Wednesday, April 4, 2012

தேய்பிறை இரவுகளின் கதைகள் -- விமர்சனம்

கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணம்!

எஸ்.அர்ஷியா


தேய்பிறை இரவுகளின் கதைகள் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பதினேழு ஆண்டுகாலத் தனிமையை நம்மிடம் பகிர்வதாக இருக்கின்றன. தன்னை தனது சுற்றுச் சூழலை நேர்மையானப் படைப்பாளியாகக் கேள்விகளுக்கு உட்படுத்துவதுடன் தன் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுய உணர்தலும் கொள்கிறார். வாழ்வின் மீது தீராத பற்றும் சக மனிதர்கள் மீது இனிய தோழமை அன்பும் கொண்டிருக்கும் இந்தப் படைப்பாளி அதன்மூலம் தான் அறிந்த மிகவும் எளிய மனிதர்களைப் பற்றி மிகச் சரளமான மொழியில் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகிறார்.

வழக்கமாக இஸ்லாமியச் சிறுகதைகள் ஏகன் இறைவனின் கருணையையும் நபி பெருமான் அவர்களின் பராக்கிரமங்களையும் ஊரில் பெரிய மனிதராகக் கணிக்கப்பட்டவர் ஹஜ் பயணம் புறப்படும் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது அவர் ஊர் திரும்பும் கொண்டாட்டம் பற்றியதாகவோ இருக்கும். தொழச் சொல்லியும் ஜக்காத் கொடுக்கச் சொல்லியும் வலியுறுத்தும் கதைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. அப்படிச் செய்தால் வாழ்க்கை வளம்பெறும் என்று பயான்கள் செய்யப்படுவதுண்டு. தொழப்போகாமல் தூங்கிக்கொண்டிருப்பவன் வாய்க்குள் இப்லிஷ் மூத்திரம் மோண்டுவிடும் பயமூட்டல் கதைகள் மட்டுமே இஸ்லாமியக் கதைகள் என்று அடையாளம் காட்டப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன.

அப்படித் தொழப்போயும் ஏழை எளியவர்கள் ரம்ஜான் குத்பாவுக்கு புதுத்துணி வாங்க முடியாமல் கஷ்டப்படுவதையும் பிறை பார்த்து ஊரெல்லாம் கொண்டாட்டத்தில் இருக்கும்போது சோர்ந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவர்களுக்கு யாரோ வழிப்போக்கர் புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு மறைந்துபோகும் அற்புதங்கள் நிறைந்தக் கதைகள் ரம்ஜான் மாதத்தில் வணிகப் பத்திரிகைகளிலும் இஸ்லாமியப் பிரச்சாரப் பத்திரிகைகளிலும் பிரசுரமாவதுண்டு. தொழுதலுக்கானப் பரிசு என்று அதை வியந்தோதியும் வந்தார்கள். அந்தக்கதைகளும்கூட முந்திய ஆண்டு எழுதிய அதே எழுத்தாளர் பாத் திரங்களின் பெயர் ஊர் மாற்றி எழுதியதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிலவேளைகளில் பிறை தெரியாத அவஸ்தைக் கதைகளும் வந்ததுண்டு. பக்ரீதுக்கு இருக்கவே இருக்கிறது ஆடுகளும் அதுகுறித்த வதைகளும்.

இவையெல்லாம் இல்லாமல் எளிய மக்களின் பாடுகளையும் வாழ்க்கையின் முரண்களையும் பொருளாகக் கொண்டு ஒன்றிரண்டு கதைகள் எப்போதாவது வந்ததுண்டு. நிச்சயமாக இஸ்லாமியப் பத்திரிகைகளில் அவை அச்சானதில்லை. அதை எழுதியவர்கள் அவற்றை ஏன் தொடரவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. கேள்விக்கு பதிலாக ஒருசிலர் நட்சத்திரங்களாகத் தோன்றியதுமுண்டு. அப்படித் தோன்றியவர்களில் கீரனூர் ஜாகிர்ராஜாவிடம் கூடுதல் ஒளி தென்படுகிறது.

முப்பால்போல தேய்பிறை இரவுகளின் இந்தக்கதைகள் மூன்று வகைமைகளைக் கொண்டதாக இருக்கின்றன. அதை அவர் எழுதிய காலத்தின் அடிப்படையிலும் இடங்களின் சூழலிலும் கதைகளின் தன்மையிலும் பகுக்கலாம். எப்படிப் பகுத்துக் கொண்டாலும் அதை வாசிக்கும்போது அதற்குள் உறைந்து கிடக்கும் வீரியம் இதற்கு முன் வெளிப்படாததாக இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய எழுத்தாளர்களால் இட்டுக்கட்டப்பட்டதை அல்லது மறைக்கப்பட்டதை உடைத்து வீசுவதாகவும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் உடைய உடைய இதற்கு முன் உண்மை என்று நம்பப்பட்டு வந்த 'மூடாக்குகள்' சிதறி முகத்தில் அறைகின்றன.

முதல் சிறுகதையான வெம்மை லெளகீகத்தின் திசைகள் தோறும் விரிந்திருக்கும் பிடிக்குள் அடங்காமல் மனச் சுதந்திரத்துடன் அலைய விரும்பும் ஒருவன் சமூகத்தின் மறைமுக வாழ்வியல் மிரட்டல்களுக்கும் ஏளனப் பார்வைகளுக்கும் ஆட்பட்டு உள்ளுக்குள் குமுறும் வாழ்வற்ற அவஸ்தையை அப்பட்டமாக்குகிறது. பிறந்த கணத்திலிருந்து இல்லாத அதீதமான ஒரு வெம்மை கல்யாணமான நாள் முதல் உடலைக் கவ்விக் கொண்டு விடமாட் டேனென்கிறது என்று சொல்லும் துயர் அரசு பதவியோ முறையான வருமானமோ அல்லது அரசியல் சம்பாத்தியமோ இல்லாத எல்லா இளைஞர்களுக் கும் பொருந்திப் போகும் ஒன்று. ஒட்டுமொத்த உலக இளைஞர்களின் துயரம். மனைவியின் கிழிந்த துப்பட்டிக்குப் பதிலாக கறுப்பு வண்ண பர்தாவை வாங்கித்தர முடியாமல் வீட்டுக்குள் உருவாகும் அவலம் நிறைந்த சச்சரவு அவனை வெளிநாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போகிறது. துப்பட்டிக்கு மாற்றாக இங்கு கண்டறியப்படும் கறுப்பு வண்ண பர்தா தாய்மண்ணைப் பிரிந்துபோகின்ற மனத்தின் அடிவேரைக் கொத்தாகப் பிடுங்கிய இஸ்லாமிய இளைஞர்களின் ஜீவ உடல் உழைப்பு ரத்தமும் வியர்வையுமாக மணல் காட்டிலும் பொரிக்கும் வெயிலிலும் உறிஞ்சப்பட்டு அதற்கு மாற்றாக சாதாரணப் பண்டமாக இறக்குமதி செய்யப்படும் குறியீடு. கூடவே அதைக்கொண்டு பெண்ணைப் போர்த்தும் அடிமைத்தனத்தையும் இறக்குமதி செய்கிறது. இப்போது வெளியாகும் எந்த இஸ்லாமியப் பத்திரிகையை கையில் எடுத்தாலும் அதன் வண்ண மயமான அட்டையில் பர்தாக்களின் விளம் பரங்களைக் கண்ணாறக் காணலாம். அதனடியில் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று அடிக்கோடு குறிப்பு இடப்பட்டிருக்கும். மனைவி மக்களைப் பிரிந்து பணத்தின் மீதான வேட்கையுடன் புது நட்பு களுடன் ஒண்ட முடியாமல் முற்றிலும் மாறான இயற்கை அமைப்பில் உடல் உபாதைகளுக்கு ஆளாகி பொலிவிழந்து மன உலைச்சலுக்கு உள்ளாகி அவன் ஈட்டிக்கொண்டு வருவதை பெருஞ்செல்வமாகப் பார்க்கும் சமூகம் அதற்குள் பொதிந்து கிடக்கும் அவனது பேசா மொழியையும் மெளனமுமான உணர்வுகளையும் கண்டு கொள்வதில்லை. அதை அந்தஸ்து என்கிறது. அதில் அவன் தோல்வியடையும்போது அது வன்மமாக உருவெடுக்கவும் செய்யலாம். மனப்பிறழ்வுக்கும் வகை செய்யலாம். இஸ்லாமிய இளைஞர் களுக்கு துபாய் என்றால் மற்றவர்களுக்கு அமெரிக்கா. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல் 'இன்னுமா பயணம் புறப்படவில்லை?' எனும் குரல் இஸ்லாமியர்கள் வாழும் தெருக்களில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

அப்படி ஈட்டிக்கொண்டு வரும் பொருட்கள் வாழ்க்கையை மட்டுமல்ல நகர்களின் புராதனங்களையும் மாற்றியமைத்து உயர்கோபுரக் கடைகளாகி மாட மாளிகைகளாகி தொன்மங்களை காவு வாங்கி விடுகின்றன. அப்படிக் காவுக்கு உள்ளான தஞ்சாவூரில் உறவுக்கார ஹனிபா மாமுவைத் தேடிக்கொண்டு போகும் 'ரெட்டை மஸ்தானருகில்' சிறுகதை புதிய வேதனையைத் திறந்துகாட்டுவதாக இருக்கிறது. ரெட்டை மஸ்தான் என்பது அந்த ஊரிலிருக்கும் ஒரு தர்ஹா. இஸ்லாமிய மக்களுடன் பிற சமூகத்தினரும் ஆறுதலும் தேறுதலும் கொள்ளும் இடமாகும். அதனருகில் ஏதோ ஒரு அற்புதம் நடக்கப்போகிறது என்பதானத் தூண்டுதலை தலைப்பு கொண்டிருந்தாலும் அதுபேசும்பொருள் முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது. புதிதாக அறிமுகமான ஒரு கால்குலேட்டர் எப்படி ஒரு கணக்குப் பிள்ளையின் வாழ்க்கையை முடக்கிவிட்டதோ அதே வேலையை கூடுதலாகக் கம்ப்யூட்டரும் செய்து ஹனிபா மாமுவின் தங்க நிற மூடியைக் கொண்ட பேனாவை மங்கலாக்கியதுடன் வாழ்தலுக்கான புதிய ஒப்பனையை - பெண்களின் பிரத்யேக ஒப்பனையை - அவரை ஏற்றுக் கொள்ளச் செய்திருப்பதை மனஅவசத்தோடு காணச் செய்கிறது. வாழ்தலுக்காக எதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நோக்கும்போது அதிர்ச்சியைத் தாண்டிய நடுக்கம் தோன்றுகிறது.

பிறரைக் காவுகொண்டு களிநடனம் ஆடுகின்றப் 'பெருநகரக் குறிப்புகள்' கலையின் எவ்வகையைச் சார்ந்தவருக்கும் கட்டாயம் கிடைக்கின்ற அனுபவப் பேழை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவம் அதனுள்ளிருந்து எழுந்துவந்து பொருந்திப் போகும். மனக்கிளர்ச்சியைத் தரும். முன்புபட்ட அவஸ்தைகளை மீள் உருவாக்கம் செய்து பார்க்கும்போது கடந்துவந்த திசைகள் மனசில் தவிப்பையும் முகத்தில் புன்சிரிப்பையும் அரும்பச் செய்யும். ஒருவேளைத் தேநீருக்காக... ஒருவேளை உணவுக்காக... தூங்கும் இடத்துக்காக... அவசரத்துக்குக் கைமாத்து கேட்பதற்காக... அலைந்து திரிந்ததை இப்போது பெருமுயற்சிகள்போல பேசச் சொல்லும். அதனூடே தொடர்ந்த பயணம் வெற்றி பெற்றிருந்தால் அவற்றுக்குப் பெயர் நான் நடந்து வந்த பாதை என்று மாறிப்போய்விடுகிறது. அதேவேளையில் தோல்விகள் அதனை காலந்தோறும் குறிப்புகளாக வைத்து பொக்கிஷமாகப் பார்க்கச் செய்கிறது. விஜயராஜின் டிரங்க் பெட்டி நிரம்பி வழிந்ததாகச் சொல்லப்படும் இடம் எப்படியும் வென்றுவிடுவோம் எனும் நம்பிக்கையின் ஆணிவேர். அதுதான் இன்னும் இன்னும் இளைஞர்களை பெருநகரம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. பெருநகர வீதிகளில் நடந்துபோகும் அத்தனைபேரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கிறது. நாளைய பெருநகரக் குறிப்புகள் அவர்களாலும் எழுதப்படும்.

