு காட்சியளிக்குமென எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் பஸ்ஸை விட்டு இறங்கி பெட்டியும் கையுமாக அண்ணாந்து பார்த்தபடி நடக்கிறேன். வணிக வளாகங்களால் சூழப்பட்ட நகர்மயமாகியிருந்த சற்று படாடோபமான தஞ்சாவூரைத்தான் அன்றைக்கு என்னால் காண முடிந்தது. பிறகொரு கிடைத்ததற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. தஞ்சாவூரின் பல நூற்றாண்டு கால வரலாற்றையும், பெரியகோவிலின் உன்னதங்களையும், அவலங்களையும், அகண்ட காவிரியின் சுழிப்புகளையும் அதன் வற்றிய சோகச் சரிதத்தையும் தன் நெஞ்சிலே புதைத்து வைத்துத் திரிந்த ஒரு ஆன்மாவைச் சந்திக்க வாய்த்தது. அவர் பெயர் தஞ்சைப் பிரகாஷ். இலக்கியத்திலேயே இது ஒரு இருட்டடிக்கப்பட்ட பெயர். ஆனால் நான் அறிந்து கொள்ள துடித்த புராதனத் தஞ்சையின் வளம்மிக்க பக்கங்களை மட்டுமல்ல பெரியகோவிலின் நிஜமான பிம்பத்தை குறிப்பாக, ராஜராஜசோழனால் சிவதுரோகியாக்கப்பட்ட பாவப்பட்ட ஏழைக் கூட்டத்தை பிரகாஷ்தான் எங்களுக்குச் சொன்னார். அவர்களின் வழியே உடலில் சூடு போடப்பட்டு சோழ மண்டலத்தின் பல பாகங்களிலிருந்தும் இழுத்து வரப்பட்ட 400 பெண்கள் தளிச்சேரிப் பெண்டுகளாக தேவரடியார்களாக தாசிகளாக்கப்பட்ட வரலாற்றின் கறைபடிந்த இருள்பக்கங்களையும் கதைசொல்லி ரூபமெடுத்த அவருடைய வாய் வழியாகத்தான் கேட்க நேர்ந்தது.

பிரகாஷ் கடைசியாகத் தொடங்கி நடத்திய இலக்கிய அமைப்புக்குப் பெயர் தளி. தளி அமைப்பின் கூட்டங்கள் நடந்த இடம் அசல் தளிச்சேரி. இன்றைக்குப் பெரிய கோவிலின் உள்ளே நுழைகிறவர்களுக்கு அந்த தளிச்சேரி பசுமையான புல்வெளியாகக் காட்சியளிக்கலாம். ஆனால் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில்தான் தளிச்சேரிப் பெண்டுகளின் வதைபடும் வாழ்க்கை நடந்திருக்கிறது. தளி என்றால் கோவில், சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம். தஞ்சாவூரிலிருந்த எரியூர் அரிகுலகேசரி ஈச்வரம், கடம்பூருக்கருகில் திவிலன்கோவில், திருவாரூரிலிருந்த பெரியதளி, பிரமீச்வரம், திருவாழனேரி, ஒலோகம மகாதேவீச்வரம், அருமொழி ஈச்வரம், உலகீச்வரம் போன்ற ஆலயங்களிலிருந்தும் அந்தப் பெண்கள் தஞ்சாவூருக்கு கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஒரு பாதி. மறுபாதியினர் ராஜராஜனால் விதிக்கப்பட்ட வரியைக் கட்ட முடியாமல் சிவதுரோகியாக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் மற்றும் ராஜராஜனால் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் . இவர்களில் அரசகுடும்பத்தினரும் அடக்கம். அலகிடுபவர்களாக, மெழுகிடுபவர்களாக, விளக்கேற்றுபவர்களாக, ஆடுமகளிராக அதற்கும் அப்பால் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேய்ச்சல் நிலமாகவும் அவர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வகையில் இந்த தளிச்சேரியிலிருந்து தான் என்னுடைய இலக்கியப் பயணம் தொடங்கியது. இன்றைக்கு நவீனமான புல்வெளியாக்கப்பட்ட அந்த இடத்தில்தான் எங்கள் படைப்பரங்கம் நடைபெற்றது.

தஞ்சைப் பெரியகோவில் தன் விதானங்களை அகண்ட ஆகிருதியை படைப்பாளிகளுக்குத் திறந்து வைக்கிறது. இங்கே வழிபாட்டுக்காக வருகிறவர்களை விட தங்கள் மன அவசங்களுக்கு வடிகால் தேடி வருகிறவர்களே அதிகம். திறந்த வெளியும் செதுக்கப்பட்டுள்ள கலைச்சிற் பங்களும், பசும்புல் வெளியும், நெடிதுயர்ந்த கோபுரமும் நெஞ்சிலே பாரஞ்சுமந்து வருகிறவர்களை ஆசுவாசப்படுத்த ஆற்றுப்படுத்த வல்லவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆகிருதியைச் சுற்றிவரும் பொழுது பத்தாம் நூற்றாண்டுப் புராதன நிழல் நம்மேல் கவிகிறது. கீழைச் சாளுக்கியரின் நிலமாயிருந்த வேங்கி நாடென்றழைக்கப்பட்ட இன்றைய ஆந்திரம், கங்கபாடி என்றழைக்கப்பட்ட இன்றைய மைசூர், நுளம்பர்களின் பிரதேசமாகயிருந்த பெங்களூர், பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள், குடகுநாடு, கேரளத்துக் கொல்லம், கலிங்கம், தென் இலங்கைத் தீவிலுள்ள ஈழம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி என்னும் வடகர் நாடகம், மராட்டியம், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் தமிழகத்தின் பாண்டியநாடு யாவற்றையும் வெற்றிகண்டு அபய குலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள் மொழி, அழகிய சோழன், ரணமுகபீமன், ராஜாச்ரயன், ரவிகுல மாணிக்கன், ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜகேசரி வர்மன், ராஜமார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துங்கதுங் கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், தெலிங்ககுல காலன், நிகரிலிசோழன், நித்யவினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச்சோழன், மூர்த்த விக்கரமா பரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைலகுல காலன் என்று மூச்சுவாங்குமளவு தனக்கு நூற்றுக்கணக்கான பெயர்களைச் சூடிக்கொண்ட ராஜராஜனின் படைகளையும் போர்ப் பரணிகளையும் வரலாற்றுப் பரிச்சயமுள்ள படைப்பாளிகளால் உள்வாங்கிக் கொள்ள முடியும். நம்முடைய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், இலக்கியப் பீடங்கள் காரணமில்லாத புனைப்பெயர்களைச் சூடிக்கொள்வர். ராஜராஜன் சூடிக் கொண்டவை காரணப்பெயர்கள். பிறகு ஆன்மீகம் என்கிற பரவச நிலையை விடுத்து சற்றே நம் பகுத்தறிவின் சாளரத்தை மூடிவைத்துவிட்டு இங்குள்ள கலையழகை யெல்லாம் அதனதன் தொன்மத்துடன் பொருத்திப் பார்ப்போமானால் இன்னொரு மாறுபட்ட லோகத்துக்குள் நம்மால் சஞ்சரிக்க முடியும்.

மேம்போக்காக நுனிப்புல் மேய்கிற தன்மையுடன் கலைப்ரக்ஞையற்ற கண்களால் பெரியகோவிலைப் பார்க்கிறவர்களுக்கு எதுவும் அனுபவித்தறிய முடியாது. பெரியகோவில் கோபுரத்தின் குறுகிய படிக்கட்டுகளின் வழியே கருவறைக்கு மேலே உள்ள திருச்சுற்றில் சிவனின் 108 விதமான நடனத்தோற்றங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 81 தோற்றங்கள் வரை செதுக்கப்பட்டு என்ன காரணத்தினாலோ 27 நிலைகள் செதுக்கத் தோதான நிலையில் விடப்பட்டுள்ளது. சிற்பங்கள் செதுக்கப்பட்ட பிறகு சிற்பிகளின் கண்களை ராஜராஜன் குருடாக்கி விட்ட தாகவும் ஒரு வதந்தி உண்டு.

பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டி ருக்கிறது. பேராசிரியர் அடையாளப்படுத்தியபிறகு இந்திய தொல்லியல் துறை உள்ளே நுழைகிறது. சோழர்கால ஓவியங்களுக்கு மேல் நாயக்கர் கால ஓவியங்கள் படிந்திருக்கின்றன. இவையும் 400 ஆண்டுகாலப் பழமைவாய்ந்தவை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல 1000 ஆண்டு பழமைவாய்ந்த சோழர்கால ஓவியங்கள் தனியாகவும் 400 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த நாயக்கர்கால ஓவியங்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகின்றன.

சோழர்கால ஓவியங்களை ஆய்வு செய்தவர்கள் அவை ‘ப்ரெஸ்கோ ப்யூனோ’ அரிய வகையைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை விட வரையப்பட்ட பாணிகளால் இந்த ஓவியங்கள் உயர்தரமானவை என்று இதற்குப் பொருள். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரிய மூலிகைச் சாறுகளுடன் மரப்பிசின் கலந்து தயாரிக்கப்பட்ட வர்ணக்கலவைகளை இந்த ஓவியங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மட்டுமல்ல புராணக் காட்சிகள், போர்க்கோலங்கள், கடவுளர்கள், மன்னன் ராஜராஜன், அவனது மனைவியர், ராஜராஜனின் குருமார்கள், நடனமாதர்கள், சோழர்கால ஆண்கள், பெண்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை இந்த ஓவியங்கள் துல்லிய மாகச் சித்தரிக்கின்றன.

ஆடல் மகளிர்களை அதற்குரிய வனப்புடன் தீட்டியிருக்கிற அதே தூரிகைகள் குடும்பப் பெண்கள் சமையலறையில் சமைப்பது உள்ளிட்ட பல காட்சிக்கோணங்களையும் பதிவு செய்திருப்பதும் சாமானிய மாந்தர்களும் இக்காட்சிப் புலத்துள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய தாகும். ஆனால் இந்த ஓவிய மேளாவை நிகழ்த்திக்காட்டிய எந்த ஓவியனின் பெயரும் பதிவாகவில்லை என்பதுதான் ஆகத்துயரமாகும். ஓட்டைச் சுவரிலிருந்து வெளிப்பட்டு ஓவியங்களைக் காட்டித்தந்து சிறகடித்த அந்தப் பெயர் தெரியாச் சிறுபறவைக்கு காலம் நன்றி கூறுவதைப் போல, ஒரு காலகட்டத்தையே தங்கள் தூரிகைக் கரங்களால் வார்த்துத் தந்திருக்கிற அந்த ஓவியக் கலைஞர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றியறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ராஜசிம்மன் என்கிற பல்லவ மன்னனால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்ட கச்சிப்பேட்டுப் பெரிய கோவிலைப் பார்த்த பிறகுதான் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட நினைத்ததாகக் கூறுகிறவர்கள் உண்டு. இலங்கையை வெற்றிகொண்ட ராஜராஜன் அங்கிருந்த பௌத்தவிஹார்களின் காட்சிப் பொலிவில் மயங்கி, இவற்றையெல்லாங் கடந்த ஒரு கலைக் கோட்டத்தை உருவாக்க எண்ணிப் பல காலங்கள் பலவிதமாய் மனதில் அசைபோட்டு செயல்வடிவம் தந்தது தான் ராஜராஜேச்வரம் என்று அபிப்ராயப்படுகிறவர்களும் உண்டு.

எதிர்காலத்தில் உன் புகழ் போர்களின் மூலமாக மட்டுமே அறியப்படாமல் நீதிமான்களும், கல்வியாளர் களும், கலை விற்பன்னர்களும், மதியூக அரசியல் மேதாவிகளும் மட்டும் உன்னைப் பாராட்டாமல் சைவ சமயத்தாரும் உன்னைப் போற்றிப் பாட ‘தளிக்குளம்’ கோவில் பெரியகோவிலாக வேண்டும் என்று தமக்கை குந்தவை வேண்டிக்கேட்டுக் கொண்டதன் பேரில்தான் ராஜராஜன் பெரியகோவிலை நிறுவினான் என்று நிறுவுகிறவர்களும் உண்டு.

கட்டடக் கலை என்று பார்க்கும்போது பத்தாம் நூற்றாண்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனைதான் பெரியகோவில். இதற்கு சில நூற்றாண்டு களுக்குப் பிறகு மொகலாயர்களின் கட்டடக்கலை வியப்பூட்டும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் உருவங்களைப் புறக்கணிக் கின்ற இஸ்லாமிய வேத அடிப்படையில் சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு இடமில்லாமல், அவை சலவைக்கற் களால் எழுப்பப்பட்ட சன்னிதானங்களாகவே காட்சியளிக் கின்றன. என் பிள்ளைகளுக்கு எங்கோ தொலைவில் யமுனா நதி தீரத்திலிருக்கின்ற தாஜ்மஹாலைக் காட்டு வதைவிடவும் அருகிலிருக்கின்ற பெரியகோவில் என்கிற இந்த அதிசயத்தைக் காட்டுவதில் தான் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. நண்பர்களே! ராஜராஜனின் கலாரீதியான செயல்பாடுகளைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. நட்டுவக்காரர்கள், பாட்டுக்காரர்கள், கானபாடிகள், வங்கியக்காரர்கள், பாடவியக்காரர்கள், வாத்தியக்காரர்கள், உடுக்கை வாசிப்போர், வீணை வாசிப்போர், ஆரியம்பாடுவோர், தமிழ் பாடுவோர், கூத்தர், கெட்டி மத்தளம் வாசிப்போர், கந்தர்வத் துறையார், சங்கு ஊதுவோர், பக்கவாத்தியர், உவச்சர்கள் என்று 17வகை யான கலைஞர்களை பெரியகோவிலுக்காக வென்றே பராமரித்துக் காபந்து செய்தவன் ராஜராஜன். சரி; கலை இவனாட்சியில் உச்சத்திலிருந்தது! ஒப்புக் கொள்வோம்! ஆனால் ஜனங்கள் என்ன நிலையிலிருந்தார்கள். மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்களென நாம் ஆய்ந்து பார்க்கையில் ராஜராஜனுக்குப் பின்னடைவுதான் என்கிற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சோகம்தான்! ஒரு கோயிலுக்காக தன் சாம்ராஜ்யத்தின் பெரும் பகுதிச் செல்வமனைத்தையும் தாரைவார்த்த இந்தத் தஞ்சை மன்னன் தனதாட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களை, பாட்டாளி வர்க்கத்தை, கடைநிலைச் சமூகத்தை எந்த லட்சணத்தில் நடத்தினான் என்றும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைகள் தேவைதான். கலைஞர்கள் போற்றி ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் கற்களால் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டத்துக்குக் கீழே உழைப்பாளிகளின் உதிரம் சிந்தப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறை, நல்லெருது, ஓடக்கூலி, ஈழம் பூட்சி, தரகுப்பட்டம், தறி உறை, மீன்பாட்டம், வட்டி நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப்பாறை, குசக்காணம் என்று மீனவர்கள், உழவர்கள், சலவைத் தொழிலாளிகள், நெசவாளர்கள், தரகர்கள், ஆட்டிடையவர்கள், ஓடக்காரர்கள், கள் இறக்குவோர் உள்ளிட்ட உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர் மேல் வரிச்சுமையை ஏற்றி வைத்தவன் ராஜ ராஜசோழன். சனாதன தருமம் வேர்பிடிக்கவென்றே திட்டமிட்டு பார்ப்பனர் களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கிவிட்டு குடிமக்களில் ஒருவன் திருமணம் செய்து கொண்டால் அதற்குரிய ‘கண்ணாலக் காணம்’ என்கிற வரியைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டவன் ராஜராஜன். அவனுடைய கல்வி நிறுவனங் களிலே கற்பிக்கப்பட்டவை எல்லாம். மீமாமிசை, வியா கரணம், இதிகாசம், சிவதருமம் என்று வடமொழிக்குரிய இலக்கண இலக்கியங்கள்தான்! தமிழக வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் தேங்கிவிட்ட வலங்கை, இடங்கைக் குலங்களின் போராட்டங்கள் ராஜராஜன் காலத்து எச்சம்தான்!

