Tuesday, July 7, 2009

முதல் பிரவேசம்

நினைவிலிருக்கும் அபூர்வ கனம்



Keeranur Jaheerraja முதல் புத்தகம் குறித்து எழுதச் சொன்னதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது என்பார்கள். இவை இரண்டும் எனக்கு வாய்த்ததாக நினைவில்லை. ஆனால் முதல் புத்தகம் குறித்த நினைவுகள் மனம் விட்டு அகலாப் படிமமாகி-விட்டது. பின்னோக்கிச் செல்ல பெரிய கால தூரம் எல்லாம் கடந்துவிடவில்லை. 2005_ல் தான் என் முதல் தொகுதி வெளியானது. 1995_ல் எழுதத் தொடங்கி பத்து ஆண்டுகள் கழித்து இது நிகழ்ந்தது. இன்றைக்குப் புதிதாக எழுத வருகிறவர்கள் முதல் புத்தகத்துக்கு அட்டையைத் தயார் செய்து விட்டுத்-தான் எழுத ஆரம்பிக்கின்றனர். இதை நான் குறையாகச் சொல்லவில்லை. தமிழ் பதிப்புத் துறையின் அதிவேக வளர்ச்சியைத்தான் இந்த இடத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.

எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் பெரும்பா-லும் கவிதைகளும் சிறுகதைகளும்தான். சின்னச் சின்ன இதழ்களில் அவை பிரசுரமாகி வெளிவந்தன. காலச்சூழலில் சிறு பத்திரிகைச் சூழலுக்கு நான் பொருந்திப்போய்விட்டேன். ஒரு சமயத்தில் ‘இனி எழுதாமல் இருக்க முடியாது’ என்கிற நிலைக்கும் வந்து நின்றேன். இஸ்லாமிய சமூகத்தின் மறைக்கப்-பட்ட வாழ்க்கை நிதர்சனங்களை துளியளவும் சமரசமில்லாமல் பதிவு செய்தன என் படைப்புகள். தொடக்கம் முதலே அவற்றுக்கு வரவேற்பிருந்தது.

காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டு சமூகத்தாலும் வீட்டாலும் புறக்கணிப்புக்குள்ளாகி கஷ்டங்களுக்குள்ளான காலம். இப்போதும் போலவே அப்போதும் எழுத்தை நம்பி எதுவும் செய்ய முடியாது என்னும் நிலை. தஞ்சாவூர் மன்றத்தினர் நடத்திய வாராந்திர அறைக் கூட்டங்களில் கலந்து கொண்டு கைதட்டல்களுடன் வீடு திரும்புவேன். ராஜி கடன் கணக்கை எழுதிக் கூட்டிக் கொண்டிருப்பாள். நான் வீடு வந்ததும் கூட்டத்தில் என்னுடைய பங்களிப்பைக் குறித்து ஆர்வமாகக் கேட்பாள். கடன் சுமை குறித்து எதுவும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள். இது எந்த எழுத்தாளனுக்கும் வாய்க்காத வாழ்க்கைத்-துணை. எப்போதும் இவ்விஷயத்தில் எனக்குப் பெருமிதம் உண்டு.

கவிஞனா, புனைகதையாளனா என்னும் ஒரு குழப்பமிருந்து, எழுத்தாளன் என்று தீர்மானித்துக் கொண்டபின் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகிவிட வேண்டுமென்கிற முயற்சியின் ஈடுபட்டிருந்தேன். ப்ரகாஷ் தஞ்சை பெரியகோவில் புல் வெளியில் ‘தளி’ இலக்கியச் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்தார். நிறைய நண்பர்கள் அங்கே வருவார்கள். அவ்வப்-பொழுது அருள் என்கிற வியாகுலனும் வருவார். பின்னாளில் அவர்தான் என் தொகுதியைப் பதிப்பிக்கப் போகிறார் என்றெனக்கு அப்போது தெரியாது. நிஜத்தில் ஒரு படைப்பாளியாக நான் பரிணாமம் பெற்றது ப்ரகாஷ் பட்டறையில் தான். ப்ரகாஷ் காற்று வெளியிடை அமர்ந்து கலாபூர்வமான விஷயங்களைப் பேசுவார். உலக இலக்கியப் பரிச்சயம் ஓரளவு எனக்குக் கிடைத்தது பெரியகோவிலில்தான்.