தொகுப்பின் மிக முக்கியமானக் கதையாக 'குடமுருட்டி ஆற்றின் கரையில்' அமைந்து போயிருப்பது தற்செயலானது அல்ல. இஸ்லாமியக் குடும்பங் களில் வரன் தேடும் வைபவம் என்பது புவ்வா போன்றவர்களாலும் வீட்டுக்கு 'சபக்' சொல்லிக் கொடுக்க வரும் உஸ்தாத்பீக்களாலும் நடத்தப்படுகிறது. இவர்கள்தான் நடமாடும் மேட்ரிமோனியல்கள். உள்நுணுக்கங்கள் தெரிந்தவர்கள். எல்லைகளைத் தொடுபவர்கள். உள் விளிம்புகளை வளைத்து எதை யும் சாதித்துக் காரியம் கைகூடிவரச் செய்யும் திறமை அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருப்பது வியப்பு தருவதாக இருக்கிறது. இந்தக்கதையில் வரும் புவ்வா அதையும் தாண்டிய மனுஷியாக இருப்பது அவள் மீது பிரேமையை உருவாக்குகிறது. வாழ்க்கை இழந்து இரண்டு குழந்தைகளுடன் உழன்ற உம்மசல்மாவுக்கு இரண்டாவது நிக்காஹ் நடத்தி வைக்கவும் தெம்பிருந்தது புவ்வாவுக்கு என்ற வரிகள் அந்த பிரேமைக்கு வலுசேர்ப்பதாக இருக்கின்றது. அதே புவ்வாவுக்கு தனது காரியதரிசியான ஹைரூன்னிஸாவுக்கு ஓரிடத்தைக் கோர்த்து விடுவதில் மனமுரணும் இருக்கிறது. அவளிடமுள்ள மெல்லியதான இந்த மனவிலகல்... இந்த முரண்... யதார்த்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. அவளுக்குள் ஓடும் வாழ்வியல் அரசியல் கதைக்கு ஓர் அம்சத்தைத் தருகிறது. யதார்த்தத்துக்கும் மாயவாதத்துக்கும் இணைப்பாக சாயாக்கடை ஜக்கரியா இருக்கிறார். அப்துல் காதர் ஜீலானி ஆண்டகை மீரான் மைதீன் கதைகளிலும் எஸ். அர்ஷியாவின் கதைகளிலும் ஜாகிர்ராஜாவின் கதைகளிலும் இடம் பெறுவதில் ஒரு ஓர்மை இருப்பதாகவே படுகிறது. அவர் அற்புதங்களை நிகழ்த்தும் சாதாரண மனிதராகவே காட்சிக்கு வருவதும் அப்படித்தான். அதனாலேயே இந்தக்கதை மற்ற இஸ்லாமிய எழுத்தாளர்களின் கதைகளிலிருந்து ஓர் அங்குலம் முன்னுக்கு இருக்கிறது. யாருமறியாத ரகசியக் கொலுசொலிக்க ஹைரூன் குடத்தை எடுத்துக்கொண்டு அந்த இருளில் ஆற்றை நோக்கி நடந்தாள். நல்ல வியாபாரம் கொழிக்கிற நேரத்தில் சாயாக்கடையில் ஜக்கரியா இல்லாதது புவ்வாவுக்கு ஏமாற்ற மளித்தது என்பதுடன் கதை முடிந்து போகிறது. ஆனால் ஹைரூன்னிஸா வெறுமனே பருத்துப் பிதுங்கும் மார்புகளைக் கொண்ட சதைக்கோளம் அல்ல. உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் ஆன பெண் என்பதை உணர்த்தும் கதை அந்த இடத்திலிருந்துதான் கிளைக்கிறது. அதுவே தொகுப்பில் இந்தக்கதையை முக்கியமான இடத்துக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

உருவம் கதையில் வரும் மனைவியை இழந்த மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது அடையாளங்களுக்குள் உலவும் ஓர் மனிதராகத்தான் தெரிகிறார். பயான் செய்யும் மெளலவிகளும் மிகச்சாதாரண மனிதர்கள்தாம். அவர்கள் மூக்கால் சுவாசிப்பவர்களாகவும் வாயால் உண்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனனம் செய்து துப்பும் வாசகங்கள் நம்மிலிருந்து அவர்களை தூரத்தில் நிறுத்தி அவர்களுக்கு அந்தஸ்தைக் கொடுத்து விடுகிறது. அவர் செய்யும் தொழில் உன்னதமாக்கப்பட்டதால் அவருக்கு அந்த அந்தஸ்து. அவ்வளவுதான். தாடி வளர்த்து குல்லா அணிந்து அத்தர் மணம் கமழ பயான் செய்பவர்களில் பலர் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது சாதாரணமாகவே பார்க்கக் கிடைக்கும். மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது கூட தன்னிலையை ஒப்புக் கொள்வதாக "வாஸ்தவத்தில் நான் இப்படிப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் நாளா மனசில கொழப்பம். இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு படம் கெடச்சுட்டாப் போதும்னு இப்பத் தோணுது. ஏன்னு தெரியல... எல்லாம் அல்லாஹ் அறிவான்..." என்று சொல்கிறார். இந்த இடம் மிக முக்கியமானது. எந்த மனிதனாலும் நினைவுகளைத் தாண்டிவிட்டுப் போகமுடியாது. அதுபோல இழப்புகளையும். மதம் செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகள் எல்லா இடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் செல்வாக்குடன் திகழும் இஸ்லாமியக் குடும்பங்கள் எத்தனையிருக்கும் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவைகளும்கூட சிதைந்துகொண்டு வருகின்றன என்பது கண்கூடு. அனிபா ராவுத்தரின் ஆயிஷா மன்சில் அப்படிச் சிதைந்து போனவைகளில் ஒன்று. கடன்கூட பெற முடியாத நிலைக்கு உள்ளாகும் அனிபா ராவுத்தரின் கடந்த காலம் படாடோபமாகத்தான் இருந்திருக்கும். இன்று பள்ளிவாசல் ஹவுஜில் ராஜமீனைக் களவாடிய குற்றத்துக்கு உள்ளாகி நிற்கிறார். களவாடிய மீன் மருமகனுக்கு குழம்பாகியோ... பொறிக்கப்பட்டோ போயிருக்கும். ஆனால் அவமானம்? ஹவுஜில் மீன்கள் வளர்க்கப்படுவது தொன்மம். அவற்றை பிடிக்கக்கூடாது என்று சொல்வதுண்டு. வளர்ந்து முதிர்ந்த மீன் என்னாகும் என்ற கேள்வி வேடிக்கைப் பார்க்க... பொறிபோட வரும் சிறுவர்களிடம் இருக்கவே செய்கிறது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா டாக்கிகளில் (நீர்க்குளங்கள்) மீ ன் பிடிக்கக்கூடாது என்று தகவல் பலகையே இருக்கிறது. ஆனால் அக்குளத்து மீன்கள் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டேதான் இருக்கின்றன. வந்துபோகும் யாத்திரிகர்கள் யாரும் அதைத் திருடும் வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போது நகரின் முக்கியமான தொழுகைப் பள்ளிவாசல்களில் ஒலு செய்வதற்காகக் கட்டப்பட்ட ஹவுஜ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக குழாய்கள் நிறுவப்படுகின்றன. ஹவுஜ் இருந்த இடங்கள் பத்துக்குப் பத்து கடைகளாகி நிர்வாகத்தின் வருமானத்துக்கும் ஊழலுக்கும் அடிகோலுகின்றன.

அதுபோல செம்பருத்தி பூத்த வீடு யாரையும் வசீகரித்துவிடும் வல்லமை கொண்ட கதை. இளமையைத் தொடும் ஆண்பெண் இருபாலர் யாருக்குமே காதல் இல்லாமல் போகாது. குறைந்த பட்சம் மனசுக்குள்ளாவது இருந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பின் ஊர் திரும்பும் நாயகன் தன் இளமைக் கால நாயகி எஸ். மயிலாத்தாவின் செம்பருத்தி பூத்த வீட்டைப் பார்க்கக் கிளம்புகிறான். அதில்தான் எத்தனை சுகம்? எதிர்பார்ப்பு? வீடு மாறாமல் அப்படியே இருப்பதில்தான் எத்தனையெத்தனை ஆனந்தம்! விட்டுப்போன இடைக்காலத்தை மீட்டெடுக்கும் நினைவுகளின் வழியே ஊடுருவும் மனசு. 'ஆத்தா' - 'ஆத்தா' - 'ஆத்தாவ்' - ரொம்ப நாளாயிப் போச்சு இப்டியெல்லாங் கூப்புட்டு கொஞ்சம் வெட்கமாக்கூட இருந்துச்சு. திரும்பத் திரும்பக் கூப்புட்டுப் பாத்துக்கிட்டேன் எனும் வாசகங்களில் அந்த இளம்வயதுக்கே திரும்பிப்போய்விடும் சூத்திரம் ஒளிந்து கிடக்கிறது. வீட்டைப் பார்த்துவிட்ட வனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கும் ஆவலை மனம் கிளறுகிறது. "மாப்ள அந்தப் புள்ள செத்துப் போயி ஏழெட்டு வருஷமாசேடா" என்கிறான் நண்பன். அவன் மனசுக்குள் பாலாய்ப் பொங்கிக் கொண்டிருந்த அத்தனையும் அடங்கிப்போய்விடுகிறது. போதும் இங்கேயே கதையும் முடிந்துவிட்டதாக உணர முடிகிறது. அதன் பின்பு எதுவாக இருந்தாலும் அது கூடுதல்தான். மாயந்தான் என்றறிந்தாலும் இப்படியான விடலை நினைவுகள் இல்லாத யுவனும்யுவதியும் இந்த லோகத்தில் இல்லவே இல்லை. அந்த சுகமான வலிகள்தான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போகின்றன. காதலும் அதை யொற்றி எழக்கூடிய நினைவுகளும் பசுமையானவை. அதற்குள் பயணம்செய்து எழுத்தாக மீட்டெடுக்கும் லாவகம் படைப்பாளியிடம் தெளிந்து கிடக்கிறது.

ஊர்ஊராய்ச் சுற்றி யாசகம் வாங்கிப் பிழைக்கும் சலீமின் பார்வையிலிருந்து விரியும் சுவடுகள் கதை தருமம் என்ற சொல்லிலிருந்து கிளைந்து அதைப் பெற முயற்சிப்பவர்கள் படும் அவலத்தையும் அவசத்தையும் வெளிப்படுத்துவது. யாசகத்துக்கு பெண்களும் குழந்தைகளுமே முன்னிருத்தப்படுகின்ற னர். அதுதான் தொழிலில் கூடுதல் பொருளீட்டலைப் பெற்றுத் தருகிறது. அந்த முன்னிலைப்படுத்தல்தான் மகளின் அலறலை "உனக்கு பிரம்மையாக இருக்கலாம்" என்று அத்தாவை சொல்ல வைக்கிறது. யாசகம் கேட்டுப்பெறுதல் எனும் எளிய பார்வையைத் தாண்டி அதற்குள் உறைந்து கிடக்கும் மற்றவையான அவமானம் புறந்தள்ளல் கண்டுகொள்ளாமை யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறது. கதையில் வரும் அக்காவின் அலறலை சமூகத்தின் அலறலாகக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

வேற்றுக் கிரக அவாந்திரப் பெருவெளியில் பொம்மையுடன் கைகோர்த்தவாறு திரியும் குழந்தை தெளபிக் இடம்பெறும் ஆண்பொம்மை ராட்சஸப் பறவையின் சிறகுகள் கதையில் வரும் சக்கரை முகமதுவின் மன உலைச்சல் ஆதிமை நீஸா என்றொரு சிநேகிதி போன்ற சிறுகதைகள் நிஜங்களுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. சடங்குக்காக செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில் மக்கள் கொள்ளும் ஆர்வம் கடமையாக்கப்படுகிறது.

அதேவேளையில் ஆடான நீஸாவின் சிநேகிதி ஆயிஷா 'சைத்தாம் புடிச்சவளாக' ஆக்கப்படுவது ஆட்டை அறுப்பதுபோல நெஞ்சை அறுக்கிறது. கறுப்புக்கோட்டு பக்ரீத் ஆடுகள் எளிய விளிம்புநிலை மக்களின் பாடுகளை உரித்துக் காட்டுவனவாக இருக்கின்றன. சுவர்கள் சிரிக்கின்றன உள்வெளி போன்ற கதைகள் நிகழ்த்துதலைத் தாண்டிய பதிவுகளாக மட்டுமே இருக்கின்றன. நிழலின் சாயலும் சாயலின் நிழலும் 'சென்னை வாழ்க்கையைப் படம் பிடிக்கிறதா?' என்றாலும் புல் ஓபன் நைட்டின் ஜிப் திடீரென கீழிறங்கி இருந்ததைக் கவனித்தான்."இதுதான் சர்ர்ர்ரியலிசம்..." என்றபடி சுதந்திரமானான் எனும் பகடி ரசிப்பதாக இருந்தது. வேறுகதைகளில் இல்லாதது.