இந்த அகண்ட ராஜேச்வரத்தின் கல்வெட்டுகளில்தான் தமிழகத்திலேயே முதன் முதலாக சமஸ்கிருத அட்சரங்கள் பொறிக்கப்பட்டன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல வரிசெலுத்த முடியாதவர்களை சிவதுரோகியாக்கி, அவர் களுடைய நிலங்களை விற்று, கோவில் நிர்வாகத்திடம் சேர்ப்பித்தது ராஜராஜனின் ஊர்சபை! பிறகு அந்த நிலங்கள் பிராமணர்களுக்குச் சொந்தமான பிரம்மதேயங்களாக, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான சதுர்வேதி மங்கலங் களாக மாற்றம் பெறுகின்றன. இந்த ஊர்சபை நிர்வாகம் குறித்து பெரிய பாராட்டுகளை ராஜராஜனுக்கு வழங்குகின்ற இன்றைய நண்பர்கள், அந்த ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மட்டுமே அங்கம் வகிக்க முடிந்தது என்கிற சங்கதியை வசதியாக மறந்துவிடுகின்றனர் அல்லது மறைக்கின்றனர்.

செழிப்பான தஞ்சாவூர் கிராமங்கள் ஒவ்வொன்றின் வளத்தையும் வாழ்வையும் உறிஞ்சித்தான் பெரிய கோவில் கோபுரம் நிமிர்ந்திருக்கிறது. ரூபாய்க்கு 10 வட்டி என்பது இந்தக் காலத்திலேயே கொடுமையாக இருக்கும் போது 12 சதவிகித வட்டிக்குப் பணம்கொடுத்து, அதை வசூலிக்க ஒரு குண்டர் படையையும் வைத்திருந்து லேவாதேவி வேலைபார்த்தவனாக ராஜராஜனுக்கு இன்னொரு மங்கிய முகம் உண்டு. நிலப்பிரபுத்துவம் என்கிறபொருளியியல் ஏற்பாடு ராஜராஜன் காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது. சொந்த நிலமுள்ளவனுக்குத்தான் அவன் காலத்தில் மதிப்பு. ஒருவன் கோவில் பண்டாரமாக விரும்பினால்கூட அவனிடம் குறிப்பிட்டளவு நிலம் வேண்டும்.

இன்னொரு விஷயம்; தளிச்சேரிப் பெண்களுக்கு ராஜராஜன் வீடு கொடுத்தான், நிலம் கொடுத்தான், ஊதியம் கொடுத்தான், எல்லாம் தந்து பராமரித்தான் என்கிற நண்பர்களிடம் நம்மால் கேட்க முடியும். அந்த 400 பெண்டுகளிடமும் உயர்சாதிப் பெண்களுக்கு விசேஷ சலுகைகளும், சிவதுரோகியாக்கப்பட்ட குடும்பங்களி லிருந்து வந்த ஏழைப்பெண்களுக்கு வேறுவிதமாகவும் பாரபட்சமான முறையையும்தான் காட்டினான்! மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் யாவும் வளமான பூமி. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தரிசு நிலம் இப்படியான பாகுபாடும் காட்டப்பட்டி ருக்கிறது.

ராஜராஜனைப் பொறுத்தவரையில் இந்த கோயில் கட்டுவது அவனுடைய இலக்காக இருந்திருக்கிறது. அதற்கான பொன்னையும் பொருளையும் தன்னுடைய கஜானாவிலிருந்து தாரை வார்த்ததுபோக மீதியை எப்படியெல்லாம் தேற்றுவது என்று யோசிக்கிறபோதுதான் அவனுடைய பொருளாதார மூளை குடிமக்களைச் சுரண்டு கின்ற யோசனையைச் சொல்லி யிருக்கிறது. அந்தக் கால கட்டத்துப் பெண் களின் கோபுர தற்கொலைகளும், மக்கள் கிளர்ச்சிகளும் பொற்கால ஆட்சியின் புகழ் பாடுகையில் மறைக்கப்படுகிறது.

குடவோலை முறை ஜனநாயகத்தைப் பற்றி பாடபுத்தகங்களில் எழுதி எழுதி மாய்ந்துவிட்டனர். ஆனால் சொத்து இருந்தவனுக்குத்தான் குடவோலையும் ஊர்சபையும் என்று நம் குழந்தைகளுக்கு யார் மறு கற்பித்தல் செய்வது? பண்பாடும் இலக்கியமும் வளர்க்கப்பட்ட சிந்தனை யாளர்கள் தோன்றியிருந்த களப்பிரர்களின் ஆட்சிக்காலம் ‘இருண்ட காலம்’ என்றுதான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றுதான் வருணாசிரமம் வளர்க்கப்பட்ட சோழர்காலம் பொற்காலம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

ராஜராஜன் தன் குடிமக்கள் மீது விதிக்காத வரியே இல்லை. ஏழை விவசாயி ஒரு பயிருக்கு ஊடுபயிராக இன்னொரு பயிரை வளர்த்தால் கூட ‘ஊடு போக்கு வரி’ என்கிற பெயரில் வசூலித்த அந்த மன்னனை நாம் எப்படிக் கொண்டாடுவது? வரிக்கொடுமை தாங்கமாட்டாமல் தங்களை கோயிலுக்கு விற்றுக் கொண்ட 12 குடும்பங்களின் கதை செங்கல்பட்டு மாவட்ட கல்வெட்டுகளில் இன்றளவும் கண்ணீர்க்கதை போல காணக்கிடைக்கிறது.

எங்களடியாள் அங்காடியும் இவள் மகள்

பெருங்காடியும் இவள் மக்களும்

திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக

நீர் வார்த்துக் கொடுத்தோம்

என்கிற வரிகள் ஒப்புதலுக்குக் கொடுக்கப்பட்டவை. ஆனால் இதில் அவர்களுடைய துக்கமும் துயரமும் கையறு நிலையும் பேரோலமும் அடங்கியுள்ளதாகவே உணர முடிகிறது.

ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்றெல்லாம் பிரித்து உருவாக்கியதும் பறைச்சுடுகாடு, கம்மாளச்சுடுகாடு என்றெல்லாம் பிரித்ததும் ராஜராஜன் காலத்து கைங்கரியங்கள்தான். ஊடுபயிர் வளர்த்த ஏழை விவசாயிகளை ஊடுபோக்கு வரியால் பழிவாங்கிய மாமன்னன், நிலங்களை பிராமணர்களுக்குத் தாரை வார்க்கிறான். பிராமணர் குழுக்களுக்கு மொத்தமாக நிலம் வழங்கப்பட்டால் அது பிரமதேயம். தனியொரு பிராமணனுக்குத் தரப்பட்டால் அது ஏகபோக பிரமதேயம். இப்படி வேலிக்கணக்கில் ஏகபோக பிரமதேயம் பெற்ற பிராமணக் கதைமாந்தர்களை நீங்கள் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” போன்ற நாவல்களில்கூட வாசித்துணரலாம். மேலும் இதற்கான கூடுதல் ஆதாரங்களை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்களைக் குறித்து எழுதிய நூல்களிலிருந்தும் கண்டடையலாம். சம்புவரை யர்கள், பழு வேட்டரையர்கள், மலையமான் களெனப் பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சியே சோழர் ஆட்சி என்றும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மூலமாக நமக்கு கூடுதல் தகவல் கிடைக்கிறது. ராஜராஜன் செய்தது இவர்களை எல்லாம் திறம்பட இணைத்ததுதான்.

ராஜராஜன் நிர்மாணித்த பெரிய கோவிலின் பெருமையெல்லாம் அதைக்கட்டிய கல் தச்சர்கள், சிற்பிகள், கடுமையான உடல் உழைப்பாளிகள் இவர்களுடைய வியர்வை யிலும், குருதியிலும், மதிநுட்பத்திலும் அடங்கி யிருக்கிறது.