நண்பர் யுகபாரதி கணையாழி இதழில் உதவி ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் என்னுடைய ஐந்தாறு கதைகள் அந்த இதழில் வெளியாகின. வெவ்வேறு வாசக தளத்துக்கு அந்தக் கதைகள் என்னைக் கொண்டு சென்றன. அவற்றுள் ஒரு கதை ‘இரட்டை மஸ்தான் அருகில்’ ஒருமுறை வியாகுலனை சந்தித்த வேளை இரட்டை மஸ்தான் சிறுகதையைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார். அத்துடன் சிறுகதையைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார். அத்துடன் நில்லாமல் “உங்கள் கதை-களைத் தொகுத்துக் கொடுத்தால் நான் வெளியிடு-கிறேன்’’ என்றும் சொன்னார். அப்போது தஞ்சாவூரில் புத்தகம் போடுவது பெரிய விஷயமாகத்தானிருந்தது. வளமான பொருளாதாரப் பின்புலமுள்ளவர்கள் கைக்காசைக் செலவழித்து புத்தகம் போட்டுக் கொண்டிருந்தனர். “ஒரு தொகுப்பைக் கொண்டு வந்துவிட்டால் கவனம் பெற்று விடுவீர்கள். மாநில அளவில் அங்கீகாரம் பெற வேண்டியவை உங்க-ளுடைய படைப்புகள்’’ என்று தெ. வெற்றிச் செல்வன், அம்மா. குருமுருகன் போன்ற நண்பர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இருவருமே படைப்பாளிகள். எனவே அவர்களுடைய கூற்றில் இருக்கும் அக்கறையைப் புரிந்து மேலும் என்னுள் லட்சம் கதைகள் புதையுண்டிருக்கும் சுய ரகசியமும் நான் அறிவேன்.

யாரை எங்கே அணுகி புத்தகம் போடச் சொல்வது என்பதுதான் அந்நாளின் தலையாய பிரச்சனையாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து நாமே சுயமாக வெளியிடலாமா அல்லது ஒளிஅச்சு (ஜெராக்ஸ்) முறையிலேனும் தொகுப்பை கொண்டு வந்து விடலாமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். கிடைத்த வருமானம் குடும்ப செலவுக்கே போதவில்லை. இப்படியான சூழலில் வியாகுலன் புத்தகம் போட்டுத் தருவதாகச் சொன்ன-வுடன் எனக்கது அதிர்ச்சியாகக் கூட இருந்தது. காரணம் வியாகுலனின் இலக்கியப்போக்கு நானறிந்ததே. புல்வெளிக் கூட்டத்துக்கு வந்து நண்பர்-களின் கவிதைகளை அவர் ஒரு முரட்டுப் பிடிவாதத்-துடன் நிராகரித்ததைக் கண்டிருக்கிறேன். பல சமயங்களில் கவிதை குறித்த உரையாடல்களில் ப்ரகாசுக்-கும் அவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. பின்னாளில் அவருடைய போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டிருந்தது.

நானும் ராஜியும் இரண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூர் செட்டிபாளையம் சாலையில் செம்பருத்தி-கள் பூத்துக் குலுங்குமொரு வீட்டில் குடியிருக்கையில் முதல் தொகுதிக்கான வேலையை ஆர்வத்துடன் தொடங்கினோம். பல்வேறு இதழ்களில் வெளியான 19 கதைகளைத் தொகுத்து அப்போது யாகப்பா வளாகத்துள் மரங்களடர்ந்த சூழலில் இயங்கிக் கொண்டிருந்த வியாகுலனின் அலுவலகத்தில் கொண்டுபோய் சேர்த்தேன். சில நாட்களில் ஞிஜிறி செய்து பைண்ட் செய்த கதைக் கொத்தை மெய்-திருத்தம் பார்க்குமாறு என்னிடம் கொடுத்தார். எல்லா கதைகளையும் ஒருங்கிணைத்துப் பார்த்த அந்த நிமிசத்தில் நான் கொண்ட மகிழ்ச்சிதான் என் வாழ்வின் முக்கிய தருணமாகும். பிறகு ஓவியர் டக்ளஸின் அட்டைப் படத்துடன் ‘செம்பருத்தி பூத்த வீடு’ தயாராகிவிட்டது. வியாகுலன் மிகுந்த ஈடுபாட்டுடன் இந்தத் தொகுதிக்கான பணிகள் மேற்கொண்டதை பல சந்தர்ப்பங்களில் கவனித்து மகிழ்ந்திருக்கிறேன். வெளியீட்டு விழாவையும் அனன்யா பதிப்பகம் சார்பாக அவரே பெசன்ட் அரங்கில் வைத்து நடத்திக் காட்டினார்.

பொ. வேல்சாமி, களந்தை பீர்முஹம்மது, யூமா. வாசுகி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இப்போது வணிக வரித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் எஸ்.என்.எம். உபயதுல்லா அப்போது தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் வந்திருந்து வாழ்த்திப் பேசியதும் முக்கியமான ஒரு நிகழ்வாகும். சொல்லப்போனால் என்னுடைய இலக்கிய வாழ்க்கையின் அடுத்த கட்டம் அந்த மேடையிலிருந்துதான் தொடங்கியது.