சிறந்த எழுத்து என்று வரையறுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வு தார்மீக எழுச்சி சுதந்திரம் ஆழம்என சகல மேன்மைகளும் நிரம்பிய அந்தரங்க நிலை படைப்பாளியிடம் கொட்டிக்கிடக்கிறது. அதனாலேயே கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணத்தைக் கொண்டவையாக அவரது கதைகள் இருக்கின்றன.

இந்தப்பின்னணியில் உருவாகியிருக்கும் கதைகளை முன்னரே சொன்னதுபோல மூன்று வகைமைகளாகப் பகுத்தாலும் அதனுள் சூழல் ஜாகிர்ராஜாவை கீர னூர் தஞ்சாவூர் சென்னை என்று மூன்று இருப்பிடங்களில் இருத்தி உருவாக்கிப் பயணிக்கச் செய்திருக்கின்றது. அவற்றுள் சென்னையைக் காட்டிலும் முதலிரண்டு தளங்களில் பின்னப்பட்டக் கதைகள் நெஞ்சை நிறைக்கின்றன. ஆனாலும் கூட ஜாகிர்ராஜாவின் முன்னே இன்னும் இன்னும் விரிந்து பரந்த களம் ஆடப்படாமல் இருக்கவே செய்கிறது. அதில் நிகழ்த்துவதற்கான மூலங்களும் திறமும் அவரிடம் நிறையவே இருக்கின்றது.

நன்றி : உயிர் எழுத்து. நவம்பர் 2011.

Tuesday, April 3, 2012

வடக்கேமுறி அலிமா ம. மணிமாறன்


vadakke-muri-alima

நாவல்களின் உள்ளுறையாக அமைந்திருப்பவை யாவும் தனிமனிதனின் புற உலக ஞாபகங்கள்தான். அகத்தினுள்ளும் ஞாபகங்கள் உறைந்து கிடக்கத்தான் செய்கின்றன. உலகெங்கும் தன் வரலாற்றையே நாவலாக்கிப் பார்த்தனர் எழுத்தாளர்கள். அதன் எல்லை தன் ஊர், தன் குடும்பம், தன் குலவழியின் பல்வேறு கிளைகள் என்ற அளவில்தான் பயணித்தது. எழுத்தாளர்களின் எழுத்துக்கான கச்சாப்பொருளை தன்னிலிருந்து உருவாக்கி அதனை அடுக்கி, அடுக்கி புனைவாக்கிடும் சக்கரவாட்டச் சுழற்சிக்கு உலகின் எந்த மொழியும் தப்பித்ததில்லை. மகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் “வடக்கே முறி அலிமா எனும் அவரின் நான்காவது நாவல்.

இரண்டாயிரத்துக்குப் பிறகான காலத்தின் மிக முக்கியமான எழுத்துலகப் பிரதிநிதித்துவம் ஜாகிரினுடையது. அவருடைய நான்கு நாவல்களுமே இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி எனும் மூன்று இலக்கியப் பிரதிகளும் எளிய மொழியில் தனித்த தமிழ் இஸ்லாமிய வாழ்வினைப் பதிவு செய்திருந்தன. ஒரு வகையில் அவை யாவும் கூட தன் ஊரின், தனித்த மனிதர்களின் அகலாத ஞாபகங்கள்தான். வேறு எந்த இஸ்லாமிய நாவல்களும் காட்டியிராத அல்லது காட்டத் தயங்கியவற்றின் மீது தன் எழுத்தென்னும் ஆயுதம் கொண்டு பெரும் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சியவர் ஜாகிர். “அலிமா” முற்றிலும் வேறானதொரு படைப்பு. ஒரு நாவலுக்கான வெளிப்பாட்டு முறையை எழுத்தாளன்தான் முடிவு செய்கிறான் என்ற போதும் படைப்பு முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்ள எழுத்தாளன் எடுத்திடும் முயற்சியும் கூட நாவலுக்கான வடிவத்தை தீர்மானிக்கிறது.

அலிமாவின் வாழ்க்கை ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கவில்லை. தன் பால்யத் தோழனான கெபூருடனான கபுறுகளி ஆட்டத்தில் துவங்கி, முஸ்லியாருடன் உடன் போதல், மம்முதுடன் வெளியேறுதல், அக்கம்மாவான செய்யதலி பாத்திமாவுடனான நெருக்கம், எழுத்தாளர், நடிகை என வேறு வேறு அவதாரம் எடுத்தல் என்பது எல்லாப் பெண்களுக்கு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை ஒழுங்கிற்குள் சாத்தியமில்லை. அதுவும் வளமான இஸ்லாமியக் குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படியான வாழ்க்கை அமைந்திட வாய்ப்பே இல்லை. பள்ளிக்கு படிக்கப் போவது, குரான் ஓதிட மதரஸாவிற்குச் செல்வது, பிற ஆடவர் பார்வையில் படும்போது தலையில் முக்காடிட்டுக் கொள்வது, திருமண வயது நெருங்குவதற்கு முன்பாகவே நிக்காஹ் நடந்தேறுவது இவைதான் இஸ்லாமிய பெண்ணிற்கான வாழ்வியல் ஒழுக்கங்கள். இஸ்லாமிய பெண்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களை அலிமாவைக் கொண்டு கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். எனவேதான் வடக்கே முறி அலிமா நேர்கோட்டுத் தளத்திற்குள் இயக்கம் பெறவில்லை. மாறாக ஒரு பின் நவீனத்துவப் பிரதியாக வடிவம் பெற்றிருக்கிறது.

வடக்கே முறி அலிமா இஸ்லாமியத் தளத்திற்குள் இயங்குகிற போதும் கூட அவள் நடிகை, எழுத்தாளர் என பரிணாமம் கொள்கிற போது முற்றிலும் வேறு ஒரு பிரதியாக வடிவம் கொள்கிறது. அதிலும் குறிப்பாக அவளுடைய எழுத்து என்பது கழிவறைச் சுவர்களில் இருந்துதான் பிரதியெடுத்து புத்தகமாக்கப்பட்டது என்பது உச்சபட்ச பகடியாகும். எழுத்தாளப் பெருந்தகைகளைப் பகடித்து கேள்விக்கு உள்ளாக்கிடும் எழுத்தே கழுதைக்கு (பத்திரிகை) அலிமா அளித்த பேட்டி என்பதை வாசகன் அறிந்திடுவான்.

சாதாரணமானவர்களால் அசாத்தியமான பெரும் படைப்புகளை உருவாக்கிட முடியாது என வாசக மனங்களில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்து இயல்பானதல்ல. அவற்றை கட்டமைத்ததில் தமிழ் இலக்கியத்திற்குள் காலம் தோறும் இயங்கி வருகிற சிறு பத்திரிகைகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. பேட்டியில் அலிமா சொல்கிறாள் “என் கழிப்பறை எழுத்திற்கு ஆதர்சம் காசிம்” உடனே பேட்டி எடுக்க வந்தவர் - “யார் அந்த காசிம்? புகழ்பெற்ற அரபு யாத்திரிகர் போல இருக்கிறதே” - வாசகனுக்கு மிக நன்றாகத் தெரியும். காசிம், அலிமாவின் வீட்டுச் சமையல்காரன். அவனுடைய கழிவறைக் குறிப்புகளாக உருப்பெற்ற விதவிதமான மனிதர்களின் குறிகள் எதன் குறியீடு என்பதையும் வாசகன் அறிந்திடும் வகையிலேயே நாவல் இயக்கம் பெற்றிருக்கிறது. ஆனாலும் கூட எழுத்தாளன் ஆதர்சம் பெறுவதற்கான ஆளுமையாக சமையல்காரனான காசிம் இருப்பதை நவீன இலக்கிய உலகம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

அமைப்பியல் வாதம் விவாதத்திற்குள்ளான நாட்களில் “பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங்” எனும் எழுதுதல் முறை உலகெங்கும் விவாதத்திற்குள்ளானது. தமிழிலும் கூட தமிழவன் “சரித்திரத்தின் மீது படிந்த நிழல்கள்” எனும் தன்னுடைய முழு நாவலையும் பாலிம் ஸெஸ்ட் பிரதியாகத்தான் உருவாக்கியிருந்தார். பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங் என்றால் நடந்திருக்கும் நிகழ்வுகளின் மீது எழுத்தாளர் தன்னுடைய புனைவை எழுதுகிறபோது நிஜமும், புனைவும் கலங்கி வேறு ஒன்றாக வெளிப்படும் என்பதுதான். அப்படியான புனைவுப் பிரதிகள் பகடியாக வெளிப்படுவதை ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அப்படியான பெரும் பகடிகளின் தொகுப்பாகவும் நாவல் வெளிப்படுகிறது. வாசகனின் கவனத்திற்கென ஒன்றிரண்டை ஞாபகமூட்டுவது சரியாக இருக்கும் என்று படுகிறது.

பதிப்பகத்தினர் குறித்த பகடியென்றே நான் கோழிக்கோடனைக் கருதுகிறேன். ஆலப்புழை நகராட்சிக் கழிப்பறைச் சுவரினைக் கண்ணுற்ற பிறகு அவர் அலிமாவைப் பின் தொடர்கிறார். மொத்தம் 3800 கக்கூஸ்களில் அலிமாவால் எழுதப்பட்ட ‘என்டெ யாத்ரா’ நூலாக வரும் போது 300 பக்கமாக்கப்பட்டது. 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அவளின் காகிதம் கக்கூஸ் சுவர்; அவளின் பேனா விறகுக்கரி. இதைத் தொகுத்தே கோழிக்கோடன் “என்டெ யாத்ரா” - வாக்கிட அதற்கு “முட்டைச் சிம்னி” விருதும் கிடைக்கிறது. விருதின் பெயர்களைப் பாருங்கள் “கட்டஞ்சாயா”, “ஏத்தன் பழம்” இப்படிப் பலப்பல. தமிழில் தான் விரும்புகிற எழுத்துக்களுக்கெல்லாம் எந்த விதிமுறையும், வரைமுறையும் கைக்கொள்ளப்படாமல், அளிக்கப்படுகிற விருதுகளின் மீதான பகடியாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக “முட்டைச் சிம்னி” - விருது நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிற “விளக்கு”- விருதினை வாசகனுக்கு ஞாபகமூட்டத்தான் செய்கிறது.

தவிர்க்கவியலாமல் யார் இந்த அலிமா என்று எனக்குள் நான் கேட்டுக் கொண்டேதானிருக்கிறேன். அலிமா ஒரு நடிகையாக இருப்பதால் அதுவும் இஸ்லாமியப் பெண்ணாக இருப்பதால், அதிலும் கற்பு, ஒழுக்கம் என கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண்ணிற்கு மட்டுமேயான பாலியல் ஒழுங்குகளை கேள்வி கேட்பவளாக இருப்ப தால் வைத்து அலிமாவை நடிகை குஷ்புவாக்கிப் பார்க்கலாமா? என்ற யோசனையை அவர் எழுத்தாளர் இல்லையே என்ற தர்க்கம் உடனே கலைத்தது. பிறகு யார்? கேரளத்தில் பிறந்து, நடிகையாகி, எழுத்தாளராகவும் இருக்கிற அருந்ததிராயின் சாயலை அலிமாவிற்குள் தேடித் தோற்றேன். அலிமா தன்னை கலாச்சாரப் போராளியாக காட்டிடவில்லையே. இப்படியே வாசகா நீயும் கூட உனக்குள் அலிமாவைத் தேடிக் கண்டடையாமல் தவிக்கப் போவது நிஜம்.

அலிமா கமலாதாஸா, குஷ்புவா, அருந்ததிராயா என்கிற யாதொரு குழப்பமும் இல்லாமல் வடக்கே முறி அலிமாவாக மட்டுமே வெளிப்படுகிற இடங்கள் இரண்டு. ஒன்று அவள் ஆடும் கபுறுகளி ஆட்டம். மற்றொன்று சினிமா நடிகையானதால் ஏற்பட்டுள்ள விழுப்புண்ணிற்கு களிம்பு தடவியபடி லாட்ஜ் அறைச் சிறுவனின் முகத்தில் தன்னுடைய கபுறுகளி ஆட்டத் தோழனான “கெபூரைத் தேடிடும் இடத்திலும்தான். அதிலும் கபுறுகளி ஆட்டம் இந்த நாவலின் உச்சம்.