இன்றைக்குப் ‘பொற்காலம்’ என்று புகழ் பாடுகின்ற இதே நம்முடைய மாநில அரசுதான் 1976-களிலும் இயங்கியது. மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் நிறு வனத்தின் சார்பில் கோ.தங்கவேலு என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “தமிழ் நில வரலாறு” என்னும் நூலில் சோழர்கால ஆட்சி ஏழை விவசாய, உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கு எப்படியெல்லாம் பொல்லாத ஆட்சிக்காலமாக விளங்கியது என்று துல்லியமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருந்தது. அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிறிதொரு சனாதன ஆலோசகர் குழுவினரால் அந்த நூல் தடை செய்யப்பட்டது. பொல்லாத ஆட்சி பொற்காலம் ஆட்சியாவதும், பொற்காலம் இருண்ட காலமாவதும் இன்றைக்கு வரலாற்றைத் திரிக்கிறவர்களின் கைகளிலே இருக்கிறது. ஆனால் இன்றைக்குள்ள நம்முடைய ஆய்வாளர்கள் இந்த இருட்டடிப்புகளை வெளிச்சப்படுத்து கிறவர்களாகத் துணிச்சலுடன் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். கலை போற்றி ஆராதிக்கப்பட்ட காலத்தை நாம் மதிப்புடன் பதிவு செய்கின்ற அதே நேரத்தில் ; ஏழை மக்களும், உழைப்பாளிகளும், பெண்களும் வதைபடும் வாழ்வில் உழன்ற காலத்தை பொற்காலம் என்று மதிப்பிடுவதும், உயரத் தூக்கிக் கொண்டாடி உண்மைக ளை மறைப்பதும் தமிழனின் உண்மையான வரலாறுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்கின்ற துரோகமாகும்!

(அக்டோபர் 31 - தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி - செம்மலர்


படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் தோன்றலாம். அதே போல் கண் முன்னால் பாழ்பட்டு போகும் குடும்பத்தைப் பார்த்து சிலருக்கு வேதனை மிகலாம். அல்லது சிலருக்கோ “எனக்கு அப்பவே தெரியும், இப்படி தல கால் புரியாம ஆடினா இப்படித்தான் ஆகும்னு” என்ற கொடூரமான திருப்தியாகவும் இருக்கலாம்.

ஜாகிர் ராஜாவின் துருக்கித் தொப்பி எட்டுக்கல் பதித்த வீட்டின் வீழ்ச்சியைப் பற்றிப் பேசும் ஒரு நாவல். துருக்கித் தொப்பியணிந்து செல்வாக்குடன் நடமாடிய எட்டுக்கல் பதித்த வீட்டின் தலைவர் கேபிஷே தன் தொப்பியைத் துறந்து, தன் பரந்த வழுக்கைத் தலைக்கு சற்றும் பொருந்தாத துண்டைத் தலையில் போர்த்திக் கொண்டு, ஊரை விட்டே செல்வதைப் பற்றி பேசுகிறது.

கவுரவத்தின் அடையாளமாகப் போற்றப்பட்ட அந்தத் துருக்கித் தொப்பி, தன் நிறமிழந்து வெளிறி, புறக்கணிக்கப் பட்டு, வேம்பின் கிளையில் தூக்கி வீசப் படுகிறது.

எந்த குழந்தைக்கு பெரியம்மை போட்டதால் தன்னால் பால் கொடுக்க முடியாமல் போனதே என்று கதறித் தவித்தாளோ, எந்தக் குழந்தைக்காக மாமியாரோடு பெரும் சண்டையிட்டு பித்துப் பிடித்தவள் போல் தெருவிலிறங்கி நடந்தாளோ அதே ரகமத்துல்லாவை கடும் வெறுப்புடனும், குரோதத்துடனும் பெற்ற தாயான நூர்ஜஹானே தூஷிக்க நேர்கிறது.

எட்டுக்கல் பதித்த வீட்டின் மூத்த வேம்பில் கட்டி வைத்து கேபிஷேவால் அடிக்கப்பட்ட மரம் வெட்டி சாம்பானின் பேரனே வந்து அந்த மூத்த வேம்பை வெட்டிச் சாய்க்கிறான்.

பள்ளிக் கூடத்து மணிக்கட்டைக்கு வேலுக்குட்டி ஜோசியனிடம் போய் ஜோசியம் கேட்குமளவு வெகுளியாகவும், ஒட்டைக் கால்பந்தை பாகிஸ்தானாக உருவகித்து உதைத்து தள்ளுமளவு புத்திசாலியாகவும் இருக்கும் ரகமத்துல்லா பதின்ம வயதிலேயே காமக் குரோத அபிலாஷைகளோடு அலைவதும், வயதுக்கு மீறிய பக்குவத்தோடு ரூபன் தன் தாயை வட்டமிடுவதைப் புரிந்து கொள்வதும், அதை அப்பாவுக்குத் தெரிவிக்க தவிப்பதுமாக தன் பால்யத்தை இழப்பதைப் பற்றி பேசுகிறது.
சொந்தப் பேரனுடனேயே ஓரினச் சேர்க்கை கொள்ள விழையும் கேபிஷே, பதின்மத்தின் சிடுக்கான மனநிலையில் பெற்ற தாயையே காமக் கண் கொண்டு பார்க்கும் ரகமத்துல்லா இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் ரூபனின் போலியான புகழ்சிகளை நோக்கமுணர்ந்தும் கூட அனுமதிக்கும் நூர்ஜஹான் என மனித மனத்தின் அழுக்கான பக்கங்களைப் பற்றியும் மிக இயல்பாக, யாரையும் கொடூரமாகக் காண்பிக்காமல், துளியும் மிகையாகப் போய்விடாமல் தேவையான விவரணைகளுக்கு மேல் போகாமல் கோட்டோவியமாய் தீட்டிக் கொண்டே போய் விடுகிறார் ஜாகிர் ராஜா.
ரகமத்ததுல்லா தன் தாத்தாவோடு பழனிக்குப் போகையில் இரவின் மயக்கத்தில் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் சர்ச்சுக்குள்ளிருக்கும் இயேசுவோடு நடத்தும் உரையாடல் ஒரு அற்புதமான கவிதை போல விரிகிறது.

அவனது பாரங்களை இறக்கி வைத்ததும் தேவகுமாரனே அயர்ந்து போய் தன் ஆட்டுக் குட்டியை தொலைத்துவிடும் அளவுக்கு அவை மலை போல் குவிகிறது. பின்னிரவின் பனிப் போர்வைக்குள் இயேசுவுடன் ரகமத்துல்லா பகிர்ந்து கொள்ளும் சோகங்கள் எல்லோருக்கும் தன்னால் இளைப்பாறுதல் தந்துவிட முடியுமென்று உலகுக்கே அறைகூவல் விடுத்த இயேசுவையே மலைக்க வைக்கிறது.

எனக்கு இந்நாவலில் குறைகள் என்று படும் சில உண்டு. தி.மு.கவின் வரலாற்றை எட்டுக்கல் பதித்த வீட்டு வாரிசான அத்தாவுல்லாவின் வரலாற்றோடு சேர்த்துச் சொல்லும் முயற்சி ஒட்டாமல் நிற்கிறது. வரலாற்றுத் தகவல்கள் ஆங்காங்கே தூவினாற்ப் போல துருத்திக் கொண்டு தெரிகிறது. அத்தாவுல்லாவின் கட்சிப் பற்று அவனது சொத்தை அழிப்பதோடு நூர்ஜஹானின் கருகமணி தவிர்த்து நகைகள் அனைத்தையும் முழுங்குவது பற்றிய சித்திரத்தை ஏற்படுத்த திமுகவின் வருட வாரியான வரலாற்றுத் தகவல்கள் தேவையே இல்லை என்றே நம்புகிறேன். வருடம், பெயர் போன்ற விவரங்கள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது போலவே தென்னாடு ஹோட்டல் பற்றிய விவரணைகளில் அதில் அத்தாவுல்லாவின் பங்கு என்ன என்றே புரியவில்லை.