இன்றைக்கு சிறுகதைகள், நாவல்கள், குழந்தை இலக்கியம் என்று என் பெயரில் சுமார் பத்து புத்தகங்கள் வெளிவந்து ஓரளவு அங்கீகாரமும் கிடைத்து விட்டது. எழுதத் துவங்கி 16 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் நான் எழுத வந்து பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் என்னுடைய முதல் தொகுதி வெளிவந்தது. இத்தகைய கால இடைவெளி-யில்தான் நான் என்னுடைய எழுத்துக்கான ஆதார சுருதியைக் கண்டடைந்தேன். தோல்வி, அவமானங்கள், போராட்ட மயமான வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில் தான் நான் முகிழ்த்தெழுந்தேன். எனக்கு இனி கலை இலக்கிய வாழ்வுதான் என்பது ஸ்திரப்பட்டுவிட்டது. இதற்கு காரணங்களாயிருந்த என்னுடைய பதிப்பாளர்கள் வியாகுலன், மருதா பாலகுரு, அகல் பஷீர், ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை படைப்பாளியாக அங்கீகரித்ததில் பெரும்பங்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துக்கு இருக்கிறது. அவ்வியக்கத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

- நன்றி
புத்தகம் பேசுது.

1 comment:

  1. அன்பு ஜாகிர்ராஜா,
    பாங்கு ஒலியை காலை அலராமாக ​கொண்டிருந்தாலும், கறி பிரியாணியாக ​நோன்பு நாளை அடையாளங்​கண்டிருந்தாலும், மாமா மாப்ளேன்னு வாயார குசலம் விசாரித்துக் ​கொண்டாலும், துலுக்கத் திமிரு என்று தள்ளியே வாழும் சாமானியனாகவே இருந்தேன் - உங்கள் எழுத்தை வாசிக்கும் முன். நம்மூரு (ஐம் ப்ரம்
    தாராபுரம்) ஸைடுல எழுதுறவங்கன்னா சுப்ரபாரதிமணியன், க.சீ. சிவக்குமார், என். ஸ்ரீராம் இப்படி கொஞ்சம் பேர தான் தெரியும். 2000-ல் தருமபுரி ​நூலகத்தில் உங்க சிறுகதை ​​தொகுதி ​செம்பருத்தி பூத்த வீடு கிடைச்சது (அப்ப அங்க பொறியியல் படிச்சுக்கிட்டு இருந்தேன்) படிச்சு முடிச்சதும் கீரனூர் கிளம்பி உங்களப் பாக்கணும்னு ​தோணுச்சு. விசாரிச்சதுல நீங்க தஞ்சாவூர் பக்கமா ஸெட்டில் ஆயிட்டதா சொன்னாங்க. அப்ப இருந்து புத்தகத்துக்கு நடுவுல வெச்சிருக்கிற மயிலிறகு மாதிரி இருக்கு உங்க எழுத்து. இப்ப இந்த மாதிரி பிளாக்கில உங்கள சந்திக்கிறது ​ஒரு சைபர்த்தனமான சந்தோஷமா இருக்கு.
    உங்கள் கதைங்கள் ​கொங்கு நிலப்பரப்பை ஒட்டிய இஸ்லாமிய வாழ்வுமுறையை யதார்த்தமாக உணர்த்துகிறது. பாங்கு ஒலி, பர்தா மறைத்த அழகு, உருது பாஷை, பிற சம்பிரதாயங்கள் என பாகுபாடுகள் அனைத்தும் ஒரே தள்ளலில் தள்ளி அந்த எளிய உலகத்தினுள் பிரவேசிக்க முடிகிறது. இவ்வளவு எளிமையாய் முஸ்லீம்
    சமுதாயத்தை படித்துணர முடியும் என எப்போதும் நினைக்கவில்லை. சொல்லப்​போனால் உங்கள் எழுத்து ஒரு யாத்ரீகன் எழுதியது போல் நேர்மையாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.
    தற்​போது என்னிடம் உங்கள் புத்தகம் எதுவும் இல்லை. சரியான வரிகளை நினைவு கூற முடியவில்லை. இருப்பினும் மசூதி குளத்தின் மீனைத் திருடும் மாமனார், குளத்துக்குள் குசு விட்டால் குமிழிகள் வரும் எனும் கஞ்சா ​தோழன், மதினாவுக்கு யாத்திரை ​சென்ற தம்பதியினர், மதம் மாற்றப்படுபவன், ஒட்டக வரவால் ஆட்டு வியாபாரத்தை இழக்கும் கசாப்புக் கடைக்காரர், லப்பை-ராவுத்தர் ​வேற்றுமை என இந்த உலகம், பக்கத்திலேயே இருந்தாலும் பார்வைக்கு தட்டுபட்டதேயில்லை.
    எல்லா மதத்திலும் ​பொதுவான விஷயம் - வறுமையை ஒண்ணும் செய்ய முடியாதுங்கிறதுதான் போலிருக்கிறது. என்ன ​செய்ய வறுமைதானே மதத்தையே தோற்றுவித்திருக்கிறது.

    வாழ்த்துக்களுடன்..

    க. ஜெகநாதன்
    http://jaganathank.blogspot.com/

    ReplyDelete