எல்லா மதங்களும் மறுமை குறித்த பயத்தின் மூலமாகவே இம்மையை நிர்பந்திக்கின்றன. மனித வாழ்வில் கடைப்பிடிக்கப்படுவதாக நம்பப்படுகிற எல்லா நடவடிக்கைகளுக்குள்ளும் மைய இழையாக ஓடிக் கொண்டிருப்பது சொர்க்கம், நரகம் குறித்த கட்டமைப்புகளே. இம்மையில் நன்மை செய்ததாக நம்பி உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை சாட்டையால் விளாசி அலிமா எழுப்பும் கேள்விகளும், அந்த கபர்ஸ்தான் காட்சிகளும் மிகுந்த செவ்வியல் தன்மையிலான பதிவாகும். “மய்யத்துகளின் அருகில் நின்று அலிமாவும், கபூரும் கேள்வி எழுப்புவார்கள். “கலிமா சொல்லுங்கோ”, தொழுதியளா? காசு உண்டாக்கினீங்கோ, ஷஜ் செஞ்சியளா?” “உங்க பாரியாளத் தலாக் கொடுத் தீங்களா”. வட்டி வாங்கினதுண்டா, இல்லங்கி இத்தன பைசா எங்கின வந்திச்சு?” . . . . ஹராமெனும் சொல் இஸ்லாமிய கலைச் சொற்களிலேயே மிகுந்த தனித்துவமான சொல். அது குறித்த தர்க்கத்தையே கபுறுகளி ஆட்டத்தின் போது அலிமா நிகழ்த்துகிறாள். இஸ்லாமியப் பெண்களுக்கு பொதுப்பள்ளி வாசலில் தொழுதிட ஜமாத்துகள் அனுமதிப்பதில்லை. இப்போது தான் பெண்களுக்குத் தனியான தொழுகையிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கபர்ஸ்தானுக்குப் போகிற மரண ஊர்வலத்தில் பங்கேற்றிட தமிழ்ச்சாதிகளில் இருப்பதைப் போலவே பெண்களுக்கு இஸ்லாத்திலும் இடம் இல்லை. ஆனால் நம்முடைய அலிமா கபுறு குழிகளையே கேள்வி கேட்கிறாள். இறுகிய மத அடிப்படை வாதத்தின் மீது கேள்வி எழுப்புகிற வல்லமை கொண்ட எழுத்தாளனே ஜாகிர் என்பதற்கான பல சாட்சியங்களை வாசகன் கண்டடைவதற்கான சாத்தியம் கொண்டதாகவே வடக்கே முறி அலிமாவை மதிப்பிடத் தோன்றுகிறது.

மனப்பிறழ்வு குறித்த தர்க்கங்களும், ஏர்வாடி மனப்பிறழ்வாளர்களின் வாழ்விடம் குறித்த காட்சித் சித்திரங்களும் “வதை முகாமிலிருந்து கேட்கும் குரல்” என்ற பகுதியிலும், அலிமாவின் பேட்டியிலும் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் கோபி கிருஷ்ணன் “உள்ளேயிருந்து சில குரல்கள்” - எனும் மனப்பிறழ்வின் துயரத்தை நுட்பமாகவும், ஆழமாகவும் பதிவு செய்த எழுத்துப் பிரதியாகும். அலிமாவிற்குள்ளும் ஆழமும், அழுத்தமுமாக தர்க்கித்து மனப்பிறழ்வு களின் நுட்பங்கள் பதிவு பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக செய்யதலி பாத்திமா எனும் அக்கம்மாவிற்கு அலிமா எழுதும் கடிதம் கவித்துவ உச்சமாகும்.

சாதாரணர்களின் உலகில் அசாதாரணமானவளான அலிமா மனப்பிறழ்விற்கு உள்ளானவளாகத்தான் தென்படுவாள். எழுத்தாளச் சித்தப்பன் எழுதியபடியே நகர்கிறது. அலிமாவின் வாழ்க்கை என்கிற புனைவு வசீகரமான சோகமாக வாசக மனதினில் படிகிறது. எல்லாம் முடிந்தபிறகும் கூட கபூருடன் பட்டாம் பூச்சிகளை கபர்ஸ்தானில் துரத்தியலைகிற அலிமாவைக் கலைக்கிற பள்ளி வாசலின் வாங்குச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

Saturday, March 10, 2012

ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் நடத்திய பாராட்டு விழாவின் சில காட்சிகள்

கடந்த இரண்டு மாதங்களில் முன்னர் ஒரு நாள் என் நண்பர் தஞ்சை இனியன் என்னை போனில் தொடர்பு கொண்டு ‘‘தஞ்சையில் நடக்கவுள்ள 3வது புத்தக கண்காட்சி நாள் ஒன்றில் உங்களுக்கு பாராட்டு விழா. ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் ஏற்பாடு’’ என்று சொன்னார். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்ததைப் போல ‘நான் என்ன எழுதுகிறேன் என்றே என் தஞ்சை நண்பர்களுக்குத் தெரியாது.’ இது தான் உண்மையும்கூட. மேலும் தஞ்சையின் இளம் வணிகர்கள் குழுமியுள்ள ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூருக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கின்ற இரா. செழியன் உள்ளிட்ட நண்பர்களை எனக்கு நீண்ட நாள் பரிச்சயம் உண்டு அவ்வளவுதான். மேலும் வசிக்கின்ற ஊரில் பாராட்டு விழா என்றால் கொஞ்சம் அசூயை தான்.


ஆனால் இனியனோ விடாப்பிடியாக இருந்து விழாவை நடத்திவிட்டார். முக்கியமாக என்னைக் குறித்து (என் படைப்புகளை குறித்துதான்) பேச வேண்டியவர்களை தேர்ந்துக் கொள்ள எனக்கு சுதந்திரமும் வழங்கினார்.
விழாவன்று மாலை பெசன்ட் இல்லத்தில் பெரிய பேனர் எல்லாம் வைத்திருந்தனர். பெசன்ட் இல்லம் எங்களுக்கு தாய் வீடுமாதிரி. இன்றளவும் தஞ்சையில் நடக்கக்கூடிய இலக்கிய விழாக்களுக்கு குறைந்த கட்டணத்துடன் இடமளிக்கக்கூடிய அரங்கம் அது.

என்னுடைய முதல் புத்தக வெளியீட்டு விழாவும் இங்கே தான் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது. தஞ்சை புத்தக காட்சியில் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனாலும் புத்தகங்கள் விற்றன. பாரதி புத்தகாலயத்தில் எனது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கணிசமான அளவு பிரதிகள் விற்றிருந்தன.

விழா அன்று மாலை ‘ஆதாமின்ட மகன் அபு’ மலையாள திரைப்படத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட கிளை சார்பாக களம் திரைப்பட இயக்கம் திரையிட்டது. பார்வையாளர்கள் பொறுமையாக இருந்து அந்தப் படத்தைப் பார்த்தனர்.



ரோட்டரி களம் சார்பாக எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கி பொன்னாடை போர்த்தப்பட்டது. பல மேடைகள் பார்த்திருந்தாலும் அன்றைக்கு ஏனோ சற்று கூச்சமாகவே உணர்ந்தேன்.
என்னைப் பாராட்டிப் பேச தமுஎகச மாநில தலைவரும், தமிழின் மிக முக்கியமான சிறுகதையாளரும், எனது அண்ணனுமான ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்திருந்தார்கள். முன்னாள் அமைச்சர் இலக்கிய காவலர் சி.நா.மீ உபயதுல்லா, மகாராஜா ரெடிமேட் ஆசிப் அலி, யோகம் ரியல் எஸ்டேட் இரா. செழியன், என்.எஸ்.பி. விஜயகுமார், இலக்கிய நண்பர்கள் என் துணைவி, குழந்தைகள் உறவினர்கள் கீரனூரில் இருந்து என் பாலிய சினேகிதன் கூடலிங்கம் மற்றும் குடும்பத்தினர் செ.இராசன் (களப்பிரன்) பிம்பம் சாகுல், தமுஎகச தோழர்கள் புலியூர் முருகேசன் கவிஞர் நா. விச்வநாதன், முத்தமிழ் விரும்பி மணிச்சுடர் குப்பு வீரமணி, தஞ்சை அனார்கலி, இறை தாசன் என்று வந்திருந்தவர்களால் அரங்கம் நிரம்பியிருந்தது.


தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளரும், விமர்சகருமான கோவை எஸ். பாலச்சந்திரன், எழுத்தாளர் எஸ். அர்ஷியா, ஆகியோர் வந்திருந்து தங்களுடைய மிகச் சிறந்த உரைகளை பதிவு செய்தனர்.
என்னுடைய குருநாதர் தஞ்சை ப்ரகாஷ் அவர்களின் துணைவியார் மங்கையர்கரசி அவர்கள் வந்து எனக்கு பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தியது மனநெகிழ்வை தந்தது. அண்ணன் ச.த. தனது உரையில் மதச்சார்பற்ற தன்மையில் நின்று என் படைப்புக் குரல் ஒலிப்பதையும் மீன் குகை வாசுகி நாவலில் பெண் கதா பாத்திரங்கள் பிரதானமாக எழுந்து நிற்பதையும் குறிப்பிட்டார். அர்ஷியா எனது எல்லா நாவல்களையும் தொட்டு அதிலுள்ள சிறப்பம்சங்களை பேசினார். பாலச்சந்திரன் தனது உரையில் உலக எழுத்தாளர்கள் பலரையும் மேற்கோள் காட்டினார். அவருடைய பரந்த வாசிப்பு வழியே என் எழுத்துக்களின் முக்கிய கூறுகளை பார்வையாளர்களுக்கு எடுத்து விளம்பினார். இம்மூவருமே என்னுடைய எல்லா எழுத்துக்களையும் வாசித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் வழங்கிய விருதுக்கு பெயர் ‘சாதனை இளைஞர்.’ ஐந்து நாவல்களும் ஐம்பதுக்கும் அதிகமான சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளதை சாதனை என்று வியக்கின்ற நேரத்தில் ‘உறங்குவதற்கு முன் நான் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது’ என்கிற புகழ் பெற்ற வாசகம்ஒரு கணம் என் மனதில் வந்து போனது.


Monday, January 9, 2012

சித்தி ஜூனைதா பேகம் (1917-1998)

இன்னுமொரு ஐந்தாண்டுகளில் சித்தி ஜுனைதா பேகம் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் நூற்றாண்டு தொடங்குகிறது என்று நான் இப்போது சொல்லுவேனேயானால் நூற்றாண்டு விழாக்களைத் தாராளமாகச் சளைக்காமல் வெகு விமர்சையுடன் கொண்டாடிப் பழக்கப்பட்ட நம் தமிழ்ச்சமூகம் என்மேல் வியப்பானதொரு பார்வையை வீசக்கூடும். அவ்வை, ஆண்டாள் தொடங்கி இன்றைக்குப் பெரும் வீச்சுடன் உடலரசியலை எழுதிச் செல்லும் பெண் படைப்பாளிகள் வரை ஒரு பிரும்மாண்டமான பட்டியலொன்று கண்முன் விரிந்திருப்பினும், பெண் எழுதுவது ஏனோ நம்மவர்க்கு வியப்பளிக்கக் கூடிய சங்கதியாகவே இருக்கிறது.

காலகாலமாகப் பெண்களை அகப்பையும் கையுமாக அடுக்களைக்குள் அடக்கி வைத்த ஆணாதிக்க மனோபாவத்தையுமே கூட நான் மேலே குறிப்பிட்ட வியப்புக்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். என்னதான் கலை இலக்கியமும், பெண் விடுதலையும் பேசிக் களித்தாலும் பெண்ணை நாம் ஒரு எல்லைக்கோடு வரைக்கும்தான் அனுமதிக்கின்ற மன விசாலத்தைப் பெற்றிருக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்களை வேசைத்தனம் செய்பவர்கள் என்று நாக்கூசாமல் சொல்வதற்கு நம்முடைய ஆன்மீகவாதிகளை அனுமதித்திருக்கிறோம். கற்பு உள்ளிட்ட கலாச்சாரப் பண்பாட்டு வெளியில் பெண் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இஸ்லாம் மதம் ஒருபடி மேலேபோய் கோஷா, பர்தா, தலாக் என்று விதம் விதமாய்ப் பெண்களை முடக்கி வைப்பதில் நியாயம் கற்பிக்கிறது. சமுதாயக் காவலர்கள் இல்லையென்று மறுப்பர். இஸ்லாம் சமூகப் பெண்கள் வாழையடி வாழையாய் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாகவே மாறிப்போய் மனம் மெய் மொழியால் தம்மை அடங்கிச் செல்பவர்களாகவும், அடிபணிந் தவர்களாகவுமே உணர்ந்திருக் கின்றனர்.
இந்த வாழ்வு அந்தச் சமூகப் பெண்களுக்கான முழுமையான வாழ்வாகாது என்பதை ஒரு சிலர் உணர்ந்திருக்கக்கூடும், ஆனால் மௌனம் தான் இப்போதைக்கு எதிர்வினை. இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்படுவதிலிருந்து இந்தத் திட்டமிட்ட வன்முறையானது தொடங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு வாழ்க்கையை எதிர்கொள்வதில் எத்தனை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எழுத மனம் கூசுகின்றது.