இது வரை அதிகம் பேசப்பட்டிராத இஸ்லாமிய பேச்சு வழக்கும், வாழ்கை முறையும் துளியும் மிகையின்றி சித்தரிக்கப் பட்டிருப்பது இந்த நாவலின் பெரும் பலம். அன்ன முகம்மதுவை பல்லால் மெல்லக் கூடாது. அப்படியே விழுங்க வேண்டும் என்பது போன்ற வினோதமான நம்பிக்கைகளும், மார்க்க கல்யாணம் என்று சொல்லப்படும் சுன்னத் சடங்கின் நடைமுறைகளும் என வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாத ஒரு உலகை தன் எழுத்தினால் அழகாக கட்டியமைக்கிறார் ஜாகிர் ராஜா. ஆனால் இவரது வெளிப்படையான எழுத்து முறையே நிச்சயம் மூடிய சமூகமான இஸ்லாமிய சமூகத்தில் பல எதிர்ப்புகளை பெற்றுத் தரும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காகவெல்லாம் அஞ்சாமல் நேர்மையான முறையில் தான் மிக நெருக்கமாக இருந்து அவதானித்த ஒரு குடும்பத்தின் கதையை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.

கோலம் போடுகையில் பெரிய அளவு புள்ளி வைத்துப் போடும் போது ஒரே கோணத்தில் மொத்தக் கோலத்தையும் போட்டு முடித்துவிட முடியாது. முதலில் புள்ளிகளை அடுக்கிக் கொண்டு பின் ஒவ்வொரு திசையிலிருந்தும் கையெட்டும் வரை போட்டுக் கொண்டே வந்தால் கோலம் விறுவிறுவென முற்றுப் பெற்றுவிடும். குறைந்தது பத்து மார்கழியாவது பார்த்த அக்காக்கள் தங்கள் கைவண்ணத்தை காண்பிக்கும் பொழுதுகளில், ஒவ்வொரு திசையிலிருந்தும் கோலத்தின் கோடுகள் வந்து இணையும் நேர்த்தி பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த பனிபோர்த்திய விடிகாலைப் பொழுதுகளை நினைவூட்டுவது போலவே வெவ்வேறு திசைகளில் ஆரம்பித்து மெல்ல மெல்ல கதை சொல்லும் பாங்கில் நாவலின் அத்தியாயங்கள் தொகுக்கப் பட்டிருக்கும் விதம் அருமையாய் இருக்கிறது.

இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் நாஞ்சில் நாடனின் கூற்றுப் படி ‘ஒரு வசமான கை’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இது வரை வாசித்த இவரின் எல்லா எழுத்துக்களும் உள்ளன. எழுதுவதற்கான நியாயம் இருக்கிறதென்று தீர்மானமாக அறிந்து கொண்டபின் எழுதுவதைத் தவிர மனதில் எதுவுமே இல்லாமல் போய் விடுகிறது என்று தன் முன்னுரையில் சொல்கிறார் ஜாகிர் ராஜா. அவரது எழுத்திற்கான நியாயம் அவரது அனுபவங்களில் இருந்து ஊற்றெடுக்கிறது.. அது காயாத வரை இது போன்ற அருமையான பல படைப்புகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். எதிர் காலத்தில் மிகவும் நம்பிக்கையளிக்கக்கூடியவராகவும் தெரிகிறார்.

-நன்றி - மலர்வனம்.காம்

தேய்பிறை இரவுகளின் கதை - கீரனூர் ஜாகிர் ராஜாவின் ’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம் - இளங்கோ கிருஷ்ணன்

எதார்த்தவாத நாவல்கள் ஒரு பார்வை

தமிழில் நாவல் என்ற கலைவடிவம் தோன்றி ஒன்றேகால் நூற்றாண்டுகள் கடந்து விட்டதாக நாம் பேசிக் கொண்டாலும் நாவல் என்பது குறித்து பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறைகளின்படி பார்க்கும் போது க.நா.சுவினுடைய ’பொய்த்தேவு’ நாவலையே நாம் தமிழின் முதல் செவ்வியல் நாவல் எனக் கொள்ளமுடியும். இது நடந்தது 1940களுக்குப்பிறகு இந்த காலகட்டமானது மேற்கில் நவீன நாவல்களின் காலமாக மாறத் துவங்கியிருந்த காலம் ஆகும். சுமார் 200 ஆண்டுகாலம் நாவல் வடிவத்தில் இயங்கி தன்னியல்பாக நவீன நாவல்களுக்குள் மேற்குலகம் சென்றிருந்த சூழலில்தான் நம்முடைய முதல் செவ்வியல் நாவல் எழுதப்பட்டது.உண்மையில் அதுவும் கூட ஒருவகை எதார்த்தவாத நாவல் என்றே கொள்ளமுடியும்.

செவ்வியல் நாவல் என்பதும் எதார்த்தவாத நாவல் என்பதும் வேறு வேறு அல்ல என்பதைப்போன்ற கருத்தியல் ஒன்று தமிழ்ச்சூழலில் உண்டு. ஒரு மேலோட்டமான பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் இரண்டும் வேறு வேறே. எவ்வாறு நவீன நாவல் என்பது செவ்வியல் நாவலில் இருந்து பிரிந்து போன கலைவடிவமோ அப்படியே எதார்த்தவாத நாவல் என்பதும் செவ்வியல் நாவலில் இருந்து மலர்ந்த ஒரு வடிவமே. வடிவமைப்பிலும் மொழிதலிலும் எதார்த்தவாத நாவல்களுக்கும் செவ்வியல் நாவல்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஆனால் ஆன்மாவில் இரண்டும் வேறுபட்டன.ஒரு செவ்வியல் நாவல் என்பதன் இயங்குதளமானது ஒப்பீட்டளவில் எதார்த்தவாத நாவலை விடவும் விரிந்தது. உலக அளவில் மிக பரந்துபட்ட செவ்வியல் நாவல் வடிவங்களை உருவாகியதில் ரஷ்ய இலக்கியக்கங்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. டால்ஸ்டாய்,தாஸ்தாயெவ்ஸ்கி, தாமஸ் மன், விக்டர் ஹீயூகோ போன்ற பெயர்களை நாம் இன்றளவும் பேசக்காரணம் அவர்கள் படைப்புகளில் இயங்கும் செவ்வியல்வாத பண்பே. அவர்கள் நாவல் என்பதை ஒட்டுமொத்த வாழ்வினுடைய சாரம் என்பதாக பார்த்தார்கள். தங்கள் படைப்புகளின் வழியாக வாழ்வை மொத்தமாக அள்ள முயன்றவர்கள் செவ்வியல் நாவல்காரகள் எனலாம். மாறாக எதார்த்தவாத நாவல்களோ அந்த எல்லையிலிருந்து சற்று குறுகியதாகவே இருந்தது. குறிப்பாக ரஷ்ய எதார்த்தவாத நாவல்கள்.மார்க்சிய அழகியல் என்ற கோட்பாடு பின் நாட்களில் எதார்த்தவாத நாவல்களின் எல்லையை மேலும் சுருக்கி நாவல் என்பது மார்க்சியக்கோட்பாடுகளை கதைக்களனில் நிறுத்தி நிகழும் எல்லா விஷயங்களுக்கும் வர்க்க சாயல் பூச முயன்றது. இந்த வகை நாவல்களானது செவ்வியல் நாவல்களிலிருந்து மேலும் சுருங்கிய எல்லைகளைக் கொண்டதாகவே இருந்தது.