எல்லோரும் குறிப்பிடுவதுபோல ஒரு மூடுண்ட சமூகமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அம்மக்கள் ஒருவித மறைமுகமான பெருமிதம் கொண்டிருக்கின்றனரோ என்னும் சந்தேகமும் கூடவே எழுகிறது.
அத்தி பூத்தாற்போலவே அங்கிருந்து பெண்கள் எழுத வருகின்றனர். அவர்களும் மதம் வலியுறுத்துகின்ற அறக்கோட்பாடுகளுக்கு உட்பட்ட பேனாக்களோடும், மனநிலையுடனுமே வருகின்றனர். இவை அறிவுத்தளத்தில் என்ன விளைச்சலைத் தந்துவிடப் போகிறது? தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகத் தோப்பில் முஹம்மது மீரான் தொடங்கி குறைந்தது ஐந்தாறு ஆளுமைகளை உடனடியாக நம்மால் அடையாளங் காட்ட முடியும். ஆனால் நானறிந்தவரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன்வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு?

இது குறித்து விவாதிக்காமல் பெண்ணெழுத்தின் அடர்த்தி குறித்து சிலாகிப்பதில் பொருளில்லை என்றே கருதுகிறேன். தலித் சமூகம் சார்ந்து எழுத வல்ல பெண் பிரதிநிதிகள் உள்ளனர். பெண்களுக்கான சகல பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்ப இன்றைக்கு அவரவர் தரப்பில் பிரதிநிதித்துவங்களுக்குக் குறைவில்லாத நிலையில், பெண்கள் அறிவு சார்ந்த தளத்தில் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் விதிக்கின்ற ஓரிடத்திலிருந்து போதுமான அளவு பதிவுகள் இல்லாமல் பெண் எழுத்து எவ்வாறு பூரணத்துவம் பெறும்? இஸ்லாம் சமூகத்துப் பெண்களை எழுதவிடாமல் தடுக்கின்ற கரங்கள் எவை? இதற்கு மாற்றாக நாம் என்ன எதிர்வினை நிகழ்த்தப் போகிறோம் என்கிற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக உங்களிடம் முன்வைக்கிறேன்.

பெண் எழுதுவதா என்று பிற்போக்குத் தனத்துடன் கேள்வி எழும்பத் தோதான இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், ஒரு தமிழ் முஸ்லிம் பெண் துணிச்சலாக எழுத வந்தது ஆச்சரியகரமானது. சித்தி ஜுனைதா பேகம் 1917ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகூரில் பிறந்தவர். தந்தை ஷரீப் பெய்க் ஒரு பன்மொழி அறிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும் அறியப்பட்டவர்.

நாகூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த அறிஞர் சி.என். அண்ணாதுரையின் முன்னிலையில் தைப்பொங் கலைக் குறித்து கவிதை மொழியில் பேசி அவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். மற்றொரு சகோதரரான முஜீன் பெய்க் ஒரு பத்திரிகை ஆசிரியர். காரைக்காலிலிருந்து ‘பால்யன்’ என்றொரு இதழைப் பதிப்பித்து பல்லாண்டுகள் நடத்தியிருக்கிறார். இவ்வாறு ஒரு இலக்கியப் பின்புலத்துடன் சித்தி ஜுனைதா பேகம் இயங்கி வந்ததையும், முனவ்வர் பெய்க் அவர் எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் என்பதையும் கவிஞர் நாகூர் ரூமியின் மூலமாக நாம் அறிகிறோம். ரூமிக்கு ஜுனைதா பேகம் உறவு முறையில் பெரியம்மா. ஆச்சிமா என்று அவரை ரூமி அன்புடன் விளிக்கிறார்.
‘கன்னித் தமிழுக்கு இனிமை சேர்த்த
கவிஞர்களைத் தந்த நாகூராம்....’

என்கிற வரிகளுள்ள காயல்பட்டினம் ஷேக்முகம்மது பாடிய இனிமையான பாடலைக் கேட்டிருக்கிறேன். நாகூருக்கு அப்படிப்பட்ட தனிச் சிறப்பு உண்டு. இஸ்லாம் சமூகத்தின் எண்ணற்ற புலவர்களையும் அறிஞர்களையும் வளர்த்தெடுத்த பூமி அது. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள சாகுல்ஹமீது வலியுல்லா நபிமுகம்மதுவின் வம்சாவழியைச் சேர்ந்தவர், மெய்ஞானச் சிறப்புள்ளவர் என்பது யாவரும் அறிந்த செய்தி. சாகுல்ஹமீது ஆண்டகையின் பிறந்தநாளை முன்னிட்டு நாகூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பிற சமயத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் மற்றொரு எழுத்தாளரான ஆபிதீன் நாகூரைச் சேர்ந்தவர். தமிழில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பூர்வீகமும் நாகூர்தான். இவற்றைச் சித்தி ஜுனைதாவின் பிறப்பிடம் குறித்த கூடுதல் தகவல்களாகக் கொள்ளலாம்.

ஜுனைதா பேகத்தின் கல்வி குறித்து நாம் அவதானிக்கையில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்ள வேண்டியுள்ளது. மற்றெல்லா இஸ்லாமியப் பெண்களையும் போலவே ஜுனைதாவும் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்புவரை ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு கிடைத்தால் போதுமானது என்று சமூகம் தீர்மானித்திருக்கிறது. எட்டு வயதுக்குமேல் ஒரு பெண் கல்விச்சாலைக்குச் செல்வது தடுக்கப்பட்டதற்கான பின்னணியை நாம் உளவியல் ரீதியாக அணுகினால், பெண்ணின் ஒழுக்கம் சார்ந்து பெற்றோர் கொள்ளும் அச்சமும், திருமணம் முடிந்து கணவனைப் பராமரிக்கப் போகின்ற பெண்ணுக்குக் கல்வி அவசியமில்லை என்கிற பிற்போக்கு எண்ணமுமே காரணமாக இருக்கமுடியும். இத்தனைக்கும் ஜுனைதாவின் தகப்பனார் கல்வியின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்தவர்.

மூன்றாம் வகுப்பு என்னும் ஆகக்குறைந்த கல்வித் தகுதியுடன் மட்டுமே 1930களில் ஒரு முஸ்லீம் பெண் புதினங்களும் கட்டுரைகளும் எழுதி, குறிப்பிடத்தக்க ஆளுமையாக உருவெடுத்ததற்குப் ‘பரம்பரை வித்து’ தான் காரணம். காலகாலமாகத் தொடர்ந்து ஊறிக் கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆன்மீக வித்து அது என்கிறார் நாகூர் ரூமி. மேலும் பாவினங்களில் வண்ணம் அதிகமாகப் பாடிக் குவித்த வண்ணக்களஞ்சியப் புலவரின் பரம்பரை என்று தன்னை ஜுனைதா பேகம் கருதியதும் காரணமாக இருக்கலாம்.

வாழ்ந்த காலத்தில் சமூகத்தால் புதுமைப் பெண்ணாகக் கருதப்பட்ட அவருக்குப் பால்ய விவாகம்தான் வாய்த்திருக்கிறது. பன்னிரண்டு வயதில் பகீர்மாலிமார் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் பகீர் அவர் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரியான கணவரல்ல என்று தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியதாகவே அறிகிறோம். பன்னிரண்டு வயதில் திருமணம் நடைபெற்று, நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, பதினாறு வயதில் விதவைப் பட்டம் சுமந்த வாழ்வு சித்தி ஜுனைதா பேகத்தினுடையது.

இன்றைக்குப் பெண்ணின் திருமண வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 வயதை அடையும்போதுதான் ஒரு பெண் மன, உடல்ரீதியான வளர்ச்சியும் கர்ப்பத்தைத் தாங்குகின்ற சக்தியும் பெறுகிறாள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 1930களில் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின்னும் இஸ்லாமியப் பெண்ணின் திருமண வயது 18க்கும் கீழேயே இருக்கிறது. அவள் பூப்பெய்திய நாளிலிருந்தே மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கி, பதினாறே வயதிற்குள் முதல் குழந்தையைப் பெற்று முப்பது வயதுக்குள் பாட்டியாகி முதுமையை இளமையில் வரவேற்கும் அவலம் சபிக்கப்பட்டிருக்கிறது. அவளுடைய அறைக்குள் வெளிக்காற்று நுழைவதற்கான சாத்தியதைகளே இல்லை. உள்ளேறும் பத்திரிகைகள் எல்லாமும் இஸ்லாமிய அறநெறிக் கோட்பாடுகளை வலியுறுத்துவனவே. சிறுபத்திரிகைகள், நவீன இலக்கியம், மாற்றுசினிமா இத்யாதிகளை அவளறியாள்.

முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் சித்தி ஜுனைதா பேகம் தன் பிள்ளைகள் உயர்கல்வி (11ஆவது வகுப்பு வரை) பெறுவதற்காக நாகூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்கிறார். தனக்குக் கிடைக்காத கல்வியை, தன் பெண் பிள்ளைகள் பெற வேண்டுமென அவர் தீர்மானித்ததை முஸ்லீம் சமூகம் பின்பற்றியிருப்பின், மூடுண்ட சமூகம் என்னும் விமர்சனத்தை எளிதாகத் தவிர்த்திருக்க முடியும்.

சித்தி ஜுனைதா பேகம் தனது கணவர் இறந்த பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கியிருக்கிறார். கணவனில்லாத வேதனையையும், தனிமையையும் அவர் தனது எழுத்தால் நிராகரித்தார் அல்லது கடந்து சென்றார் என்றும் கொள்ளலாம். பதினாறு வயதில் ஒருத்தி கைம்பெண்ணானது நினைத்துப் பார்க்கவும் கொடுமையான விஷயம். இதை சித்தி அடைந்திருக்கிறார். ஆனால் விதவையென வீட்டினொரு மூலைக்குள் முடங்காது துணிச்சலாக எழுத்துலகில் பிரவேசித்ததுதான் அவரை அக்காலப் பெண்களில் தனித்து மாறுபடுத்திக் காட்டுகிறது.

ஜுனைதா பேகத்திற்கு அந்தக் காலத்திலேயே டைரி எழுதுகின்ற பழக்கம் இருந்திருக்கிறது. இன்றைக்கு யோசித்தாலும் எத்தனை இஸ்லாமியப் பெண்கள் டைரி எழுதும் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிட முடியும். டைரியில் தனது மனதைத் தினந்தோறும் பதிவு செய்பவர்கள் இந்தச் சமூகத்துடன் ஏதோ ஒரு விதத்தில் மனந்திறந்து உரையாடத் தயாராக இருக்கிறார்கள் என்பது உளவியல் பகுப்பாய்வு. ஜுனைதா, தான் சமூகத்துடன் பேச விரும்பியதை டைரிக் குறிப்புகளாகவும் கட்டுரை, புதினங்களாகவும் எழுதி வைத்தார். அவர் எழுதத் தொடங்கியதும் எடுத்த எடுப்பில் நாவலுக்குத் தாவிவிட்டதும் ஒரு பேராச்சரியந்தான்.

இலக்கிய வடிவங்களில் நாவல் மிக முக்கியமானது. கவிதைகளும், கதைகளும் தராத வாழ்க்கையின் பக்கங்களை நாவல் தந்து நிற்கிறது. மையக் கதையும் அதன் விரிவும், அங்கிருந்து பிரிகின்ற கிளைக் கதைகளும் குவியலான கதாமாந்தர்களும், தத்துவ தரிசனமும் ஒற்றைத் தன்மையற்ற பன்முகத்தின் பிரதிபலிப்பும் நாவலை சாதாரணத் தன்மையிலிருந்து அசாதாரணத்திற்கு நகர்த்துகிறது. பேரனுபவத்தைத் தருகிற பேரிலக்கிய வடிவம் நாவல். ஆனால் ஜுனைதா பேகம் நாவல் வடிவத்தைக் கையாண்டிருக்கிற விதத்தில் நமக்குச் சில மாற்று அபிப்பிராயங்கள் இருக்கிறது. எனினும் விவாதிக்கும் அளவு அதில் பிரச்சனைகள் இல்லை. 1930களில் தமிழில் நாவல் வடிவம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை தான். அதே கால கட்டத்தில் ஆங்கில மொழிப் பரிச்சயமுள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களில் சிலர் ஒன்றுகூடி, ஆங்கில இலக்கியங்களைத் தீவிர வாசிப்பிற்குள்ளாக்கி தமிழ்ச் சிறுகதையில் வடிவப் பரீட்சார்த்தம் செய்து பார்க்கின்றனர். குறிப்பாகப் பி.எஸ்.இராமைய்யா பொறுப்பேற்று நடத்திய மணிக்கொடி இதழில் இது நிகழ்கிறது. மணிக்கொடியின் சிறுகதையாளர்கள் எவரும் நாவல் எழுதுவதில் அப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, வெளியுலகத் தொடர்புகளற்று வீட்டிலிருந்தவாறே ஆர்வ மேலீட்டால் எழுதத் தொடங்கிய ஜுனைதா பேகம் இந்த அளவிற்கு இயங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘‘நான் என் எழுத்துலக நுழைவிற்கு
எனக்கு முன் மாதிரியாக
யாரையும் பின்பற்றவில்லை. எனது
சிறுகதை, நவீனம்
எல்லாம் இயல்பாக எனக்கமைந்த சொந்த
நடை என்றே
நினைக்கிறேன். நான் முதன் முதலில் எழுதிய நெடுங்கதை காதலா? கடமையா?
என்பது. இந்த நவீனத்தை நான்
எழுத எந்தக் காரணமும் எனக்கில்லை. நான் எழுத வேண்டும் என்ற எனது சொந்த அவாதான்’’
என்பதாக 1999இல் வெளிவந்த ‘முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்கு’ அவரளித்த நேர்காணலில் குறிப்பிடுவதிலிருந்து அவர் தன் எழுத்துக்கு எவரையும் ஆதர்சமாகக் கொள்ளவில்லை என்பதும் புலனாகிறது.
சித்தி ஜுனைதா பேகம் தான் எழுதிய நாவலை நெடுங்கதை என்றே குறிப்பிடுகிறார். ஆயினும் தமிழில் நாவல் எழுதிய முதல் முஸ்லீம் பெண் என்னும் சிறப்பு அவரை இயல்பாகவே வந்தடைகிறது. மட்டுமல்ல; நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண்கள் இருவரில் ஒருவராக அவர் இருக்கக்கூடும். மற்றொருவர் ‘தாஸிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவலை எழுதிய மூவலூர் இராமாமிருதம் அம்மாள்.
‘‘பெரியோர் தம் உயர்ந்த நூல்கள்
சிலவற்றை யான் படித்தபொழுது உரைநடையில்
ஒரு சிறு புதுக்கதை எழுத வேண்டும் என்னும்
விருப்பம் என்னை வெகுநாளாகத் தூண்டியது. யான் பத்திரிகைகட்குக் கட்டுரைகள் அடிக்கடி வரைந்து அனுப்பியதைக் கண்ட
என் பெற்றோர், உறவினர், என் சினேகிதிகள் அனைவருமே அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று பெரிதும் விரும்பினர். அன்னார்தம் விருப்பத்தையும் எமது விழைவையும் நிறைவேற்றுவான் வேண்டி இச்சிறு புத்தகத்தை வெளியிடுகிறேன்’’ என்று ஜுனைதா எழுதுவதிலிருந்தும், மேலும் ‘‘நச்சுடை நாகங்கள் சிலவற்றைத் தன் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர்தம் தூற்றுதலுக்கு அஞ்சிப் பத்திரிகைகளுக்குப் பெயர்போடாது கட்டுரைகள் அனுப்புமாறு என்னைத் தூண்டியவரும்...’’ என்று எழுதும் போதும் அவர் எழுத நேர்ந்த பின்னணியும் எழுதியதால் ஊரார் வெளிப்படுத்திய எதிர்ப்பும், அது போன்ற எதிர்ப்புகளைத் தொடர்ந்து பெயர் போடாது எழுதி வந்ததும் தெரியவருகிறது.

‘‘நாவல் வெளிவந்த பிறகு கூட்டம் கூட்டமாக வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் தெருப் பள்ளித் தெரு வீட்டுக்கு வந்து ஆச்சிமாவைப் பார்க்க வந்தார்களாம். சும்மா அல்ல; ஒரு கெட்டுப் போன நல்ல குடும்பத்துப் பெண்ணை விசாரிக்க வருவது போல’’

இந்தத் தகவலை என்னிடம் ஆச்சிமாவே நேரடிப் பேச்சில் இதே வார்த்தைகளில் சொன்னது. அம்மாவும் இதை உறுதிப்படுத்தினார்கள். ஒரு முஸ்லிம் பெண்! நாவல் எழுதுவதா? அதுவும் ‘காதல்’ என்ற சொல்லுடன்! எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?’’ என்று நாகூர் ரூமி விவரிப்பதிலிருந்து ஜுனைதா பேகம் தன் எழுத்துக்காக எதிர்கொண்ட இன்னல்களை மேலும் அவதானிக்கலாம்.
‘‘இந்த எனது சிறு நவீனத்திற்கு ‘தாருல் இஸ்லாம்Õ ஆசிரியரும், நபிகள் நாயக மாண்பினை எழுதிய பெரியாருமான பா. தாவுத்ஷா சாகிபு அவர்களிடம் ஒரு மதிப்புரை கேட்டோம். ‘இது ஒரு பெரிய திறமையா? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா?’ என்று ஏளனமாகப் பேசியதாக என் சகோதரர் உசேன் முனவ்வர் பே சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் மகாமகோபாத்யாய தக்ஷிணாய கலாநிதி டாக்டர் உ..வே. சாமிநாதையர் அவர்கள் என்னை ஏத்திப் போற்றி ஒரு மதிப்புரை வழங்கினார்கள்’’.

தனது சமூகத்தைச் சார்ந்த அறிவுலக வாதிகளாலேயே அவர் புறக்கணிப்பிற்கும் ஏளனத்துக்கும் உள்ளானதை மேற்கண்ட நிகழ்விலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எந்த இதழாசிரியரால் மதிப்புரை தராமல் மறுக்கப்பட்டாரோ அதே தாருல் இஸ்லாம் இதழில் 1995இல் ‘முஸ்லிம் பெண்களும் விவாக விலக்கும்‘ என்றொரு கட்டுரையை சித்தி ஜுனைதா பேகம் எழுதியுள்ளார். இதன் மூலமாகக் காலமாறுதலையும் படைப்பாளியின் போராட்டக் குணத்தையும் வெகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

‘‘சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய காதலா? கடமையா? என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது....’’

இது டாக்டர் உ.வே.சா. 1938இல் சித்தி ஜுனைதா பேகத்தின் நாவலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. ஊர் ஊராகச் சுற்றியலைந்து, ஓலைச்சுவடிகளைச் சேகரித்து எண்ணற்ற தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த உ.வே.சா.வின் முன்னுரையைப் பெற்றதும் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டதும் ஜுனைதா பேகத்தின் எழுத்து வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். மட்டுமல்ல; தமிழ்ச்சிறுகதையின் ஒரு குறியீடாக மாறிவிட்ட புதுமைப்பித்தன் ‘‘முஸ்லீம் பெண்டிர் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம்’’ என்று ஜுனைதா பேகத்தின் நாவல் குறித்து அபிப்ராயம் தெரிவித்திருப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

என் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் படிப்பதும்தான் என்று குறிப்பிடும் ஜுனைதா பேகத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் வளமான பயிற்சி இருந்திருக்கிறது. திருக்குறள், நாலடியார் நளவெண்பா, மணிமேகலை, சிலப்பதிகாரம், மாணிக்கவாசகர், திருமூலர், பாரதி பாடல்கள் வரை அவர் ஊன்றிக் கற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் உள்ளன. இதுவரைக்குமான இஸ்லாமியப் பெண்கள் எவருக்கும் இம்மாதிரியான சுதந்திரம் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரைக்கும் இலக்கிய நூல்கள் யாவும் தீண்டத்தகாத பிரதிகளே. “இடமும் இருப்பும் ஒரு மனிதனின் குணாம்சத்தைத் தீர்மானிக்கின்றது’’ என்று முன்பு எங்கோ ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பேன். சித்தி ஜுனைதா பேகத்தின் சூழல் அவருக்குப் பலவிதங்களில் துணை புரிந்திருக்கிறது. பிறந்து வளர்ந்த ஊரும், பெற்றோரும், வாசிப்பிற்கான சுதந்திரமும் ஜுனைதாவைப் படைப்பாளியாக மலர்த்தியிருக்கிறது. இது அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்துவிடாது.

‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா? கடமையா? நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.

‘சித்தி ஜுனைதா பேகம் _ பன்னூலாசிரியை’ என்று தனது வீட்டின் முகப்பில் பெயர்ப்பலகை மாட்டி வைத்துக்கொண்டு இயங்கியிருப்பவரை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியங்கொள்ள முடிகிறது. கருத்துக்களை முன்வைப்பதில் அவருக்கு எவ்வித மனத்தடையும் இருந்ததாகத் தெரியவில்லை. 1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கிவிட்ட காலகட்டத்தில் சித்தி தாம் எழுதிய காதலா? கடமையா? நாவலில், “தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய் நாட்டை மீட்பதற்காக உடல் பொருள் ஆவியைத் தத்தஞ் செய்து பெரியாரைப் பின்பற்றுவேன்’’ என்று எழுதியிருப்பது இவரது தமிழினப் பற்றைக் காட்டுகிறது _ என்று கம்பம் சாகுல் அமீது என்பார் ‘இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்கிற தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு மத அடிப்படைவாதிகளால் புறக்கணிக்கப்படும் தர்கா நேர்ச்சைகளைப் பற்றிச் சித்தி ஜுனைதா பேகம் ‘‘நாகூர் கந்தூரி இதோ கதவைத் தட்டுகிறது பக்தி, நம்பிக்கை, வேடிக்கை இது மாதிரி பல்வேறு காரணங்களுக்காக நாகூரைத் தேடிக் கூட்டங் கூட்டமாக மக்கள் இதோ வரமுயன்று கொண்டிருக்கின்றார்கள். ஊரே கோலாகலமாகத் திருவிழாக் கோலம் பூணுகின்றது.’’ என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். மற்றொரு இடத்தில் ‘‘இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப்பட்டிருப்பினும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக் கடைந்திருக்கவும், மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதிவிடுதலே அறிவையளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ?’’ என்று கேட்கிறார். அவர் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ள புரட்சிகரக் கருத்துகளில் சிலவற்றையேனும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ள கட்டாயம் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.

பெண்கள் தமக்குப் பிடித்தவரையே மணஞ் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது. ஒத்த நலனும், ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடுமாடுகளைப் பிணைப்பதைப் போல் பிணைத்து விடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது.

இஸ்லாமியப் பெண் தன் கணவனின் பெயரோடு தன்னை இணைத்துக் கொள்ளத் தேவையில்லை. ஜபீரா, ஷேக் பரீதை மணந்து கொண்டால் ஜபீராதான். அவள் மிஸஸ். ஷேக் பரீதாக மாறிவிடுவதில்லை. ஒரு முஸ்லிம் பெண் தன்னில் தானே ஒளி வீசுகின்றாள். அவள் பெயருக்கு அவளே உரிமை பெற்றவள்.
- இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிக்கின்றது எனக் கூறி உலகை ஏமாற்றப் புகுவது அறியாமை. ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வதே அறம். பல பெண்களை ஒருவன் மணக்கலாம் என்னும் கட்டுக்கள் நீக்கப்படல் நியாயம்.
- இஸ்லாமியப் பெண்கள் பொம்மைகளல்ல.