நாவல் வரலாறு என்பது மொழிக்கு மொழி வேறானதே என்பதை சொல்லத்தேவை இல்லை. ஆனால் பொதுவாக இந்திய மொழிகளின் துவக்ககால நாவல்களுக்கு ரஷ்ய நாவல்கள் பெரும் ஆதர்சமாக இருந்தன.க.நா.சு வைத் தவிர துவக்ககால தமிழ் நாவலாசிரியர்கள் ரஷ்ய நாவல்களின் தாக்கம் கொண்டவர்களே. குறிப்பாக ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றவர்களைச் சொல்லலாம். இந்த போக்கானது தமிழில் நாவல் என்ற வடிவத்தை எதார்த்தவாத நாவல் என்ற வடிவமாக ஊன்றச் செய்தது.இவ்வாறாக செவ்வியல் நாவல் என்ற வடிவத்தில் போதிய பரிச்சயம் நிகழாமலேயே நாம் எதார்த்தவாத நாவல்களை எழுதத் துவங்கினோம்.அதுவும் குறிப்பாக ரஷ்ய வகை எதார்த்தவாத நாவல்களை எழுதத்துவங்கினோம். எதார்த்தவாத நாவல்கள் ஒரு மொழியில் தொடர்ந்து வினையாற்றும் போது ஏற்படுகிற முக்கியமான விளைவுகளில் ஒன்று. அவைகள் அம்மொழியின் நாட்டார் கலை வடிவங்களில் இருந்து தனக்கான சாரத்தை எடுத்து கொள்கிற முறைமை ஆகும். தமிழில் அது கதை சொல்லி மரபை கிரகித்துக் கொண்டது முக்கியமான அம்சம் எனலாம். கி.ராஜநராயணன், சண்முக சுந்தரம்,பூமணி, நாஞ்சில் நாடன் முதல் இமையம், அ.முத்துலிங்கம், மேலாண்மை பொன்னுச்சாமி, ஜாகிர்ராஜா வரை எண்ணற்ற உதாரணங்கள் இதற்கு உண்டு.மேற்குறிப்பிட்ட பட்டியல் முழுமையானது அல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை.

முன்னர் சொன்னது போல் செவ்வியல் நாவல் மரபு ஆழமாக ஊன்றாமல் எதார்த்தவாத நாவல்களுக்குள் நாம் ஈடுபட்டதென்பது சில சிக்கல்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து எதார்த்தவாத நாவல்களிலிருந்து நவீன நாவல்களை நாம் உருவாக்க முற்பட்டது சூழலை மேலும் சிக்கலாக்கியது.அவற்றில் பிரதானமானது என்னவெனில் எதார்த்தவாத நாவல்காரகள் எளிய கதை சொல்லிகளாக குறுகிக் கொண்டதுதான். இந்த நூலின் முன்னுரையில் எதார்த்தவாத நாவல்கள் என்றாலே நவீன நாவல்காரகளுக்கு இளக்காரம்தான் என்பதைப் போன்ற சொற்களை நாஞ்சில் நாடன் எழுதுவதற்கு இதுவே காரணம்.

நவீன நாவல்காரன் நாட்டார் மரபோடோ, எதார்த்தவாத மரபோடோ எந்த தொடர்பும் அற்றவன். அவன் செவ்வியல் நாவல்களின் வடிவப்போதாமை மற்றும் கருத்தியல் போதாமைகளின் வழி தனக்கான அழகியலை உருவாக்கிக் கொண்டவன் என்பதை போன்ற சூழல் ஒன்று நிகழ்ந்ததுவே இப்படி ஒரு உரையாடலுக்கான காரணம் என நாம் அவதானிக்கலாம். மேலும் கதைசொல்லி என்பவன் எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் அல்ல என்பதை போன்ற கருத்தியல் ஒன்றும் நமது சூழலில் நிலவுகிறது. இதற்கும் இந்த அடிப்படைக் கோளாறே காரணம் என நாம் கருத வேண்டியிருக்கிறது. நவீன நாவலின் பிதாமகன்கள் எனக் கருதப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், மிலரோட் பாவிச், ஓரான் பாமுக் போன்றவர்கள் தங்களை ஒரு கதை சொல்லி எனக் கூறிக் கொள்வதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.பின் நவீன காலத்தின் செல்வாக்கு மிக்க கருத்தியல்களில் ஒன்று வேர்களை தேடிப்போதல் என்பதாகும். மேலும் நவீன கால கருத்தியல்களை மறுப்பது என்பதும் அதன் பண்புகளில் ஒன்று. அந்த வகையில் நம் சமகாலத்திய நாவலாசிரியன் ஒருவன் தன்னை கதைசொல்லி எனக் கூறிக்கொள்வதில் எந்த ஆச்சர்யமும் கிடையாதுதான். ஆனால் எழுத்தாளனையும் கதைசொல்லியையும் சமமாக பாவிக்கும் பண்பு ஒன்று மேற்கூறியவர்களிடம் காணப்படுவதையும் நாம் கவனிக்கவேண்டும். இந்த எழுத்தாளன் என்பவன் செவ்வியல் நாவலாசிரியனின் தொகுத்துக்கூறும் பண்பை பெற்றிருப்பவன். ஆனால் எதையும் நிறுவி விட முயலாத பின் நவீன மனம் உடையவன். நம்முடைய சமகால எழுத்தாளர்களிடம் அரிதாக காணப்படும் இந்த பண்பே இந்த பரஸ்பர பிளவுக்குக் காரணமாக இருக்க கூடும்.

துருக்கித் தொப்பி

ஒரு விமர்சகனின் வேலை நாவலின் கதைச்சுருக்கத்தைச் சொல்வதல்ல உண்மையில் நாவல் என்பதும் வெறும் கதை மட்டுமல்ல. துருக்கித் தொப்பி எல்லா அசாதாரண நாவல்களையும் போலவே சீரழிவைப் பேசும் நாவல்.வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் துயரமான கதை. கே.பி.ஷே என்ற துருக்கித் தொப்பிக்காரர் குடும்பம் ஒன்று எப்படி வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்கி வக்கற்றுப் போனது என்பதைப் பேசும் கதை. கே.பி.ஷே குடும்பம் என்கிற ஒரு குறியீட்டின் வழியாக எண்ணற்ற நவீன இஸ்லாமிய குடும்ப வாழ்வை, இன்னும் சொல்லப்போனால் தமிழ் வாழ்வை அவர்களின் உணர்வுகளைப் பேசும் நாவல். மிகவும் கட்டுக்கோப்போடும் ரசனையோடும் வலியோடும் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். இறுதியில் நிறமிழந்து போன துருக்கித் தொப்பி ஒன்று வேம்பின் கிளைகளில் ஆடும் சித்திரத்தை நாவலாசிரியர் நம் கண்முன் விரித்துக் காட்டும் போது நாம் மனம் பொங்கி போகிறோம். கனத்த மனதுடன் நாம் நன்றாக வாழ்ந்த காலத்தின் நாஸ்டால்ஜியாவுக்குள் மூழ்குகிறோம். கே.பி.ஷேவின் மனைவியான பட்டாமாளுக்கு தான் எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்காரி என்பதிலும் ஆட்டுக்கறி சாப்பிடும் மேலான இனம் என்பதிலும் பெருமை அதிகம். தன் மருமகள் மேற்கு தெருவை சார்ந்தவளென்றும் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் என்றும் இளக்காரம் பேசுகிறாள்.நாவல் முழுவதும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மிக நுட்பமாக பதிவு செய்யப்படுகிறது. தன் மருமகள் அயலான் ஒருவனோடு தன் வீட்டிற்குள் பேசிக்கொண்டிருப்பதைக் கூட அனர்த்தமாகவே பார்க்கிறாள் பட்டம்மாள். உண்மையில் பட்டாமாள் இந்த சமூகத்தின் சராசரி மனிதர்களில் ஒருத்தி என்று பார்க்கும் போது இச்சமூகம் பெண் உடல் மீதான கண்காணிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம்முடைய பண்பாடு கலாச்சாரம் என்பதெல்லாம் பெண் உடலை மையமாக வைத்தல்லவா வரையறுக்கப்பட்டிருக்கிறது! மருமகள் பேரனுக்குப் பால் கொடுப்பதை மறைந்து நின்று பார்க்கும் கே.பி.ஷே, தன்னை விட இளைய ரகமத்துல்லாவை யாருமற்ற போது முத்தமிடும் மல்லிகா, குளிக்கும்,உடைமாற்றும் தாயை ரசிக்கும் ரகமத்துல்லா, கணவன் ஊரில் இல்லை எனத் தெரிந்து கொண்டு நூர்ஜகானிடம் பேச்சு வளர்க்கும் ரூபன், அதை அனுமதிக்கும் நூர்ஜகான். என காமம் பற்றிய நுட்பமான காட்சிப்படுத்தல்கள் நாவல் முழுதும் உள்ளது. இது குறித்து இன்னும் கூட விரிவாக ஜாகிர் எழுதியிருக்கலாம் என்று படுகிறது. ரகமத்துல்லாவின் வழியாக குழந்தைகளின் உளவியல் அழகாகப் பதிவாகிறது. தன் தாய் தன் மீது அன்பு செலுத்தாமல் போனதற்கு தன் தம்பிதான் காரணம் என நினைத்து ஒரு செங்கல்லை தம்பியென பாவித்து வன்மம் வளர்ப்பது. அந்த தம்பி காணாமல் போய்விட்ட போது தன் மீது சந்தேகப்படும் அம்மாவை நினைத்து மனம் வெம்புவது என ரகமத்துல்லாவின் உணர்வுகள் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் உளவியல், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை நுட்பமான மானுட உணர்வுகளின் வழியாக மிகுந்த வலியோடு பேசுகிறார் ஜாகிர் ராஜா. இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார மொழி இந்நாவலின் ஆகப்பெரிய பலம் எனலாம். நாவலோடு சேர்ந்து தமிழகத்தின் அரசியல் வரலாறு பேசப்படுகிறது. சுதந்திர காலம் துவங்கி தி.மு.க அதிகாரத்தை கைப்பற்றுவது வரையான அக்கட்சியின் வளர்ச்சி முகமும் தீவிர தி.மு.க காரனான அத்தாவுல்லா குடும்பம் நன்றாக வாழ்வதில் துவங்கி பிழைப்பு தேடி அவன் எங்கோ போவது வரை அவன் குடும்பத்தின் இறங்கு முகமும். எதிர் முரண்களாக கட்டமைந்து எதையோ உணர்த்த முயல்கின்றன. இதில் காட்டப்படும் உலகம் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் புதிது. இதில் சொல்லப்படும் தகவல்கள் வெகுமக்கள் நம்பிக்கைகள், பழமொழிகள்,சொலவடைகள் போன்றவைகள் தமிழ் இலக்கிய உலகம் இது வரை அறியாதது. அன்னமுகம்மதுவ பழிக்காதடா எனச் சொல்வது,பிறைபார்த்ததும் மனதுக்கு பிடித்தமானவரை பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை, மாட்டுக்கறியை பெரியாட்டுக் கறி என்பது போன்றவற்றை உதரணமாக சொல்லலாம். ‘Novel is an art of data’ என மார்க்வெஸ் சொல்வதை இங்கு நான் நினைத்துக் கொள்கிறேன். அப்படிப் பார்க்கும் போது எண்ணற்ற நுட்பமான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் ஒரு சமூக ஆவணம் என நாம் இந்த நாவலை தாராளமாகச் சொல்ல முடியும்.