- பெண்கள் சினிமா பார்த்தால் ஆகுமா என்றால் ஆகும் என்றுதான் நான் கூறுவேன். ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமன்று. ஆணுக்கு ஆகும் என்றால் பெண்ணுக்கு ஆகும் என்பதுதான் என் கருத்து.
தமிழகத்து முஸ்லீம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியே போல, எழுதியும் பேசியும் வாழ்ந்தும் காட்டிய சித்தி ஜுனைதா பேகம் தனது 82ஆவது வயதில் 19.3.1998 அன்று மரணமடைந்தார். மரிப்பதற்கு முன்பு வரை அவர் எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருந்தார் என்றறிகிறோம். இலக்கியப் பணியில் அவர் ஒருபோதும் சலிப்புற்றதில்லை என்றே
அவரைக் குறித்து எழுதியுள்ள பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

பெண் கல்வி, பெண் விடுதலை என்றெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தில், இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த சித்தி ஜுனைதா பேகம் ஒரு எதிர்க்குரலாக வரலாற்றில் பதிவாகியுள்ளார். ஆனால் அவரைக் குறித்த இலக்கியப் பதிவுகள் சொற்பமே. நாகூர் ரூமியின் முயற்சியில் காதலா? கடமையா? நூல் வெளிவந்தது ஒரு முக்கியப்பணி. எனினும் சித்தி ஜுனைதாவின் பிற எழுத்துக்கள் பதிவாகியதாகத் தெரியவில்லை. அதற்கான அவசியமும் தேவையும் உள்ளது என்றே நம்புகிறோம்.

நானறிந்தவரை அ. வெண்ணிலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆபிதீனின் வலைப்பதிவில் ஜுனைதா இடம் பெற்றிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் இனியேனும் அவரைக் குறித்த உரையாடல்களைத் துவக்கலாம். மேதைமைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றிவிடுவதில்லை. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் தீவிர இலக்கியத்திற்கு வர வேண்டும். இலக்கியத்துள் அவர்கள் பிரவேசிக்கையில் அவர்களைச் சுற்றியுள்ள எல்லாத் தடைகளும் நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை என்னுள் எப்போதும் நீடிக்கிறது. சித்தி ஜுனைதா பேகம் இஸ்லாமியப் பெண்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய ஆளுமை என்று மீண்டுமொருமுறை அழுத்தம் கொடுக்கிறேன்.

சித்தி ஜுனைதா பேகத்தின் பிற படைப்புகள்
1. செண்பகவல்லி தேவி (அ) தென்னாடு போந்த அப்பாஸிய குலத் தோன்றல் _வரலாற்று நாவல்.
2. மகிழம்பூ _ நாவல்
3. இஸ்லாமும் பெண்களும் _ கட்டுரைத் தொகுப்பு
4. மலை நாட்டு மன்னன் __ தொடர்கதை.
5. ஹலிமா (அ) கற்பின் மாண்பு
6. பெண் உள்ளம்
7. திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு
8. காஜா ஹஸன் பசரீ: முஸ்லீம் பெருமக்கள் வரலாறு
துணைநூற்பட்டியல்
காதலா? கடமையா?, ஸ்நேகா, 2003



உதயசங்கர்: ரயில்நிலையக் கலைஞன்



உதயசங்கரின் எழுத்துக்கள் என்னுள் இறங்கிப் பல வருஷங்கள் கழித்துதான் அவரை நேரில் நான் சந்தித்தது. எப்போதும்போல பெரிய கோவில் புல்வெளியில்தான் அவருடைய பெயரை முதலில் கேட்டறிந்ததும். நண்பர்களிடையே சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்த பேச்சு எழும்போது குறிப்பாகக் கரிசல் எழுத்துக்களைப் பற்றிய சம்பாஷனைகளில் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, பா.செயப்பிரகாசம், பூமணி,
ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி ஆகிய பெயர்களுடன் தவறாமல் இடம் பெறும் பெயராக உதயசங்கருமிருந்தது.
கோவில்பட்டி குறிப்பிடத்தக்க இலக்கிய மையமாக விளங்கியது, அப்போது நானறியாத செய்தி. தஞ்சாவூர்தான், தமிழுக்குப் பெரிய இலக்கிய பிதாமகர்களைத் தந்திருப்பதாக ஒரு பிரம்மை இருந்தது. கி.ரா.வையும், தமிழ்ச்செல்வனையும், கோணங்கியின் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்களையும் படித்த பிறகு கரிசல் இலக்கியத்தின் மேல் என் கவனம் திரும்பியது. எப்போதும் வெயில் கொளுத்தியபடி இருக்கும் கந்தக பூமியும், பிழைப்புக்கு தீப்பெட்டி ஆபீஸ்களை நம்பிய பெண்மணிகளும், குழந்தைகளும் வறட்சியும், வறுமையிலும் அன்பை ஒருவருக்கொருவர் நேர்ந்து பரிமாறிக் கொள்ளுகிற அழகும் அடடா... தமிழிலக்கியத்தின் இன்னொரு அசலான பக்கத்தை இதுவரை பார்க்கத் தவறியிருக்கிறோமே என்னும் பதைபதைப்பை என்னுள் ஏற்படுத்திய எழுத்து கரிசல் எழுத்து.
நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி, சுழித்துக் கொண்டோடிய காவிரிக்கரை எழுத்து கூதிர்காலக் காற்றின் சுகானுபவமென்றால், கரிசல் எழுத்துக்கு அதற்கு நேர்மாறான உறைப்பான, சுளீரென்று தவறுக்குத் தண்டனையாய்ப் பெறும் தீச்சூட்டின் தன்மை உண்டு. கரிசல் இலக்கியம் காட்டும் அழகியல் தமிழர்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்தது. அதேபோன்று புதுமைப்பித்தனுக்கு நிகரான ஆளுமையாக
கு.அழகிரிசாமியை என் வாசிப்பனுபவத்தினூடாகக் கண்டதும் சற்றுப் பிறகுதான். வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தரிசனம் தருவதில்லை. தந்தால் மாறுபட்ட ரசனைகளுக்கு வாய்ப்பில்லாமலே போய்விடும். அபூர்வமான அனுபவங்கள் எதுவும் ஆரம்பத்திலேயே நமக்கு வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தால் அபூர்வம் என்று அதற்குப் பெயரில்லை.
உதயசங்கரை ஒரு ரயில் பயணத்தின்போதுதான் முதன் முதலாக சந்தித்தேன். பாரதி புத்தகாலயம் மேலாளர் தோழர் நாகராஜனுடன் நானும் 2010 திருவனந்தபுரம் புத்தகக் காட்சிக்குச் பயணமானபோது வழியில் கோவில்பட்டி சந்திப்பில் ஏறி எங்களுடன் உதயசங்கர் இணைந்து கொண்டார். அன்று முதல் அவர் என் சஹிருதயனாகிவிட்டார் என்றும் கூறலாம். உதயசங்கர் ‘ரயில் மனிதன்’ என்றொரு பிம்பம் என்னுள் இருந்தது. அதற்கான காரணங்களும்தான். ரயில்வேயில் வேலை செய்யும் அவர் தற்போது குமாரபுரம் ஸ்டேஷனில் பணியைத் தொடர்கிறார். மாமேதை கு. அழகிரிசாமியின் கதைக் களம் அது. ‘‘சின்ன ஸ்டேஷன். அங்கே ரயில்கள் நிற்காமல் கடந்து செல்ல, விசேஷமாய் ஏதோ ஒரு ரயில் மட்டும் நிற்கும்’’ குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் குறித்து இப்படி நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உதயசங்கரை நேரில் பார்த்தபிறகு ‘ரயில்வே அதிகாரிகளுக்கான கருப்புக் கோட்டு வெள்ளைச் சீருடையில்’ அவரைக் கற்பனை செய்து பார்த்தாலும் அவ்வளவாகப் பொருந்தவில்லை.
ஒடிசலான தேகமும், வெள்ளந்தியான சிரிப்புமாய் அவரைப் பார்க்கிற எவரும் ஒரு நெருக்கத்தை உணர்வர். கண்ணாடிக்குள்ளிருந்து தெறிக்காமல் அமுங்கிப் புன்னகைக்கும் சிவந்த வெளிச்சமான கண்கள். அந்தரங்கமாய் அவருடன் உரையாடக் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் (பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நடத்திய வரலாறும் புனைவும் - மூன்று நாள் கருத்தரங்கில் நானும் அண்ணன் ச. தமிழ்ச் செல்வன், தோழர்கள் சு.வெங்கடேசன், பிரளயன், மணிமாறனுடன் உதயசங்கருடன் பேசிக் கழித்த சில இரவுகள்) அவருடைய அங்கதம் ததும்புகிற உரையாடல் கேட்டுக் களித்திருக்கிறேன். உண்மையில் மணிமாறனுடனும் உதயசங்கருடனும் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் பழகிய நெருக்கத்தைக் கொஞ்சம் நாட்களில் உணர்ந்தேன். அது என்ன மாயமோ தெரியவில்லை.
இலக்கியத்தில் நான் அகரம் எழுதிப் பழகத் தொடங்கிய காலத்திலிருந்து உதயசங்கர் கதைகள் எழுதி வருகிறார். இலக்கிய உலகம் ஏன் இப்படி ஒரு நல்ல கலைஞனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறது என்று நான் பல இரவுகள் சிந்தித்திருக்கிறேன். முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகத் தீவிரமாய் இயங்கி வந்திருக்கிற இந்த எழுத்தாளனின் வீட்டுக் கதவுகளை விருதுகள் தேடி வந்து தட்டியிருக்க வேண்டாமா? நாம் வாசித்தவரை ஒவ்வொரு கதையிலும் தேர்ந்த கலைப் படைப்பிற்கேயுரிய வடிவமைதியும், மொழியும் இயைந்திருக்கின்றதே? ஒரு முற்போக்கு அமைப்பிலிருந்து செயல்பட்டவாறு பிரச்சாரமும் பேருணர்ச்சியும் தவிர்த்த கதைகளைத்தானே இவர் முன்வைக்கிறார்? பிறகு ஏன் உதயசங்கரைக் கொண்டாடத் தயக்கம்? இப்படியான கேள்விகள் எனக்கு மட்டுமல்ல அவரை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் வந்துதான் தீர வேண்டும். வராவிடில் அவருடைய இலக்கிய நேர்மை குறித்து நான் சந்தேகிப்பேன்.
உதயசங்கர் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். வரிசையில் நிற்கையில் முண்டியடித்துக் கொண்டு முன் செல்லும் வழக்கமில்லாதவர். எங்கும் எதிலும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பவர். இவை இன்றைய பரபரப்பான இலக்கியச் சூழலுக்குப் பொருந்தி வருமா, தெரியவில்லை. ஒரு முறை நான் நவீனத் தமிழ் எழுத்துக்களில் புதுமைப் பித்தனிலிருந்து இன்றைய தலைமுறை வரைக்குமுள்ளவர்கள் எழுதிய காதல் கதைகளைத் தொகுக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ‘‘நான் எழுதிய கதைகள்கூட இருக்கிறது ஜாகிர்’’ என்று அவர் எனக்குச் சொல்லவேயில்லை. நானாகத் தேடி ‘பால்ய சினேகிதி’ கதையைத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவருடைய கதை ஒன்றை நான் என்னுடைய ‘காஃபிர்களின் கதைகள்’ தொகுப்பிலேயே சேர்த்திருக்க வேண்டும். தவறிப்போனது.
அப்படி ஒரு தொகுப்பைச் செய்கிறேன் என்பதும் அவர் முன்பே அறிந்தது தான். இப்படிப்பட்டவர் ஒரு சந்திப்பில் ‘‘என்னுடைய தேர்ந்தெடுத்த கதைகள் சிலவற்றை பாரதி புத்தகாலயத்திற்காக தொகுத்துக் கொடுங்கள் ஜாகிர்’’ என்று கேட்டபோது, லேசான தயக்கத்துடன் சம்மதித்தேன். அந்தத் தயக்கத்துக்கும் அவர் படைப்பின் மீதான என் அபிப்ராயத்துக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அவருடைய படைப்புலகில் மீண்டும் பிரவேசிக்க இதை ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்திக் கொண்டேன். அவருடைய நாற்பத்தெட்டுக் கதைகளிலிருந்து இருபத்திரண்டு கதைகளை என் ரசனை அடிப்படையில் தேர்வு செய்தேன். ‘‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’’ என்கிற பொருத்தமான தலைப்பைத் தீர்மானம் செய்துகொண்டு முன்னுரையாக என்ன எழுதலாம் என யோசித்தபோது தவறியும் அதில் அவருடைய கதைகளைப் பற்றி அதிகம் சொல்லிவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்படி ஒரு முன்னுரை எழுத வாய்த்தது. கதை வரிசையையும் முன் பின்னாக மாற்றிக் கலைத்துப் போட்டு அடுக்கியிருக்கிறேன்.
இந்த 22 கதைகளில் எது ஒன்றையும் வாசகன் புறக்கணித்து விட முடியாது. ‘நான் தேர்ந்தெடுத்தவையாக்கும்’ என்கிற அழுத்தம் தந்து இதைச் சொல்லவில்லை. உதயசங்கர் கதைகளின் இயல்பும் அதுதான். புறக்கணிக்க முடியாத எழுத்து. கரிசல் இலக்கியத்துக்கேயுரிய சில கதைகளுடன் இன்றைக்கு எழுதிவரும் தீவிரமான படைப்பாளிகளைக் கடந்து செல்லும் நவீன அம்சம் சரிவரப் பொருந்திய கதைகளுமாக இத்தொகுப்பு உருவாகியிருக்கிறது.
உதயசங்கர் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை குணாம்சங்களை எள்ளலுடன் விமர்சிக்கின்றன. கலையின் உன்னதமறிந்த டேனியல் பெரிய நாயகம் கடைசியில் மகனிடம் ‘இதெல்லாம் நமக்கு வேண்டாம்‘ என்று புத்திமதி சொல்கிறார். இப்படித்தான் நிறைய அப்பாமார்கள் இருந்திருக்கிறார்கள். மகன்களும் தலையசைத்துக் கலை மீதான காதலை உதறித் தள்ளியிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் என்கிறது பொதுப்புத்தி. இதை மீறி வந்தவர்கள் கலைஞர்களாகியிருக்கின்றனர். இதுவும்கூட யதார்த்தமில்லையா?
சக மனிதனிடம் கொள்ளும் அவநம்பிக்கையை மட்டுமே வேறொரு கதையில் உள்ளடக்கமாய் வைக்கிறார் உதயசங்கர். குடும்ப அமைப்பின் வன்முறைகளை அங்கதத்துடனும், பொட்டிலறைந்தாற்போன்றும் பல பாணிகளில் எழுதிப் பார்த்திருக்கிறார். இளம் பருவத்தின் ரம்மியங்கள், அபிலாஷைகள் இவரது படைப்புகளில் அதே த்வனியுடன் பதிவாகத் தவறவில்லை.
வெயில், மறதியின் புதைசேறு, சோமையாவின் பாட்டு போன்ற கதைகள் அவருடைய படைப்பெழுச்சியின் உன்னத விளைச்சல் என்றே கூறலாம். உதயசங்கர் கதைகளில் பெயிண்டர் பிள்ளை, ஆவுடையப்ப பிள்ளை என்று நிறையப் பிள்ளைமார்கள் வருகிறார்கள். அவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பும் அபாரமாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் ஜாதி குறித்துப் பேசவரவில்லை. உதயசங்கரும் அப்படிப்பட்டவரில்லை. தான் சார்ந்திருக்கும் அல்லது அவ்வாறு கருதப்படும் சமூகத்தை உள்வாங்கிக் கொண்டு படைப்பில் வெளிப்படுத்துவது பாவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு படைப்பாளியின் கடமை இதுவாகவே இருக்க முடியும். எந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து ஒருவனுக்கு இயங்க வாய்த்திருக்கிறதோ அந்த வாழ்க்கையைப் படைப்புகளில் பிரதிபலிப்பது அவனுடைய சமூகத்தைக் குறித்த விமர்சனங்களை அவன் செய்வதாகவே பொருள் கொள்ள முடியும். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், தோப்பில் முஹம்மது மீரான் இன்னும் பலரும் இதையே செய்தனர்.
குறுநாவல்கள் எழுதியிருக்கின்ற உதயசங்கரை நாவல் எழுதச் சொல்லி அவரை சந்திக்கின்ற நேரங்களிலெல்லாம் வற்புறுத்துகிறேன். அவருடைய உத்தியோகம் சார்ந்த ரயில்வே துறையின் பின்னணியில் ஒரு நாவலை எழுதிவிட வேண்டுமெனும் முனைப்பிலிருப்பதாகவும் விரைவில் அது நிறைவேறும் என்றும் என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். பார்ப்போம். ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’ கதையை அவர் விரித்திருந்தால் முக்கியமான நாவலாக அது மாறியிருக்கும். அதே போன்று, ‘ஒரு விளக்கும் இரண்டு கண்களும்’ கதைக்கும் ஒரு சர்வதேசியத் தன்மை உண்டு. அக்கதையின் ஓரிடத்தில் கீழ்க்கண்ட விவரணையை அவர் எழுதியிருப்பார்.
‘‘1947-ம் ஆண்டில் சர்சிரில் ராட்கிளிஃப் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோடுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத இந்த பருத்த ஆங்கிலேய வழக்கறிஞர், தான் வரையும் கோடு இந்திய நிலப்பரப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர முடியாதவராக இருந்தார். அவரது பென்சில் கூறுபோட்டது நிலப்பரப்பை மட்டுமல்ல என்பதை மிகமிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டார். அப்போது யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை’’
இந்த வரிகளைப் படித்தபோது என்னையுமறியாமல் மனம் கலங்கிப் போனது. சதத்ஹஸன் மன்ட்டோவின் கதைகளில் வெளிப்படும் தேசப் பிரிவினையின் துயரார்ந்த அதே வெளிப்பாடாக இதை நான் உணர்ந்தேன். இப்படியெல்லாம் எழுத உதயசங்கரைவிட்டால் தமிழில் ஆள் கிடையாது. தேசப்பிரிவினை நடந்து முடிந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அது தரும் வலியும் ரணமும் நம்மைப் பற்றித் தொடர்கிறது. மிக எளிதாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளி எறிவதுபோல நடந்தது, இரண்டு தேசிய இனத்தின் பிரதான பிரச்சனையாக உருவெடுத்து இன்றைக்கும் வேதாளம்போல் நின்று நம் மக்களின் நிம்மதியைக் குலைக்கிறது. எல்லோரும் மறந்துவிட்ட விஷயத்தை எழுதிப் பார்க்க இப்படி ஒருவர் இருக்கத்தான் செய்வார்.
உதயசங்கரைக் குறித்துச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் சம்பிரதாயமான முன்னுரையை அந்தச் சம்பிரதாயத்துக்குள்ளிருந்து எவ்வாறு விடுவிப்பது என்பதே எனது நோக்கமாக இருந்து ஓரளவு தப்பித்தும் இருக்கிறேன் என்று மனம் சமாதானம் கொள்கிறது. உதயசங்கர் என்னும் என் முன்னோடிக் கலைஞனை, நண்பனை, காலம் தான் கௌரவிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கிறேன்.
-கீரனூர் ஜாகிர்ராஜா

Monday, November 28, 2011

விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வுலகம் கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் கருத்தரங்கம் -பாஸ்கரன்


எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எழுதியுள்ள ஐந்து நாவல்களில் மூன்று நாவல்களை மையமிட்டு நெல்லை மாவட்ட தமுஎகச 7.11.11 அன்று திருநெல்வேலியில் மூன்று அமர்வுகள் கொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. கரிசல் கிருஷ்ணசாமியின் இசையோடு நிகழ்வு தொடங்கியது. தமுஎகச நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தனது வரவேற்புரையில், “மிகச்சிறந்த நாவல்களின் பட்டியலை எவ்வளவு சுருக்கினாலும் அதில் ஜாகிர்ராஜா நாவல்கள் இடம்பெறும். வடக்கேமுறி அலிமா பல இரவுகளைக் கடந்து வானில் மின்னும் நட்சத்திரமாக ஒளிர்கிறது. இவருடைய வெம்மை, பௌர்ணமிக் கிணறு உள்ளிட்ட சிறுகதைகளும் வாசிப்பின் பேரனுபவத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நகரத்தை நோக்கியும் இவருடைய படைப்புகளைக் குறித்த உரையாடலை நகர்த்த வேண்டும்என்றார்.


துவக்க உரை நிகழ¢த்திய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஜாகிர்ராஜா படைப்புகள் முன் வைக்கும் அரசியல் குறித்து விரிவாகப் பேசினார். விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களைக் குறித்த பதிவுகள் குறைவான தமிழ்ச் சூழலில் ஜாகிரின் படைப்புகள் அந்த வெற்றிடத்தை நிரப்புவதுடன் மிகுந்த கலா நேர்த்தியோடு வாசகனை வந்தடைகிறது. இஸ்லாமியர்களுடன் பழகியுள்ளபோதும் அவர்களின் மூடுண்ட வாழ்க்கை குறித்து அதிகம் உணராமலே இருந்திருக்கிறோம் என்னும் குற்ற உணர்வை இவரின் படைப்புகள் ஏற்படுத்துகின்றன. எழுத்தின் வாயிலாக இவர் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வை இவரைப்போல வேறு எவரும் துணிச்சலாகப் பதிவு செய்ததில்லைஎன்று ச.த. குறிப்பிட்டார்.



மீன்காரத் தெரு முதல் அமர்வுக்கு கவிஞர் கிருஷி தலைமை வகித்துப் பேசுகையில் 2006 தமுஎகச நாவல் போட்டிக்குத் தான் நடுவராக இருந்து மீன்காரத் தெரு நாவலை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததை நினைவுகூர்ந்தார். ஜாகிர்ராஜா எழுத்துகளில் வெளிப்படும் லாஹிரி வாசகனுக்கு உவப்பானது என்றும் அவர் கூறினார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் தனது சிறப்புரையில் ஜாகிர்ராஜாவின் ஐந்து நாவல்களையும் வாசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் யாருக்கும் எளிதில் வசப்படாத நதியின் வெள்ளமெனப் பிரவாஹிக்கும் அபூர்வமான மொழி நடை அவருக்கு வாய்த்திருக்கிறது. நான் இறைநம்பிக்கை உள்ளவன் என்பதால், இது இறைவன் அவருக்கு அளித்த வரம் என்றே கருதுகிறேன். நானே பொறாமைப்படும்படியான படைப்புகளை அவர் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். மீன்காரத் தெருவை வாசித்தால் நாவல் நெடுக மீன் கவுச்சி அடித்துக் கொண்டேயிருக்கிறது இதுதான் அவர் எழுத்தின் பலம். நான் எழுதும்போது பல நேரங்களில் வார்த்தைகள் கிடைக்காமல் அவற்றின் பின்னே ஓடியிருக்கிறேன். ஆனால் ஜாகிர்ராஜாவை துரத்திக்கொண்டு வார்த்தைகள் ஓடி வருவதை நான் அனேக இடங்களில் பார்த்து வியக்கிறேன்என்று மனம் திறந்து பேசினார்.

வடக்கேமுறி அலிமா இரண்டாம் அமர்வுக்குத் தலைமைதாங்கிய செந்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிற உலக இலக்கிய வரிசையில் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் நிற்பதாகக் குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய இலக்கிய விமர்சகர் ம. மண¤மாறன் ஜாகிரின் மற்றெல்லா நாவல்களை விடவும் அலிமா மிகவும் மாறுபட்ட நாவல். 2000-க்குப் பிறகு வெளிவந்த தமிழ் நாவல்களில் வடக்கேமுறி அலிமாவுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. நாவலின் வடிவமும், போக்கும், மொழி நடையும் இதுவரைக்குமான தமிழ் நாவல்களின் கட்டமைப்பைத் தகர்த்தெறிந்துள்ளதுஎன்று குறிப்பிட்டார்.



மீன்குகை வாசிகள் அமர்வுக்குப் பேராசிரியர் கோமதிநாயகம் தலைமை வகிக்க எழுத்தாளர் நாறும்பூநாதன் சிறப்புரையாற்றினார். நாறும்பூ தனது உரையில் மனித உறவுகளை மிக விரிவாகப் பேசும் படைப்புகள் ஜாகிர்ராஜாவுடையது. மீன்குகை வாசிகளில் ஷேக்கா தாத்தாவிற்கும் ஆஜாத் என்கிற பேரனுக்கும் நடக்கின்ற உரையாடல் காவியத்தன்மை கொண்டது. மனித விழுமியங்களின் உயர்ந்த தளத்தில் நின்று கதாபாத்திரங்களை அணுகும் தன்மை இவருடையது. இந்நாவலில் இடம் பெறும் பெண்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைக் கூர்ந்து அவதானிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்த நாவலின் தொடர்ச்சியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்என்றார்.


நெல்லை சந்திப்பு கிளைச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். எழுத்தாளர்கள் முஜிபுர் ரகுமான்,

எஸ். அர்ஷியா, ஓவியர் வள்ளி, முனைவர் கண்ணா. கருப்பையா, சண்முகசுந்தரம், ஆய்வு மாணவ மாணவியர், வாசகர்கள் மற்றும் பல தமுஎகச தோழர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மௌனமான உரையாடலின் வழியே நிறைவடைந்தது.