துருக்கித் தொப்பி எனும் நாவல- ஓர் உரையாடல்

இந்த நாவல் மூன்று விதங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைசொல்லி கதையைச் சொல்வது போலவும் எழுத்தாளன் விவரிப்பது போலவும் கதாபாத்திரங்கள் தங்கள் மன உணர்வுகளைப் பேசுவது போலவுமாக மூன்று முனைகளில் இக்கதைகளின் சம்பவங்கள் மாறி மாறி கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டமைப்பு நாவலுக்கு ஒரு சரளத்தன்மையை வழங்கியிருக்கிறது. எந்த ஒரு முறை வாசிப்பில் தொய்வு ஏற்படுத்த துவங்குகிறதோ அந்த முறை கைவிடப்பட்டு வேறொரு முறை கையாளப்படுவதன் மூலம் நாவல் தன்னை வேகமாக முன்னகர்த்திக் கொண்டே போகிறது. தன் முன்னுரையில் நாஞ்சில் நாடன் ஜாகிர் ஏன் இவ்வளவு சுருக்கமாக எழுதுகிறார் என ஆதங்கப்பட்டிருப்பதோடு எனக்கும் உடன்பாடு உண்டு.என்னுடைய இரண்டாம் வாசிப்பில் மிக விரிவாக எழுத வேண்டிய இடங்களை கூட சுருக்கமாக எழுதுகிறாரே என ஆதங்கத்தோடேயே வாசித்தேன்.ஒவ்வொரு கலைவடிவத்திலும் உள்ள அடிப்படையான சிக்கல் என்பது அதில் மெளனத்தை எங்கு ஒளித்து வைப்பது என்பதுதான். இசையில் ஒவ்வொரு துடிப்புக்கும் அதாவது ஒவ்வொரு பல்ஸக்கும் இடையில் அதன் மெளனம் உள்ளது. கவிதையில் மெளனம் என்பது சொற்களின் இடையில் உள்ளது.சிறுகதையில் கதை முடிந்ததும் உள்ளது. உண்மையில் நவீன சிறுகதைகளில் மெளனம் சொற்களின் இடையேயும் உள்ளது.அப்படிப்பார்க்கும் போது நாவல்களில் மெளனம் இரண்டு அத்தியாங்களுக்கான இடைவெளியில் அல்லது இரண்டு சம்பவத்துணுக்குகளுக்கான இடைவெளியில் உள்ளது எனலாம்.மெளனத்தைக் கட்டமைப்பதிலும் காலத்தை தரிசனப்படுத்துவதிலும் வெற்றியடைந்த நாவல்களே மிகச்சிற்ந்த நாவல்களாக உள்ளன.

துருக்கித் தொப்பி நாவலின் பலவீனமான பகுதி ஏதாவது இருக்குமானால் அது மெளனத்தை கட்டமைப்பதில் ஏற்பட்டிருக்கும் சிறு சரிவே ஆகும். ஏற்கனவே சொல்லி விட்டதை மீண்டும் சொல்வதை போன்ற நினைவுதரும் சொற்றொடர்கள். போதிய இடைவெளியின்றியும், அளவுக்கதிகமான இடைவெளிகளோடும் கோர்க்கப்பட்டிருக்கும் சம்பவக் கோர்வைகள் போன்றவை ஒரு தேர்ந்த வாசகனுக்கு சலிப்பு தருபவை. ஆனால் கதையைச்சில இடங்களில் முன்னுக்குப் பின்னாக மாற்றி மாற்றி சொல்வதன் மூலம் தான் சொல்லவந்த காலத்தை மிகச் சரியாக தரிசனப்படுத்தி நாவலின் மையமான உணர்ச்சியை வாசக மனதில் அழுத்தமாக பதிய வைத்ததன் மூலம் நாவல் வெறும் சம்பவக் கோர்வையாக மாறிப்போகிற ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறது எனலாம்.

ஜாகிர்ராஜா எனும் கதைசொல்லி

கி.ராஜநாராயணனை ஒரு கதைசொல்லி எனச் சொல்ல நமக்கு எந்த தயக்கமும் கிடையாது. அதுபோலவே சுந்தரராமசாமியை ஒரு எழுத்தாளர் என்று நாம் துணிந்து கூறலாம். ஆனால் ஜாகிர்ராஜாவை கதைசொல்லி என்றோ எழுத்தாளர் என்றோ எளிய சட்டகங்களுக்குள் அடக்கி விட முடியாது.இது அவரின் மிக முக்கியமான பலம் மற்றும் பலவீனம் எனலாம்.உண்மையில் ஜாகிருக்கும் முந்தைய தலைமுறையை சேர்ந்த எதார்த்தவாத நாவலாசிரியர்கள் பலருக்கும் இந்த எடுகோள் பொருந்தும். ஆனால் எந்த ஒரு நாவலாசிரியனுக்குள்ளும் கதைசொல்லி, எழுத்தாளன் என்கிற இரண்டு ஆளுமைகளில் யாரேனும் ஒருவரே அழுத்தம் பெற்று இருக்க முடியும்.அப்படிப் பார்க்கும் போது ஜாகிரை நாம் கதைசொல்லி என்றே கொள்ளமுடியும். துருக்கி தொப்பி நாவலை விடவும் முதலிரண்டு நாவல்களை பார்த்தால் இது உண்மை எனப்புரியும். ஆனால் அப்படியான எளிய தர்க்கப்படுத்தல்களுக்கெல்லாம் அடங்காத வீச்சு அவரின் எழுத்துகளுக்கு உண்டு என்பதற்கு துருக்கி தொப்பி நாவலே சாட்சி. இந்த நாவலில் எழுத்தாளனும் கதைசொல்லியும் நுட்பமாக இணைந்தும் முரண்பட்டும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டும் ஒரு அழகான நாவலை உருவாக்கிகாட்டியிருக்கிறார்கள். இந்த நாவலின் முன்னுரையில் இந்த நாவல் என்னுடைய முதல் இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டது என அவர் கூறுவதற்கு வடிவமைப்பில் செய்திருக்கும் இந்த மாற்றமே காரணம்.

ஜாகிர் ராஜா கதை சொல்லும் போது நாம் அந்த சொல்லலின் அழகில் மயங்கி அதை பின் தொடர்கிறோம். ஒரு கதை சொல்லிக்கு சொல்லப்படுவதின் முக்கியத்தை போலவே சொல்லும் முறையும் முக்கியமானது அல்லவா.எட்டுகல் பதிச்ச வீட்டின் அத்தாவுல்லா நூர்ஜஹான் திருமணம் பற்றி சொல்லும் விதமே மிக சிறந்த உதாரணம். அவ்வளவு ரசித்து ஒரு கதையை சொல்லிச்செல்ல சொல்லின் ருசியறிந்த ஒரு மனதாலேயே முடியும்.ஆனால் அவரின் முதலிரண்டு நாவல்களோடு ஒப்பிடும் போது இதில் ஜாகிர் என்கிற கதை சொல்லியை அல்லது அவரது ஆளுமையை சற்று குறைவாகவே காண நேர்கிறது. உண்மையில் இதை நான் ஒரு சரிவாக பார்க்கவில்லை மாறாக மிக சரியான ஒரு ஆரோக்கியமான பயணமாகவே பார்க்கிறேன். ஒரு கதை சொல்லியாக இருந்து கொண்டு ஜாகிர்ராஜாவின் அளவிற்கு எழுத்தாள ஆளுமையை வளர்த்துக் கொண்டவர்கள் நாஞ்சில் நாடன், இமையம் போன்ற ஒரு சிலரே. ஜாகிர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்வேன்.

ஜாகிர்ராஜா எனும் ஓர் எழுத்தாளன

மேற்கின் நாவல் ரசனை மரபில் ஒரு நாவல் எப்படி துவங்கப்படுகிறது அல்லது எப்படி முடிகிறது என்பதை சிலாகித்துப் பேசும் வழக்கம் உண்டு. மகிழ்ச்சியான குடும்பங்களின் கதை ஒன்று போலவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியற்ற குடும்பங்களின் கதை ஒவ்வொன்றும் வேறு வேறு எனத் துவங்கும் அன்னாகரினீனாவின் துவக்கமும், நாளை மற்றுமொரு நாளே என முடியும் கான் வித் தி விண்ட் நாவலின் முடிவும். காலங்களில் அதுவே மிகச்சிறந்ததாக இருந்தது, காலங்களில் அதுவே மோசமாக இருந்தது என துவங்கும் டேல் ஆப் டூ சிட்டிஸ் நாவலின் துவக்கமும் ரசனை மரபை சேர்ந்த விமர்சகர்களால் இன்றும் கொண்டாடப்படுவது.

நல்ல முறையில் துவங்கப்பட்ட ஒரு நாவலானது வாசகனை காந்தம் போல் உள் இழுக்கும் தன்மை கொண்டது. நல்ல முறையில் ஒரு நாவலை துவங்குவதற்கு ஒரு நாவலாசிரியன் வெறும் கதை சொல்லியாய் இருந்தால் போதாது அவன் ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும்.

எட்டுகல் பதிச்ச வீட்டுக்கு குட்டி லெவை மகள் நூர்ஜஹான் பேகம் வாக்கப்பட்டு வந்த நாளில் தலைவாசலில் நின்றிருந்த வேம்புகள் இரண்டும் பூப்பூக்கத் துவங்கியிருந்தன’ என கச்சிதமாக, அழகாக துவங்குகிறது இந்நாவல். முதல் அத்தியாயத்தின் முதல் வரியில் பூப்பூக்க துவங்கிய அந்த வேப்பமரத்தில் ஒன்று இறுதி அத்தியாயத்தில் உதிரும் இலை கூட்டிப்பெருக்க மாட்டாமல் வெட்டி எறியப்படுகிறது. இந்த இரண்டு காட்சிகளும் நாவலின் மையத்திற்கு அழகான குறியீடாக மாறுகின்றன. அது போலவே நாவலின் துவக்கப்பகுதியில் கம்பீரமாக தொப்பி மாட்டியில் காட்டப்படும் துருக்கித்தொப்பி இறுதி பகுதியில் நிறம் வெளுத்து நைந்து இளைய வேம்பின் கிளைகளில் ஆடிக்கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. இது போன்ற அம்சங்களே ஜாகிரை ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற்றுகிறது. தான் உணர்ந்த சமூகம் சார்ந்த சிக்கல்களை, உறவுச்சிக்கல்களை வலிந்து திணிப்பதாகத் தெரியாமல் கதையின் போக்கில் நிகழ்வுகளின் போக்கில் வாசகனாக வந்தடையும்படி செய்திருப்பது இன்னொரு உதாரணம்.

ஜாகிர்ராஜா எனும் ஆளுமை

எழுத்தின் எந்த வடிவத்தச் சேர்ந்த கலைஞனாக இருந்தாலும் ஒரு ஆளுமையாக அவன் மலர வேண்டும். ஆளுமையாக மலர்தல் என்பது இலக்கிய பொதுப்புத்தியால் அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளை தொடர்ந்து வழங்குதல் அல்ல. அது, ஒரு கலைஞன் தனது தொடர்ந்த தேடல்கள் வழியாக வாழ்வு பற்றிய தனது அவதானங்கள், தரிசனங்கள், தர்க்கங்கள் ஆகியவற்றை தன் மொழிக்குள் கொண்டுவருவதன் மூலம் அம் மொழியின் ஒட்டு மொத்த மானுட அறிவை மேம்படுத்துவது அல்லது விரிவுபடுத்துவது ஆகும்.

ஜாகிர்ராஜாவிடம் ஒரு ஆளுமைக்கான எல்லா பண்புகளும் உண்டு. இப்படிச் சொல்வதால் அவர் அனைத்தையும் சாதித்துவிட்டார் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் முன்பே சொன்னது போல எழுத்தாளனையும் கதை சொல்லியையும் சரியான விகிதத்தில் இணைக்கிற ஆளுமைத்திறன் அவரிடம் உண்டு. தொப்பம்பட்டி புளியம்பட்டித் தங்கமணலில் முளைத்த வேகவைத்த சுவைமிக்க பிஞ்சுக் கத்திரிக்காயும் நீலகிரிப் பனியில் தோண்டியெடுத்த உருளைக்கிழங்கும் சண்முக நதித்தீரத்தில் சொந்த தோப்பில் பறித்த நாட்டு மாங்காயும் மனுஷாளின் உயரத்துக்கு போட்டியாக வளர்ந்த சதைப்பற்றுள்ள முருங்கைகளுடன் குறும்பாட்டுக் கறியும் மசாலாக் குழுமமும் இணைத்துச் செய்கிற ஊர்குழம்பென்றால் அத்தனை இஷ்டம் பட்டமாளுக்கு என்ற வரிகளில் மேற்சொன்ன அந்த சரியான சேர்மானத்தை நாம் பார்க்கலாம். இந்த அசாதாரண சேர்மானமே மார்க்வெஸ் எனும் கலைஞனைத் தந்தது. பாமுக் எனும் ரஸவாதியைத் தந்தது. உலகின் மிகச்சிறந்த கதைசொல்லி என பாவிச்சை பெருமையடையச் செய்தது.

இறுதியாக சொல்வதெனில், சில போதாமைகள் இருந்தாலும் துருக்கித் தொப்பி ஒரு நல்ல நாவல். அதை விட முக்கியமான விஷயம் ஜாகிர்ராஜா துருக்கி தொப்பியை விட மிகச்சிறந்த நாவல்களை எல்லாம் எழுதும் அளவுக்கு ஆளுமை நிறைந்தவர். இதற்கு இவரது முதலிரண்டு நாவல்களுக்கும் இந்த நாவலுக்கும் உள்ள வித்தியாசமே சாட்சி.